திங்கள், ஜூன் 30, 2008

பெண் - ஆண் - பெண் - ஆண் (அல்லது) தாயுமானவன்

டுத்த வாரம் பிறக்க இருக்கும் ஒரு பெண் குழந்தை பற்றிய செய்தி படித்தேன்.தினம் தினம் குழந்தைகள் பிறந்துகொண்டும் இறந்துகொண்டும்தான் இருக்கின்றன. அடுத்த வாரம் பிறக்க இருக்கும் குழந்தையும் அதில் ஒன்றுதான். யாரும் அதை ஏசுவின் மறுவருகை என்றோ,கல்கி அவதாரம் என்றோ சொல்லி நம்மை மிரட்ட ஆரம்பிக்கவில்லை.

ஆனால், ஜூலை 3-ம்தேதி அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் பிறக்க இருக்கும் அந்தப் பெண் குழந்தை நம்முடைய பல சம்பிரதாயமான நம்பிக்கைகளைத் தகர்க்கும் குழந்தையாக ஏற்கெனவே ஆகிவிட்டது. காரணம், அதைப் பெற்றெடுக்க இருப்பவர் - இப்போது தன் வயிற்றில் சுமந்துகொண்டிருப்பவர் அதன் `அப்பா' !

`கர்ப்பிணி'யாக இருக்கும் தாமஸ் பீட்டி, சட்டப்படி ஓர் ஆண். அவர் மனைவி நான்சி ஒரு பெண்.இருவரும் திருமணம் செய்து பத்தாண்டுகளாகின்றன.

தாமஸ் பீட்டியும் பிறக்கும்போது உடலால் ஒரு பெண்ணாகத்தான் பிறந்தார். அப்போது அவர் பெயர் ட்ரேசி. ஆனால், தன்னை ஓர் ஆணாக உணர்ந்தார். ஆணாகவே வாழ விரும்பினார். இப்படிப்பட்டவர்களைத் தமிழில் மூன்றாம் பாலினர் என்று சொல்வதைத் தவிர, வேறு எந்தச் சொல்லும் எனக்குப் பொருத்தமான சொல்லாகப் படவில்லை. ஆண் பால், பெண் பால், (இரண்டுக்கும்) அப்பால் என்று கொஞ்சம் கவித்துவமாகச் சொல்லலாம்.

ட்ரேசி தன் உடலின் மேல்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் பெண் தோற்றத்திலிருந்து ஆணாக மாற்றிக் கொண்டார். மார்பகங்கள் வளராமல் இருக்க மருந்துகள் உட்கொண்டார். ஆணைப் போல முகத்தில் மீசையும் தாடியும் வளருவதற்கு, ஆண் சுரப்பான டெஸ்டெஸ்ட்ரோன் மருந்துகள் சாப்பிட்டார்.

இவற்றின் விளைவாக, ட்ரேசி தோற்றத்தில் ஆணாக மாறியது மட்டுமல்ல. அவர் உடலுக்குள் கருப்பையும் சினைப்பையும் இருந்தபோதும், எட்டாண்டுகளுக்கு முன்னரே அவருக்கு மாதக் கசிவு நின்று போய்விட்டது. சட்டப்படி ட்ரேசி தன் பெயரை தாமஸ் பீட்டி என்று மாற்றிக் கொண்டு ஆணாக அங்கீகரிக்கப்பட்டார்.

தாமஸும் நான்சியும் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று ஓரிரு வருடங்கள் முன்பு எண்ணத் தொடங்கினார்கள். நான்சிக்கு இருபது வருடம் முன்னாலேயே கருப்பையில் பிரச்னை இருந்ததால், அது அகற்றப்பட்டுவிட்டது. எனவே, நான்சி கருத்தரிக்க முடியாது.

தாமஸ் கருத்தரிக்க முடிவு செய்தார்.``குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டுமென்பது ஒரு பெண் உணர்வோ, ஆண் உணர்வோ அல்ல. அது ஒரு மனித உணர்வு அவ்வளவுதான்.'' என்பது தாமஸின் பார்வை.

டெஸ்டெஸ்ட்ரோன் மருந்துகளை நிறுத்தினார். இரு வருடங்களுக்குப் பின் எட்டாண்டுகளாக நின்று போயிருந்த சினைப்பை, கருப்பை சுரப்புகள் மறுபடியும் தொடங்கின. விந்து நன்கொடையாளரைத் தேடிப் பிடித்து செயற்கை முறையில் கருத்தரிப்பைச் செய்துகொண்டார். அடுத்த வாரம் குழந்தை பிறக்கப் போகிறது.

இத்தனையையும் செய்து முடிக்க தாமஸ் பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது.

காரணம், பல மருத்துவர்கள் இதற்கு உடன்படவில்லை. உடன்பட்டவர்கள் பெரும் தொகைகளை வசூலித்தார்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவது ஏதோ தப்புக் காரியம் செய்வது போலிருக்கிறது என்று தாமஸை நினைக்கவைக்கும் அளவு நடந்துகொண்டார்கள்.

இது தாமஸின் இரண்டாவது முயற்சி.முதல்முறை கருத்தரித்தது கருப்பைக்கு வெளியில், அதுவும் மூன்று குழந்தைகளின் கருவாக வளரத் தொடங்கியதும், ஆபத்து என்பதால் அழிக்கப்பட்டது. இரண்டாம் முறை வெற்றிகரமாக ஒரு பெண் குழந்தை உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிறது.

தாமஸ்-நான்சி தம்பதிகளின் இந்த நடவடிக்கை வழக்கம் போல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. சம்பிரதாயமான ஆண்-பெண் குடும்ப அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பெண்-பெண், ஆண்-ஆண் ஓரின உறவு முறைக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் மத்தியிலும் விவாதங்கள் நடக்கின்றன. அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி. விவாத ஊக்கியான ஓப்ரா வின்ஃபிரேயின் நிகழ்ச்சியில் தாமஸ் கலந்துகொண்டது விவாதத்தைப் பரவலாக்கியிருக்கிறது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் 1999-ல் பேட்ரிக்-மேட் என்ற தம்பதியரும் இதே போல குழந்தை பெற்றுக் கொண்டனர். இருவருமே பெண்ணாக இருந்து ஆணாகியவர்கள். அப்போது பிறந்தது ஆண் குழந்தை.

அமெரிக்கா,ஐரோப்பா முதலிய மேற்கத்திய நாடுகளில் பல மாநிலங்களில், சில நாடுகளில் ஓரின குடும்ப உறவுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து மோதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஓரின உறவு சட்டப்படி குற்றமாக இன்னமும் இருந்து வருகிறது. பல தார மணமும் இந்து சட்டப்படி குற்றம்தான். பல மேலை நாடுகளிலும் பல தார மணம் குற்றம். ஓரின உறவு குற்றம் அல்ல.

``தாமஸ்-நான்சி உறவு, பெண்-பெண் என்ற ஓரின உறவுதான். அதை மறைத்து தாமஸ் ஆண் என்று சொல்லப்படுகிறது. எனவே, இதை ஆண் கருவுற்ற செய்தியாக வெளியிடுவது தவறு'' என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். தாமஸ் தன்னை ஆணாக மாற்றிக் கொண்டு சட்டப்படி ஆண் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டபிறகு, அவர்கள் உறவை ஓரின உறவு என்று வர்ணிப்பது தவறு என்பது எதிர்த் தரப்பு வாதம்.

தாமஸ் ஆணா? பெண்ணா? பெண்ணாக இருந்து ஆணாக விரும்பி மாறி மறுபடியும் குழந்தை பெறுவதற்காக பெண்ணாக மாறித் திரும்பவும் ஆணாக இருக்க விரும்பும் மனிதரை என்னவென்று சொல்வது? முதலில் ஆண் யார்? பெண் யார்? அதைத் தீர்மானிப்பது எது? உடல் உறுப்புகள் மட்டும்தானா? அப்படியானால், அதில் எந்தெந்த உறுப்புகள்? உடலா? மனமா? எது தீர்மானிக்கிறது? ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கும் பெண், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் ஆண் என்பது மனமா? உடலா? பெரும் விவாதங்களையும் தேடல்களையும் எழுப்பும் கேள்விகள் இவை.

ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் எழும் விவாதங்கள் திரும்பத் திரும்ப குடும்ப அமைப்பு என்பது என்ன என்ற அடிப்படைக் கேள்விக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆனால் நம் சமூகம் அதற்குப் பதில் சொல்லத் தயங்குகிறது.

ஓர் ஆண், ஒரு பெண் கணவன்-மனைவியாகச் சேர்ந்து அமைக்கும் அமைப்புதான் குடும்ப அமைப்பு; மீதி எதுவும் குடும்பம் அல்ல என்பதே பெருவாரியாக வலியுறுத்தப்படும் கருத்தாக்கமாக இருக்கிறது. இது நியாயம்தானா, சரிதானா என்ற கேள்வியை ஒவ்வொரு தாமஸும் ஒவ்வொரு நான்சியும் ஒவ்வொரு பேட்ரிக்கும், ஒவ்வொரு மேட்டும், நம் முகத்தில் அறைவது போல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் குழந்தையாக இருந்தபோது, அதே வீட்டில் குடியிருந்த இன்னொரு குடும்பத்தில் அப்பா, அம்மா இருவரும் இல்லை. ஒரு அக்கா, ஒரு அண்ணா, மூன்று தம்பிகள் இருந்தார்கள். யாரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னைத் தூக்கி வளர்த்தவர்கள் அவர்கள். இன்றும் எங்கள் குடும்ப நண்பர்களில் பல குடும்பங்களில் சகோதர சகோதரிகள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்துவருகிறார்கள்.

ஓட்டலுக்குச் சென்றால், `குடும்ப அறை' என்ற பகுதிக்குள் இரு ஆண்கள் செல்ல முடியாது. இரு சகோதரர்களைக் குடும்பமாக ஓட்டல் ஒப்புக் கொள்வதில்லை. ஓட்டல் மட்டுமல்ல, அரசும்தான். அரசு வழங்கும் குடும்ப அட்டைகள் எனப்படும் ரேஷன் கார்டு இன்று பல இடங்களில் முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பல இளைஞர்களும் இளைஞிகளும் தனியே வீடு எடுத்து சமைத்து சாப்பிட்டு வாழ்கிறார்கள். அவர்களுக்கு `குடும்ப அட்டை' பெறும் உரிமை இல்லை. ஊரில் இருக்கும் குடும்ப அட்டையிலிருந்து தன் பெயரைப் பிரித்துக் கொண்டு , இங்கே ரத்த சம்பந்தம் இல்லாத இன்னொருவருடன் சேர்ந்து குடும்ப அட்டை வாங்கவும் யாரும் முயற்சிப்பதில்லை.

ஆம். ரத்த உறவு மட்டும்தான் இங்கே குடும்பம் என்று கருதப்படுகிறது. என் வாரிசு என் ரத்தமாக இருக்க வேண்டும் என்ற உள் மன வெறி அடங்காத சமூகம் நாம். அதனால்தான் இங்கே கருத்தரிப்பு மையங்களில் கூட்டமும் பணமும் வழிந்து ஓடுகின்றன. இங்கு மட்டுமல்ல. எங்கும்தான். அதனால்தான் தாமஸும் நான்சியும் குழந்தை வேண்டுமென்று நினைக்கும்போது எண்ணற்ற அனாதைக் குழந்தைகளில் ஒன்றைத் தத்து எடுக்காமல், உடலை வருத்திக் கொண்டு சொந்தக் குழந்தையைப் பெற முயற்சிக்கிறார்கள்.

ரத்த உறவை மட்டுமே தன் குடும்பமாகப் பார்க்கும் இதே பார்வைதான் அரசியலிலும் பிரதிபலிக்கிறது. `தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொந்தத் தம்பியை அழைக்காமல் மற்றவர்களை நம்பி அழைத்த அண்ணா நிச்சயம் அபூர்வமான மனிதர்தான். இப்போதெல்லாம் யாரும் கட்சித் தம்பிகளை `தலைமை' யேற்க அழைப்பதில்லை. தொண்டாற்றவும் பேரணியாகத் திரளவும் மட்டுமே அழைக்கிறார்கள். தலைமைக்குத்தான் ரத்தத்தின் ரத்தங்கள் இருக்கிறார்களே!.

-ஞாநி

நன்றி: குமுதம், 02-07-08

வெள்ளி, ஜூன் 27, 2008

என்றெ கண்முன்னே கதறக்கதற... சிங்களப்படையில் வேலைபார்த்த தமிழரின் கேவல்!

இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல்.
கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி.

``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன். இலங்கை அரசாங்கத்தோட தந்திரங்கள் அத்தனையையும் அத்துப்படியாகச் சொல்ல முடியும். சிங்களர்கள் மட்டுமே இலங்கையில வாழணும். மத்தவங்களை முடிஞ்ச வரை சாகடிக்கணும். அரசாங்கத்தோட நோக்கமே இதுதான்.

இன்னைக்கும் அந்தக் கொடுமை தொடருது. தேதி சரியா ஞாபகமில்லே. ஆனா, இப்போ நினைச்சாலும் அந்த சம்பவம் என் மனசை உறுத்திகிட்டே இருக்கு.

