வெள்ளி, அக்டோபர் 31, 2008

துயரை திசை திருப்பும் துதிபாடிகள் - பழ. நெடுமாறன்

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிப் படுகொலைகள் குறித்த பிரச்னையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரவேற்கத்தக்க பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 14102008 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுவில் பெரும் உற்சாகத்தை ஊட்டியுள்ளன.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுமே இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது குறித்து பெரும் கவலை தெரிவித்தனர். போரை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்றவற்றை உடனடியாக அனுப்பி வைக்கவும், இனப் பிரச்னைக்கு அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும், ராணுவ ரீதியான தீர்வு ஒருபோதும் கூடாது, இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான உதவி எதையும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெரிவித்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெளிப்படுத்திய இந்த உணர்வுகளின் அடிப்படையில் அக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

போரை நிறுத்தி உடனடியாக அமைதியை ஏற்படுத்த இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். 15 நாள்களுக்குள் இவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்தும் தனித்தனியாகவும் ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளன. தமிழக முதலமைச்சர்களினால் அவ்வப்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப் பெற்றும் அனைத்துக் கட்சித் தூதுக் குழுவாக தில்லி சென்று பிரதமரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இந்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நிலையிலும் அதிகாரிகள் நிலையிலும் பலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்தியாவின் ஆழ்ந்த கவலைகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பிரதமர் இந்திராவின் காலத்தில் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருதரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டினையும், அதைப்போல பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டினையும் மதித்துச் செயல்படுத்த இலங்கை அரசு முன்வரவில்லை. இந்தப் பின்னணியில் இப்போது தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்துள்ள முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவையாகும். கடந்த காலத்தில் இத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இந்த முடிவுகள் கருதப்பட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டிய தீர்மானமும் அதைச் செய்யத் தவறினால் தமிழகம் எத்தகைய நிலையை மேற்கொள்ளும் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 30 ஆண்டு கால வரலாற்றில் இத்தகைய திட்டவட்டமான நிலைமையை தமிழகம் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து இந்திய அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழ் மக்கள் அனைவரின் விருப்பமும் இதுதான்.

ஆனால் சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் மனம் இரங்காத சிலர் அனைத்துக் கட்சிகள் மேற்கொண்ட முடிவுகளைத் திரித்துப் பொய்ப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் வாயும் மனமும் கூசாமல் பேச முன்வந்துள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்து விமானத் தாக்குதலாலும் பீரங்கிக் குண்டு வீச்சினாலும் செத்து மடியும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவின்றியும் இருக்க இடமின்றியும் நோய்களுக்கு மருந்தின்றியும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காடுகளிலும் வெட்ட வெளியிலும் துடிப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள வல்லரக்கர்களின் கொடுஞ்செயலைக் கண்டிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதையே தங்களின் பிறவிப் பயனாகக் கருதுகிறார்கள்.

ராஜீவ்காந்தி காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ள இந்திய அரசுகள் இலங்கை இனப் பிரச்னையில் கையாண்டு வரும் தவறான கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் உருவாகி இருப்பதை மேற்கண்டவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள்.

இந்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட்டுவிட்டன.
1. ஈழத் தமிழர்கள் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசின் நலன்களைக் காக்கும் வகையிலும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
ஈழத் தமிழர் பிரச்னையில் சிங்கள அரசு வகுத்த தீர்வை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக சிங்கள அரசு தனது இன அழிப்புப் போரைத் தங்குதடையின்றி தொடர்வதற்கு அனுமதித்தது.
2. சுய நிர்ணய உரிமையுள்ள தமிழ்த் தாயகத்தை பெறுவதற்காக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டம் அங்கீகாரமற்றதாகவும் அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. தமிழ்ப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என வர்ணித்து ஒழித்துக் கட்டுவதற்கு சிங்கள அரசு முற்பட்டதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.
3. ஈழத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு தொடர்ந்து செய்த முயற்சிகளைத் தடுக்க இந்திய அரசின் அணுகுமுறைகளினால் முடியவில்லை.
4. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட நாடான இலங்கையில் நேரு, இந்திரா காலங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்த அன்னிய நாடுகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்கு ராஜீவின் கொள்கை இடம் அளித்துவிட்டது.

