வியாழன், டிசம்பர் 18, 2008

இலங்கை போர்முனையில் இந்திய ராணுவ ஆலோசகர் !

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளின் ராணுவ ஆலோசகர்கள் கடந்த திங்கள்கிழமை இலங்கை போர்முனைக்கு சென்று பார்வையிட்டனர். இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இலங்கை ராணுவத்தின் ஏற்பாட்டின்பேரில் வன்னி போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு நடைபெற்று வரும் சண்டை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.


சண்டையில் சரணடைந்த விடுதலைப் புலிகள், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக செயல்படுத்தப்படும் நிவாரணப் பணிகள் போன்றவற்றை அவர்கள் நேரில் பார்வையிட்டதாகவும் இலங்கை ராணுவ இணையதளம் தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

செவ்வாய், டிசம்பர் 16, 2008

கருணாநிதியின் புதிய நீதி!

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு' இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார்.

தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்செளரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்செளரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்செளரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?
பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?
"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற"

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.
இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!

-பழ. கருப்பையா
நன்றி: தினமணி

வெள்ளி, டிசம்பர் 12, 2008

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவஞ்சலிக் கூட்டம்

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் & வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன
“இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்

நினைவுகளைப் பகிர்வோர்:
*
விடுதலை இராசேந்திரன்
இரா.அதியமான்
அ.மார்க்ஸ்
ஞாநி
ஆதவன் தீட்சண்யா
ஓவியா
அழகிய பெரியவன்
*
நாள்: டிசம்பர் 14, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: புக் பாயின்ட் அரங்கம், ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்,
அண்ணா சாலை, சென்னை
***
நமது ஒளிக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஓர் உயிருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாருங்கள்!!
*
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று.காம் (www.keetru.com)

சனி, டிசம்பர் 06, 2008

தகவல் உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை!

தகவல் உரிமைச் சட்டம் 2005 அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இச்சட்டத்தின் கீழான பயன்பாடுகள் பிரமிக்கதக்க வகையில் உள்ளன. அனைத்துப் பகுதி மக்களும் இச்சட்டத்தின் பயனை உணர்ந்து அதன் கீழ் நிவாரணம் காண விழைந்துள்ளது இச்சட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். மாணவர்கள் தங்களுடைய கல்வி, தேர்வுமுறை குறித்தும், விவசாயிகள் வீட்டுமனைப் பட்டா, இலவச மின்சாரம், நீர்ப்பாசன முறை, புறம்போக்கு இடம், நில உரிமைகள் போன்ற விவரங்களையும், பெண்கள் குடிநீர்ப் பிரச்னைகள், ரேஷன் கார்டு போன்ற விவரங்களையும், தொழிலாளர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் தங்களுடைய பணி நிலைமை குறித்தும் உரிய அதிகாரியிடம் விண்ணப்பித்து விவரங்களைப் பெற்று வருகிறார்கள். அதிகாரிகள் பல உண்மைகளை மிகவும் கஷ்டப்பட்டு பதில் சொல்லக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், செய்யத் தவறிய கடமைகளைச் செய்ய வைக்கவும் நேர்மையான முறையில் பணியாற்றவும் இச்சட்டம் பெரிதும் உதவுகிறது.

அதிகாரிகள் கோப்புகளில் எழுதும் ரகசியக் குறிப்புகள் கூட தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ரகசியக் கோப்பு குறிப்புகளை அளிக்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 2(ஐ)னை அகற்ற அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்தனர். இதனை எதிர்த்து நாடு தழுவிய கிளர்ச்சிகளில் அனைத்துப் பகுதி மக்களும் ஈடுபட்டு அதனைத் தடுத்து நிறுத்தினர். அதிகார வர்க்கத்தின் இந்த சட்ட திருத்த முயற்சியை கைவிட வைத்தது ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

தகவல் உரிமைச் சட்டம் அனைத்து நிர்வாக, நீதிமன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரிவு 22ன் படி இதர சட்டங்களை விட இது மேலோங்கி நிற்கும் தன்மை வாய்ந்த, வல்லமை வாய்ந்த சட்டமாகும். இந்த சட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களை நியமனம் செய்து விண்ணப்பக் கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ""தகவல் உரிமை சட்டத்திலிருந்து நீதிமன்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்'' என பல சந்தர்ப்பங்களில் கூறி வருவது வியப்பை அளிக்கிறது.

தகவல் உரிமைச் சட்டம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்ததே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான். 1975ல் உத்தரப்பிரதேச அரசுக்கும் ராஜ் நாராயணனுக்கும் இடையில் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழே கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

""பொது மக்களுக்காக பொது ஊழியர்கள் வெளிப்படையாகச் செய்யும் அனைத்துப் பணிகளையும் மக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு.''
உச்ச நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் நினைத்திருக்குமேயானால் அத்தகைய விதிவிலக்கு அளித்து தகவல் உரிமைச் சட்டம் இயற்றி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

நாடாளுமன்றம், சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை விமர்சனம் செய்து அவை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுள்ளதா என கூற வேண்டிய உச்ச நீதிமன்றம் தனது வரம்பை மீறி "விதிவிலக்கு கேட்பது' எந்த வகையிலும் சரி அல்ல. இந்த விதிவிலக்கு நிராகரிக்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
தகவல் உரிமைச்சட்டம் 2005ஐ இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் பயன்படுத்தலாம் என சட்டப் பிரிவு 3 கூறுகிறது. அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள், பதிவு பெற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இச்சட்டத்தின் கீழ் தகவல் கோரமுடியாத நிலை இருந்தது. இச்சட்டத்தை அனைத்துப் பகுதியினரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய தகவல் ஆணையம் ஒரு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனைத்து ""அமைப்புகள், சங்கங்கள்'' இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தீர்ப்பளித்துள்ளது வரவேற்கதக்க, முன்னேற்றகரமானதாகும்.

அதேபோல, மாநில துறைகளுக்கு விண்ணப்ப கட்டணம் நீதிமன்ற வில்லையாக ஒட்டினால் போதுமானதாகும் என்பதும் ஆவணங்களை பெறுவதற்கான கூடுதல் கட்டணம் மணியார்டர் மூலம் கட்டினால் போதுமானது என்பதும் வரவேற்கத்தக்க திருத்தங்களாகும். சென்னை உயர் நீதிமன்றம் உள்பட பல பொது நிறுவனங்களில் தகவல் பெற விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 என்று உள்ளது. இந்த கட்டணம் உடனடியாகக் குறைக்கப்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களின் நகல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.2 ஜெராக்ஸ் கட்டணம் என்று உள்ளது. தற்போது ஜெராக்ஸ் பக்கம் ஒன்றுக்கு 50 பைசாவிற்கு எடுக்கப்படும் நிலையில் இந்த கட்டணத்தை பக்கம் ஒன்றுக்கு ரூ. 1 என குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு நிறுவனங்களும் இச்சட்டத்தின் கீழ் வருவதைப்போல மத்திய தகவல் ஆணையமும் ஒரு பொது நிறுவனம் என்ற முறையில் அதன் பணிகள் சம்பந்தமான விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள "பொது தகவல் அலுவலர்' மற்றும் "மேல் முறையீட்டு அலுவலர்கள்' நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இது வரவேற்கத்தக்க அம்சமாகும். இதேபோல தமிழ்நாடு தகவல் ஆணையமும் ஒரு பொது நிறுவனம் என்ற முறையில் அதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள "பொது தகவல் அலுவலர்' மற்றும் "மேல் முறையீட்டு அலுவலர்' பதவியிடங்களை அமைக்க வேண்டும். இதற்கான உத்தரவுகளை மாநில அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்களுக்குத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் பணியை தற்போது தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செய்து வருகிறது. இதேபோல மாநில அரசு நிறுவனங்களுக்கும் விண்ணப்பங்களைப் பெற்று அனுப்ப தாலுகா அளவில் ஒரு பொருத்தமான அலுவலர் அல்லது தபால் துறையினரையே ஏற்பாடு செய்தல் அவசியமான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் தகவல் கோரும் நடவடிக்கைக்கு உத்வேகம் கிடைக்கும்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மேல் முறையீடுகள் அல்லது புகார் மனுக்கள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கைக்கு உள்படாத மனுக்கள் பல ஆயிரங்கள் உள்ளன. தகவல் ஆணைய புள்ளி விவரப்படி 31.12.07 இறுதியில் 41068 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலையில் பல ஆயிரம் மனுக்கள் உள்ளன. தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மீது நம்பிக்கையற்ற நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. முன்பு 3 ஆணையர் இருந்த இடத்தில் தற்போது 4 ஆணையர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் முன்னேற்றம் இல்லை. இதன் செயல்பாடுகளை உயர்நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதுமான பணியாளர் நியமனம், தேவையான நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்டவற்றை உடனடியாகச் செய்தல் வேண்டும்.

மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என உணரப்படுகிறது. உடனடியாக தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து அதன் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும். மேலே கூறப்பட்ட ஆலோசனைகளை ஏற்று உரிய வழியில் உத்தரவுகள் பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
-பொ. இசக்கிமுத்து
நன்றி: தினமணி

புதன், டிசம்பர் 03, 2008

தடுமாறும் தமிழக ஊடகங்கள்

தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திப்பிரிவு தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. பல விஷயங்களில் மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் அவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குவதால் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் சார்பிலோ அல்லது அரசியல் சார்புடையதாகவோ உள்ளதால் அவை வெளியிடும் செய்திகள் ""முழுவதுமாக'' மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல் காரணமாக இவை தவிர்க்க முடியாதது என்றாலும்கூட மேற்கண்ட பட்டியலில் சேராத ஊடகங்களிலும் பொது ஜனத்தின் குரல் ஈனஸ்வரத்தில்தான் ஒலிக்கிறது. ஆனால் இவற்றிற்கு செய்தி நிறுவனங்களை மட்டுமே குறை கூறிவிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தமிழகத்தில் ஊடகங்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத் தேவைக்கேற்ப அனுபவம் வாய்ந்த செய்தியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தமிழகத்தில் தொலைக்காட்சிகள் முதன் முதலாக தொடங்கப்பட்டபோது, அவற்றில் பணியில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அச்சுப்பத்திரிகையில் இருந்து வந்தவர்கள்தான்.

அன்று இத்துறையில் கால்பதித்தவர்களின் அறிவும், பணி அனுபவமும், ஆழமான செய்தி ஆர்வமும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு அடியுரமாக பயன்பட்டது. ஆனால், இன்று செய்தித்துறைக்கு வரும் புதிய செய்தியாளர்களிடம் அத்தகைய ஆர்வத்தையும், பணி ஈடுபாட்டையும் காண்பது அரிதாக உள்ளது. மேலும், கற்றுக்கொள்வதில்கூட அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க மூத்த செய்தியாளர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. இதுவும் ஊடகச் செய்திகளின் தரத்தைப் பாதிக்கும் காரணியாக உள்ளது.

மேலும், தொலைக்காட்சி செய்தி என்பதை ""பைட்'' ஜேர்னலிஸம் என்று கூறுவார்கள். உதாரணமாக ஒரு கட்சியின் தலைவர் அல்லது பிரபலமானவர் பேசுகிறார் என்றால் செய்தி நிறுவனத்தின் ""கொள்கைக்கு'' ஏற்ப அவரது பேச்சின் சில விநாடிகளை அல்லது நிமிடங்களை மட்டும் ஒளிபரப்பத் தேவையான தகவல்களை அந்த நிறுவனச் செய்தியாளர் சேகரித்தால் போதுமானது. எனவே, தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் எளிதானதாகி விடுகிறது. ஒளிப்பதிவு கருவியில் பதிவு செய்த அரசியல் கட்சி அல்லது பிரபலமானவரின் பேச்சை அலுவலகத்திற்கு வந்து 10 வரி எழுதிக் கொடுத்தால் போதுமானது.