ஒரு அழகான தமிழ்க் குடும்பம் அது. ஏதோ கோயிலுக்குப் போறதுக்காக வந்துட்டிருந்தாங்க. வழியிலேயே சிங்கள போலீசு மடக்கிடுச்சு. அப்பா, அம்மாவோடு நின்று கொண்டிருந்த அந்த அப்பாவி இளம்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு `குட்டி நல்லா இருக்குதில்லே'னு வக்கிரமாய் சிரித்துக் கொண்டே நெருங்கினார்கள். சோதனை என்கிற பெயரில் அந்த இளம் பெண்ணின் மார்பகங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு `என்னடி குண்டு ஏதாவது வைச்சிருக்கியா'னு ஒருத்தன் சிரிக்கிறான். `குண்டு வைச்ச பெல்ட் போட்டிருக்கியா'னு இன்னொரு காடையன் அந்தப் பெண் பிள்ளையின் பாவாடையை அவிழ்க்கிறான். துப்பாக்கி முனையில் இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு தமிழனா இருந்துகிட்டு அந்தக் கொடுமையை நேர்ல பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாத வேதனை இருக்கே... அப்படியே துப்பாக்கிய என் நெஞ்சுல வைச்சு சுட்டுக்கலாம் போல இருந்துச்சு.

1977-ல் ஒரு பெரிய கலவரம் மூண்டது. அப்போ கொழும்புவில் இருக்குற பொருளை ஸ்டேஷன்ல நானும் ஒரு போலீஸ். கண்ணுக்குச் சிக்கின பொண்ணுங்களையெல்லாம் ஒரு கும்பல் துரத்திகிட்டு ஓடுது. ஆனா, எங்களால எதுவுமே செய்ய முடியலை. ஒரு அறைக்குள்ளே எங்களை அடைச்சு வைச்சு பூட்டிட்டாங்க. அப்போ சன்னல் வழியா `நீயெல்லாம் ஒரு தமிழனாடா'ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. இன்றைய வரைக்கும் அந்தக் குரல் என்னோட காதுல எதிரொலிச்சிகிட்டே இருக்கு.'' சண்முகநாதனின் முகத்தில் கனமான இறுக்கம்.

``வெகு நேரம் கழிச்சு ஒரு பெண்ணையும், பையனையும் எங்காளுங்க கூட்டி வந்தாங்க. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே இருந்துச்சு. மொதல்ல காரணம் புரியாம இருந்தேன். எதேச்சையா பார்த்தப்பதான் ஒரு கணம் என் இதயமே நின்னு துடிக்க ஆரம்பிச்சது. அந்த இளம்பெண்ணின் பாவாடை முழுக்க ரத்தம். உள்ளுக்குள் இருந்து ரத்தம் ஒழுகுவது நிற்கவேயில்லை. கைது செய்யப் போன அந்த மூன்று சிங்கள போலீஸ்காரர்களும் ஜீப்பில் வைத்து அடுத்தடுத்து அந்த இளம் பெண்ணை நாசப்படுத்தியிருக்கிறார்கள். தூக்கம் தொலைந்து போன இரவு அது.''

புலிகள் மீது பகையென்றால் அவர்களிடம் மட்டும் மோத வேண்டியதுதானே...?

``இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அப்படி செய்யத் துணியாது. எந்த கோர்ட்டும் அனுமதி தராமல், உயரதிகாரிகள் உத்தரவும் இல்லாமல் தமிழர்களின் வீடுகளில் போலீஸ் நுழையலாம். அங்கே அப்பாவியாகத் தூங்கிக் கொண்டிருப்பவனை விடுதலைப்புலி ஆதரவாளன் என்று கைது செய்யலாம். இதையெல்லாம் நேரடியாகப் பார்த்தவன் நான். அத்தோடு விடமாட்டார்கள். இலங்கையில் பூசா என்றொரு இடம் உண்டு. தமிழர்களைச் சித்ரவதை செய்வதற்கே உருவாக்கப்பட்ட கூடம்னு சொல்லலாம். துணிகளை உருவி விதவிதமா சித்ரவதை செஞ்சு, கடைசியில ஒரு குப்பை வண்டியில நிர்வாணக் குவியலா பிணங்கள் குவிஞ்சு கிடக்கும். இது பற்றி எதுவுமே தெரியாத உலக நாடுகள் இலங்கை அரசை உச்சி மோந்து கை கோர்த்துகிட்டு நிற்கறதைப் பார்க்கும் போது வருத்தம்தான் ஏற்படுது.''

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி கொடுக்கப்படுகிறதாமே?

``வேறு என்ன செய்ய முடியும்? கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது ஒரு பெண் போராட வேண்டாமா?''

பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் என அடுத்தடுத்து துயரமான இழப்புகள். உண்மையில் புலிகள் இயக்கம் பலவீனமடைந்துவிட்டதா..?

``ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்லலாம். இதனால் பிரபாகரனுக்கு எந்தத் தளர்ச்சியும் ஏற்படலை. அவரே இறந்து விட்டதாகக் கூட சில சமயங்கள்ல செய்தி பரப்புறாங்க. புத்த பிக்குகள், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிகளோட சதி வேலைதான் இது. பிரபாகரன் ஆரோக்யத்தோடதான் இருக்கார். எதையும் கால நேரச்சூழல் பார்த்து செய்வதுதான் அவரின் வழக்கம்.''

பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலக நாடுகள் அறிவிப்புச் செய்திருக்கின்றனவே?

``இலங்கையில் என்ன நடக்கிறதென உலக நாடுகளுக்கு இதுவரை தெரிந்ததே இல்லை. கருணா போன்ற சில தமிழ்த் துரோகிகளும் இதற்குக் காரணம். வெளிநாடுகளில் புலிகளின் இயக்கத்தை மோசமாகச் சித்திரித்து துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதுதான் அவர்களின் வேலை.

''சினிமாவின் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லிவிட முடியுமா?

``தீர்வு சொல்ல முடியாவிட்டாலும் உலக நாடுகளின் கவனத்திற்காகவாவது கொண்டு செல்லலாம்.''

இரு தரப்பினருக்கும் நடுவே நார்வே சமரசம் செய்கிறது. இது சமாதானத்தில் முடியுமா...?

``வாய்ப்பே இல்லை. எத்தனையோ சமாதானக் கூட்டங்களைப் பார்த்தாயிற்று. எதுவும் நடக்காததுதான் மிச்சம். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகள் மிகவும் நாணயமாக இருப்பார்கள். அமைதி காப்பார்கள். சிங்கள அரசாங்கம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எந்நேரமும் காத்திருக்கிறது. ரத்தம் சுவைப்பதுதான் அவர்களின் நோக்கம்''.

- மா. மணிவண்ணன்
நன்றி: குமுதம் 02-07-08

திங்கள், ஜூன் 23, 2008

"மானாட, மார்பாட.... மன்னிக்கவும் மயிலாட" நிகழ்ச்சி நிறுத்தப்படலாம்: ஞாநி நம்பிக்கை

வருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.

இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.

தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று......... எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.

ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.

என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட.... மன்னிக்கவும் மயிலாட' நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.

கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.

முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?

செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?

செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?

செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.

செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்' என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.

ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.



-ஞாநி
நன்றி: குமுதம் 25-06-08


வெள்ளி, ஜூன் 20, 2008

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

“அப்படியா!
அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றுமே தெரியாதது போலபாசாங்கு செய்கிறார்கள்.
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படியொரு ரகசிய உலகம் இருக்கிறது என்பதை.
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும் குப்பை கூளத்திலும் தான் -
அங்கேசிலர் வாழ்கிறார்கள் என்பதைஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
- என்று அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழும் சேரிகளைப் பற்றி மனம் குமுறிப் பாடினார் கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மன்.
.
விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனா வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் புஷ். அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் ‘வியர்வை கடை’யிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “நாங்கள் நாய்களைப் போல தின்கிறோம். பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்ற வெதும்புகிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.
***************
வியர்வை நாற்றம், அழுகிய குப்பைகளில் இருந்து கிளம்பும் நெடி. கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி. அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம். தலை மேலே குறட்டைச் சத்தம். இன்னொரு மூலையில் தொலைக்காட்சியில் இரைச்சல். எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை. சாராய நெடி.
.
பத்தடிக்கும் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் எட்டு பேர், அறைக்கு சன்னலில்லை. சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை. - காற்று வெளியே போகவும், உள்ளே வரவும். அவ்வளவு தான் இடம். இது சிறைக் கொட்டடி யில்லை. பம்பாய் , கல்கத்தாவின் குடிசைப் பகுதி இல்லை - நியுயார்க்.
.
மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். நூறு மாடி, நூற்றைம்பது மாடி கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கீரிட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து. இந்த பொந்தில் வசிப்பவர்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை கடன்களை முடித்துக் கொண்டு ஏழு மணிக்கு வேலை செய்யத் தொடங்க வேண்டும்.
.
வேலை செய்யும் தொழிற் கூடமோ பக்கத்து அறைதான். பதினைந்து அடிக்கு பதினெட்டு அடி அளவுள்ள அறைக்கு பதினைந்து தையல் யந்திரங்கள். ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை. இந்த சித்திரவதை கூடங்களுக்கு அமெரிக்க பத்திரிக்கைகள் சூட்டியிருக்கும் பெயர் ‘வியர்வைக் கடைகள்’. நியுயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெரு நகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ளன இத்தகைய ‘வியர்வைக் கடை’ களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா, போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் - கொத்தடிமைகள்.
.
துபாய்க்கும், சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையை காட்டிலும் கொடியது இவர்களது கதை.
.
“லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அதிநவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்கு காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை வேலை. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. மாதம் இரண்டாயிரத்து நானூறு டாலர்கள் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னி லாண்ட் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள். நம்பி வந்தோம்.”
.
“லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்த பொந்துக்கு கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம், அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே. கேள்வி கேட்காதே - யாரோடும் நட்பு சேராதே. - என்று எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்.”
.
“தாய்லாந்தில் எட்டு மணிநேரம் உழைத்து சம்பாதித்ததை இங்கே பதினாறு மணிநேரம் உழைத்து சம்பாதிக்கிறோம்”.
.
இது லெபோதாங் என்ற தாய்லாந்து பெண்ணின் கதறல்.யூ லி என்ற சீனப் பெண்ணின் இன்னும் கொடுரமானது.
.
“அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம். அங்கே சம்பாதித்து எங்கள் கடனை கொடுத்தால் போதும்.” என்று சொன்ன ஏஜண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூ லி. 1991ல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை. கடிதமும் இல்லை. ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜண்டுகளைக் கேட்டால், “இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளாக போராடி வந்த யூ லி ஒரு முடிவுக்கு வந்தாள். மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்று தன் கணவன் வாங்கிய கடன்களை அடைத்தாள். “என்னையும் என்பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்து விடுங்கள்” என்று ஏஜெண்டுகளிடம் மன்றாடினாள் .
.
அதற்கு ஒரு லட்சத்தி முப்பத்திரண்டாயிரம் டாலர் செலவாகும். நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள். யூ லி ஒப்புக் கொண்டாள். இப்போது யூ லியும் மூன்று பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனை பார்த்து விட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆளுக்கொரு இடத்தில் வேலை. சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவுக்காக தனித்தனியாக உழைக்கிறார்கள்.
.
ஐந்து பேரும் ஒரு நாளைக்கு பதினேழு மணி நேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் மூவாயிரம் டாலர் கடன் கட்டுகிறார்கள். ஆனால் கடன் அடையவில்லை. அடையப்போவதுமில்லை. படிக்க வேண்டிய பிள்ளைகளை கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூ லி. கண்ணீர் கதைக்கு பஞ்சமில்லை.
.
இந்த தொழிலாளர்கள் எல்லாம் ஆசிய நாடுகளில் இருந்து மாஃபியா கும்பல்களால் கொண்டு வரப்பட்டவர்கள். முறையான கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதைத் இத் தொழிலாளர்களிடமிருந்து பறித்துக் வைத்துக் கொள்கின்ற இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டு வரப்பட்டவர்கள்.
.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாகக் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுனம். தாய்லாந்தி லிருந்தோ இருபத்தி நாலாயிரம் பேர். சட்டபூர்வமாகவே தாய்லாந்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்த சட்ட விரோத குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்று கேட்டால், அந்த கேள்விக்கான விடைகளில் ஒன்று தான் இந்த ‘வியர்வைக் கடைகள்’, நியூயார்க் நகரில் மட்டும் நானூறு.
.
“வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டு துரத்தப் படுவார்கள். எனவே யாரும் வாய் திறக்கவே அஞ்சுகிறார்கள்”. என்கிறார் சீன தொழிலாளர்களின் தலைவர் லிங் லாம்.
.
அமெரிக்காவை விட்டு ஓட தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடி விடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். “எங்களுக்கு சேர வேண்டிய தொகையை கொள்ளை அடித்து கொடுத்து விட்டு போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதை தான் தெரிவு செய்தார்கள் அந்த ஏழைத் தொழிலாளர்கள்.
.
நியூயார்க் நகரின் தொழிலாளர் சட்டப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தப்பட்ச ஊதியம் 5.15 டாலர்கள். இந்த கொத்தடிமைகளுக்கு கொடுக்கப்படுவதோ ஒரு டாலர்.
.
அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாத சம்பளத்தை பிடித்து வைத்து கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல் துறை, குடியேற்றத் துறை தொழிலாளர் துறை மூன்றுமே இந்த ரகசிய உலகத்தை கண்டு கொள்வதில்லை.
*************
மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத் தொழிலாளர்களுக்கு “எட்டு மணிநேர வேலை” எனும் அடிப்படை உரிமையை பெற்றுத் தந்த நாட்டில் மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடுரமான சுரண்டலும், ஒடுக்குமுறையும் தொடர்கிறதே இதற்கு காரணமென்ன?
.
‘வியர்வைக் கடைகள்’ குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை இதற்கு பதில் சொல்கிறது. “அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப்படுகிறார்கள்.”
.
உண்மை தான். தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களால் தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களால் தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த ‘வியர்வைக் கடைகளின்’ பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைபவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆயத்தக் கடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.
.
இந்தியாவிலிருந்தும், பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படி தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே - துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களை கூட அவர்கள் விட்டு வைப்பதில்லையே - அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டில் ‘வியர்வை கடைகளை’ மட்டும் பார்வையிடாதது ஏன்?
.
“கலிபோர்னியாவின் இத்தகைய வியர்வை கடை ஒன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தி ஆகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப் பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை என தெரிய வந்தது.” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
.
நியூயார்க்கின் மிகப் பெரும் ஆடை நிறுவனங்களான வால்-மார்ட், கே -மார்ட் ஆகியோரது விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்பு தான் என்கிறது-டைம் வார ஏடு. வால்-மார்ட், கே -மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
.
சதாம் உசேனின் கழிப்பறையில் ரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்க தெரிந்த புஷ்ஷின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்? இது ஒரு வர்த்தக தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால் தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.
.
இந்த ஆயத்த ஆடைஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.
.
அன்று ஆப்பிரிக்கா கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து தாயை கரும்பு தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்கபூமியை உருவாக்கிக் கொண்டார்கள்.
.
இன்று அந்த சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூ லி போன்றவரை கள்ளத் தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள். இது ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் புஷ்ஷின் அரசாணைக்கு பணிய மறுத்தால் ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.
.
ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரீகப்படுத்துவார்கள். ஆசிய தொழிலாளிகளுக்கெதிராக ஆசிய தொழிலாளிகள்.
.
இது ஒரு வர்க்க துவேசம். மருத்துவர்களையும், பொறியாளர்களையும், கணிணிவல்லுனர்களையும், குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே. சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால் தான், தேவை முடிந்த பின் அவர்களது இளமை முடிந்த பின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டை குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.
.
இது தான் சுதந்திர வர்த்தகம். தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம். மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத்தனம். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால், அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசிய குழந்தைகளால் தைக்கப்படுகின்றன.
.
பிள்ளைக் கறி தின்னும் இந்த நாயன்மார்கள் தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் “இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள்.
.
இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் “சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடிமக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.
************
நன்றி: புதிய கலாச்சாரம் வெளியீடான ‘அமெரிக்க மோகம்’ நூல்.