இக்கொள்கையால் ஏற்பட்ட தடுமாற்றங்களின் விளைவாக தென் ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்கு இந்திய அரசு மறைமுகமாகத் துணைபுரிந்துவிட்டது. இப்பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இந்தியா அதனுடைய எல்லைகளுக்குள்ளாகவே அடங்கிக் கிடக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்குள்ளும் தென் ஆசிய பகுதிக்குள்ளும் பலமான நிர்பந்தங்களை அமெரிக்கா உருவாக்குகிறது. இலங்கை அரசுக்குத் தான் நேரிடையாக உதவி செய்வதை விட தனது நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இலங்கைக்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளது.

இலங்கையிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்துள்ளது. மேலும் அராபிய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகவே செல்கின்றன. கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் இலங்கையைத் தொட்டுச் செல்கின்றன. இந்துமாக் கடலில் கப்பல் போக்குவரத்துப் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்தக் கடல் பாதைகள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் இலங்கை தனது ஆதிக்கத்திற்கு உள்பட்ட நாடாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா விரும்புகிறது.

சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குத் தாராளமாக ராணுவ உதவிகள் அளிப்பதற்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. இந்த நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை ஒரு பெரிய சந்தை அல்ல. இலங்கையினால் இந்த நாடுகளுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடையாது. ஆனாலும், சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இந்நாடுகள் உதவி செய்வதற்குக் காரணமே இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

இந்திய அரசின் தவறான கொள்கையின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானதை விட இந்தியா மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்தியாவின் தென்வாயிலில் பேரபாயம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே பலர் எச்சரித்துள்ளனர்.

நேருவின் நண்பரும் சீனாவில் இந்தியத் தூதுவராக இருந்தவருமான சர்தார் கே.எம். பணிக்கர் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்திருந்தார். ""இந்தியாவும் இந்துமாக் கடலும்'' என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியுள்ள நூலின் 7வது பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
""இந்தியாவைப் பாதிக்கும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தில் கடல் பகுதியை அலட்சியமாக ஒதுக்கி விடுகிற போக்கு இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது வடமேற்கு எல்லைப் பகுதிகளை மட்டும் பொருத்தது என்ற முடிவுடன் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்காலத்தை நில எல்லைகள் முடிவு செய்யவில்லை. மாறாக கடல்தான் எதிர்காலத்தை முடிவு செய்தது என்பதை மறந்துவிடக் கூடாது.''

வரலாற்று அறிஞரான டி.ஆர். இராமச்சந்திரராவ் ""இந்தியாவும் இலங்கையும் ஓர் ஆய்வு'' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலின் 8வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
""இந்துமாக் கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை உள்ளது. இந்துமாக் கடலின் பாதுகாப்பு அதைப் பொருத்ததேயாகும். நிலவியல் அடிப்படையிலும் அது நடு மையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியாகச் செல்லும் விமானத் தடங்களுக்கும் கப்பல் தடங்களுக்கும் இலங்கை நடு நாயகமாக உள்ளது.''

இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் நெருங்கி உறவாட இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இலங்கை ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உடன்பாடுகள் செய்து கொள்வதற்கும் இலங்கை தயங்கியதில்லை. 1962ம் ஆண்டு இந்தியாவின் எல்லைகளை சீனா ஆக்கிரமித்தபோது இந்திய சீனப் படைகளின் மோதல்கள் நிகழ்ந்து இரு நாடுகளின் உறவும் மிகவும் சீர்கெட்டிருந்தது. அந்த நிலையில் 1963ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையும் சீனாவும் கடல் உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டன. சீனப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்து போவதற்கான உடன்பாடும் இந்த உடன்படிக்கையில் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் இந்தப் போக்குகளைக் கண்ட இந்திய ராணுவத் தளபதிகளும் இந்திய அரசுக்குத் தங்கள் கவலைகளைத் தெரியப்படுத்தினார்கள். இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான இரவி கெளல் என்பவர் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
""பிரிட்டனுக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமோ, சீனாவுக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதுபோன்று இந்தியாவுக்கு இலங்கை முக்கியமானதாகும். இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும்வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவுக்கு அதனால் ஆபத்து வந்துசேரும்''.