மேலும், இப்போது பரவலாக வரும் ""லைவ்'' என்ற நேரலை செய்தி சேகரிப்பின்போதும் கூட, சம்பவ இடத்தில் நடந்ததை ஒளிப்பதிவு கருவி முன்னால் நின்று ஒப்புவித்தால் போதும் அல்லது ஸ்டுடியோவில் இருந்து செய்தி வாசிப்பாளர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொன்னாலேகூட போதுமானது என்ற அளவில் தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் மேலோட்டமாகவே உள்ளது. ஆனால், இது மட்டுமே தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி அல்ல.

அச்சுப் பத்திரிக்கை போலவே ஒவ்வொரு தகவலையும் நுணுக்கமாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து, அந்த செய்தியின் பின்புலம் அறிந்து செய்திக்கோவையாக மாற்ற வேண்டியது தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மிகவும் அவசியம். செய்திகளைத் தேடிச் சென்று அல்லது கிடைக்கும் தகவல்களை செய்திகளாக உருவாக்கும் பணியும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் நாள் ஒன்றுக்கு ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகளை ஒளிபரப்புவதால் அதற்கேற்ப செய்திகளை ""அப்டேட்'' செய்ய செய்தியாளர்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும்கூட இத்தகைய சூழலிலும் தங்கள் திறமைகளையும், பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது. எனவே அச்சு செய்தியாளர்களை ஒப்பிடும்போது, தொலைக்காட்சி செய்தியாளர்கள் இதற்கு அதிகம் உழைக்க வேண்டியது மட்டுமல்லாமல் அர்ப்பணிப்போடும் செயலாற்றுவதும் அவசியமாகிறது. ஆனால், இத்தகைய தன்மையும் இப்போது அதிகம் காண முடிவதில்லை. எனவே, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொலைக்காட்சி செய்திகளில் (பொதுவாகவே ஊடகச் செய்திகளில்) ""நடுநிலை'' என்ற தன்மை காணவே முடிவதில்லை. ""நடு நிலை'' என்பது இரு தரப்பினரின் கருத்துகளையும் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அத்தகைய தன்மை அவசியமானதாக இருந்தாலும்கூட செய்தி நிறுவன உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகள் இதற்கு மாறாக இருப்பதால் செய்திகளின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது.

வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல. அவர்களுக்காகத்தான் செய்தி நிறுவனமே செயல்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இரு தரப்பு கருத்துகளையும் முன்வைத்தால் அவர்கள் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். ஆனால், ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே செய்தியின் வாயிலாக மக்களிடையே திணித்தால் நீண்டகாலம் வாசகர்களையோ, பார்வையாளர்களையோ தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை செய்தி நிறுவனங்களாட்டும் அல்லது அவற்றை நடத்தும் அரசியல் வாதிகளாகட்டும் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொலைக்காட்சி செய்தியாளர்களின் நிலை இவ்வாறு இருக்க, அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களின் நிலை சற்று வேறாக உள்ளது. மேலே குறிப்பிட்டவாறு தொலைக்காட்சிகளில், செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதால் அந்த பற்றாக்குறையைப் போக்க அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களுக்குத்தான் இப்போது வலை வீசப்படுகிறது. இதனால், அச்சுத்துறையில் அனுபவம் வாய்ந்த பல செய்தியாளர்களை அப்பத்திரிகைகள் தற்போது இழந்து வருகின்றன. எனவே, தொலைக்காட்சிகளின் அதிகரிப்பால் அச்சுப்பத்திரிகைகளிலும் செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. எனவே, அச்சுப்பத்திரிகையின் செய்தித் தரத்திலும் இது தாக்கத்தை உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.

செய்தியாளர்களின் பணி என்பது மகத்தான பணி. தவறு செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தினசரிச் செய்திகளை கண்டு அலறி தங்களை திருத்திக்கொண்ட கால கட்டம் கடந்து விட்டது. காரணம், புலனாய்வுச் செய்திகள் அப்போது அதிகம் வெளியானது. ஆனால், தற்போது புலனாய்வுச் செய்திகளை பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காண முடிவதில்லை. இதுவும் ஊடகங்களின் பலத்தை வெகுவாக பாதித்துள்ளது.

இதற்கு உதாரணமாக இலங்கைப் பிரச்னையைக் கூறலாம். இந்திய அரசியல்வாதிகள் இப்பிரச்னையில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அரசியல் லாபத்திற்காக ஒரு தெளிவற்ற தன்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், ஊடகங்களும் இப்பிரச்னையில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இத்தனை ஊடகங்கள் இருந்தாலும்கூட எந்த பத்திரிகையோ, தொலைக்காட்சியோ இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணத்தை வெளிப்படுத்தவே இல்லை.

நமது அண்டை நாட்டில், தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில்கூட தமிழ் ஊடகங்கள் நடு நிலையோடு செயல்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலை மாறவேண்டும்.

ஏனெனில், ஊடகங்கள் நினைத்தால் இப்பிரச்னையில் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதோடு, நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய முடியும். இதே போலத்தான் ஒவ்வொரு பிரச்னையும்.

தமிழ் ஊடகங்கள் தரமானதாக மாற, ஊடக உரிமையாளர்களின் பார்வை சமூக நலன் கொண்டதாக அமைதல் அவசியம். மேலும், ஊடகத்தில் பணியாற்றும் அல்லது கால்பதிக்கும் செய்தியாளர்களுக்கு ""தேடுதல்'' தேவை. இதற்கு விசாலமான பார்வை மிக முக்கியம். இல்லாவிடில், செய்திகளும் வருங்காலத்தில் பொழுதுபோக்காக மாறிவிடும் அபாயம் உள்ளது.


-டி. எம். விஸ்வநாத்
நன்றி: தினமணி, 03-12-2008

வெள்ளி, நவம்பர் 14, 2008

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?

கடந்த அக்டோபர் 6, 2008 தேதியிட்ட நாளிதழ்களில் மிக மிக முக்கியமான - அச்சமூட்டும் தகவலொன்று வெளியாகியிருந்தது. பொருளாதார நெருக்கடி, மின்சாரத் தட்டுப்பாடு, பங்குச்சந்தைப் பிரச்சனைகள், அரசியல் அறிக்கைகள், கேபிள் டிவி குடும்பச் சண்டைகள் என்று வேறு பல முக்கிய நிகழ்வுகளில் மக்களின் கவனம் மூழ்கியிருந்ததால் வழக்கம்போல இந்த முக்கியமான செய்தி உரிய கவனத்தைப் பெறவில்லை.

நாளிதழ்களைத் தவிர வேறு தொலைக்காட்சிச் செய்தியறிக்கைகளில் இந்தத் தகவல் நமக்குத் தெரிந்தவரையில் இடம்பெறக்கூட இல்லை. பாவம், மதுரையில் காதல் விழுந்து கிடக்கும் பிரச்சனையையும் சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற முடிவற்ற பட்டிமன்றத்தையும் வேறு பல தலைபோகிற விவகாரங்களையும் சொல்லி முடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை - அவர்கள் என்னதான் செய்வார்கள்?நாளிதழ்களில் வெளியான அந்தச் செய்தியின் சாரம் இதுதான் -

"தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீரில் உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும். நீரில் அதிக அளவிலான புளோரைட் பற்களையும் எலும்புகளையும் பாதிக்கும். நச்சுத்தன்மை அதிகம் உள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் தோல் புற்று நோயும் ஏற்படும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது."


சமுதாயத்தின் மீது மிகச் சிறிய அளவில் அக்கறை கொண்டவர்களுக்குக்கூட இந்தத் தகவல் பேரதிர்ச்சியாக இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் ஏனோ இந்தச் செய்தி வெளியான பிறகும் பரவலான கவனத்தை ஈர்க்கவில்லை. மக்களின் விழிப்புணர்வைத் தகுந்த நேரத்தில் தகுந்த விஷயத்திற்காகத் தட்டியெழுப்பவேண்டிய தார்மீகக் கடமை கொண்ட அத்தனை ஊடகங்களும் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டன.

Water Tablet என்றழைக்கப்படும் நிலத்தடி நீர்த்திட்டுக்கள் தனித்தனியே தீவாக உருவானவை அல்ல. பூமியின் அடியாழத்தில் அவை ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதங்களுள் இதுவுமொன்று. ஆக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீரால் மாசுபடுத்தப்படும் நீர் இந்த இணைப்பால் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பல்வேறு இடங்களிலும் சகட்டு மேனிக்கு மாசுபாடு நிகழும்போது ஒட்டு மொத்த நீர்த்திட்டும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.


நிலத்தடி நீர் எதனால் மாசுபடுகிறது? இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய துறைகளும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மிக முக்கியமாக, இத்தனை நாட்கள் - ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - இந்த அளவிற்கு நாசமாகாத நிலத்தடி நீர் திடீரென்று இத்தனை தூரம் அசுத்தமானது எப்படி? நாம் பெருமையோடு பீற்றிக்கொள்ளும் விஞ்ஞானமும் நவநாகரீகமும் அந்த அளவிற்கு வளராத பண்டைய காலங்களில் நிலத்தடி நீரை எவ்வாறெல்லாம் காப்பாற்றினார்கள்?கேள்விகள் மலைபோல எழுகின்றன. பதில் கூறுவாரில்லை. "இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும்" என்னும் ஒற்றை வரி மனதைப் பெரிதும் பிசைகிறது.இதற்கான காரணங்களாகக் கீழ்கண்ட காரணிகளைச் சுட்டலாம்.- விரிவடைந்துவரும் நகரங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதனைச் சுற்றிய நீர் ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளத் தவறியது- அப்படித் தவறியதோடு மட்டுமன்றி இருக்கும் பண்டைய நீர் ஆதாரங்களான ஏரிகளையும் குளங்களையும்கூட பிளாட் போட்டுக் கூறுபோட்டுக் கூவி விற்றது- அல்லது ஏரி / குளங்களின் நீரை சுகாதாரமான முறையில் பாதுகாக்கத் தவறியது / சுழற்சி முறையில் தூர் வாராமல் அவற்றை சீரழிய விட்டது- மழைநீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் சேருவதற்கான கால்வாய்களையோ வாய்க்கால்களையோ அமைக்காமல் இருக்கும் நீர்வழிகளையும் அடைத்து விட்டது- தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை அறவே அலட்சியப்படுத்தியது (அல்லது உரிய லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுச் சூழல் மாசுபாடுச் சான்றிதழ் வழங்கியது)இதெல்லாம் தெரிந்த விஷயம்தான் - இதற்கும் வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.


பண்டைய தமிழகக் கல்வெட்டுக்களைப் பதிப்பித்திருக்கும் புத்தகங்களில் - தென்னகக் கல்வெட்டுக்கள், மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் ஆய்வறிக்கைகள், தமிழகத் தொல்லியல் துறையின் பதிப்புக்கள் - இவற்றில் ஏதாவதொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் பத்துக் கல்வெட்டுப் பாடங்களைப் படியுங்கள். அது எந்த மாவட்டக் கல்வெட்டாக இருந்தாலும் சரி - எந்தத் திருக்கோயில் கல்வெட்டாக இருந்தாலும் சரிதான். பத்தில் குறைந்த பட்சம் ஐந்திலாவது அந்த ஊரின் ஏரிகளோ கண்மாய்களோ குறைந்தபட்சம் வாய்க்கால்களோ இடம்பெற்றிருக்கும்.

அக்காலத்தில் ஏரிவாரியத்தையும் ஏரி வாரிய உறுப்பினர்களையும் கவனமாகத் தேர்ந்தெடுத்ததைப் பற்றி மட்டும் விபரமாக உரைக்கும் கல்வெட்டுக்களெல்லாம் உண்டு. இன்னார் இன்ன கோயில் கட்டினார் என்பதைப்போல இன்னார் இன்ன ஏரி எடுப்பித்தார் என்று கூறும் கல்வெட்டுக்களும் உண்டு. ஏரியின் நீரைக் கட்டுப்படுத்த உதவும் மதகுகளில் பல முக்கியக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

தஞ்சைக்கு அருகில் அமைந்திருக்கும் மதகுக் கல்வெட்டு அந்த மதகை இயக்கிய கிராமத்து ஊழியருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தத்தையும் அவருடைய கடமைகளையும் விரிவாக விளக்குகிறது. இந்த நிவந்தத்தை அமைந்த மிகப்பெரிய அரசாங்க அலுவலர் இத்தர்மத்தைக் காப்பாற்றுபவர்கள் பாதங்கள் என் தலை மேலென என்று பணிந்து பரவுகிறார் !