புதன், ஜூன் 18, 2008

குழந்தைப் போராளிகள் எதிர்த்துப் பேசமாட்டார்கள்!

குழந்தைகளுக்கே உரித்தான குறும்பு, துறுதுறுப்பு, விளையாட்டு போன்ற அனைத்து குழந்தைத் தன்மைகளையும் இழந்து அடி, உதை வாங்கிக் கொண்டு, தன் தகப்பன் பண்ணையிலேயே பண்ணையாட்களில் ஒருத்தியாக வேலை பார்த்துக் கொண்டு, தகப்பன், பாட்டி, சிற்றன்னை ஆகியோரின் கொடுமைகளுக்கிடையே பரிதவிப்போடு வாழ்ந்து, அவர்களிடமிருந்து தப்பிச் செல்லும் வழியில் ஒரு போராளிக் குழுவிடம் சிக்கி, தன்னையும் ஒரு போராளியாக மாற்றிக் கொண்ட உகாண்டா நாட்டு குழந்தையின் சுயசரிதையை, டச்சு மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து ‘குழந்தைப் போராளி’ என்ற தலைப்பில் ‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது. வ. கீதா நூலினை வெளியிட, ஆதவன் தீட்சண்யா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வுக்கு அமுதா தலைமை வகித்தார். (வெளியீடு: கருப்புப் பிரதிகள், B-74, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, சென்னை-5 செல்பேசி : 94442 72500 மின்னஞ்சல்:karuppu2004@rediffmail.com)
வ.கீதா : "குடும்ப வாழ்க்கை பயங்கரமானது; குழந்தைகளை அச்சுறுத்தக்கூடியது. ‘குழந்தைப் போராளி’ சைனா கெய்ரெற்சி தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இயல்பானதாக நினைத்து வாழ்கிறார் என்பதை இவருடைய சுயசரிதை சொல்கிறது. குழந்தைகளை கொடூரமாக நடத்துவது இயல்பானது என்று கருதும் சூழலில் அவர் வாழ்கிறார். அதனால் தான் மிகச் சாதாரணமாக யாராவது அன்பு காட்டினால் கூட, பெரிய அதிசயம் நடந்துவிட்டதாக அவர் உணர்கிறார். அரச எதிர்ப்பு போராளிக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கசிலிங்கி என்பவர் அவளை வன்புணர்ச்சி செய்து கொடுமைப்படுத்தி இருந்தாலும், அவர் எப்போதோ காட்டிய அன்புக்கு விசுவாசமாக, அவர் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் போது உதவ முன்வருகிறார் சைனா.

இந்த சுயசரிதை ராணுவமும், குடும்பமும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தக் குழந்தைப் போராளிகளின் வாழ்க்கையை நமது தமிழ்ச் சமூகத்தோடு பொருத்திப் பார்ப்பது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். நமக்கு வெகு அண்மையில் உள்ள இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தினர், விடுதலைப் புலிகள், கருணா குழுவினர் என அனைவருமே குழந்தைகளை தங்களது படைகளில் வலுக்கட்டாயமாக சேர்த்து வருகின்றனர். குறிப்பாக புலிகள் அமைப்பினர் குழந்தைகளை அதிகம் சேர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுத்தாலும் யாருக்காக ஈழம் உருவாகப் போகிறது என்பது முக்கியம். அடுத்த தலைமுறைகளை அழித்துப் புரட்சி நடத்திவிடுவதால் என்ன பயன்? எந்தக் குழந்தைகளை வைத்துப் போரை வெல்கிறார்களோ அதே குழந்தைகளை அழித்துவிடுகிறார்கள். 13 வயது குழந்தை செத்தாலும் பரவாயில்லை, தமிழ் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களை நினைத்தால் பயமாக உள்ளது''

ம. மதிவண்ணன் : “எழுத்துப்பிரதி பல தளங்களில் பலவாறு செயல்படும். படிக்கும் வாசகனுக்கு நிறைவை ஏற்படுத்தும் செய்நேர்த்தி பாதிக்கப்பட்டவர்களின் எழுத்துகளில் கிடைக்கும். இயல்பான விதத்தில் தன் கதையைச் சொல்வதால் நெஞ்சைத் தொடுகிறது இந்த சுயசரிதை. குடும்பம், ஆண் தன்மைகளில் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய வன்முறை. இந்த குழந்தைப் போராளிக்கு குடும்ப வன்முறை என்பது அப்பா, பாட்டி மற்றும் சிற்றன்னை வடிவத்தில் இருக்கிறது. குழந்தை மற்றும் பெண் என்னும் அடிப்படைகளில் சைனா பெரும் வன்முறையைச் சந்தித்துள்ளார் என்பதை உள்ளம் உணர்கிறது.''

வேதா : “குழந்தைகள் வெளிநாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்து 12,446 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி ஆணையம் ஓர் ஆய்வு செய்தது. அதில் 53 சதவிகிதத்திற்கு மேல் பாலியல் பலாத்காரத்திற்கு குழந்தைகள் உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், 22 சதவிகிதம் படுமோசமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும், 50 சதவிகித குழந்தைகள், தன் குடும்பத்தாராலும், தன் நெருங்கிய ரத்த உறவுகளாலும், அண்டை வீட்டாராலும், நண்பர்களாலும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

அதேபோல பெங்களூரை மய்யமாகக் கொண்டு ‘சம்வேதா' என்ற அமைப்பு 1996இல் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் 62 சதவிகித குழந்தைகள் ஒரு முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள்; பாதிக்கப்பட்ட 38 சதவிகிதத்தினர் மீண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று கூறுகிறது. பல இன்னல்களை சந்திக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை அதன் உலகத்தை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இனி அவர்களை கவனிக்க வேண்டும் என்று ‘குழந்தைப் போராளி’ நூல் சொல்கிறது. குழந்தை வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதற்கான ஆவணப்படுத்துதலே இந்தப் புத்தகம்.''
கவின் மலர் : மனநல மருத்துவத்தின் ஒரு பகுதியாகத்தான் கஷ்டங்களை பொய்யின்றி உண்மையாக சைனா எழுதியிருக்கிறார். பெண்ணாக இருப்பதால் பலர் இவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். ராணுவத்திலும் படைத்தளபதி போன்ற உயர் அதிகாரிகள் செய்த வன்புணர்ச்சி கொடூரத்தை இவர் வெளியில் சொல்வதால்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் யாருக்குத் தெரியும்? வாழைப்பழம் என்பது எனக்கு ஒரு சாதாரண பழம். ஆனால் சைனாவுக்கு வாழைப்பழத்தின் மீது காதல்! அதைப் பார்க்கும் போதெல்லாம் ‘குழந்தைப் போராளி' ஞாபகம் வந்துவிடுகிறது. இலங்கைத் தமிழில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கைப் போர்ச் சூழலோடு ஈழத்தமிழில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இலங்கைக்கும், குழந்தைப் போராளிகளுக்கும் ஒரு தொடர்புள்ளதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
புன்னகை பூக்கும் குழந்தைகளின் முகங்களை எதிராளிகளை சந்திக்கும் போர்முனையில், கேடயம் போல் முன்வரிசையில் நிற்க வைத்துப் போரிட வைப்பதற்கான காரணம் ‘குழந்தைப் போராளிகள்தான் எதிர்த்துப் பேசமாட்டார்கள்’ என்ற வரிகளை நான் படிக்கும்போது அடுத்த வரியை என்னால் படிக்க முடியவில்லை. அதே போல, நான் ஆண் குழந்தையாய் பிறந்திருந்தால் என் அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்க மாட்டார்கள் என்று சைனா சொல்லும்போது உகாண்டாவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் பெண் குழந்தைகள் பிரச்சனைக்குரியவர்களாக உலகெங்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்று புரிகிறது.
யுத்த பூமியில் இருந்து தப்பி வந்த சைனா, ராணுவத் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் : “மேதகு முசேவென்! நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான சைனா கெய்ரெற்சி பேசுகிறேன். என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகிறது. எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகிறாய். எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது. உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை ரத்தம் சிந்த வைத்தன. நான் உனது விளையாட்டை விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று. நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது'' என்று இன்னும் நீளும் இந்தக் கடிதத்தையும், புத்தகம் முழுமையும் படிக்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு கலவரம் ஏற்பட்டு விடுகிறது.''
ஆதவன் தீட்சண்யா : ஆயுதம் தாங்கிய குழுக்கள், அதன் அதிகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு முன்பு குடும்பம், குழந்தைகள் பற்றி இந்நூல் எழுப்பும் கேள்விகள் குறித்த விவாதம் முக்கியமானது. அம்மா, அப்பா அரவணைப்பில் வாழும் குழந்தை ஒரு நல்ல குழந்தையாக வளரும் என்ற மயக்கத்தை இந்நூல் கொடுக்கிறது. இந்த விஷயத்தை இந்தியாவில் பொருத்திப் பார்க்க முடியுமா என்பது பெரிய கேள்வி. அதிகாரம் யார் கையில் இருந்தாலும் அது அடுத்தவரை காப்பாற்றக் கூடியதாக இல்லை என்பது தான் உண்மை; அது குழந்தையாக இருந்தாலும் கூட.
சைனாவை வெளியுலகம் ஒரு போராளியாக, ஆணாக மாற்றினாலும், அவர் தன்னை ஓர் அச்சு அசலான பெண்ணாக மாற்றிக் கொள்ளவே விரும்புகிறார். இந்த மனநிலையில் தான் அவர் தன் அம்மாவைத் தேடி செல்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் நாம் பேசுகின்ற நுண் அரசியலை மறுப்பதாக இருக்கிறது. பல இடங்களில் ஆதரிப்பதாகவும் இருக்கிறது. ஆயுதம் தாங்கிய குழுக்கள் உருவாகும் போது, அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாறிவிடுகிறது. அதுவரை ஆயுதங்களை அதிகார வர்க்கத்திடம் பார்த்த மக்கள், குழுக்களிடம் ஆயுதங்களைப் பார்க்கும்போது விலகியே நிற்கிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சிக்கல்களுக்கு ஜனநாயக முறையில் நின்று தீர்வினை எட்டுவதா? அல்லது ஆயுதக் குழுவின் தேவையே கிடையாதா? என்கிற கேள்வியும் நூலின் இயல்பில் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இணக்கம் ஏற்படும் என்ற மயக்கம் எல்லோரிடமும் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்பதை இந்நூல் சொல்கிறது. வேறொரு மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு இந்நூல் வரும் போது, சிறுமியின் மொழி, அலைக்கழிக்கப்பட்ட பெண்ணின் மொழியை வசமாக கைப்பற்றி அழகாக மொழிபெயர்த்துள்ளார் சுவிஸ் தேவா.
-அநாத்மா

நன்றி:


ஏப்ரல், 2008

திங்கள், ஜூன் 16, 2008

‘பிரபவ’, ‘அட்சய’ - அரசு ஆவணங்களில் ஒழிகிறது!

தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் பார்ப்பனர்கள் திணித்த ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ வரையுள்ள 60 வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டு முறை தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஒழிக்கப்படுகிறது. இந்த வடமொழி ஆண்டுகளுக்குப் பதிலாக - திருவள்ளுவர் ஆண்டையே இனி தமிழக அரசு, தனது அனைத்து நடவடிக்கைகளிலும் பயன்படுத்தும். மகத்தான இந்தப் பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது தமிழக அரசு. தி.மு.க. அரசும், முதலமைச்சர் கலைஞரும் இதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டுப் புரட்சி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள பிப்.25, அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

.

தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம், 2008 சமீபத்தில் வெளியானது. அதில் தை மாதத்தின் முதல் நாளிலிருந்து தமிழ் ஆண்டு தொடங்கும் என்றும், மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தமிழ் ஆண்டு முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இனி அரசாணைகள், தமிழ்நாடு அரசிதழ், அரசு கடிதங்கள் மற்றும் பல வெளியீடுகளில் ‘சர்வஜித்’ என்ற ‘தமிழ்’ ஆண்டை நீக்க வேண்டும். ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்களை பயன்படுத்த வேண்டாம்.

.

கிறித்துவ ஆண்டுக்கு நிகராக தமிழ் மாதங்கள், நாள், மற்றும், திருவள்ளுவர் ஆண்டு (ஆங்கில ஆண்டுடன் 31அய் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும்) ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். (உதாரணமாக 2008 - பிப்.9 ஆம் தேதியை அரசாணையில் ‘திருவள்ளுவர் ஆண்டு 2039 பங்குனி 27 ஆம் தேதி’ என்று குறிப்பிட வேண்டும்) - என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

பார்ப்பன ஜெயலலிதாவும், பா.ஜ.க. பரிவாரங்களும், பார்ப்பன ‘தினமணி’களும் இந்த மாற்றத்தை செரித்துக் கொள்ள முடியாமல், தீயில் விழுந்த புழுவாய் துடிக்கிறார்கள். விண்வெளித் துறையில் பணியாற்றும் பார்ப்பன விஞ்ஞானி ஒருவர் - ‘தினமணி’ நாளேட்டில் - தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து கட்டுரை எழுதியுள்ளார். அதே ஏடு - இந்த முடிவை எதிர்த்து - ‘பகுத்தறிவு அல்ல; பாசிசம்’ எனும் தலைப்பில் தலையங்கமும் தீட்டி, தனது வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளது. ‘ஜனசக்தி’ நாளேடு - இந்த வாதங்களை மறுத்து - சிறப்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

.

முதன்முதலில் பண்டை உரோமானியர் சூரிய நாள்களை ஓராண்டுகளுக்கு வரும்படி பத்து சம பாகங்களாக வகுத்தனர். எப்படியோ, இது 12 பாகங்களாக பிரிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் அந்த விஞ்ஞானி ‘எப்படியோ’ மாற்றப்பட்டதை ஏற்கும் போது, தமிழக அரசு இப்படி மாற்றியதை ஏன் எதிர்க்க வேண்டும்?

.

‘கிருஷ்ணரும்-நாரதரும்’ கூடிப் பெற்றதாக (அதாவது ஆணும்-ஆணும் கலவி செய்து பெற்ற) 60 ஆண்டுகளின் பெயர்களை - இந்து பார்ப்பன மதம் கூறுகிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையதா? சங்கத் தமிழ் நூல் எவற்றிலாவது இந்த 60 ஆண்டுகளின் பெயர் இடம் பெற்றுள்ளதா? பிறகு எப்படி இதை தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்க முடியும்?

.

சித்திரையில் தொடங்கும் ஆண்டைத் தையில் தொடங்க ஏற்பாடு செய்தது பாசிசம் என்றால், மறைக்காட்டை வேதாரண்யமாக, மயிலாடுதுறையை மாயூரமாக, குடந்தையை கும்பகோணமாக, இப்படி ஏராளமான தமிழ்ப்பெயர்களை சமஸ்கிருதத்துக்கு மாற்றியது எது? அத்தகைய அதிகாரம் எவர் கைக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தது? இப்படி - சாட்டையடிக் கேள்விகளைத் தொடுக்கும் அக் கட்டுரை - பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை மாற்றுவதா என்ற வழமையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வெள்ளைக்காரத்துரை, “எல்லா பாளையக்காரர்களும் பணிந்து விட்டார்கள், நீ மட்டும் ஏன் பணிய மறுக்கிறாய்?’ என்று கேட்டதைப் போல, இந்தக் கேள்வி இருக்கிறது என்று நறுக்குத் தெறித்ததுபோல் பதிலடி தந்துள்ளது.

.

குடும்பத்தையே பகுத்தறிவாளர்களாக மாற்ற முடியாதவர்கள் - பகுத்தறிவை மற்றவர்களிடம் திணிப்பதா என்று அந்தப் பார்ப்பன ஏடு எழுப்பிய கேள்விக்கு, “இறை நம்பிக்கையுடைய பெரும்பான்மை குடும்ப உறுப்பினர்களால், ஏன், அந்த ஒரு இறை மறுப்பாளரை மாற்ற முடியவில்லை? என்று திருப்பிக் கேட்க முடியாதா?” என்று நச்சென்று கேட்டுள்ளது.

.

தொடர்ந்து ‘ஜனசக்தி’ நாளேட்டில் பகுத்தறிவுக் கட்டுரைகளை மிகச் சிறப்பாக நையாண்டி நடையில் எழுதி வரும் தோழர் சுமலி - இந்தக் கட்டுரையிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஆக பார்ப்பனர்கள் இந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ மாற்றத்தை ஏற்க மறுப்பதன் மூலம் - பார்ப்பனர்கள், பார்ப்பனர்களாகவே வடமொழிப் பற்றாளர்களாகவே வர்ணாஸ்ரமப் பாதுகாவலர்களாகவே இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் மாறவில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
.
நன்றி:
மே, 2008

சனி, ஜூன் 14, 2008

"மக்கள் சட்டம்" நடத்தும் சட்டக் கருத்தரங்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?
.
நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?
.
நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?
.
ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?
.
பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?
.
பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?
.
இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
.
மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?
.
இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?
.
இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....
இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.
நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல.

சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.

தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.

அனைவரும் வருக!

திங்கள், ஜூன் 09, 2008

கத்தரிக் காயை உண்ணும் மனிதன் மலடாகும் அபாயம் !

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் - நேர்காணல்
சந்திப்பு : கதிர்
கே : கடந்த கால் நூற்றாண்டு அனுபவம் பற்றி....
.
பதில் : இந்த உலகம் அநீதியானது. சமநீதிக்கான போராட்டம் தொடர்கிறது. உழுது, விதைத்து அறுப்பார்க்கு உணவு இல்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வோர்க்கே செல்வமெலாம் உண்டு. உண்மை சொல்வோருக்கோ, எழுதமாட்டாத அளவுக்குப் பெருங்கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே மடிவதுண்டு. இப்படியொரு பார்வையுடன் பரவலாக்கப்பட்டிருந்த செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கித் திரும்பத் தொடங்கியது.