இந்தியாவுக்கு வரவிருக்கும் அபாயத்தைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சிங்களத் துதிபாடிகளுக்கு கொஞ்சமும் கவலையில்லை. அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் நலனிலும் அக்கறை இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள அபாயம் குறித்தும் கவலையில்லை. சிங்கள இனவெறியருக்கு இந்தியா தொடர்ந்து எல்லாவகை உதவிகளையும் செய்து ஈழத் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாகும். அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இந்தச் சிங்களத் துதிபாடிகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். மேலும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிட முடியாது என்றும் அடிக்கடி சொல்கிறார்கள்.

சிலவேளைகளில் இந்தியப் பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இத்தகையோருக்கு இந்தியாவின் கடந்தகால வரலாறு கொஞ்சமும் தெரியவில்லை. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலம் வரை எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா கையாண்டு வந்திருக்கிறது என்பதை நம்முடைய பிரதமரோ அவருக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகளோ அல்லது அந்த அதிகாரிகளைத் திசைதிருப்ப முயலும் சிங்களத் துதிபாடிகளோ எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார்கள்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை அரசாங்கம் கருப்பின மக்களுக்கு எதிராகக் கையாண்ட நிறவெறிக் கொள்கையை ஜவாஹர்லால் நேரு மிகக் கடுமையாக எதிர்த்தார். நிறவெறியைப் பின்பற்றுவது அந்நாட்டின் சொந்தப் பிரச்னை என அவர் ஒதுங்கி நிற்கவில்லை. 1961ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி லண்டனில் காமன்வெல்த் பிரதமர்களின் மாநாடு நடைபெற்றபோது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுக்குத் தலைமை தாங்கி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கடுமையாகக் கண்டித்தார் நேரு. அதுமட்டுமல்ல, நிறவெறிக் கொள்கையை அந்நாடு மாற்றிக்கொள்ளாவிட்டால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அவர் வற்புறுத்தி மற்ற நாடுகளையும் ஏற்க வைத்து தென்னாப்பிரிக்காவை வெளியேற்றினார். அதே மார்ச் மாதம் 13ம் தேதியன்று ஐ.நா. பேரவையில் பேசும்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

தென்னாப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கையாண்டு நீக்ரோக்கள், இந்தியர்கள் ஆகிய கருப்பின மக்களை ஒடுக்கியது. இலங்கை, இனவெறிக் கொள்கையைக் கையாண்டு தமிழர்களை ஒடுக்கி வருகிறது. நிறவெறிக்கும் இனவெறிக்கும் வேறுபாடு இல்லை. நிறவெறிக்கு எதிராக நேரு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சிங்கள இனவெறிக்கு ஆதரவாக மன்மோகன் அரசு நடந்து கொள்கிறது.

பாகிஸ்தானின் ஓர் அங்கமான கிழக்கு வங்கத்தில் திட்டமிட்டு இனப்படுகொலைகளை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியபோது அது அந்நாட்டின் உள்விவகாரம் எனக் கருதி பிரதமர் இந்திரா ஒதுங்கி நிற்கவில்லை. வங்க மக்களின் துயரம் குறித்தும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பது குறித்தும் தனது கவலையை உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். எந்தப் பயனும் இல்லாத நிலைமையில் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்க மக்களுக்கு விடுதலை தேடித் தந்தார்.