வீராணம் திட்டம் என்ற பெயரில் அரசியல்வாதிகளால் பல்வேறு அசிங்கமான சர்ச்சைகளுக்கு இடமான நீர்த் திட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீரநாராயண ஏரி சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. கடலளவு பிரம்மாண்டமாக விரிந்து பரந்திருக்கும் இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது சென்னையிலிருக்கும் பெருமக்களுக்கும் உபயோகப்படுவதை எவராவது அணுவளவாவது சிந்தித்திருப்போமா?

முதலாம் இராஜேந்திர சோழர் தன்னுடைய வடநாட்டு வெற்றியைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினாராம்... எப்படித் தெரியுமா? மிகப்பெரிய ஜலஸ்தம்பம் - அதாவது ஏரியை - உண்டாக்கிக் கொண்டாடினார். ஜெயஸ்தம்பம் நட்டு வெற்றியை வெறுமனே பறைசாற்றிக்கொள்வதற்கு பதில் ஜலஸ்தம்பம் உருவாக்கி அது மக்களுக்கும் பயன்படும் வகையில் பார்த்துக்கொண்ட அவரது மாண்பை எந்தப் பாடப்புத்தகம் சொல்லித்தருகிறது?


ஒவ்வொரு கோயில்களின் முன்னாலும் ஒரு பெருங்குளம் புனித தீர்த்தமாக அமைக்கப்பட்டது. ஊரில் பெருக்கெடுக்கும் மழைநீர் இதில் வந்து சேருவதற்கான கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இன்றைய நிலைமையில் ஏதாவது ஒரு புனிதத் தீர்த்தத்திலிருது ஒரு குவளை நீரை தைரியமாக எடுத்துக் குடிக்க முடியுமா? சொல்லுங்கள்.ஏரிகள் மற்றும் குளங்களின் நிலைமை இவ்வாறென்றால் ஆறுகளின் நிலைமை அதைவிட மோசம்.

"நதிக்கே நங்கூடம் பாய்ச்சிய அதிசயம் நம் ஊரில் மட்டும்தான் !" என்று வியக்கிறார் கவிஞர் வைரமுத்து. பிரிட்டிஷார் காலத்தைய 18 - 19ம் நூற்றாண்டு ஆவணங்களையும் ஓவியங்களையும் பார்க்கும்போது உதிரம் கொதித்துப் போகிறது. அடையாறு என்பது உண்மையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு என்பது உங்களில் எவருக்காவது தெரியுமா?

சென்னை முகப்பேரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் இன்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஏரி இருந்தது. அட, சாக்கடைச் சமுத்திரமாக விளங்கும் கூவமும் கூட ஒரு காலத்தில் நதிதானைய்யா!கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். இது அடையாறு கடலில் கலக்கும் காட்சி. தூரத்தில் தெரிவது பரங்கிமலை.நம்பமுடியவில்லையல்லவா? இது ஏதோ கற்பனை ஓவியமென்று நினைத்துவிடாதீர்கள். அன்று தெரிந்த நிஜக்காட்சி இது.http://i356.photobucket.com/albums/oo9/chndru007/Madras-AdyarRiver.jpg

நகர்ப்புற வளர்ச்சியில் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று நினைக்கிறீர்களா ? கிடையவே கிடையாது. அளவில் சென்னைப் பெருநகரை விடச் சிறியதான சிங்கப்பூரில் நிலத்தின் ஒவ்வொரு அடியும் மதிப்பு மிக்கதுதான். அதற்காக அவர்கள் இருக்கும் ஏரிகளைக் கூறுபோட்டு விடவில்லை. நாட்டிற்கு நடுவே மிகப்பெரிய இரண்டு ஏரிகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஏரியில் எந்நேரமும் படகில் ஒருவர் சவாரி செய்து ஆங்காங்கே கடற்பாசிகளை இறைத்துக்கொண்டிருப்பார். நீர்ப்படுகையை ஆரோக்கியமாக வைக்கும் வழிமுறை இது. இந்தப் பணி 365 நாட்களும் நடக்கும்!

இதுபோல் ஏரிப்பராமரிப்பை எப்போதாவது நாம் பார்த்ததுண்டா சொல்லுங்கள். ஏரியின் கரைகளும் படுசுத்தமாகக் காட்சியளிக்கும். பொங்கி வரும் மழை நீரை இந்த ஏரியில் வந்து கொண்டு சேர்க்கும் கால்வாய்களும் உண்டு.

திருச்சியில் சில காலத்திற்கு முன் ஒரு சீக்கிய மாநகராட்சி ஆணையாளர் மாற்றலாகி வந்தார். மற்றவர்களைப்போல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துக்கொண்டுபோய் பணம் பண்ணாமல் வேண்டாத விவகாரங்கள் பலவற்றிலும் இறங்கினார். சீக்கியரல்லவா ? இயற்கையாகவே அந்த இனத்திற்கென்று இருக்கும் வீரம் அவரிடம் (தமிழர்களைப்போல் ஒட்டு மொத்தமாக ஒழிந்துபோய் விடாமல்) கொஞ்சம் மிச்சமிருந்தது. அவர் செய்த வேண்டாத வேலைகளில் ஒன்று - இருந்த ஏரிகளையும் குளங்களையும் கணக்கெடுக்கத் துவங்கியதுதான்.

திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய ஏரி ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதனை அவர் எங்கு தேடியும் காணவில்லை. என்ன ஆயிற்றென்று விசாரித்த போதுதான் அதே இடத்தில் மாரீஸ் என்ற பெயரில் மூன்று பெரும் திரையரங்கங்கள் கட்டப்பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குக் கலைச்சேவை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சிகரமான விஷயம் வெளியாயிற்று.

பாவம் ! திருச்சிவாசிகளே செளகரியமாக மறந்து போய்விட்ட அந்த விஷயத்தை எப்படியோ கலெக்டர் கண்டுபிடித்து விட்டார். நியாயமாகப் பார்த்தால் அந்த அரங்கங்களை இடித்திருக்க வேண்டும். ஆனால் எத்தனையெத்தனையோ அதிகாரிகளைக் "கவனித்துக்" கட்டிய இடமாயிற்றே? விட்டுவிடுவார்களா ? ஏரி அங்கு இருந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறது? அந்தப் பகுதியின் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அதனால் மாமூல் அளிக்கமுடியுமா ? அல்லது மக்களைத்தான் கேளிக்கை இன்பத்தில் ஆழ்த்த முடியுமா? அல்லது இதற்காகத் திருச்சிவாசிகள்தான் போராட்டம் நடத்தப் போகிறார்களா ? கிடக்கிறது கழுதை என்று விட்டுவிடுங்கள் என்று கலெக்டரை சரிசெய்து விரைவில் அவரது பணிமாற்றத்தை நிறைவேற்றித் திருச்சியை விட்டுத் துரத்துவதற்குள் அதிகாரிகளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

நமக்குத் தெரிந்து சென்னை வில்லிவாக்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்குமுன் ஒரு பிரம்மாண்டமான ஏரி இருந்தது. நிஜமாகவே மிகப்பெரிய ஏரி. நல்ல மழை பெய்யும் நாட்களில் அக்கரைக்கு இக்கரை நீர் ததும்பிக்கொண்டிருக்கும். பின் ஒரு காலத்தில் அதிகாரிகளின் தயவால் ஒரு ஓரத்தில் வீட்டுப்பகுதிகள் முளைத்தன. இன்று அந்த ஏரி எங்கிருந்தது என்று வில்லிவாக்கம்வாசிகளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வீடுகள் முளைத்துவிட்டன.

இதே கதைதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை வாசகர்கள் சொல்லாமலே அறிவார்கள்.அமைச்சர்களும் அதிகாரிகளும் எதையெதையோ திறந்து வைக்கிறார்களே - எவராவது ஒருவர் கடந்த 70 வருடங்களில் ஒரு ஏரியைக் கட்டுவித்தார் - ஒரு குளத்தைத் வெட்டினார் - குறைந்தபட்சம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினார் என்று படித்திருக்கிறோமா? சங்ககாலத்திற்கோ சோழர்காலத்திற்கோ கூடப் போகவேண்டாம்.

ஒரு முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்போம். அப்போதெல்லாம் 'குடிமராமத்து' என்றொரு வழக்கம் கிராமங்களில் இருந்ததே! தெரியுமா? இன்று கிராமங்களில் இருப்பவர்களுக்கே அது தெரியுமா என்பது சந்தேகம். ஏரிநீர் மற்றும் ஆற்றுநீர்ப் பாசனங்களுக்கான பராமரிப்புகளை அந்தந்தக் கிராம மக்களே குழு அமைத்துக் கவனித்துக் கொண்டார்கள். அரசாங்கம் வந்து செய்யும் என்று யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.

ஆனால் இன்று? தெருமுனையில் ஒரு குழாய் பழுதடைந்துவிட்டால்கூடப் பொதுப்பணித்துறைதான் வரவேண்டும். பொருளாதாரத் தேடலில் மனிதநேயத்தையும் சமூகசிந்தனைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் யாராவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து தீர்த்துவைப்பான் என்று சினிமாப் பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொண்டோம்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரேயொரு பிரதமரும் ஒரேயொரு பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரேயொரு மேயரும் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள்?

நம்மை அடிமை செய்து ஆண்ட வெள்ளையர்கள்கூடச் செய்யாத அத்தனை அட்டுழியங்களையும் கடந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் செய்து முடித்துவிட்டோம். பணத்தாசை மற்றும் பேராசை பிடித்த அரக்கர்களாக மாறி இயற்கையன்னையின் பாலை மட்டுமல்ல - மார்பகங்களையே கடித்து இரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் துவங்கிவிட்டோம். "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று முடங்கிவிட்டோம். சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் எவனோ பார்த்துக்கொள்வான் - உனக்கும் எனக்கும் என்ன ஆயிற்று? என்று நமது பங்கிற்கு நம் வீட்டின் கழிவு நீரையும் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் கலந்தோம்.

வெட்கமில்லாமல் குற்றவாளிக் கூண்டில் சிரித்தபடி ஏறி நிற்கும் நம்மை வருங்காலத்தின் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

அன்புடன்
ஆசிரியர் குழு
வரலாறு - மாத இதழ்

வியாழன், நவம்பர் 06, 2008

பிடல் காஸ்ட்ரோ! --சன் டி.வி. நியூஸ் எடிட்டர் ராஜா!

1996-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தல். அதற்கு முன்னதாக சன் டி.வி.யில் செய்தி ஒளிபரப்பை ஆரம்பிக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாதம் தொடங்கின. அப்போது தூர்தர்ஷனில் மட்டும்தான் செய்திகள் ஒளிபரப் பப்பட்டு வந்தன. தினமும் இரவு 8 மணிக்கு சன் டி.வி.யில் செய்திகள் என்று முடிவு செய்த எம்.டி. கலாநிதிமாறன் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செய்தி ஒளிபரப்பை ஆரம்பிக்குமாறு கூறியிருந்தார்.

மே மாத தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தன. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி சேரும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந் தது. அ.தி.மு.க.வுடன் காங்கிரசுக்கு 1991 தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணி நீடித்தது. எனினும் தமிழக காங்கிரசார் பலரும் அ.தி.மு.க. கூட்டணியை தொடர விருப்பமின்றி இருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று அறிவித்தார். அவ ருடைய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஜி.கே.மூப்ப னார், மத்திய அமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், அருணாசலம் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்தனர்.

கூட்டணி அறிவிப்பு வெளியான மறுநாள் சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இவர்களில் சிலர் அ.தி.மு.க.வுடன் சேர எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. நரசிம்மராவுக்கு எதி ரான கோஷங்கள் வலுத்தன. கோஷம் போட்ட தோடு நின்றுவிடவில்லை. அங்கு வைக்கப் பட்டிருந்த நரசிம்மராவின் கட்-அவுட்களையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். இன்னும் சிலர் கட்-அவுட்களுக்கு தீ வைத்தனர். சத்தியமூர்த்தி பவன் யுத்தக் களமானது.