இயற்கை மருத்துவம் தமிழகத்தில் புத்துயிர் பெறப்பாடுபட்டவர்களில் ஒருவர், கோபிச் செட்டிப் பாளையம் வெள்ளிமலை ஆவார். உழவு குறித்த பாதையில் பணிபுரிவோர் குறைவு. அதில் பார்வையைக் குவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். வாழும் சூழலும் உழவும் இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆதலால், இரண்டும் குறித்த தேடலும் பகிர்தலுமாகக் காலாண்டு ஓடியுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றிய அனுபவங்கள், வெளிநாடுகளில் கண்டவை, கேட்டவை இவற்றை உழவர்களிடம் பரிமாறியபோது அவர்கள் செய்து பார்த்துத் திருத்தம் செய்தார்கள். நாற்பதாண்டுப் பயணத்தில் சில திருப்பங்களை நினைத்துப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.
.
1963க்கும் 1969 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோவில்பட்டி மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தேன். 11 விஞ்ஞானிகளும் 22 உதவியாளருமாக பணிபுரிந்தோம். டெல்லியிலிருந்து ஒட்டுக் கட்டி சொத்தை (வீரிய) விதைகள் இறக்குமதியாயின. உப்பு உரங்கள் பரிந்துரைக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி இரசாயணங்கள் புகுத்தப்பட்டன. 158 ஏக்கர் பண்ணையில் ஒரு சிறு துண்டு நிலத்தில் கூட லாபம் வரவில்லை. இந்த உழவியல் முறை நீடித்தால் நமது உழவர்கள் கடன் படுவார்கள். நிலம் தரிசு போடப்படும். இதற்கு உழவன் மகனாகிய நம்மாழ்வார் துணை போகவேண்டியதில்லை என்று முடிவெடுத்து வெளியேறினேன். அன்று கண்ட முடிவு சரி என்பதையே காலம் நிரூபித்துள்ளது.
.
1969க்கும் 1979க்கும் இடையில் களக்காடு ஒன்றியத்தில் பணிபுரிந்தேன். அது நோபல் பரிசு வாங்கிய அருட்தந்தை டோமினிக் பியர் தொடங்கிய நிறுவனம். அந்த நிறுவனம் உழவர்களுக்கு தண்ணீர் வசதி செய்துகொடுத்து, உழவு மருத்துவம் போன்ற சேவையும் அளித்தது. நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தோம். 10 ஆண்டுக்குப் பிறகு பார்த்தபோது உழவர் எல்லாம் கடனாளியாக இருந்தார்கள். வியாபாரிகள் எல்லாம் பணக்காரர்களாகிவிட்டார்கள். முக்கியத் திருப்பம் தர்மபுரி மலைகளில் இருந்தது. 1979க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலம் அது. காடுகள் கரியானதால் வாழ்க்கை கருகிப் போயிருந்த மக்களுக்கு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களிடம் இருந்து கற்கத் தொடங்கினேன். அதுவே தொடர்கல்வியாக எனக்கு அமைந்துவிட்டது.
.
1983ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோடையில் வறட்சி. குளிர்காலத்தில் (மூன்று நாள் மழையில்) வெள்ளம். ஒரே ஆண்டில் வெள்ளமும் வறட்சியும் தோன்றுவது எதனால்? ஒரே விடை, மரம் இல்லை. வெள்ளைக்காரன் வெளியேறியபோது நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு காடாக இருந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் காடாக இருந்தால் நாட்டிற்கு நல்லது என்றார்கள். பணம் ஒதுக்கினார்கள். படைவீரர்களுக்குரிய அதிகாரத்தோடு வன அதிகாரிகள் தர்பார் நடத்தினார்கள். 1982 கணக்குப்படி 17 விழுக்காடு பரப்பு காடாக உள்ளதாக கதை விட்டார்கள். 1986ஆம் ஆண்டு ஆப்பிள், அதுதான் நாம் வான்வெளியில் சூழல்விட்ட செயற்கை நிலா எடுத்தனுப்பிய படத்திற்கு விஞ்ஞானிகள் வண்ணம் தீட்டிப் பார்த்தார்கள். 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியது. அதில் மூன்று விழுக்காடு வெறும் முற்புதர்கள்.
.
சமூக நலம் காக்க காடு வளர்ப்பீர், என்று வெளிநாட்டவர் திட்டமும் நிதியும் கொடுத்தார்கள். தமிழ் நாட்டிற்கு சுவீடன் நாடு 110 கோடி ரூபாய் நிதியளித்தது. அது கொண்டு வனத்துறையினர் ஏரி, குளங்களில் கருவேல மரமும் (அதுவும் இறக்குமதியானது) மேய்ச்சல் நிலங்களில் தைல மரங்களும் (மாடு தின்னமுடியாதது) மட்டுமே நட்டு வளர்த்தார்கள். காணாமற் போனது சமூக நிலம். இது குறித்து அன்று அரசு ஆலோசகராக இருந்த வங்காளி திரு.கி.ரத்தீன்ராய் நமது கவனத்தைத் திருப்பினார். அவர் மூலம் நம் கைக்கு வந்து சேர்ந்த புத்தகம் ஒரு வைக்கோல் புரட்சி. அது முதற்கொண்டு இயற்கை வழி உழவான்மை பற்றிய தீ உள்ளத்தில் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.இயற்கை வழி உழவாண்மை ஒன்றே நிலைத்தும் நீடித்தும் இருக்க வல்லது.
.
இயற்கை வழி என்பது யூரியாவுக்குப் பதிலாகச் சாணி போடுவது இல்லை. உயிர் உள்ள இயற்கை. உயிர் இல்லா இயற்கை இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளை அறிந்த பயிர் செய்வது இயற்கை வழி. எடுத்துக்காட்டாக, பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றைத் தின்னும் பூச்சிகளும் குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்வதற்கு என்று நஞ்சு தெளித்த போது நன்மை செய்யும் பூச்சிகள் மடிந்தன.பறவைகள் மறைந்தன. ஆகவே பூச்சி கொல்லி தெளிப்பதாலேயே பெருகுகின்றன.
.
பயிற்சியளித்த மற்றுமொரு தகவல், இரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்துவதற்காக உற்பத்தி செய்யப்பட்டவையல்ல. உலக போரின் பொழுது, போர்க் காலத்தில் வெடியுப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு போரில்லாக் காலத்திலும் இலாபம் குவிப்பதற்காகவே இரசாயன உரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அது போலவே, பூச்சி கொல்லி நஞ்சுகள் பூச்சியைக் கொல்லுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இரண்டாம் உலகப் போரில் உருசியப் படைவீரர்களைக் கொல்லுவதற்காகக் கிணற்றிலும் ஆற்றிலும் கொட்டுவதற்காக ஹிட்லர் படை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை இவை. போர் முடிந்த பிறகும் கம்பெனிகள் இலாபம் குவிக்க வேண்டும் என்பதற்காகவே பூச்சி மருந்து என்ற பெயரில் இந்த நஞ்சுகள் உழவர் தலைகளில் கட்டப்பட்டன.
.
இதன் விளைவாக தானியம், பருப்பு, காய், கனி, இறைச்சி, முட்டை, பால், தாய்ப்பால் எல்லாமே நஞ்சாகிப் போயின. இதனை 1984ஆம் ஆண்டிலேயே கோவைப் பல்கலைக் கழகம் கண்டறிந்தது. அதனால், இயற்கை வழிப் பயிர் பாதுகாப்புத் துறை என்று ஒரு துறையையும் திறந்திருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு உத்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நேர்மையை சோதனைக்குள்ளாக்குகிறது.
.
1996ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் இருந்தது. அங்கெல்லாம் சிறு அளவு இயற்கை உழவர் பண்ணைகளில் வெற்றிக் கொடி பறந்து கொண்டிருந்தது. பெரிய அளவு பண்ணைகள் எளிதில் இரசாயனங்களையும் எந்திரங்களையும் கைவிட முடியாத நிலை உள்ளது. நாட்டு மக்கள் தொகையில் நூற்றில் இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டுமே கிராமப்புறத்தில் வாழ்கிறார்கள். இரசாயனப் பூச்சிக் கொல்லிகளின் கொடுமையை எல்லாரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து இயற்கையில் விளைந்தவை அங்கு இறக்குமதி ஆக வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். 1996ஆம் ஆண்டின் இறுதியில் பிலிபைன்ஸ் நாட்டில் இருந்தேன். 12 நாடுகளைச் சேர்ந்த 18 பேர் ஆய்வுப் பட்டறையில் இருந்தோம். பயிற்சி காலம் ஒரு மாதம். தஞ்சை மாவட்டம் போன்று அங்கு வளம் மிகுந்த பகுதி மணீலா.
.
பசுமைப் புரட்சி செய்து நிறைய விளைச்சல் எடுத்த பகுதி. நிலம் வளமிழந்து தரிசாகக் கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு மாடு நீண்ட கயிற்றில் கட்டப்பட்டிருக்கிறது. அது இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பெரு முதலைகளான ராக்பெல்லர் எண்ணெய் கம்பெனியும், போர்டு மோட்டார் கம்பெனியும் அவர்களது கூட்டாளிகளும், கூடி உருவாக்கிய நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிபைன்ஸில் உள்ளது. இங்குதான் ஐ.ஆர்.8, ஐ.ஆர்.5 போன்று சொத்தை விதைகளை எல்லாம் உற்பத்தி செய்தார்கள். இந்தியாவில் இருந்த பல்லாயிரம் விதைகளை இந்த கம்பெனிக்கு வாரிக்கொடுத்ததற்காக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இங்கு இயக்குநர் பதவி கிடைத்தது. ஐ.ஆர்.ஆர்.ஐ. ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பயிர்களை விடவும் மழைகளில் மாடிப்படி போல அமைந்த அந்த நாட்டு விவசாயிகள் செய்திருந்த பயிர் சிறப்பாக இருந்தது. பயிற்சிகாலம் முடிவில் இப்படி எழுதினோம்.
.
1960க்கு முன்பு உலகில் இருந்த வேளாண்மை 1960க்குப் பின்பு வந்தது வேளாண் வணிகம். இந்த வேளாண் வணிகத்தின் தன்மை இப்படி இருந்தது.
.
1. எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது.
.
2. ஏற்றுமதி செய்வதற்காகவே உற்பத்தி செய்வது.
.
இந்த புரிதலுடன் இவற்றுக்கு எதிராக மக்கள் தேவைக்காகவும் உள்ளுர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் செய்வதுவே இயற்கை வழி வேளாண்மை. தொடர்ந்து அதை மக்களிடம் கொண்டு செல்லப் பாடுபடுகிறேன்.
.
கே : இயற்கை வேளாண்மைக்கு அதிக கால்நடைகள் தேவைப்படும் என்றும். அந்த கால்நடைகளின் கழிவுகள் மூலம் வெளியாகும் மீதேன் காற்று மூலம் ஓசோன் திரையில் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு குறித்து?
.
பதில்: வாழும் சூழலை நாசப்படுத்தும் ஆலைகளை நடத்தும் வியாபாரிகளின் கையாள்களே இப்படி பிரச்சாரத்தைக் கிளப்புகிறார்கள். ஓசோன் திரையில் ஓட்டை போடுவது குளோரோ புளூரோ கார்பன் இந்த கலவை காற்று ஏர்கண்டிசன், வீடு, அலுவலகம், கார்கள் வழியாக வெளியேறுகிறது. குளிர் சாதனப் பெட்டி உபயோகித்தால் வெளியேறுகிறது. தீயணைப்பு கருவி வழியாக வெளியேறுகிறது. பொருள்கள் உடையாமல் பெட்டிகளில் அடைத்து பயன்படும் நெழிவு அட்டை தயாரிப்பில் வெளிப்படுகிறது. இவைகளுக்கு மாற்று உத்திகள் கண்டறியப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு அமெரிக்கா உடன்படவில்லை. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? இயற்கை உழவாண்மைக்குத் தேவைப்படும் கால்நடை கழிவுகளில் மீதேன் வரும் என்பவர்கள் இறைச்சிக்காக இலட்சக்கணக்கில் கால்நடைகளை வளர்க்கிறார்களே அது என்னவோ இயற்கை வழி என்பது கால்நடை வளர்ப்பு மட்டுமல்ல. அதன் கழிவை எரிசாணக் கிணற்றில் இட்டு மீதேன் காற்றை எரித்து விடவும் செய்வோம்.
.
கே : உழவர்கள் படுகொலைகள் மலியும் இந்த வேளையிலும் எம்.எஸ்.சுவாமிநாதனும் இராமசாமியும் மரபணு மாற்றுப் பயிர்கள், விதைகளுக்காகப் பிரச்சாரம் செய்வது என்ன?
.
ப : கடந்த இருபது ஆண்டுகளாக 30,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது சுவாமிநாதனுக்கும் இராமசாமிக்கும் சரத் பவாருக்கும் தெரிகிறது. ஆனாலும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் மண்ணுக்கும் உழவுக்கும் மனிதகுலத்துக்கும் கேடுவிளைவிக்கும் மரபணு மாற்று விதைகளை உழவர் நிலத்தில் புகுத்துவதில் கடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லையா? இவர்கள், இவர்களை ஒத்தவர்களுக்காகத்தான் பாரதியார் பன்றிக் கதை சொல்லி வைத்தார்.
.
கே : பிரதமர், குடியாட்சித் தலைவர் இருவரும் இரண்டாம் பசுமைப் புரட்சி பற்றிப் பேசுகிறார்கள்.... அது பற்றி...?
.
ப. இவர்கள் இருவருக்கும் வேளாண்மையும் தெரியாது, உழவர் நிலையும் புரியாது. அப்படிப் புரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எம்.எஸ். சாமிநாதன் போன்றோரின் இராஜதந்திர தர்மம். ஓராண்டுக்கு முன்பு டாக்டர் வந்தனாசிவாவுடன் ஏழு மாநிலப் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பச்சைப் புரட்சியின் கருகிய விளைவுகளையும் இயற்கை வரி உழவாண்மையின் சிறப்பையும் சுமார் அரைமணி நேரம் விளக்கினோம். அனைத்தையும் கேட்ட பிறகு பிரதமர் இரசாயனம் இல்லாமல் வேளாண் உற்பத்தி சாத்தியமில்லை, என்று எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்கிறாரே? என்று பதில் உதிர்த்தார். பைநிறைய கொண்டு போயிருந்த வந்தனாசிவா எழுதிய புத்தகங்களையும் மரபணு விதையும் விதைச்சட்டமும் வேண்டாம் என்று எழுதி 10,000 பேர் கையயாப்பம் இடம் கோரிக்கைகளையும் பிரதமர் கையில் ஒப்படைத்துத் திரும்பினோம்.புரட்சி பச்சையாகவும் இராது. அது இரண்டாவதாகவும் தேவையில்லை. நமது உழவர்கள் முதுகில் பலர் குதிரை சவாரி செய்கிறார்கள். உழவர்கள் நிமிர்ந்து கொண்டால் போதுமானது. பிறருக்கு மாடாக உழைப்பதை உழவர்கள் நிறுத்த வேண்டும். மாறாக மாடுகளை உழவர்கள் செல்வர்களாகப் பார்க்க வேண்டும். உலக முதலாளிகள் பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம் கடைச்சரக்கின் விலை உயரும் என்பதை உயர வேண்டும்.
.