எனவே, ஈழத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை எனப் பேசுபவர்களும், பக்கம்பக்கமாக எழுதுபவர்களும், வரலாறு புரியாதவர்கள் அல்லர். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்கள். உண்மைகளை மறைத்தும் திரித்தும் சுயநல நோக்கத்துடன் செயல்படுபவர்கள். இவர்கள் என்றைக்குமே தமிழர்களின் நலன்களைப் பற்றி சிந்திக்காத சிங்களத் துதிபாடிகள் ஆவார்கள். எது உள்நாட்டுப் பிரச்னை எது சர்வதேசப் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமல் குழப்புபவர்கள்.

உலகமே சிறுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், எந்த ஒரு நாட்டின் பிரச்னையும் அண்டை நாடுகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு உலகம் நெருங்கிப் பிணைந்துவிட்ட இந்த காலகட்டத்தில், பழைய ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இவர்கள் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன் மனைவி இடையே நடைபெறும் சச்சரவில் தலையிடுவது நாகரிகமாக இருக்க முடியாது. ஆனால் அந்தக் கணவன், மனைவியைக் கொலை செய்ய அரிவாளுடன் விரட்டும்போது அது அவர்களின் குடும்பப் பிரச்னை என்று ஒதுங்கிக் கொள்பவன் கோழை மனித நேயம் அற்றவன். அதைப்போலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறுபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பவர்கள்.


-பழ. நெடுமாறன்
நன்றி: தினமணி

ஈழம்: இங்கே ஒற்றுமை தேவை!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி சென்னையில் முதலில் மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்தது. அந்த அணிவகுப்பில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் கலந்து கொள்ள இயலாத காரணம் அதன் அரசியல் உறவுகள்தான்.

அதே சமயத்தில் ஈழப் பிரச்னையில் எவருக்கும் சளைத்தது அல்ல என்பதனைக் காட்டியாக வேண்டும். எனவே மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்த அதே தினத்தில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது. அந்தக் கருத்தரங்கில் பேசிய அதன் தலைவர்கள் `தனித்தமிழ்நாடு _ ஆயுதம் ஏந்தவும் தயார் _ இங்குள்ள இளைஞர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தி ஈழம் செல்வோம்' என்றெல்லாம் பேசினர்.

`இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் எந்த அம்சத்தில் நாம் இணைந்து நிற்க முடியுமோ அந்த சந்திப்பில் இணைந்து நிற்போம்' என்று முதல்வர் அறிவித்தார். இதுதான் இன்றைய அவசரத்தேவை. அதற்காக அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.

ஈழத் தமிழர்களுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் அய்யா நெடுமாறன்கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனாலேயே அந்தக் கூட்டம் எடுக்கும் முயற்சிகள், முடிவுகள் வெற்றி மகுடம் சூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

தி.மு.கழகத்தோடு அய்யா நெடுமாறன் அவர்களுக்கு நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடு உண்டு. ஈழ மக்களுக்கு இன்றைய தேவை தமிழகத்தின் ஒற்றுமைதான். அந்த ஒற்றுமை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான். ஆகவேதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அய்யா கலந்து கொண்டார். உட்பகை ஒற்றுமையைச் சிதறடிக்க ஜெயலலிதா என்ன சொன்னார்? என்ன சொல்கிறார்? `விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நான்தான் போராடி வெற்றி பெற்றேன்' என்கிறார். இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்து இரும்புச் சங்கிலிகளால் இழுத்து வர வேண்டும் என்று முன்னர் சொன்னார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காகவே வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்து காராக்கிருகத்தில் அடைத்தார். ஆனால் இன்றைக்கு வைகோ எங்கே நிற்கிறார்? அ.தி.மு.க.வோடு கரம் கோத்துக்கொண்டு ஈழ மக்களுக்காகத்தான் இன்னும் போராடுகிறேன் என்கிறார். அதனை மக்கள் நம்புவார்களா?

அ.தி.மு.க.வைப் போல அவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கருத்தரங்கம் என்று அவர் தனி ஆவர்த்தனம் செய்தது பற்றி செல்வி ஜெயலலிதா என்ன சொல்கிறார்?

`தனித்தமிழ்நாடு என்ற அளவிற்குத் துணிச்சலாகப் பேசுகிறார்கள். ஆயுதம் ஏந்துவோம் என்ற அளவிற்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சிப் பீடத்தில் நான் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருப்பேன்' என்கிறார்.