காலை தொடங்கி மாலை வரை நடை பெற்ற அனைத்து ரகளைகளையும் சன் டி.வி. நிருபர் கருப்பசாமி கேமராவில் பதிவு செய்தி ருந்தார். அலுவலகத்திற்கு அவரை அழைத்து கேசட்டை போட்டும் பார்த்தபோது எல்லா காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஏப்ரல் 1-ந் தேதிதான் செய்தி ஒளிபரப்பு ஆரம்பம் என் றாலும், மார்ச் கடைசி வாரத்திலேயே சோத னை ஒளிபரப்பை ஆரம்பிக்க இருந்தோம். அன்று சோதனை ஒளிபரப்பு ஆரம்பம் என்பதால் முதல் நிகழ்ச்சியாக சத்தியமூர்த்தி பவன், எதிர்ப்புக் காட்சிகளை சிறப்பு செய்தியாக ஒளிபரப்பினோம்.

தமிழ்நாட்டில் அதற்கு முன் இது போன்ற அரசியல் போராட்டங்கள் நடை பெற்றது உண்டு. ஆனால் அவை அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது இல்லை. எனவே சன் டி.வி.யில் அன்று இரவு ஒளிபரப்பான சத்தியமூர்த்தி பவன் ரகளை. தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. ஆயிரக்கணக்கானவர்கள் சன் டி.வி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு மறு ஒளி பரப்பு செய்யுமாறு கேட்டனர். அவர்களுக்காக மீண்டும் ஒருமுறை ஒளிபரப்பப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணியை விரும்பாமல் டெல்லியில் இருந்த மூப்பனார், இந்த காட்சியைப் பார்த்ததும் உத்வேகம் அடைந்தார். சத்தியமூர்த்தி பவன் ரகளைக் காட்சிகளை சன் டி.வி.யில் பார்த்த அவர், அ.தி.மு.க.வுடன் காங் கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை உணர்ந்து இனி காங்கிரசில் நீடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். த.மா.கா. என்ற தனிக்கட்சியை தொடங் கினார். சென்னை திரும்பி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டபோது மூப்பனார், "தொண்டர்களின் எதிர்ப்பை சன் டி.வி.யில் பார்த்ததை அடுத்தே தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் உருவானது' என்று கூறினார். செய்தி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு சன் டி.வி.யில் ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சியே தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்தே சன் டி.வி. செய்திகளுக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு கூடிப் போனது. முதல் செய்தியே பெரும் வெற்றியாக அமைந்தது என்னால் மறக்க முடியாத ஒன்று.

2006-ம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மன்மோகன் சிங், கியூபா மற்றும் பிரேசிலுக்கு சென்றார். செய்தி சேகரிப்பதற்காக அவருடன் என்னையும் எங்கள் எம்.டி. அனுப்பி வைத்தார். கியூபா பயணம் உறுதியானவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மற்ற நாடுகளைவிட கியூபா மீது அலாதி பிரியம் உண்டு. காரணம் பிடல் காஸ்ட்ரோ, மற்றும் சேகுவேரா இவர்கள் மீது கொண்ட ஈர்ப்பால் கியூபா எப்போதும் மனதில் குடிகொண்டிருந்தது.

கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் உரையாற்ற தான் மன்மோகன்சிங் சென்றார் மாநாட்டுக்கான ஏற்பாடு களை அதிபர் பிடல்காஸ்ட்ரோ தலைமையிலான அரசு செய்து வந்தது. மாநாட்டின் தலைமை உரை பிடல்காஸ்ட்ரோ. கியூபா செல்வதே மகிழ்ச்சி என்றால், அதுவும் பிடல் காஸ்ட்ரோ பேசுவதை நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

மாநாடு நடை பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் பிடல் காஸ்ட்ரோ குடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு காஸ்ட்ரோ உடல்நலம் தேறிவருகிறார் என்றும், ஏற்கெனவே அறிவித்தபடி அணிசேரா நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்துவார் என்றும் வெளியான செய்திகள் ஆறுதல் அளித்தன.

தலைநகர் ஹவானாவை நமது பிரதமரின் தனி விமானம் மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் மாலை சென்றடைந்தது. எங்கள் குழுவில் இருந்த அனைவருமே காஸ்ட்ரோ நாளை காலை மாநாட்டில் பங்கேற்க வருவாரா என்பதை விசா ரித்தபடி இருந்தோம். காஸ்ட்ரோ உடல் நலம் தேறிவந்தாலும், மாநாட்டில் பங்கேற்கும் அளவுக்கு குணமடையவில்லை என்று வெளியான தகவலே, விசாரிப்புகளுக்கு காரணம்.

ஹவானாவிலிருந்து அன்று காலை வெளியான நாளேடுகளில் மாநாடு பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற்றி ருந்தாலும் காஸ்ட்ரோ பங்கேற்பாரா என்ற தகவல் எதுவும் இல்லை. அங்கு பத்திரிகைகள் அனைத்தும் அரசால்தான் நடத்தப்படுகின்றன. எனவே நமது நாடு போன்று யூகச் செய்திகளை வெளியிட முடியாது.

மாநாடு நடைபெற்ற அந்த பிரமாண்ட அரங்கத்திற்கு காலை 9.00 மணியளவில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். அணிசேரா அமைப்பில் இடம் பெற்றிருந்த நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காஸ்ட்ரோ மட்டும் வரவில்லை. காஸ்ட்ரோ ஆற்ற வேண்டிய தலைமை உரையை அவருடைய தம்பி ராவல் காஸ்ட்ரோ வாசித்தார். (இவர் தற்போது பிடல்காஸ்ட்ரோவுக்குப் பதிலாக கியூபாவின் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.)

காஸ்ட்ரோ பங்கேற்காதது எனக்கு மட்டுமின்றி அங்கு வந்திருந்த அனைவரையும் வருத்தப் படச் செய்தது. சரி, இன்னும் மூன்று நாட்கள் ஹவானாவில் இருக்க வேண்டியுள்ளது. அதற்குள் காஸ்ட்ரோவை நேரில் பார்த்துவிடலாம் என்று மனதை சமாதானம் செய்துகொண்டோம்.

மறுநாள் இரவு 11 மணி இருக்கும். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த இந்திய தூதரக அதிகாரிகள், பத்திரிகைக் குறிப்பு ஒன்றையும் புகைப்படம் ஒன்றையும் கொடுத்தனர். அதில் சற்று முன்பு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசியதாக இருந்தது. ஹவானாவில் உள்ள கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றதாகவும், இருவரும் 30 நிமிட நேரம் பேசிக் கொண் டிருந்ததாகவும், பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் மன்மோகன் சிங்கும், காஸ்ட்ரோவும் எதிர் எதிராக உட்கார்ந்து பேசும் காட்சி இடம் பெற்றிருந்தது. பிடல் காஸ்ட்ரோ மிகவும் மெலிந்து பலவீனமாக இருந்தார்.

மன்மோகன்சிங் சந்திப்பின்போது காஸ்ட்ரோவுடன் கை குலுக்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பும் முடிவுற்றதால் இந்திய பத்திரிகையாளர்கள் மேலும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். நானும்தான்! அன்றிலிருந்து இன்றுவரை காஸ்ட்ரோ பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. சில தினங்களுக்கு முன் அவர் அதிபர் பொறுப்பையும் தமது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

இனி அவரை நேரில் பார்க்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு இல்லை. கியூபா வரை சென்று விட்டு காஸ்ட்ரோவை நேரில் பார்க்க முடியாமல் திரும்பியதைவிட பெருத்த ஏமாற்றம் இதுவரை ஏற்பட்டதில்லை.


--சன் டி.வி. நியூஸ் எடிட்டர் ராஜா!
நன்றி: நக்கீரன் இணையதளம்

வெள்ளி, அக்டோபர் 31, 2008

துயரை திசை திருப்பும் துதிபாடிகள் - பழ. நெடுமாறன்

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிப் படுகொலைகள் குறித்த பிரச்னையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரவேற்கத்தக்க பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 14102008 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுவில் பெரும் உற்சாகத்தை ஊட்டியுள்ளன.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுமே இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது குறித்து பெரும் கவலை தெரிவித்தனர். போரை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்றவற்றை உடனடியாக அனுப்பி வைக்கவும், இனப் பிரச்னைக்கு அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும், ராணுவ ரீதியான தீர்வு ஒருபோதும் கூடாது, இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவி எதையும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெரிவித்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளிப்படுத்திய இந்த உணர்வுகளின் அடிப்படையில் அக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

போரை நிறுத்தி உடனடியாக அமைதியை ஏற்படுத்த இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். 15 நாள்களுக்குள் இவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்தும் தனித்தனியாகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளன. தமிழக முதலமைச்சர்களினால் அவ்வப்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப் பெற்றும் அனைத்துக் கட்சித் தூதுக் குழுவாக தில்லி சென்று பிரதமரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இந்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நிலையிலும் அதிகாரிகள் நிலையிலும் பலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்தியாவின் ஆழ்ந்த கவலைகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பிரதமர் இந்திராவின் காலத்தில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருதரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டினையும், அதைப்போல பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டினையும் மதித்துச் செயல்படுத்த இலங்கை அரசு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் இப்போது தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்துள்ள முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். கடந்த காலத்தில் இத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இந்த முடிவுகள் கருதப்பட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டிய தீர்மானமும் அதைச் செய்யத் தவறினால் தமிழகம் எத்தகைய நிலையை மேற்கொள்ளும் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 30 ஆண்டு கால வரலாற்றில் இத்தகைய திட்டவட்டமான நிலைமையை தமிழகம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து இந்திய அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழ் மக்கள் அனைவரின் விருப்பமும் இதுதான்.

ஆனால் சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் மனம் இரங்காத சிலர் அனைத்துக் கட்சிகள் மேற்கொண்ட முடிவுகளைத் திரித்துப் பொய்ப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் வாயும் மனமும் கூசாமல் பேச முன்வந்துள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்து விமானத் தாக்குதலாலும் பீரங்கிக் குண்டு வீச்சினாலும் செத்து மடியும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவின்றியும் இருக்க இடமின்றியும் நோய்களுக்கு மருந்தின்றியும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காடுகளிலும் வெட்ட வெளியிலும் துடிப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள வல்லரக்கர்களின் கொடுஞ்செயலைக் கண்டிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதையே தங்களின் பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள்.

ராஜீவ்காந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ள இந்திய அரசுகள் இலங்கை இனப் பிரச்னையில் கையாண்டு வரும் தவறான கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் உருவாகி இருப்பதை மேற்கண்டவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.

இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
1. ஈழத் தமிழர்கள் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசின் நலன்களைக் காக்கும் வகையிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
ஈழத் தமிழர் பிரச்னையில் சிங்கள அரசு வகுத்த தீர்வை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக சிங்கள அரசு தனது இன அழிப்புப் போரைத் தங்குதடையின்றி தொடர்வதற்கு அனுமதித்தது.
2. சுய நிர்ணய உரிமையுள்ள தமிழ்த் தாயகத்தை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டம் அங்கீகாரமற்றதாகவும் அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. தமிழ்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என வர்ணித்து ஒழித்துக் கட்டுவதற்கு சிங்கள அரசு முற்பட்டதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
3. ஈழத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு தொடர்ந்து செய்த முயற்சிகளைத் தடுக்க இந்திய அரசின் அணுகுமுறைகளினால் முடியவில்லை.
4. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட நாடான இலங்கையில் நேரு, இந்திரா காலங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்த அன்னிய நாடுகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்கு ராஜீவின் கொள்கை இடம் அளித்துவிட்டது.

இக்கொள்கையால் ஏற்பட்ட தடுமாற்றங்களின் விளைவாக தென் ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்கு இந்திய அரசு மறைமுகமாகத் துணைபுரிந்துவிட்டது. இப்பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இந்தியா அதனுடைய எல்லைகளுக்குள்ளாகவே அடங்கிக் கிடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்குள்ளும் தென் ஆசிய பகுதிக்குள்ளும் பலமான நிர்பந்தங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. இலங்கை அரசுக்குத் தான் நேரிடையாக உதவி செய்வதை விட தனது நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இலங்கைக்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளது.