கே : பச்சைப் புரட்சி வெற்றி என்கிறார்கள். உபரி உற்பத்தி என்கிறார்கள். கப்பலில் கோதுமையை இறக்குமதி செய்கிறார்கள். கிட்டங்கியில் தானிய மூட்டை அடுக்கிக் கிடக்கிறது. ஆனாலும் மக்கள் பசியோடு தூங்கப் போவது கொடுமை, கேவலம் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது. ஏன், இந்தக் கொடுமை?
.
ப : பச்சைப் புரட்சி காலத்தில் வைக்கோலைக் குறைத்து தானிய விளைச்சலை உயர்த்தியது உண்மை. சத்து மிகுந்த தானியங்கள் விளைந்த நிலங்களில் கோதுமையும் நெல்லும் விளைவித்ததால் நெல் கோதுமை தானிய விளைச்சல் உயர்ந்தது உண்மை. நிறைய அணைகளைக் கட்டியும் ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கியும் நீர்ப்பாசன வசதியைக் கூட்டினார்கள். அதனால் ஒரு போகம் விளைந்த நிலங்களில இரண்டு போகம் விளைந்தது. இரண்டு போகம் விளைந்த நிலங்களில் மூன்று போகம் விளைந்தது. அதனால் கோதுமை, நெல் தானிய விளைச்சல் உயர்ந்தது உண்மை.
.
ஆனால், அது பழங்கதையாகிப் போனது. இன்று சுவாமிநாதனின் பல்லவி வேறு விதமாக உள்ளது. இரசாயனங்களைக் கொட்டியதால் நிலங்கள் உப்பாகிப் போய் விட்டன. கோதுமை தானிய விளைச்சல் குறைந்து விட்டது. ஆனால் தானிய விளைச்சல் குறைந்ததால்தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்பது இல்லை. எப்போதும் இறக்குமதியில் ஆளும் கட்சிக்கு இலாபம் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதுகிறார்.
.
வாணிபப் பயிர் உற்பத்தி, இரசாயன உரங்கள், எந்திர வேளாண்மை இவை புகுந்ததால் ஊர்ப் புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டத்தைத் தோற்றுவித்தது. காடுகளை இழந்ததால் மழை மறைந்தது. அதனால் சாகுபடி இழப்பு, வடிகால்கள், ஏரிகள் தூர் வாராததால் வெள்ளப்பெருக்கு, அதனால், சாகுபடி இழப்பு இப்படி மக்கள் கையில் காசு இல்லாமல் போனது. உச்ச வரம்புச் சட்டம் என்ற பெயரால் மிச்ச வரம்புத் திட்டம் செயல்படுத்தியதால் ஏழை - பணக்காரர் இடைவெளி பெரிதாகியது. இத்தனை அவலங்களும் சேர்ந்ததால் கிட்டங்கியில் உணவு ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டினிச்சாவும் நடந்தேறுகிறது.
.
கே : நம்முடைய பாரம்பரிய விதைகள் இன்றுள்ள சூழலுக்குப் பொருந்தாது என்று விஞ்ஞானிகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் சொல்லுகிறார்கள். இது உண்மையா?
.
ப : 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இவர்கள் உற்பத்தி செய்த குறுகிய கால பெருமையாக ஆராய்ச்சி நிலையத்தார் கூறியது எல்லாம் பொய். அதே போன்றதுதான் இந்தப் பொய்யும், செங்குறுவை,கருங்குறுவையயல்லாம் 90 நாட்களில் விளையும் பாரம்பரிய ரகங்கள்தான். அறுபது நாளில் விளையும் அறுபதாம் குறுவை கூட நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புதான்.
தரக் குறைவான விதைகளையே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.
.
இவர்கள் கண்டுபிடித்த ஏ.டீ.டி43 அரிசி கிலோ 12 ரூபாய்க்கு விற்கும்போது உழவர் வித்தான வெள்ளைப் பொன்னி அரிசி கிலோ 22 ரூபாய்க்கு விற்கிறது. நீண்ட கால இரகங்களான கிச்சடிச்சம்பா, சீரகச்சம்பா எல்லாம் இயற்கை வழியில் பயிரிடப்படுகிறது. மக்கள் விரும்பி பண்ணுகிறார்கள். தண்ணீர் தேங்கியுள்ள நிலங்களில் மடு மழுங்கிதான் சிறந்தது. கடல் தண்ணீர் புகும் கடற்கரைப் பகுதிக்கு குழியடுச்சான், குடைவாழை போன்றவையே ஏற்றவை.நீர் குறைந்த பகுதிகளுக்கு வாடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி, ஒசுவக்குத்தாளை இவையே ஏற்றவை. சுவை வேண்டுமானால் தூயமல்லி, சம்பா மோசனம் இவையே.
.
இவையெல்லாம் விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு கலாச்சாரமும் தெரியாது, வரலாறும் தெரியாது. எதைத் தின்னுகிறோம் என்பதும் தெரியாது. அவர்கள் மனைவி, குழந்தைக்கு வரும் மார்புப் புற்று, கர்ப்பப்பை புற்று எதனால் வருகிறது என்பதும் தெரியாது.
.
கே : இயற்கை உழவாண்மைக்குப் போனால் நல்ல விளைச்சல் பார்க்க குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் அச்சுறுத்துகிறார்களே?
.
ப : இவர்கள் சொன்னதைக் கேட்டு இரசாயனத்தையும் நஞ்சையும் நிலத்தில் கொட்டியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களே! அதை விட இது சிறந்தது தானே?இயற்கை உழவாண்மை மெதுவாகவே பலன் தரும் என்பதை எங்கு சென்று படித்தார்கள்? குருடர்கள் யானையைப் பார்த்தது போல இவர்கள் பேச்சு இருக்கிறது.
.
பலவகைத் தானியங்களை வளர்த்து மடக்கினால் நிலம் 60 நாட்களில் வளமாகும். நெய்வேலிக் காட்டாமணக்கை வெட்டி வாய்மடையில் போட்டால் எந்த உரமும் இல்லாமல் பயிர் விளையும். அமுதக் கரைசலில் 24 மணி நேரத்தில் பயிர் பச்சை காட்டும். ஆவூட்டம், ஆட்குட்டம் தெளித்தால் விளைச்சலும் கூடும், சுவையும் கூடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குவோம்.
.
கே : வாழ்வாதாரத்தையே அழிக்கும் விதைச் சட்டத்தின் பின்னணி என்ன?
.
ப : பதவியில் இருப்பவர்களுக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பெனி விதைகளால் விளைச்சல் உயரும், கத்தரிக்காயைப் பூச்சி தின்னாது. அரிசி சாப்பாட்டால் கண் விளங்கும் இப்படியயெல்லாம் கம்பெனிகள் விஞ்ஞானிகளைப் பேசவைக்கிறார்கள். கடந்த 40 வருடங்களாக தேசிய விதைக் கார்ப்பொரேசன் குட்டிக்கரணம் போட்டும் 80 சதம் உழவர்கள் தங்கள் விதைகளையே பயன்படுத்துகிறார்கள். இன்று தேசீய விதைக் கார்ப்பொரேசன் விதை கம்பெனி பன்னாட்டு கம்பெனிகளிடம் தன்னை விற்றுக் கொண்டுவிட்டது.
.
இதற்குப் பெயர்தான் தனியார் மயமாக்கம். தனியார் கம்பெனிகள் தான் கொடுப்பதை மட்டுமே உலக மக்கள் உண்ண வேண்டும். இலாபம் மலை மலையாய்க் குவிய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்படியானால், உழவர் வீட்டில் விதை இருக்கக்கூடாது. அதற்காகத்தான் விதைச்சட்டம். விதை இன்ஸ்பெக்டர் எந்த வீட்டிலும் எந்த நேரத்திலும் புகலாம். எந்த பெட்டியையும் எந்தக் கதவையும் உடைக்கலாம். எந்தப் பூட்டையும் உடைக்கலாம். சான்று பெறாத விதை இருந்தால் உழவரை ஆறுமாதம் சிறையில் போடலாம். 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இவையெல்லாம் எதற்காக? நெற்றி வேர்வை சிந்தி, சேற்றில் நடந்து. வெய்யிலில் காய்ந்து நாட்டுக்குச் சுவையான உணவு உற்பத்தி செய்து கொடுத்ததற்காக உழவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு கொடுக்கும் பரிசு இது.
.
கே : பாரம்பரியக் கால்நடைகளை அழித்துவிட்டு வெளிநாட்டுக் கால்நடைகளை இறக்குமதி செய்யும் அபாயம்.... குறித்து....?
.
ப : இடத்திற்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் வளர்ச்சியுறும் கால்நடைகள் வேறுபடுகின்றன. காங்கேயம், உம்பளாச்சேரி, திருவண்ணாமலை, தருமபுரி, ஓங்கோல், கிர் இப்படி மாடுகளை ஊர்ப் பெயர் சூட்டி அழைப்பதிலிருந்தே இந்த உண்மை வெளிப்படும். வெளிநாட்டு மாடுகள் குளிர் சீமையில் வளர்பவை. அவை நமது தட்ப வெப்ப நிலைமைக்கு ஏற்றவை இல்லை. இதை 1955 ஆம் ஆண்டு வாக்கிலேயே வேளாண் நிபுணர் வீ.டி.சுப்பையா முதலியார் கூறியுள்ளார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இறக்குமதி செய்த காளை கொண்டு நமது கால்நடை இனங்களை அழிக்கிறார்கள். உயிரியல் பன்மயமே வளமைக்கு அடிப்படை என்று அவ்வப்போது பேசவும் செய்கிறார்கள்.
.
கே : நீர் நிலைகள் சிதைக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆலைச் சாக்கடையாக மாற்றப்பட்டும் வருகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு 80% தண்ணீர் உழவுக்குப் பயன்படுத்தப்படுவதே காரணம் என்று குற்றச் சாட்டு உள்ளதே?
.
ப: 95% ஆற்று நீர் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட காலம் இருந்தது. அன்று குடி நீர்த் தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு தண்ணீர் வளம் குறைந்த மாநிலம். அதனால் நமது முன்னோர்கள் 65,000 ஏரி, கண்மாய், குளம், குட்டைகளை வெட்டி, பராமரித்து வந்தார்கள். அவற்றின் கரைகளை வெட்டித் தண்ணீரை வடிய விட்டு விட்டு இன்று பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், நீதிமன்றம் எழுப்புகிறோம்.
.
தேயிலைத் தோட்டம், இரப்பர் தோட்டம், ஆலைக்கு மரம் வளர்ப்பு, நகர மயமாக்கம், சாலை விரிப்பு என்ற பெயரில் காடுகளையும் நஞ்சை நிலங்களையும் மொட்டையடித்துவிட்டு நமக்குக் காதுகுத்தப் பார்க்கிறது சூது செய்யும் கூட்டம். அதே நேரத்தில் உழவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். பூமியை ஆழமாகத் துளைத்து தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டி தென்னை. வாழை, கரும்பு பயிர் செய்வதெல்லாம் அடாவடித்தனம்.
.
வெளிநாட்டவர் கோவணம் கட்ட வேண்டும் என்பதற்காக திருப்பூரில் ஆலைகளை நிறுவி, சாக்கடைகளை நொய்யல் ஆற்றில் கட்டி அதைத் தீண்டத் தகாததாக ஆக்கிய குற்றவாளி யார்?அந்நியர் செருப்பு அணிய வேண்டுமென்பதற்காக ஆம்பூர் வாணியம்பாடியில் தோல்பட்டறை தொடங்கிப் பாலாற்றைத் தீண்டத்தகாததாக மாற்றியது எவர்குற்றம்?இவையயல்லாம் காலம் கடத்தாமல் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
.
கே : விதர்பா பகுதியில் ஐந்து மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை நடைபெறுகிறது. நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் தற்கொலையைத் தடுத்து நிறுத்துமா?
.
ப : மன்மோகன்சிங் மந்திரிசபை பதவி ஏற்றவுடன் முதன் முதலாக அவர் செய்தது என்ன? ஆந்திர மாநிலத்திற்குப் பறந்து சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கினார். அப்போதே உழவர்க்குக் கடன் கொடுப்பதற்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
.
அவருக்குப் பதில் கூறிய டாக்டர் வந்தனா சிவா பின் கண்டவாறு கூறினார். கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்ற ஒரு கயிற்றை விட வேண்டும். மாறாக, நமது நிதியமைச்சர் ஒரு வாளி தண்ணீரைக் கொட்டுகிறார். கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். அதற்கான காரணம் என்ன? சாகுபடி செலவு அதிகரிக்கிறது. தொடர்ந்து இரசாயனம் இட்டதால் மண் வளத்தை இழந்தது. உணவுப் பயிர் செய்வதற்குப் பதிலாக வாணிபப் பயிர் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டார்கள். மான்சாண்டோ கம்பெனிப் பருத்தி வியாபாரி சொன்னது போல் விளையவில்லை. விளைந்த பருத்திக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இக்காரணங்களைக் களையாது மேலும் கடன் கொடுப்பதால் தற்கொலையைத் தடுக்க முடியாது என்று வந்தனா கூறினார். வந்தனா அன்று கூறியது இன்றைக்கும் பொருந்தும்.
.
கே : விதர்பா பகுதி தற்கொலைகளை எதிர்கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன், காந்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக நீண்ட காலம் முகாமிட்டிருந்த விதர்பா பகுதியில் தற்கொலை தொடர்வது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனாலும் அவர் இரண்டாம் பச்சைப் புரட்சியை செயல்படுத்த முனைப்பாக இருப்பது ஏன்?
.
ப : சுவாமிநாதனின் சாமர்த்தியமே இங்குதான் உள்ளது. பச்சைப் புரட்சிக்கு மூன்று அப்பா. ஒருவர், அமெரிக்க சனாதிபதி ஜான்சன், இரண்டாவது அப்பா முன்னாள் உணவு அமைச்சர் சி. சுப்பிரமணியம், மூன்றாவது அப்பா, நம்முடைய சுவாமிநாதன். சுப்பிரமணியம் இன்று உயிருடன் இல்லை. பச்சையாகப் புரட்சி நடத்தி நாட்டைப் பாலைவனமாக்கியதற்காக சுவாமிநாதன்தான் வெட்கப்பட வேண்டும். ஆனால், நாம் வெட்கப்பட வேண்டும் என்று நம்மையும் கூட்டுக் களவாணியாக்குவதில் தான் சுவாமிநாதன் வெற்றி அடங்கியுள்ளது. அவர் இப்போது முழக்கத்தை மாற்றிவிட்டார். பச்சை வேளாண்மை என்று தலைப்பை மாற்றிக் கொண்டு விட்டார். அவர் மீர்ஜாபர் நம்பர் 1.
.
கே : தங்களை விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்ளும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சிலர் நோக்கம், தகுதி பற்றிக் கூறுங்கள்?
.
ப : பச்சைப் புரட்சியின் அப்பா நான் தான் என்று மார்தட்டிக் கொண்ட சுப்பிரமணியத்தில் இருந்து தொடங்குவோம். பிரதமர் ஜவகர்லால் நேரு அகால மரணமடைந்தார். லால்பகதூர் பிரதம மந்திரியானார். அவர் காமராசருக்கு வேண்டியவர். சுப்பிரமணியத்தைப் பழிவாங்குவதற்காக உழவு, உணவு அமைச்சராக நியமித்தார். இவை பற்றி எதுவும் தெரியாத சி.சுப்பிரமணியம் விவசாய விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பேசினார். அவர்கள் சம்பளம் போதவில்லை என்று அழுதார்கள். விவசாய விஞ்ஞானிகள் மூன்றாம் தர விஞ்ஞானிகளாக நடத்தப்படுவதாக முறையிட்டார்கள். அவர்கள் சமூகத்தின் மூன்றாம் தர மக்கள் மத்தியில் இருந்து வந்த முதல் தரமானவர்கள் என்ற முடிவுக்கு வந்தார் அமைச்சர்.
.