ஈழப்பிரச்னையை இப்போது உள்நாட்டு அரசியலின் லாவணிக் கச்சேரி ஆக்கிவிட்டார்கள். ஈழ மக்களுக்கு இதுதான் நாம் செய்யும் உதவியா? அங்கே வன்னிக்காடுகளில் வனவிலங்குகளோடு வாழும் இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்களின் கண்ணீரில் லட்சிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ சோதனைகளைத் தாங்கி பட்டினி கிடக்கும் அவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி செய்கிறது. அதனை நடு வழியிலேயே சிங்கள ராணுவம் பறித்துக் கொள்கிறது. சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்த பின்னர்தான் முதன்முதலாக 750 டன் உணவுப் பொருள்கள் ஈழ மக்களின் கரங்களை எட்டியிருக்கிறது.

சோவியத் யூனியனைத் தாக்கிய ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போராடிய செஞ்சேனை வீரர்களுக்குக் கிடைத்தது ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு. இன்றைக்கு சிங்கள ராணுவத்தின் முப்படைத் தாக்குதலை எதிர்கொள்ளும் ஈழப் போராளிகளுக்குக் கிடைப்பது ஒரு நாளைக்கு ஒரே ஒரு இளநீர். இதுதான் உணவு. உணர்வுகள்தான் அவர்களுடைய நாடி நரம்புகளை - இதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் இன அழிப்பில் அனைத்து சிங்களக் கட்சிகளும் ராஜபட்சேக்களுக்குப் பின்னே அணிவகுத்து நிற்கின்றன. அதனால் வன்னிக்காடுகளில் ஈழத் தமிழர்களை வேட்டையாடுவதும் வங்கக் கடலில் மீனவத் தமிழர்களை வேட்டையாடுவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது பாசிச சிங்கள அரசிற்குத்தான் தெரியும்.

`அங்கே காட்டிலும் மேட்டிலும் கண்ணீரில் மிதக்கும் ரத்த உறவுகளுக்காகக் காலத்தோடு உதவுவோம். அதற்கு மத்திய அரசை அசைய வைப்போம்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதனைக் களத்தில் நிற்கும் போராளிகள் இரு கரம் விரித்து வரவேற்கிறார்கள். அதனால் இன்றைக்கு அவர்கள் ஆயிரம் யானை பலம் கொண்டு முன்னேறுகிறார்கள்.

ஆனால் அதற்குப் பாதகம் செய்யும் முறையில் இங்கே தனித் தமிழ்நாடு, ஈழத்திற்குப் படையோடு செல்வோம் என்று வாய் வீரம் பேசுகிறார்கள்.

அப்படிப் பேசுவதற்கு இதுவா நேரம்?சிங்களவன் பூமி இலங்கை என்று அந்த நாட்டு ராணுவத் தளபதி கொக்கரிக்கிறார். இதன் பொருள் என்ன? ஈழத் தமிழனாயிருந்தாலும் இலங்கைத் தமிழனாக இருந்தாலும் அவர்கள் பொட்டுப்பூச்சிகள், அவர்கள் அடிமைகள் என்பதுதானே பொருள்?

இந்தச் சூழலில் ஈழ மக்களுக்கு உடனடித் தேவை என்ன என்பதனை அனைத்துக் கட்சிக் கூட்டம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நல்ல அறிவிப்பினைச் செய்தார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னல்படும் ஈழ மக்களுக்கு உதவுவோம் என்று ஜப்பான் செல்லும் வழியில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இவர்கள் அறிவித்ததை செயல்படுத்தினாலே போதும். அதன் பின்னர்; அடுத்த அடி வையுங்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தும். அதற்கு இங்கே நம்மிடையே ஒற்றுமை தேவை.

தம்முடைய மைந்தனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிய விஜயகாந்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கம் பெற்றிருக்க வேண்டும் என்பது நமது கருத்து. தம்முடைய உணர்வுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டாமா?