இலங்கையிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது. மேலும் அராபிய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகவே செல்கின்றன. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் இலங்கையைத் தொட்டுச் செல்கின்றன. இந்துமாக் கடலில் கப்பல் போக்குவரத்துப் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்தக் கடல் பாதைகள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் இலங்கை தனது ஆதிக்கத்திற்கு உள்பட்ட நாடாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது.

சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குத் தாராளமாக ராணுவ உதவிகள் அளிப்பதற்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. இந்த நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை ஒரு பெரிய சந்தை அல்ல. இலங்கையினால் இந்த நாடுகளுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடையாது. ஆனாலும், சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இந்நாடுகள் உதவி செய்வதற்குக் காரணமே இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

இந்திய அரசின் தவறான கொள்கையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானதை விட இந்தியா மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்தியாவின் தென்வாயிலில் பேரபாயம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே பலர் எச்சரித்துள்ளனர்.

நேருவின் நண்பரும் சீனாவில் இந்தியத் தூதுவராக இருந்தவருமான சர்தார் கே.எம். பணிக்கர் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்திருந்தார். ""இந்தியாவும் இந்துமாக் கடலும்'' என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியுள்ள நூலின் 7வது பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
""இந்தியாவைப் பாதிக்கும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தில் கடல் பகுதியை அலட்சியமாக ஒதுக்கி விடுகிற போக்கு இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது வடமேற்கு எல்லைப் பகுதிகளை மட்டும் பொருத்தது என்ற முடிவுடன் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலத்தை நில எல்லைகள் முடிவு செய்யவில்லை. மாறாக கடல்தான் எதிர்காலத்தை முடிவு செய்தது என்பதை மறந்துவிடக் கூடாது.''

வரலாற்று அறிஞரான டி.ஆர். இராமச்சந்திரராவ் ""இந்தியாவும் இலங்கையும் ஓர் ஆய்வு'' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலின் 8வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
""இந்துமாக் கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை உள்ளது. இந்துமாக் கடலின் பாதுகாப்பு அதைப் பொருத்ததேயாகும். நிலவியல் அடிப்படையிலும் அது நடு மையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியாகச் செல்லும் விமானத் தடங்களுக்கும் கப்பல் தடங்களுக்கும் இலங்கை நடு நாயகமாக உள்ளது.''

இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் நெருங்கி உறவாட இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இலங்கை ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உடன்பாடுகள் செய்து கொள்வதற்கும் இலங்கை தயங்கியதில்லை. 1962ம் ஆண்டு இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமித்தபோது இந்திய சீனப் படைகளின் மோதல்கள் நிகழ்ந்து இரு நாடுகளின் உறவும் மிகவும் சீர்கெட்டிருந்தது. அந்த நிலையில் 1963ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையும் சீனாவும் கடல் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டன. சீனப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து போவதற்கான உடன்பாடும் இந்த உடன்படிக்கையில் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் இந்தப் போக்குகளைக் கண்ட இந்திய ராணுவத் தளபதிகளும் இந்திய அரசுக்குத் தங்கள் கவலைகளைத் தெரியப்படுத்தினார்கள். இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான இரவி கெளல் என்பவர் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
""பிரிட்டனுக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமோ, சீனாவுக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதுபோன்று இந்தியாவுக்கு இலங்கை முக்கியமானதாகும். இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவுக்கு அதனால் ஆபத்து வந்துசேரும்''.

இந்தியாவுக்கு வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சிங்களத் துதிபாடிகளுக்கு கொஞ்சமும் கவலையில்லை. அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் நலனிலும் அக்கறை இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள அபாயம் குறித்தும் கவலையில்லை. சிங்கள இனவெறியருக்கு இந்தியா தொடர்ந்து எல்லாவகை உதவிகளையும் செய்து ஈழத் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகும். அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தச் சிங்களத் துதிபாடிகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மேலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிட முடியாது என்றும் அடிக்கடி சொல்கிறார்கள்.

சிலவேளைகளில் இந்தியப் பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இத்தகையோருக்கு இந்தியாவின் கடந்தகால வரலாறு கொஞ்சமும் தெரியவில்லை. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலம் வரை எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா கையாண்டு வந்திருக்கிறது என்பதை நம்முடைய பிரதமரோ அவருக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகளோ அல்லது அந்த அதிகாரிகளைத் திசைதிருப்ப முயலும் சிங்களத் துதிபாடிகளோ எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை அரசாங்கம் கருப்பின மக்களுக்கு எதிராகக் கையாண்ட நிறவெறிக் கொள்கையை ஜவாஹர்லால் நேரு மிகக் கடுமையாக எதிர்த்தார். நிறவெறியைப் பின்பற்றுவது அந்நாட்டின் சொந்தப் பிரச்னை என அவர் ஒதுங்கி நிற்கவில்லை. 1961ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் மாநாடு நடைபெற்றபோது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுக்குத் தலைமை தாங்கி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கடுமையாகக் கண்டித்தார் நேரு. அதுமட்டுமல்ல, நிறவெறிக் கொள்கையை அந்நாடு மாற்றிக்கொள்ளாவிட்டால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர் வற்புறுத்தி மற்ற நாடுகளையும் ஏற்க வைத்து தென்னாப்பிரிக்காவை வெளியேற்றினார். அதே மார்ச் மாதம் 13ம் தேதியன்று ஐ.நா. பேரவையில் பேசும்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

தென்னாப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கையாண்டு நீக்ரோக்கள், இந்தியர்கள் ஆகிய கருப்பின மக்களை ஒடுக்கியது. இலங்கை, இனவெறிக் கொள்கையைக் கையாண்டு தமிழர்களை ஒடுக்கி வருகிறது. நிறவெறிக்கும் இனவெறிக்கும் வேறுபாடு இல்லை. நிறவெறிக்கு எதிராக நேரு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சிங்கள இனவெறிக்கு ஆதரவாக மன்மோகன் அரசு நடந்து கொள்கிறது.

பாகிஸ்தானின் ஓர் அங்கமான கிழக்கு வங்கத்தில் திட்டமிட்டு இனப்படுகொலைகளை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியபோது அது அந்நாட்டின் உள்விவகாரம் எனக் கருதி பிரதமர் இந்திரா ஒதுங்கி நிற்கவில்லை. வங்க மக்களின் துயரம் குறித்தும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பது குறித்தும் தனது கவலையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். எந்தப் பயனும் இல்லாத நிலைமையில் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்க மக்களுக்கு விடுதலை தேடித் தந்தார்.

எனவே, ஈழத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை எனப் பேசுபவர்களும், பக்கம்பக்கமாக எழுதுபவர்களும், வரலாறு புரியாதவர்கள் அல்லர். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்கள். உண்மைகளை மறைத்தும் திரித்தும் சுயநல நோக்கத்துடன் செயல்படுபவர்கள். இவர்கள் என்றைக்குமே தமிழர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்காத சிங்களத் துதிபாடிகள் ஆவார்கள். எது உள்நாட்டுப் பிரச்னை எது சர்வதேசப் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமல் குழப்புபவர்கள்.

உலகமே சிறுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், எந்த ஒரு நாட்டின் பிரச்னையும் அண்டை நாடுகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு உலகம் நெருங்கிப் பிணைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், பழைய ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இவர்கள் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன் மனைவி இடையே நடைபெறும் சச்சரவில் தலையிடுவது நாகரிகமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக் கணவன், மனைவியைக் கொலை செய்ய அரிவாளுடன் விரட்டும்போது அது அவர்களின் குடும்பப் பிரச்னை என்று ஒதுங்கிக் கொள்பவன் கோழை மனித நேயம் அற்றவன். அதைப்போலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறுபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள்.


-பழ. நெடுமாறன்
நன்றி: தினமணி

ஈழம்: இங்கே ஒற்றுமை தேவை!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி சென்னையில் முதலில் மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்தது. அந்த அணிவகுப்பில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் கலந்து கொள்ள இயலாத காரணம் அதன் அரசியல் உறவுகள்தான்.

அதே சமயத்தில் ஈழப் பிரச்னையில் எவருக்கும் சளைத்தது அல்ல என்பதனைக் காட்டியாக வேண்டும். எனவே மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்த அதே தினத்தில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது. அந்தக் கருத்தரங்கில் பேசிய அதன் தலைவர்கள் `தனித்தமிழ்நாடு _ ஆயுதம் ஏந்தவும் தயார் _ இங்குள்ள இளைஞர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தி ஈழம் செல்வோம்' என்றெல்லாம் பேசினர்.

`இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் எந்த அம்சத்தில் நாம் இணைந்து நிற்க முடியுமோ அந்த சந்திப்பில் இணைந்து நிற்போம்' என்று முதல்வர் அறிவித்தார். இதுதான் இன்றைய அவசரத்தேவை. அதற்காக அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

ஈழத் தமிழர்களுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் அய்யா நெடுமாறன்கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனாலேயே அந்தக் கூட்டம் எடுக்கும் முயற்சிகள், முடிவுகள் வெற்றி மகுடம் சூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

தி.மு.கழகத்தோடு அய்யா நெடுமாறன் அவர்களுக்கு நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடு உண்டு. ஈழ மக்களுக்கு இன்றைய தேவை தமிழகத்தின் ஒற்றுமைதான். அந்த ஒற்றுமை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான். ஆகவேதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அய்யா கலந்து கொண்டார். உட்பகை ஒற்றுமையைச் சிதறடிக்க ஜெயலலிதா என்ன சொன்னார்? என்ன சொல்கிறார்? `விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நான்தான் போராடி வெற்றி பெற்றேன்' என்கிறார். இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்து இரும்புச் சங்கிலிகளால் இழுத்து வர வேண்டும் என்று முன்னர் சொன்னார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காகவே வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்து காராக்கிருகத்தில் அடைத்தார். ஆனால் இன்றைக்கு வைகோ எங்கே நிற்கிறார்? அ.தி.மு.க.வோடு கரம் கோத்துக்கொண்டு ஈழ மக்களுக்காகத்தான் இன்னும் போராடுகிறேன் என்கிறார். அதனை மக்கள் நம்புவார்களா?

அ.தி.மு.க.வைப் போல அவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கருத்தரங்கம் என்று அவர் தனி ஆவர்த்தனம் செய்தது பற்றி செல்வி ஜெயலலிதா என்ன சொல்கிறார்?

`தனித்தமிழ்நாடு என்ற அளவிற்குத் துணிச்சலாகப் பேசுகிறார்கள். ஆயுதம் ஏந்துவோம் என்ற அளவிற்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சிப் பீடத்தில் நான் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருப்பேன்' என்கிறார்.

ஈழப்பிரச்னையை இப்போது உள்நாட்டு அரசியலின் லாவணிக் கச்சேரி ஆக்கிவிட்டார்கள். ஈழ மக்களுக்கு இதுதான் நாம் செய்யும் உதவியா? அங்கே வன்னிக்காடுகளில் வனவிலங்குகளோடு வாழும் இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்களின் கண்ணீரில் லட்சிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ சோதனைகளைத் தாங்கி பட்டினி கிடக்கும் அவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி செய்கிறது. அதனை நடு வழியிலேயே சிங்கள ராணுவம் பறித்துக் கொள்கிறது. சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்த பின்னர்தான் முதன்முதலாக 750 டன் உணவுப் பொருள்கள் ஈழ மக்களின் கரங்களை எட்டியிருக்கிறது.