இவையெல்லாம் நான் சொல்லவில்லை. சுப்பிரமணியம் பச்சைப் புரட்சி என்று தலைப்பிட்ட தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். சுப்பிரமணியம் அமெரிக்க மந்திரி ஃபிரிமன் என்பவருடன் ரோமாபுரியில் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார்.
.
இந்தத் திட்டத்திற்கே பின்னர், பச்சைப் புரட்சி என்று பெயர் சூட்டப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்காக சுப்பிரமணியம் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபர்தான் இன்னொரு அப்பா, சுவாமிநாதன்.
.
சுப்பிரமணியத்தின் இரகசிய ஒப்பந்தப்படி அமெரிக்கர்கள் இந்திய விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் இவர்களில் 2000 பேர்களை அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் நம்மூர் பொருட்காட்சி சாலையில் பெற்றோர் குழந்தைகளைச் சுற்றிக் காட்டுவது போல சுற்றிக் காட்டித் திருப்பியனுப்பினார்கள். திரும்பி வந்தவர்கள் அமெரிக்கா பற்றித் துதி பாடினார்கள். அப்படிப் போய் வந்தவர் நால்வரை எனக்குத் தெரியும். அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் வந்தார்கள்.
.
சுப்பிரமணியம் ஒப்பந்தப்படி இந்தியாவில் 32 பல்கலைக்கழகங்களையும் 200 ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவினார்கள். எல்லா ஆராய்ச்சிகளையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு இணைத்தார்கள். மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் வாங்குகிறோம் என்ற நினைப்பே இவர்களுக்கு இருப்பது இல்லை, இவர்களின் இருப்பிடம் முட்டாள்களின் சொர்க்கம்.
.
கே: பி.டீ. என்றால் என்ன? கத்தரிக்காய் வெண்டைக் காயிலும் பீ.டீ. இருக்கிறதா?அது என்ன பீ.டீ. கத்தரிக்காய்?
.
ப: டீ.பீ கேட்டிருக்கிறீர்களா? எண்புருக்கி நோய். அதை உண்டு பண்ணுகிறது. பேசில்லஸ் டியூபர்குளோசிஸ் என்று ஒரு கிருமி, அது போல இதுவும் ஒரு பேசில்லஸ் கிருமிதான். இதற்குப் பெயர் பேசில்லஸ் துரிஞ்சி பென்சிஸ். இது கத்தரிக்காயுடன் ஒட்டிக் கொண்டது எப்படி? கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உணவு உற்பத்தியில் வணிகம் இறக்கை கட்டிக் கொண்டது. ஒட்டு விதைகள், இரசாயண உரம், பூச்சிகொல்லி, களைக்கொல்லி என்று பலவற்றையும் விற்று பன்னாட்டுக் கம்பெனிகளும் லாபம் குவித்தன. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பூச்சிகொல்லி நஞ்சுகள் எண்ணிக்கை 147. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பூச்சிகொல்லி நஞ்சைக் குடிக்கும் உழவர் இறந்து போகிறார். பூச்சி சாக மறுக்கிறது.
.
கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் பறிப்பதற்கு இரண்டு நாள் முன்பு கூட பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் தெளிக்கப்படும் பூச்சி கொல்லியின் அளவு எழுபத்தைந்தாயிரத்து நானூற்றிப் பதினேழாயிரம் ஆயிரம் கிலோ. இதனால், பூச்சி கொல்லிக்குப் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டன. நஞ்சானது காய்கறி, பால், பழம், தாய்ப்பால் எங்கும் எதிலும் காணப்படும் பொருளாயிற்று. உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். கனடாவில் உள்ள அனைத்துலக வளர்ச்சி ஆராய்ச்சி மையம் கணித்தபடி ஆண்டுதோறும் உலகில், 10,000 பேர் பூச்சிகொல்லியால் மடிகிறார்கள். இன்னுமொரு நான்கு லட்சம் பேர் பலவகை நோய்க்கு ஆட்பட்டு அல்லற்படுகிறார்கள். இதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரசாயண பூச்சிகொல்லிகள் தெளித்தனாலேயே பூச்சிகள் பெருகுகின்றன. பறவைகளும் பூச்சி உண்ணும் பூச்சிகளும் மடிந்து போயின. எதிர்ப்பு இல்லாமற் போனதால் செடியுண்ணும் பூச்சிகள் மலிந்து போயின.
.
இதன் விளைவாக உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு புழக்கத்திற்கு வந்தது. நம்மைப் போன்றவர்கள் மூலிகைச் சாற்றைத் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த மக்களுக்குச் சொல்லித் தருகிறோம்.கோடீசுவரக் கம்பெனிகள் மரபணுமாற்று விதை உற்பத்தியில் கால்வைத்தார்கள்.
.
ஆமா! மரபணு மாற்று, அது என்ன? கேட்கத் தோன்றுகிறதா?
.
முன்பெல்லாம் கலப்பினங்களைத் தோற்றுவிக்கப் பெற்றோர்களை மாற்றினார்கள். இப்போது மரபணுக்களை இடம் மாற்றுகிறார்கள். உதாரணத்திற்கு, சீமைக் காளையை நாட்டுப் பசுவுடன் இணை சேர்த்தார்கள். கொஞ்சம் மடி பெரிசாக ஒரு பெண் கன்றோ ஏர் அல்லது வண்டிக்கு உதவாத ஒரு ஆண் கன்றோ பிறந்தது. காளையையும் எருமையையும் இணை சேர்த்தால் கன்று பிறக்கவில்லை.ஆனால் ஜீன் மாற்றம் மிகவும் நுட்பமானது. செடி, கொடியின் (ஜீன்) மரபணுவை விலங்கில் பொருத்தலாம். ஒரு விலங்கின ஜீனை ஒரு செடியில் பொருத்த முடியும். கோடி கோடியாகச் செலவழித்து கட்டப் பெற்ற ஆய்வுக்கூடம் கோடி கோடியாய் சம்பளம் பெறும் நிபுணர்கள் தேவை. அதற்குரிய சாதக பாத சூழலில் தான் பீ.டீ. கத்தரி ஏவப்படுகிறது.
.
மதுரை உழவியல் கல்லூரி முதல்வர் சொன்னார். நான் கத்தரிக்காயை வாங்கும்போது பூச்சி துளைத்ததாகப் பார்த்து வாங்கி வருகிறேன். ஏனென்றால் அதுதான் பூச்சி கொல்லும் விசம் இல்லாதது, அரியும் போது புழுவை அப்புறப்படுத்தலாம். விசத்தை அப்புறப்படுத்த முடியாது - அதுபோலத்தான் பேசில்லஸ் துரிஞ்சென் சில ஜீனும், அரிந்து அப்புறம் போட முடியாது.
.
இன்னொரு ஆபத்தும் உள்ளது. வேலூர் முள்ளுக் கத்தரிக்காய், திருச்சி ஐயம்பாளையம் கத்தரிக்காய், தஞ்சை தூக்கனாம் பாளையம் கத்தரிக்காய் என்று ஊருக்கு ஒரு கத்தரிக்காய் வைத்திருக்கிறீர்களே, அவை காணாமற் போகும். அப்படித்தான் பசுமைப்புரட்சி வந்தபின்பு நமது நெல் வகைகள் காணாமற் போயின.மேலும் ஒரு ஆபத்தும் உண்டு. ஜீன் தாவும் என்று சொன்னோம். கம்பெனிகள், வெறும் 50 மீட்டர் தூரம் தான் இந்த மரபணுக்கள் பரவும் அபாயம் உள்ளது என்று சொல்லுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்கக் கோல்ப் கிளப் மைதானத்துச் செடியின் மகரந்தத் தூள் 21 கிலோ மீட்டர்தூரம் தள்ளிப் பயணம் செய்திருப்பது கண்டு நீடிக்கப்பட்டுள்ளது. நமது தோட்டத்துச் செடியில் ஜுன் மாசு வந்தால் மான்சேன்ட்டோ நமக்கு இழப்பீடு நாம் கம்பெனிக்கு ராயல்ட்டி கொடுக்க வேண்டும். இப்படி கம்பெனி வயல் பார்த்து வழக்காடி சம்பாதிப்பதற்காக ஒதுக்கப்பட்டது ஒரு கோடி டாலர்கள். பணிபுரியும் ஆட்கள் 75 பேர். சர்வதேச விஞ்ஞானிகள் ஊதும் எச்சரிக்கைச் சங்கு இதுதான்.
.
மரபணு மாற்று உணவு நஞ்சுள்ளதாக இருக்கக்கூடும்.
மனித உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணும்.
.
மரபணு மாற்று மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைச் சிதைக்கும்.
.
மரபணு மாற்று உயிரினப் பன்மயத்தை அழிக்கும்.
.
பீ.டீ மரபணு கத்தரிக்காயுடன் அடங்கிப் போகும் ஒன்றல்ல. அடுத்து, வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச் சோளம், பப்பாளி, நெல், உருளைக் கிழங்கு, வாழைப்பழம் என்று உண்ணும் பொருள் அத்தனையையும் மாசுபடுத்தும் ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.
.
இந்தியப் பல்கலைக் கழகங்கள் இது போன்ற ஆராய்ச்சிக்குள் இறங்குவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
.
மான்சேன்ட்டோ பீ.டீ. கத்தரிக்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியதால்தான் தடைபட்டு நிற்கிறது. மரபணு மாற்று விதை, உணவு போன்றவற்றை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு ஒரு கமிட்டி உள்ளது. மக்கள் எதிர்ப்பு கண்டு இந்தக் கமிட்டி ஒப்புதல் தருவதைத் தள்ளிப் போட்டு வருகிறது.
.
பீ.டி. மரபணு புகுந்துவிட்டால் எதையுமே இயற்கையில் விளைந்தது என்று சான்று பெறமுடியாது. ஏற்றுமதி செய்ய இயலாது.
.
உத்தராஞ்சல் முதல்வர் எனது மாநிலத்தில் பீ.டிக்களை நுழைய விடமாட்டேன் என்று உறுதி கூறியுள்ளார். ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பீ.டீ உணவைப் புறக்கணித்துள்ளன. பட்டினி கிடக்கும் ஆப்பிரிக்கா, எங்கள் விதைகள் அழிந்து போகும் பீ.டீ, சோளம் வேண்டாம் என்று மறுத்துவிட்டது.
.
பீ.டீ. கத்தரிக்காய் முதல் முதலாகத் தமிழ் மக்களுக்குத்தான் ஊட்டி விடப்படவுள்ளது. என்ன செய்யப் போகிறோம்? கை கட்டி வாங்கிக் கொள்ளப் போகிறோமா? நிலாக் காட்டி ஊட்டிவிடவும் இங்கு ஆட்கள் உண்டு
.
கத்தரிக்காய் தின்னும் மனிதர் உறுப்புக்களில் என்ன மாறுதல்களை ஏற்படுத்தும்?
.
முன்பே அளவுக்கதிகமான பூச்சிகொல்லி தெளிப்பால் சர்க்கரை நோய்; புற்றுநோய், கிட்னி ப்ராப்ளம், நரம்புக் கோளாறு, ஆண் மலடு என்று மனிதரைத் தொற்றும் நோய்கள் நூறு விதம்.
.
ஜீன் உயிர் விட்டு உயிர் தொற்றும் போக்கு ஜீன் மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது. இதை நியூஸிலாந்து விஞ்ஞானி ஒருவர் கேலிச் சித்திரமாக்கிக் காட்டினார். ஒரு வெள்ளாட்டிற்கு வாய் கீழ்நோக்கி உள்ளது. அது மனிதனுக்கு உள்ளதுபோல் முன்பக்கம் அமைந்து சிரிக்கவும் செய்தால்.... கற்பனை செய்து பாருங்கள். வெட்ட மனம் வராது.
.
தலை பெருச்சாளி போலவும், உடல் பன்றி போலவும், கால்கள் மனித கால்களாகவும், பாதம் ஆட்டுக்கு உள்ளது போலவும் அமைந்தால் அந்த விலங்கை என்ன பெயரிட்டு அழைப்போம்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினார்கள் உலக மரபணு தொழில் நுட்ப வல்லுநர்கள்.
.
கம்பெனிகளுக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையில்லை. அவர்கள் விதை விற்று லாபம் பார்க்க வேண்டும். ஆந்திர மாநிலம் வாராங்கல் வட்டாரத்தில் 2006 முதல் 3 மாதங்களில் பீ.டீ. பருத்தி இலைகளை மேய்ந்து 1500 ஆடுகள் செத்துப் போயின. மைய அரசு கால்நடைத் துறை விஞ்ஞானிகள் நஞ்சு உட்கொண்ட சாவுதான் என்று உறுதி செய்துள்ளார்கள். 21.5.2006 இந்து நாளேடு இந்தச் செய்தியை வெளியிட்டது.
.
பெரம்பலூர் மாவட்ட உழவர்கள் ஆடுகளை பீ.டீ. பருத்திக் காட்டில் ஓட்டி விட்டார்கள். ஆடுகள் அவற்றை தின்ன மறுத்து வெளியேறிவிட்டன.
.
ஆந்திரா மாநிலத்தில் பருத்தியை எடுத்த பிறகு செடியை மேய்ந்த 1500 ஆடுகள் செத்துப் போயின. லால்குடி வட்டத்தில் உள்ள சிறு களம்பூர் உழவர்கள் கம்பெனி விதையை விதைத்து ஏக்கருக்கு 5 கிலோ பஞ்சு கூட எடுக்கவில்லை. ஏக்கருக்கு 16,000 ரூபாய் செலவு. இழப்பை சரிசெய்ய அரசும் முன்வரவில்லை. விதை விற்ற தரகன் போன இடம் தெரியவில்லை. அருப்புக் கோட்டை உழவர்கள், காய்பிடிக்காத பருத்திச் செடியை பிடுங்கி வந்து மாவட்ட ஆட்சியர் முன்பு போட்டார்கள். சேலம் பகுதி உழவர்கள் காய்பிடிக்காத பருத்திச் செடிகளை பிடுங்கி எறிந்தார்கள்; அவர்கள் சிறுநீரகத்தை விற்று கடன் அடைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் 33,000 ரூபாய்க்கு விதை வாங்கி முளைக்காமல் போனதைச் சொல்லி உழவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
.
மரபணு மாற்றுப் பயிர்களால் ஏற்படும் இழப்பிற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஒரு பெரு நிதி சேமிப்பு வேண்டும் என்று தேசிய உழவர் கமிசன் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதுகிறார்.
.
இது இன்றைய நிலவரம். தண்டனைக்குரியவர்கள் கம்பெனியார்கள்.
.
அப்படியிருக்க உழவர் வீட்டுக் கதவை உடைப்பது எதற்காக? என்று கேட்டுச் சமூக விஞ்ஞானிகளும், உழவர்களும் குமுறுகிறார்கள். இவர்கள் மாநிலம் தோறும் மாநாடுகள் நடத்திக் கொண்ட மராட்டிய உழவர் குடும்பங்களைத்தான் அண்மையில் பிரதம அமைச்சர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவந்தார். பீ.டீ மரபணு உழவரைத் தற்கொலைக்குத் தள்ளுவதோடு கதை முடியவில்லை.
.
கத்தரிக் காயைப் புழுதின்னவில்லை என்றால் என்ன பொருள்? கத்தரிக்காய் நஞ்சாகி விட்டதுதானே.
.
மனித உடலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
.
மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சிதைக்க வல்லதாக இருக்கிறது.மரபணு உயிரினம் கடந்து செயல்பட முடியும்.
.
விதை முளைத்து வளரும் போது கூடவே பீ.டீ மரபணுவும் வளர்ச்சி அடைந்து மகரந்தத்தை மலடாக்குகிறது. அதனால் பீ.டீ. பயிரில் இருந்து மறு உற்பத்திக்கான விதை கிடைக்காது. வண்டு, தேனீ வழியாக மற்ற உழவர் பயிருள்ளும் புகுந்து அந்தச் செடிகளையும் மலடாக்கும் அபாயம் உள்ளது. பருத்தி விதைகளை உண்ணும் பசுவும் மலடாகும் அபாயம் உள்ளது.
.
கத்தரிக் காயை உண்ணும் மனிதன் மலடாகும் அபாயம் உள்ளது.
.
மேலும், பீ.டீ. கிருமிகளும் காய்ப்புழு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு விட்டால் பருத்தி, கத்தரி, வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச் சோளம், பப்பாளி, நெல், உருளைக் கிழங்கு, வாழை என அத்தனைப் பயிர்களின் சாகுபடியும் அற்றுப் போகும் வாய்ப்புள்ளது.
.
நன்றி:
நவம்பர் - டிசம்பர் 2006