சோவியத் யூனியனைத் தாக்கிய ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போராடிய செஞ்சேனை வீரர்களுக்குக் கிடைத்தது ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு. இன்றைக்கு சிங்கள ராணுவத்தின் முப்படைத் தாக்குதலை எதிர்கொள்ளும் ஈழப் போராளிகளுக்குக் கிடைப்பது ஒரு நாளைக்கு ஒரே ஒரு இளநீர். இதுதான் உணவு. உணர்வுகள்தான் அவர்களுடைய நாடி நரம்புகளை - இதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் இன அழிப்பில் அனைத்து சிங்களக் கட்சிகளும் ராஜபட்சேக்களுக்குப் பின்னே அணிவகுத்து நிற்கின்றன. அதனால் வன்னிக்காடுகளில் ஈழத் தமிழர்களை வேட்டையாடுவதும் வங்கக் கடலில் மீனவத் தமிழர்களை வேட்டையாடுவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது பாசிச சிங்கள அரசிற்குத்தான் தெரியும்.

`அங்கே காட்டிலும் மேட்டிலும் கண்ணீரில் மிதக்கும் ரத்த உறவுகளுக்காகக் காலத்தோடு உதவுவோம். அதற்கு மத்திய அரசை அசைய வைப்போம்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதனைக் களத்தில் நிற்கும் போராளிகள் இரு கரம் விரித்து வரவேற்கிறார்கள். அதனால் இன்றைக்கு அவர்கள் ஆயிரம் யானை பலம் கொண்டு முன்னேறுகிறார்கள்.

ஆனால் அதற்குப் பாதகம் செய்யும் முறையில் இங்கே தனித் தமிழ்நாடு, ஈழத்திற்குப் படையோடு செல்வோம் என்று வாய் வீரம் பேசுகிறார்கள்.

அப்படிப் பேசுவதற்கு இதுவா நேரம்?சிங்களவன் பூமி இலங்கை என்று அந்த நாட்டு ராணுவத் தளபதி கொக்கரிக்கிறார். இதன் பொருள் என்ன? ஈழத் தமிழனாயிருந்தாலும் இலங்கைத் தமிழனாக இருந்தாலும் அவர்கள் பொட்டுப்பூச்சிகள், அவர்கள் அடிமைகள் என்பதுதானே பொருள்?

இந்தச் சூழலில் ஈழ மக்களுக்கு உடனடித் தேவை என்ன என்பதனை அனைத்துக் கட்சிக் கூட்டம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நல்ல அறிவிப்பினைச் செய்தார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னல்படும் ஈழ மக்களுக்கு உதவுவோம் என்று ஜப்பான் செல்லும் வழியில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இவர்கள் அறிவித்ததை செயல்படுத்தினாலே போதும். அதன் பின்னர்; அடுத்த அடி வையுங்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தும். அதற்கு இங்கே நம்மிடையே ஒற்றுமை தேவை.

தம்முடைய மைந்தனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிய விஜயகாந்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கம் பெற்றிருக்க வேண்டும் என்பது நமது கருத்து. தம்முடைய உணர்வுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டாமா?

1980_களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எத்தகைய எழுச்சி ஏற்பட்டதோ அத்தகைய எழுச்சியின் அடித்தள நீரோட்டம் சூடேறிச் சுழன்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களின் உள்ளங்களில் எழுந்துள்ள எரிமலை பிரசவிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது பஞ்சபாண்டவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவமைந்தர்கள். ஆனால் தங்கள் அன்னை சிங்களத் துப்பாக்கி முனையில் துகிலுரிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் ஈழத்து மனித குமாரர்கள்.

ஈழத்து மக்களுக்காக வில் அம்பு ஏந்தி வருகிறோம் என்று நாம் வீரவசனம் பேசத் தேவையில்லை. ஏனெனில் இன்று வரை ஈழப்போராளிகள் எவருடைய உதவியையும் கோரியதில்லை. நாடியதில்லை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஒன்றுபட்டுத் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் போதும் என்றுதான் கூறுகிறார்கள்.

தமிழ் இன அழிப்பு நிறுத்தப்படவில்லையென்றால் ஈழம் என்று நாம் குரல் கொடுக்கத் தேவையில்லை. சிங்களப் பேரினவாதமே அதனை பெற்றெடுத்துத் தரும்.

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 02-11-08

ஞாயிறு, அக்டோபர் 19, 2008

நளினிக்கு வேண்டியது கருணையல்ல; நீதி

ராஜீவ் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் நளினி மற்றும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி திரு. எஸ். நாகமுத்து அளித்த தீர்ப்பின் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

'மனுதாரர்கள் முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக சிறை விதிகளைப் பின்பற்றாமல் ஆலோசனைக் குழு எடுத்துள்ள முடிவு, கைதியின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையிலும் நீதியை மறுக்கும் வகையிலும் உள்ளது. இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறை விதிகள் பின்பற்றப்படாமல் நளினியின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அரசால் விதிக்கப்படுள்ள சிறை விதிகளை அரசு அதிகாரிகளே மீறியுள்ளனர்.'

நளினியின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்படும் எதிர்க்கருத்துகள் எதுவும் சிறிதும் நியாய உணர்வற்றவையாக உள்ளன. "ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியதுதான்" என்பது போன்ற கருத்துகள் சட்ட-நீதி அமைப்பிற்கு சவால் விடுவதாகும். நளினி ஒரு கொடுங்குற்றவாளி அல்ல. ஒரு கொடுங்குற்றத்திற்கு அவருக்குத் தெரியாமலேயே உடந்தையாக்கப்பட்டவர். ஈழப் போராளிகளுக்குத் தமிழகத்தில் எத்தனையோ உதவிகளை எவ்வளவோ தமிழ்க் குடும்பங்கள் செய்திருக்கின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார்கள். மறைமுகமாக உதவியிருக்கிறார்கள். இன்றும் உதவி வருகிறார்கள். நளினி செய்த குற்றமும் அத்தகையதே. இதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை மிக அதிகம் என்பதை அற உணர்வுள்ள யாரும் புரிந்துகொள்ளலாம்.

நாகரிக உலகின் நீதியமைப்புகளைப் பின்பற்றாதவை எனக் கருதப்படும் அரபு நாடுகளில்கூட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மன்னிப்பைப் பெற்றால் தண்டனையைக் குறைப்பது போன்ற நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால் சோனியா காந்தி நளினியை மன்னித்தாலும் நம் நீதிமன்றங்கள் அவருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று விரும்பினாலும் அதையெல்லாம் தாண்டி நளினியைச் சிறையிலேயே சாகவிடவேண்டும் எனத் தீர்மானிக்கும் சக்திகள் எவை? தமிழக முதல்வர் தன்மேல் புலிகளின் ஆதரவு முத்திரை விழுந்துவிடும் எனப் பயந்து இதைச் செய்வதாகக் கருத முடியாது. தனது ஈழத் தமிழர் ஆதரவிற்காக ஒருமுறை ஆட்சியையே தி.மு.க. இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எனக் கருதப்படும் ஒரு அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருக்கு இரங்கல் கவிதை எழுதிடும் அளவு மன திடம் கொண்ட தமிழக முதல்வர் பரிதாபத்திற்குரிய ஒருவரின் விடுதலைக்கு எதிராக இருக்கமாட்டார் என்று நம்புவோம்.

-மனுஷ்ய புத்திரன்
நன்றி: உயிர்மை.காம்

செவ்வாய், அக்டோபர் 14, 2008

'மீடியா வன்முறையும், அதீத மீடியா ஆர்வமும்...'

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்வதைப் போல 'மீடியா வன்முறை' என்று குற்றம் சாட்டுவதும் தற்போது பேஷனாகிவிட்டது இடுப்புக்குக் கீழே ஜட்டி தெரிய ஜீன்ஸ் போடுவதைப் போல.

கருத்தரங்குகளுக்குத் தோதான கட்டுரை வாசிக்கத் துணியும் எழுத்தாளர்கள் 'மீடியா வன்முறை மற்றும் மீடியா பயங்கரவாதம் தனிநபர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகையான தாக்கம்' எனத் தலைப்பிட்டு வாசிக்கும் கட்டுரைகள் ஒரு விஷயத்தை மறைக்கின்றன. தமிழர்களின் 'அதீத மீடியா ஆர்வம்' எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை.

மீடியாக்கள் தனிநபர்களைப் பயன்படுத்துவது என்பது எப்படி விவாதத்திற்குரியதோ, அதைப் போல தனிநபர்கள் அசட்டுத்தனமாக மீடியாவில் பங்கு பெற நினைப்பது எந்தளவிற்கு உச்சக்கட்டமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. கதையைச் சொல்கிறேன். இதில் பயங்கரவாதி யார் என்பதைப் படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தனியார் தொலைக் காட்சியொன்றின் க்ரைம் ரிப்போர்ட் சார்ந்த நிகழ்ச்சி அது. நாள்தவறாமல் பிள்ளை பிடிக்கிறவனைப் போல, இராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மார்ச்சுவரிகளில் ஆம்னி வேன், கேமரா சகிதம் ஆஜராவோம். பச்சைக் குழந்தை பிணம் முதல் வெட்டுப்பட்ட மூத்த குடிமகனின் பிணம் வரை அத்தனையும் பார்த்துப் பார்த்து முகர்ந்து முகர்ந்து மனம் ஒருவிதமான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டு விட்டிருந்தது. பிண வாடையை வைத்தே அது கொலையா, எனச் சொல்லும் அளவிற்கு பிணங்கள் குறித்த நிபுணத்துவம் எங்களுக்கு மார்ச்சுவரி பணியாளர்களால் சொல்லித்தரப்பட்டது.

எங்கள் தொலைக்காட்சிக் குழுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அசைன்மெண்ட்டின் தாரக மந்திரம் 'எதையும் மாத்தி யோசி'!

காலை 11 மணிக்கே ஓல்ட் காஸ்க் ரம் ஆஃப் வாங்கி நானும் கேமரா மேனும் அடித்துவிட்டுத்தான் அடுத்த கட்ட வேலையைப் பற்றியே யோசிப்போம். இந்தக் காலகட்டத்தில்தான் வெட்டியான்களும் துப்புரவுத் தொழிலாளர்களும் காலை எழு மணிக்கே ஒயின் ஷாப் திறக்கும் போதே (அப்போது பிச்சைக்காரர்களைப் போல குடிகாரர்களை நடத்தும் டாஸ்மாக் இல்லை. தவிர அரசாங்கத்தின் புண்ணியத்தில் ஓல்டு காஸ்க்கும் தற்போது வழக்கொழிந்து விட்டது.) ஏன் முண்டியடிக்கிறார்கள் என்கிற தேவாமிர்த ரகசியம் புரிபடத் துவங்கியது.

மார்ச்சுவரி சகவாசமே வாழ்க்கையில் இனி வாய்க்கக்கூடாதென இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்ட காலகட்டமும் அதுதான். தினமொரு பிணம் தினமொரு கொலை என எங்கள் ஆம்னி வேன் சென்னையின் சுற்றுச் சாலைகளைச் சுற்றி வந்தது.

மெல்ல மெல்ல ஹிட் அடித்த அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போட்டோ போட்டியே நடப்பதுண்டு. எங்களுக்காகக் காவல்துறை உயரதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். சொன்னால் நம்புங்கள், நாங்கள் சரக்கடித்துவிட்டு சுற்றி வருகையில் தூக்கம் கண்களைச் சுழற்றினால், வட சென்னையிலுள்ள காவல்நிலையமொன்றில், காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் ஓய்வறையில்தான் தூங்குவோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அக்யூஸ்டுகளை 'சார் இன்னொரு தடவை அடிங்க சார்' என்றால் அடிப்பார்கள்.

நானேகூட காக்கிச் சட்டை போடாமல் காவல்துறை ஆய்வாளரின் சேரில் அமர்ந்து கொண்டு ஒரு முறை ஒரு குற்றவாளியை விசாரித்த போது எனக்குக் கிடைத்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவரமுடியாது.

காக்கிச் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு விசாரித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதே குதூகலமாக இருந்தது.

காவல்துறையினர்களின் குரூர ஆக்கிரமிப்பு மனநிலை படிப்படியாக எப்படி உருவாகிறது என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்தவன் என்கிற முறையில் அதைப் பற்றித் தனியாகவே இன்னொரு கட்டுரை எழுத முடியும்.

'கால் காசுனாலும் கவர்மெண்ட் காசு என்பதைப் போல, போலீஸ் காசு' என்று மாற்றிக் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்துக் கோயில் படிக்கட்டுகளில் நடந்து வரும் போது கொண்டு வரும் பழங்களைத் தட்டிப் பறிக்கும் குரங்கு என்ன நினைக்கும்? அப்படித்தான் காவல்துறையினர் தட்டிப் பறிக்கும் போது நினைத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்

காவல்துறையினர் முதல் சமூகத்தின் பல தரப்பினரும் விரும்பிப் பார்த்த அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் நடந்த சம்பவத்தைச் சொல்வதற்குத்தான் இப்படிச் சுத்திச் சுத்தி வருகிறேன். நாங்கள் எங்கும் நுழையலாம் எதையும் செய்யலாம் என்கிற செல்வாக்குடையவர்களாக இருந்தோம் என்பதைச் சொல்லத்தான் இத்தனை 'பில்டப்'புகளும்.

நொளம்பூர் கொலை வழக்கு அது. கொல்லப்பட்டவர் ஓட்டேரியைச் சேர்ந்தவர். தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். நான் நெருங்கிப் பார்த்த போது மூன்று விரல்கள் உள்ளே செல்லும் அளவிற்குப் பின்னந்தலையில் ஒரு ஓட்டை இருந்தது. அடி பலமாக விழுந்ததால் ஆள் ஸ்பாட் அவுட். அக்யூஸ்டு சரண்டர்.

சாவுச் செய்திகளை இப்படித்தான் எந்தவித உணர்ச்சியுமின்றி வர்ணிப்போம்.

நொளம்பூரில் கொள்ளப்பட்டவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மனைவி. நாங்கள் அன்றைய நிகழ்ச்சிக்கே அந்தச் சாவை படம் பிடித்து ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்ததால், எங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி பாடியைக் கீழ்ப்பாக்கத்தில் சீக்கிரமே போஸ்ட்மார்டம் செய்து ஓட்டேரிக்குக் கொண்டுவந்து விட்டோம். உறவினர்கள் அயலார்கள் எனப் பெருங்கூட்டமே சாவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே சின்னத் தெரு அது என்பதாலும் கொலையின் காரணமாக ஒருவர் செத்திருக்கிறார் என்பதாலும் கூட்டம் மொய்த்தது.

அப்போதுதான் என்னுடைய கேமராமேனுக்கு அந்த விபரீத ஆசை உதித்தது. எதையும் மாத்தி யோசி என்கிற பார்முலாவைக் கடைப்பிடித்துப் பார்ப்பது எனத் தீர்மானித்துவிட்டான். ஏற்கனவே அடித்த ஓல்டு காஸ்க் குவாட்டரின் வேலையாகக்கூட அது இருக்கலாம்.

சின்னச் சின்ன வீடுகள் சேர்ந்த தொகுப்பு வீடுகள் டைப் என்பதால் வெளியே பிணத்தைக் கிடத்தியிருந்தார்கள். சுற்றிலும் அவரது உறவினர்கள் அமர்ந்திருக்க நடுவே அவரது மனைவி இரண்டு குழந்தைகளைப் பக்கத்தில் அமரவைத்து அணைத்தபடி அழுது கொண்டிருந்தார். "மாப்ள வழக்கமா ஷூட் பண்ணி பண்ணி போரடிச்சுருச்சு. ஒரு சேஞ்சுக்கு ஷாட் வைக்கலாம்டா!" என ஆரம்பித்த கேமரா மேன் அவனது யோசனையைத் தெரிவித்த போது நான் ஆடிப் போய்விட்டேன்.

எவ்வளவோ அசட்டுத்தனங்களைப் பத்திரிகையாளன் என்ற முறையில் செய்திருந்த நான் இந்த யோசனையைக் கேட்டு ஆடிப் போய்விட்டேன். அதாவது பிணத்தின் நெத்தியில் உள்ள ரூபாய் நாணயத்தில் கேமராவை போகஸ் பண்ணி அப்படியே மெதுவாக ஜூம் அவுட் செய்து முழுப் பிணத் தோற்றத்தையும் காட்ட வேண்டும்.

அப்படிச் செய்ய வேண்டுமெனில் கிடத்தியிருக்கிற பிணத்தின் இரண்டு புறமும் கால்களைப் போட்டுக் கொண்டு நின்றபடியே ஷூட் செய்ய வேண்டும். நடக்கிற காரியமா இது? ஆனால் எனது கேமரா மேன் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியின்றித் தயங்கித் தயங்கி பிணத்தின் தம்பியை அணுகினேன்.

என்னை முந்திக் கொண்டு வந்த என்னுடைய கேமரா மேன், பிணத்தின் தம்பியிடம் 'சார் உங்க அண்ணார கடைசியா எப்ப பாத்தீங்க, அவரு என்ன சொன்னாரு' என அவரிடம் நேர்முகம் செய்து அதை கேமராவில் பதிவு செய்யவும் ஆரம்பித்துவிட்டான். அவரும் சளைக்காமல் சொன்னார்.

இடையிடையே சோடா குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சந்துக்குள் சென்று இன்னொரு ஆஃப் வாங்கி நாங்கள் மூவரும் பருகினோம். மீண்டும் அவர் நேர்முகம் கொடுத்தார். கடைசியில் அந்த ஷாட்டை அப்படி எடுப்பது என்பதை நாங்கள் மூவரும் தீர்மானித்து விட்டோம்.

அத்தனை பேரும் பிணத்தை விட்டுத் தள்ளி அமரச் சொல்லிவிட்டு நாங்கள் வேலையை ஆரம்பித்த போது அத்தனை பேரும் எங்களைத்தான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுதந்திரம் கிடைத்த திமிரில் என்னுடைய கேமரா மேன் இன்னொரு யோசனையையும் சொன்னான்.

'மாப்ள ஆம்பியன்ஸ் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்டா. நீ என்ன பண்றன்ன அந்தம்மா, அதாண்டா செத்தவரோட பொண்டாட்டி. அவங்க ஜாக்கெட் ஓரத்துல லேப்பிள் மைக்க குத்தி விடச் சொல்லு. அப்புறமா எல்லாரையும் இன்னும் கொஞ்சம் சத்தமா அழச் சொல்லு..." நான் தயங்கிய போது என்னுடைய கேமரா போர்வாள் அதையும் செய்து முடித்துவிட்டது.

நினைத்தபடி அன்று அந்த நொளம்பூர் கொலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மறுநாள் எனக்கு ஒரு போன் வந்தது. "சார் அதான் நேத்து எங்க வூட்டுக்காரரு செத்தாரே. ஆமாம் ஓட்டேரி சார். அவங்க ஒயிப் பேசறேன் சார். ப்ரோகிராம் எப்ப சார் டீவியில வரும்".

-நித்திலன்

நன்றி: உயிர்மை.காம்

சனி, அக்டோபர் 11, 2008

புகை பிடித்தால் 10 ஆண்டுகள் ஆயுள் குறைவு

உலகநாடுகள் பலவற்றிலும் இந்தியாவிலும் புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்கும் பொது இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்ட போதிலும், புகை பழக்கத்துக்கு மாறி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையவில்லை.பிற எந்த நாட்டையும் விட இந்தியாவில் பீடி, சிகரெட், பான் மசாலா, குட்கா போன்ற வஸ்துகளை பயன்படுத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகிலேயே இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
2001ம் ஆண்டு புகையிலை பொருள் சட்டவிதிமுறையின் படி இந்தியாவில் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது. ஆனால் விதிமுறைகளை அமல் செய்ய சரியான நடைமுறைகள் இங்கு இல்லை. சிறுவர்கள் தாராளமாக சிகரெட் பிடிக்கலாம். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சிறுவன் கடைக்கு சென்று சிகரெட் கேட்டு வாங்கும் போது அவனுடைய வயதை உறுதி செய்ய மொபைல் எண் அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை கேட்கிறார்கள். சிறுவனிடம் போலி விபரங்களை அளித்து சிகரெட் பெறுவதற்கு பரிசோதனைக்காக போலீசாரே அனுப்புவார்கள். ஒருவேளை அவனிடம் புகையிலைப் பொருட்களை கடைக்காரர் விற்பனை செய்தால் கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் இல்லாததால் சிறுவர்கள் எளிதில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டை புகையிலையை ஒதுக்கும் இளைஞர்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுவாச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நரசிம்மன் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்தது:புகைபிடிக்க பழகி விட்டவர்கள் மத்தியில் அதை விடுவதற்கு செய்யும் முயற்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்தியாவில் 2 சதவீதம் பேர்தான் புகைப் பழக்கத்தை கைவிட முன்வருகிறார்கள். இது மற்றநாடுகளை விட மிகக் குறைவு. ஆகவே புகை பிடிப்பதற்கு முன்பே அதை தடுக்க வேண்டுமானால் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். இதற்காக நாங்கள் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்து வருகிறோம். இதை பெரிய அளவில் செய்யும் போது 1015 ஆண்டுகளில் நல்ல விளைவு ஏற்படும்.இந்தியாவில் விளம்பரத் தடை, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை இருந்த போதிலும் புகைக்கும் பழக்கத்தில் மாற்றம் இல்லை.
இந்தியாவில் புகைபிடிக்கும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். பீடி, சிகரெட், மூக்குப் பொடி எதுவாக இருந்தாலும் அது நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதுதான். சிலர் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று கூறி சமாதானம் செய்கிறார்கள். அது தவறு. கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அடுத்தவர் புகையை நாம் சுவாசித்தால் அது நமது உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதை கடந்த 1015 ஆண்டுகளாகத்தான் உணரத் தொடங்கி யிருக்கிறோம். இவ்வாறு நரசிம்மன் தெரிவித்தார். எதிர்கால இளைஞர்கள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க, பள்ளிகளில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.புகையில் மறையும் வாழ்க்கை : புகை பிடிப்பவர்களின் ரத்த நாளங்களை நிகோடின் பாதிப்பதால் அதன் இயல்பு தன்மை மாறி, இருதய நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது. புகையால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. டி.பி. வருவதற்கும், சுவாச உறுப்புகளில் கேன்சர் ஏற்படவும், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படவும் காரணமாகிறது. புகை பிடிக்கும் ஆண்கள் 10 ஆண்டு வாழ்க்கையை இழக்கிறார்கள். புகையிலைப் பொருட்களால் உலகில் ஆண்டுக்கு 54 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பாதிப்பேர் மரணமடைய புகையிலையே காரணம்.
நன்றி: www.vizhippu.net

வெள்ளி, அக்டோபர் 10, 2008

தீபாவளி கொண்டாட்டம்.. கிரெடிட் கார்ட் திண்டாட்டம்..!

அன்பார்ந்த நண்பர்களே. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாகத் தோன்றினால் உடனடியாக வங்கிக்குப் புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளைக் களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்குப் புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களைத் தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையைச் செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதைத் தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரைப் பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனைப் பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத் தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் ‘ஸ்வாகா’ செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத் தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை நுகர்வோர் நலன் ( http://www.nukarvor-nalan.blogspot.com) என்ற வலைப்பூவில் பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)

- சுந்தரராஜன்

வியாழன், அக்டோபர் 09, 2008

அன்புள்ள (நடிகை) ஷகிலாவுக்கு...

திருநெல்வேலியில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி கேள்விப்பட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். உடலைக் காட்டும் விதமாக ஆடை அணிவதை எதிர்த்து கலாச்சாரக் காவலர்கள் களமிறங்கும் மாநிலத்தில் இப்போது உடலை முழுதாக மறைத்து ஆடை அணிந்ததற்காக உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வினோதமாக இருக்கிறது. பர்தா அணிவது ஒரு குற்றமா?