சனி, ஜூன் 07, 2008

விழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு!

ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்' என்று சொல்வார்கள். ஆனால், நமது தலைமுறையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. நாம் பார்த்ததில்லை. அந்தக் குறையை இன்றைக்கு மன்மோகன் சிங் அரசு போக்கிக்கொண்டிருக்கிறது.
மூக்கணாங்கயிறை அறுத்துக்கொண்ட முரட்டுக்காளையாக இன்றைக்கு விலைவாசி வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், மன் மோகன் சிங் அரசு கவலையின்றி தத்துவ முத்துக்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
.
`உலகம் முழுமையும் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் விலைவாசி உயருகிறது' என்று வேதாந்தம் பேசுகிறார்கள்.
.
விலைவாசி உயர்வை பெட்ரோல், டீசல் விலையும் நிர்ணயிக்கும் என்று கூறுகிறார்கள். உலக வங்கியின் பரமார்த்த சீடர்களுக்கு இது தெரியாதா? தெரியும்.
.
இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் மலேசியா, இந்தோனேஷியா சிங்கப்பூர் நாடுகளைவிட இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம். காரணம், இறக்குமதியாகும் அந்த எண்ணெய்க்கு நிதி அமைச்சர் சிதம்பரம் சுங்கவரியும் விதிக்கிறார். உற்பத்தி வரியும் விதிக்கிறார்.
.
அந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது, மணிசங்கர அய்யர் போராடினார். கடைசிவரை அந்த வரியைக் குறைக்கமுடியாது என்று சிதம்பரம் உறுதியாக இருந்தார்.
.
இன்றைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, சென்ற ஆண்டு இதே கோரிக்கையை வைத்தார். நிதி அமைச்சர் நிமிர்ந்து கொண்டார். இறுதியாக, பிரச்னையை இந்த ஆண்டு சோனியாவின் கவனத்திற்கு முரளி தியோரா கொண்டு சென்றார். பஞ்சாயத்து நடைபெற்றது. ஏதோ கொஞ்சம் குறைக்க நிதி அமைச்சர் இணங்கியிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது.
.
உலகத்தில் தன்னைவிட அறிவாளி எவரும் இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் நமது நிதி அமைச்சர்.


.
பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துகிறவர்களில் கணிசமான பேர் நடுத்தர மக்கள் என்பதனை அவர் கண்டுகொள்வதில்லை. இன்றைக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை என்பது மன்மோகன் சிங் அரசை எரிமலையின் சிகரத்தில் அமர்த்தியிருக்கிறது என்பதனையும் அவர் கண்டுகொள்வதில்லை.
.
சென்ற ஆண்டு மே மாதம் `விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்' என்றார். அதன்பின்னரும் பணவீக்கம் உப்பிப் பெருக்க, விலைவாசி உயர்ந்துகொண்டே வந்தது.
.
ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதியில் நிதி அமைச்சர் என்ன வாக்குமூலம் கொடுக்கிறார்? `சென்ற ஆண்டை விடப் பணவீக்கம் அதிகமாகி விலைவாசி உயர்ந்துதான் இருக்கிறது' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். விலைவாசி உயர்வு சிக்கலானதுதான். ஆனால், அடுத்துவரும் மாதங்களில் விலைவாசி குறைய வாய்ப்பு இருப்பதாக கிளிஜோசியம் சொல்கிறார். விலைவாசி உயர்விற்குத் தாங்கள் செயல்படுத்தும் பொருளாதாரத் திட்டங்கள்தான் காரணம் என்பதனை அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
.
விலைவாசி உயர்விற்கு இணையதள யூகபேர வணிகம் பிரதான காரணம் என்பதனை அனைத்துத் தரப்பினரும் கரடியாகக் கத்தி எடுத்துக் கூறிவிட்டனர். மன்மோகன் சிங் அரசு மவுனம் சாதிக்கிறது.

.
யூகபேர வணிகத்திலிருந்து உணவுப் பொருட்களையாவது விடுவிக்க வேண்டும் என்று அதற்குரிய நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்தது. அதனை மன்மோகன் சிங் அரசு அலட்சியம் செய்துவிட்டது.

.
இமாசலப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் தோல்வியைச் சந்தித்த பின்னர், யூகபேர வணிகம் பற்றி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று வீரப்பமொய்லி தெரிவித்தார். அவருக்கு என்ன தெரியும் என்று நமது அதிமேதாவிகள் ஏளனம் செய்துவிட்டனர்.
.
யூகபேர வணிகத்திற்கும் விலைவாசி உயர்விற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதனை ஆராய, மத்திய அரசே ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவிற்கு பொருளாதார மேதை அபிஜித் சென் தலைமை ஏற்றார்.
.
விலைவாசி உயர்விற்கு யூகபேர வணிகம்தான் பிரதான காரணம் என்று அந்தக் குழுவும் அறிக்கை சமர்ப்பித்துவிட்டது. `இப்படி உலகமே இது தீமை என்று சொன்னாலும் கேட்பதற்கு இல்லை' என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். அதனை பிரதமர் மன்மோகன் சிங்கும் வழிமொழிந்தார். உலகம் சொல்வதைக் கேட்கமுடியாது. தாங்கள் சொல்வதைத்தான் உலகம் கேட்கவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
.
இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் கட்சிக்குக் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. மன்மோகன்சிங் அரசு அமைந்த பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது.

.

கோவாவிலும், ஜார்க்கண்டிலும் காங்கிரஸ் அரசுகள் தூக்குக் கயிற்றைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றி சோனியா காந்தியே கவலைப்படாதபோது, நாம் கவலைப்பட்டு என்ன பயன்?
.
ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கண்ட பாவத்திற்காகத் தோழமைக் கட்சிகளும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தேர்தலின்போது மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை தி.மு.கழகம் அளித்ததோ, அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், விலைவாசி உயர்வு என்ற காட்டாற்று வெள்ளம், கலைஞர் அரசின் சாதனைகளின் பலன்களையெல்லாம் அடித்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம் பிறந்திருக்கிறது.
.
கிராமங்களுக்குப் போனால் மக்கள் என்ன சொல்கிறார்கள்? `சொன்னபடி கலைஞர் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுறாரு. டி.வி. யெல்லாம் கொடுத்திட்டாரு. ஆனால், தாளிக்க எண்ணெய் வாங்க முடியலையே. கல்யாணம் என்றால் தாலிக்குத் தங்கம் வாங்க முடி யலையே. எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்குது. விழி பிதுங்குது' என்று ஆதங்கத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். கலைஞர் அரசிற்கு சோதனைதான்.
.
ஆனால், மக்கள் என்னென்ன பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று சொல்கிறார்களோ, அந்தப் பொருட் களெல்லாம் யூகபேர வணிகச் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தின் விலையை எப்படி சென்னை நகை வியாபாரிகள்கூட தங்கள் பங்கிற்கு கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்துக்கொள்கிறார்கள் என்பதனை அண்மையில் சன் டி.வி. அழகாகப் படம் பிடித்துக் காட்டியது.
.
`தாளிக்க எண்ணெய் இல்லை. தாலிக்குத் தங்கம் இல்லை' என்ற மக்களின் மனக்குமுறல் அரசியல் முழக்கமாக உருவாவதற்கு முன்னர், யூகபேர வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமே. அதற்கு கலைஞராவது முன் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் விலைவாசி உயர்வு என்கிற காட்டாற்று வெள்ளத்தில் கலைஞர் அரசும் அடித்துச் செல்லப்பட்டுவிடும்!

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12-06-08

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்? -பகுதி 2


தண்ணீர் அமிழ்தம்
.
யாரும் செய்யலாம்: தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.

.
தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

.
காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும். ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும்போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.

.
வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.

.
பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.
இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சசவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.
.
தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்.

.
வயிற்றுக்கு கொஞ்சம்
.
யாரும் செய்யலாம்: வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.

.
பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். இது சத்தானது, உடலுக்கு உகந்தது, செலவு குறைந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள். வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பயணம் செய்யும்போது அதிக மாசு வாயுக்களை வெளியிடுகின்றன.

.
சங்கிலித் தொடர் கடைகள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் விற்கப்படும் அயல்நாட்டுப் பழங்கள், காய்கறிகள் நெடுந்தொலைவு பயணம் செய்து நம்மை அடைகின்றன. நீண்டகாலம் சேமித்து வைக்க வசதியாக அவற்றின் மீது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அவற்றின் விலையும் அதிகம்.

.
விரயங்களுக்கு முற்றுப்புள்ளி
.
யாரும் செய்யலாம்: பிளாஸ்டிக், காகித பொருட்களை மறுபடி பயன்படுத்தலாம்.
.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். காகித பயன்பாட்டை குறையுங்கள். கடைகளுக்குச் செல்லும்போது துணி அல்லது சாக்குப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும்போது பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.
.
கம்ப்யூட்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள். குறிப்புகள் எழுத ஒரு பக்கம் அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்துங்கள். பரிசுப் பொருள்களை சுற்றிவரும் காகிதங்கள், கடித உறைகளை மறுபடி பயன்படுத்துங்கள்.

.
வெளியே செல்லும்போது, சுற்றுலா செல்லும்போது பையில் உங்களுக்கென ஒரு டம்ளரை எடுத்துச் செல்லுங்கள். மக்காத பிளாஸ்டிக் கோப்பைகள், காகித கோப்பைகள் விரயமாவதை இதன் மூலம் தடுக்கலாம்.

.
வீட்டில் மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை பிரியுங்கள். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோக பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கி, வீட்டுத் தாவரங்களுக்கு இடலாம். சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி மற்றும் தெரு குடியிருப்போர் சங்கங்கள் இதை மேற்கொண்டு வருகின்றன.

.
மூன்று 'ஆர்'
.
எந்தப் பொருளையும் குறைவாக பயன்படுத்த வேண்டும், மறுபடி பயன்படுத்த வேண்டும், மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். இவை 'மூன்று ஆர்' என்று அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கினால், மறுபடி பயன்படுத்தவோ, மறுசுழற்சி செய்யவோ தேவை இருக்காது. பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட 'பேக்' செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் விற்பனைக்குக் கிடைக்கும் அளவில் பெரிதாக வாங்குவதன் மூலம், குப்பைகளை குறைக்கலாம். செலவும் குறையும்.

.
உயிர் இயந்திரங்கள்
.
மாசுபாடுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களை வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் 1000 கிலோ கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது. கார்பன் டைஆக்சைடுதான் புவி வெப்பமடையக் காரணம். குறைந்த தண்ணீரே தேவைப்படும் உள்ளூர் மரங்களை வளர்க்கவும். மரங்கள் நிழலையும், தென்றல் காற்றையும் தரும். மரம் வளர்க்க முடியாதவர்கள், தொட்டிகளில் செடி வளர்க்கலாம். இது மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

.
கருத்துகளை விதைத்தல்
.
சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும், அதில் தனிமனிதர்களின் பங்கு பற்றியும், விளைவுகளையும் மற்றவர்களிடம் கூறுங்கள். எந்த வகையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்பதை விளக்குங்கள்.

.
பசுமை வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போல, மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறான் என்றொரு சூழலியல் அறிஞர் கூறினார். இனிமேலும் நாம் அப்படிப்பட்ட ஒரு புழுவாக இருக்கலாமா? புழுவாக இருக்கிறோமா, வண்ணத்துப்பூச்சியாக மாறி பசுமையை பரப்புகிறோமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.

-பூவுலகின் நண்பர்கள்
நன்றி: www.poovulagu.org

வெள்ளி, ஜூன் 06, 2008

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.'' - அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.
.
உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம். சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை. ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.
அதிர்ச்சியைக் குறைக்க...
மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:
*ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க,
*ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க,
*7 மணி நேரம் இயங்க,
*டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க,
*ஃபேன் 15 மணி நேரம் ஓட,
*விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.
.
ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப்படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்.
.
டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக்கலாம். தேவைப்படாத மின்சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.
.
குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.
.
மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.
.
இன்னும் தூரம் செல்வோம்
யாரும் செய்யலாம்: சிக்னலில் நிற்கும்போது வாகன எஞ்சினை அணைத்து வைக்கலாம்.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 80 சதவிகித சாலைகளை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் அந்த வாகனங்களில் பயணம் செய்வோரது எண்ணிக்கை 22 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் 75 சதவிகித சாலைப்பயணிகள் பஸ்களில்தான் செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், அதனால் வெளியிடப்படும் புகையால் உருவாகும் நோய்களில் இருந்து தப்பவும் பஸ்களை பயன்படுத்துவோம்.
.
சென்னையில் வாழ்பவர்கள் மின்ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துலாம். நீண்டதூர பயணங்களுக்கும் ரயில்களே சிறந்தவை. விமானங்களில் செல்வதைவிட ரயிலில் செல்வது 10 மடங்கு குறைவான எரிசக்தியையே செலவழிக்கிறது.
.
அருகிலுள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, பால் வாங்க சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லலாம். சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி உடலை சிறப்பாகப் பராமரிக்கும். நோய்கள் பெருகிவிட்ட நகர வாழ்வில் இந்த இரண்டும் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

-பூவுலகின் நண்பர்கள்
நன்றி: http://www.poovulagu.org