முதலில் உங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கே அபத்தமானது. திருநெல்வேலியில் ஏதோ ஒரு திரையரங்கில் "அதிரடி (!) ரெய்ட்" நடத்திய போது அங்கு ஓடிய படத்திற்கு நடுவில் நீங்கள் நடித்த, சென்ஸார் செய்யப்படாத 'பிட்' காட்சிகள் ஓட்டப்பட்டனவாம். அதில் நடித்த "குற்றத்திற்காக" உங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இத்தகைய படங்களில் நடிப்பது குற்றம் என்றால் அந்தக் குற்றம் திட்டமிட்டு நடத்தப்படுவதற்கு காரணமான லட்சோப லட்ச ஷகிலா 'பிட்' பட ரசிகர்களுக்கு எதிராக என்ன பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரியவில்லை.அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த போது உங்கள் பாதுகாப்பிற்கு 20, 30 "மெய்க் காவலர்களுடன்" பர்தாவை இன்னொரு மெய்க்காவலராக அணிந்து வந்ததில் புதிதாக எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. உங்களைப் போலவே "சமூக இழிவு" என்று கருதப்படும் காரியங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களுக்கு வரும் பல பெண்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

இந்தத் தருணத்தை வைத்து ஓ.சியில் காசு பண்ண நினைக்கும் ஊடுருவும் மீடியாவின் கண்களுக்கு பயந்தோ என்னவோ பாலியல் தொழில் நடத்தியதாக கூறப்பட்ட மகேஸ்வரி என்ற டிவி நடிகையும் இதே போல பர்தா அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் இப்போது "சமூக இழிவான காரியம் தொடர்பாக குற்றாம்சாட்டப்பட்ட" நீங்கள் பர்தா அணிந்து வந்ததுதான் இஸ்லாமிய கலாச்சாரத்தை அவமானப்படுத்துகிறது என்று திருநெல்வேலியில் உள்ள ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுவது எவ்வளவு பொருத்தமானது என தெரியவில்லை.

எத்தனையோ ஊர்களில், எத்தனையோ வழக்குகளில், எத்தனையோ பெண்கள், எத்தனையோ மதங்களைச் சேர்ந்த பெண்கள் இது போல பர்தா அணிந்து "பாதுகாப்பாக" நீதிமன்றங்களுக்கு வந்திருக்கிறார்கள்."நான் ஒரு முஸ்லிம். பர்தா அணிய எனக்கு முழு உரிமை உள்ளது" என்று இந்த விவகாரத்தில் நீங்கள் பதில் கூறியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் உங்களுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது என்றால் இதில் வேறு ஏதோ தூண்டுதல் இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை நீங்கள் பர்தாவில் வரும் போதும் உங்கள் முக தரிசனம் கிடைக்காமல் பத்திரிகை புகைப்படக்காரர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் "போச்சே, போச்சே, எல்லாம் போச்சே, கைக்கெட்டனது வாய்க்கு எட்டலையே" என்று திருவிளையாடல் படத்து தருமியைப் போல் புலம்பி வருகிறார்கள். ஒரு கவர்ச்சி 'பிட்' செய்தி போடுவதற்கான வாய்ப்பு இப்படி வீணாய்ப் போனதில் அவர்களுக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும்.இந்த விஷயத்தில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இப்போது உங்களுக்கு எதிராக போராடுவதாக அறிவித்தவர்களில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களில் பலர் திருநெல்வேலியின் கல்யாணி திரையரங்கில் உங்கள் திரைப்படத்தை மெய் மறந்து பார்த்தவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய முடியுமா?. "ஏ" படங்களுக்கும், "பிட்" படங்களுக்கும் பேர் போன அந்த திரையரங்கு இப்போது மூடிக் கிடக்கிறது.

ஏனெனில் பிற்போக்கு முகமூடி அணிந்துகொள்ளும் சமூகத்தில் இணையம், டி.வி.டிகள் மூலம் எந்த போலீஸ் கெடுபிடியும் இல்லாமல் இளைய தலைமுறையினர் தங்களின் உணர்வுகளுக்கு வடிகால் தேடத் தொடங்கி விட்டார்கள். தியேட்டர்களுக்கு வந்து சில விநாடிகள் ஓடி மறையும் 'பிட்'களுக்காக காத்திருக்கும் பொறுமை குறிப்பாக தொழில்நுட்பக் கருவிகளுக்கு பழகிவிட்ட இளைய தலைமுறைக்கு இல்லை.

இன்னும் தியேட்டர்களின் ஏ படங்களையும் பிட் படங்களையும் நம்பியிருப்பது முந்தைய தலைமுறை பெருசுகள்தான். ஏ படங்களுக்கென்றே இயங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், நடத்தப்படும் ரெய்டுகள், நடத்தப்படாத ரெய்டுகள் மூலம் அதிகாரிகளுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை, இப்போதுதான் நேர்மையை முதல் முதலாக கண்டுபிடித்தது போல சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் உங்களை வைத்து நீதியை நிலை நாட்ட போராடுகிறார்கள்.இது வரை பிட் படம் ஓட்டிய விவகாரத்தில் எத்தனையோ வழக்குகள் உள்ளன. முழு போர்னோ படங்களையும் அதிலிருந்து பிட் படங்களையும் தயாரிப்பது சற்று காலம் முன்பு வரை ஒரு தனி தொழிலாக இருந்து வந்தது. அதில் எல்லாம் நடித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இந்நேரத்திற்கு அந்த வழக்குகளை விசாரிக்க ஒரு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியிருந்திருக்கும். அது மீடியாவுக்கு செமை தீனியாக இருந்திருக்கும். ஆனால் உங்களை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதால் காட்சி இன்பம் கிடைத்திருக்கக்கூடிய பலருக்கு நீங்கள் பர்தா அணிந்து வந்ததில் பெருத்த ஏமாற்றம் இருந்திருக்கும்.

என்ன உடை அணிந்து வருவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதால், இந்த விவகாரத்தில் நீங்கள் குற்ற உணர்வு அடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் மிகத் துணிவாக பதில் கூறியிருப்பது உங்களின் தன்னம்பிக்கையையும் மனத் தெளிவையும் காட்டுகிறது. மீண்டும் ஒரு முறை நீதிமன்றத்திற்கு பர்தாவுடன் வந்தால் எங்களது மகளிர் பிரிவை வைத்து செருப்படி கொடுப்போம் என்று ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான பிறகு, அதைக் கண்டு அஞ்சாமல், "நானும் ஒரு முஸ்லிம், இந்த ஆடையை அணிய எனக்கு முழு உரிமை உண்டு என கூறியிருக்கிறீர்கள்."

ஆனால் ஒரு முஸ்லிம்தான் பர்தா அணிய வேண்டும் என்ற கட்டாயம்கூட இல்லை. ஒரு காலத்தில் வளைகுடா நாடுகளின் புழுதிப் புயலை சமாளிக்க எவ்வாறு உடலை முழுதும் மூடிய ஆடை தேவையாக இருந்ததோ அதைப் போலவே இன்றைய தமிழ்ச் சமூகத்தின் போலியான ஒழுக்கக் காவலர்களிடமிருந்து தப்ப உடலை மறைக்கும் ஆடை தேவைப்படுகிறது.

ஸ்ரேயாவின் கவர்ச்சியை சினிமாவிலும் டிவி மூலமாக வீட்டில் வரவேற்பறையிலும் காண்பதில் அவர்களுக்கு கூச்சமே இல்லை. ஆனால் மேடையில் அவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு வராவிட்டால் வீட்டுக்குப் போய் டிரஸ் மாற்ற வைத்துவிடுவார்கள்.கலியுக துச்சாதனர்கள் பொது சபையில் இருக்கும் பெண்களின் விருப்பத்தை மீறி அவர்கள் மீது ஆடைகளை போர்த்தி மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதில் முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் பழமைவாதிகள் அல்லாத பெரும்பான்மையினர் வாய் மூடி மெளனமாக இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய தமிழர்களிடம் தனிப்பட்ட கருத்து என்ன என்று கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். பொதுக் கருத்தாகக் கேட்டால் வேறொன்றை சொல்வார்கள். அதற்கெல்லாம் மாறாக யாருக்குமே தெரியாமல் மனதிற்குள் தங்கள் நிஜமான கருத்தாக வேறொன்றை கொண்டிருப்பார்கள்.

இத்தகைய தமிழ்ச் சமூக போலித்தனங்களையும் கையாலாகத்தனங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் போலி ஒழுக்கவாதிகளாலும் அவர்களின் சங்கராச்சாரியாராக இருக்கும் தமிழ் ஊடகங்களாலும் துன்புறுத்தப்படும் பல பெண்களில் நீங்கள்தான் லேட்டஸ்ட் பலிகடா. ஆனால் உங்கள் விஷயத்தில் உடலை ஆடையால் மூட வேண்டும் என்பதைத் தாண்டி, என்ன மாதியான ஆடையால் போர்த்த வேண்டும் என சமூகத்திற்கு தீர்மானிக்க உரிமை இருக்கிறது என சிலர் வாதம் செய்கிறார்கள்.

ஒரு பூகோளத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவான பர்தா பிற்பாடு அந்தக் கலாச்சார ஆடையாக மாறியது. ஆனால் அது ஒரு மதத்தவர் மட்டுமே அணியும் ஆடை என வரையறுக்க முடியுமா? ஆடையை மதத்தோடு தொடர்புபடுத்தினால் சீக்கியர் அல்லாதோர் சுடிதார் அணிய முடியுமா? இந்துக்கள் பிளேசர், டை அணிய முடியுமா? அல்லது 'ஒழுக்கமானவர்கள்'தான் இத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று வரைமுறைபடுத்தினால் என்னாவது? அப்படியானால் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு எந்தக் கலாச்சாரத்தையும் சாராத ஒரு புதிய உடையை தயார் செய்து அதை uniform போல அணிய கொடுக்க வேண்டியிருக்கும்.

நமது கலை, இலக்கியம், சினிமா, இசை ஆகியவை பெருமளவில் ஆண்களால், ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை என்று ஓஷோ சொன்னது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. போர்னோ படங்கள் அதற்கு விதி விலக்கல்ல. ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் தயார் செய்யப்படும் ஒரு காரியத்தில் நடிப்பவர்கள்தானா இங்கு குற்றவாளி?

என்ன செய்வது, இந்திய அரசியல் சாசனம் இத்தகைய ஆண் சார்பு பார்வைக்கு பேர் போனது. ஆண்களின் பாலியல் இச்சையை ஊற்றுக் கண்களாகக் கொண்ட பாலியல் தொழிலில் அதை பூர்த்தி செய்யும் பெண்தான் நமது சட்டத்தின் கண்களில் குற்றவாளி. தவிர்க்கவே முடியாத பாலியல் தொழிலுக்கும் போர்னோ படத் தயாரிப்புக்கும் சட்ட பூர்வ அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவற்றை புறக்கணித்து வரும் இந்திய அரசு இப்போது முதல் முறையாக நிஜமான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப் பார்க்கிறது. அதாவது, பாலியல் தொழில் செய்யும் பெண் மட்டுமல்ல, அதற்கு மூலக் காரணமாக இருக்கும் காசு கொடுத்து பாலியல் இச்சையைப் போக்க வரும் ஆணும் இனி குற்றவாளி. இந்தத் திருத்தத்தை ஆண்களே கணிசமாகக் கொண்ட ஆளும் வர்க்கம் அனுமதிக்குமா என தெரியவில்லை.

இதே விதியை போர்னோ படங்களுக்கும் விரிவுபடுத்தினால் அந்த நிலைமை மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாலியல் படங்களை தயாரிப்பவர்கள், நடிப்பவர்கள் மட்டுமல்ல; அதைப் பார்ப்பவர்களும் குற்றவாளிகள்! அந்தச் சட்டம் அமலுக்கு வரும் போது இந்தியாவின் பாதிக்கும் சற்று அதிகமான ஜனத்தொகையை, அதாவது ஆண்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வயதில் சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். அந்த கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அதற்குப் பிறகு முழுமையாக பெண்கள் கையில் இருக்கும் இந்தியா மிக சுபிட்சமாக இருக்கும். போர்களிலும் அழிவிலும் அதிக நாட்டம் கொண்ட ஆண்கள்தான் சிறையில் இருப்பார்களே!

அப்படி ஒரு சூழல் வரும் வரை உங்களுக்கும் பிற பெண்களுக்கும் ஏற்படப் போகும் துன்பங்களுக்கு முடிவேதும் இல்லை.

அன்புடன்

மாயா
நன்றி: உயிர்மை.காம்