1980_களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எத்தகைய எழுச்சி ஏற்பட்டதோ அத்தகைய எழுச்சியின் அடித்தள நீரோட்டம் சூடேறிச் சுழன்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களின் உள்ளங்களில் எழுந்துள்ள எரிமலை பிரசவிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது பஞ்சபாண்டவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவமைந்தர்கள். ஆனால் தங்கள் அன்னை சிங்களத் துப்பாக்கி முனையில் துகிலுரிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் ஈழத்து மனித குமாரர்கள்.

ஈழத்து மக்களுக்காக வில் அம்பு ஏந்தி வருகிறோம் என்று நாம் வீரவசனம் பேசத் தேவையில்லை. ஏனெனில் இன்று வரை ஈழப்போராளிகள் எவருடைய உதவியையும் கோரியதில்லை. நாடியதில்லை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஒன்றுபட்டுத் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் போதும் என்றுதான் கூறுகிறார்கள்.

தமிழ் இன அழிப்பு நிறுத்தப்படவில்லையென்றால் ஈழம் என்று நாம் குரல் கொடுக்கத் தேவையில்லை. சிங்களப் பேரினவாதமே அதனை பெற்றெடுத்துத் தரும்.

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 02-11-08

ஞாயிறு, அக்டோபர் 19, 2008

நளினிக்கு வேண்டியது கருணையல்ல; நீதி

ராஜீவ் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் நளினி மற்றும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி திரு. எஸ். நாகமுத்து அளித்த தீர்ப்பின் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

'மனுதாரர்கள் முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக சிறை விதிகளைப் பின்பற்றாமல் ஆலோசனைக் குழு எடுத்துள்ள முடிவு, கைதியின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையிலும் நீதியை மறுக்கும் வகையிலும் உள்ளது. இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறை விதிகள் பின்பற்றப்படாமல் நளினியின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அரசால் விதிக்கப்படுள்ள சிறை விதிகளை அரசு அதிகாரிகளே மீறியுள்ளனர்.'

நளினியின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்படும் எதிர்க்கருத்துகள் எதுவும் சிறிதும் நியாய உணர்வற்றவையாக உள்ளன. "ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியதுதான்" என்பது போன்ற கருத்துகள் சட்ட-நீதி அமைப்பிற்கு சவால் விடுவதாகும். நளினி ஒரு கொடுங்குற்றவாளி அல்ல. ஒரு கொடுங்குற்றத்திற்கு அவருக்குத் தெரியாமலேயே உடந்தையாக்கப்பட்டவர். ஈழப் போராளிகளுக்குத் தமிழகத்தில் எத்தனையோ உதவிகளை எவ்வளவோ தமிழ்க் குடும்பங்கள் செய்திருக்கின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார்கள். மறைமுகமாக உதவியிருக்கிறார்கள். இன்றும் உதவி வருகிறார்கள். நளினி செய்த குற்றமும் அத்தகையதே. இதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை மிக அதிகம் என்பதை அற உணர்வுள்ள யாரும் புரிந்துகொள்ளலாம்.

நாகரிக உலகின் நீதியமைப்புகளைப் பின்பற்றாதவை எனக் கருதப்படும் அரபு நாடுகளில்கூட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மன்னிப்பைப் பெற்றால் தண்டனையைக் குறைப்பது போன்ற நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால் சோனியா காந்தி நளினியை மன்னித்தாலும் நம் நீதிமன்றங்கள் அவருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று விரும்பினாலும் அதையெல்லாம் தாண்டி நளினியைச் சிறையிலேயே சாகவிடவேண்டும் எனத் தீர்மானிக்கும் சக்திகள் எவை? தமிழக முதல்வர் தன்மேல் புலிகளின் ஆதரவு முத்திரை விழுந்துவிடும் எனப் பயந்து இதைச் செய்வதாகக் கருத முடியாது. தனது ஈழத் தமிழர் ஆதரவிற்காக ஒருமுறை ஆட்சியையே தி.மு.க. இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எனக் கருதப்படும் ஒரு அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருக்கு இரங்கல் கவிதை எழுதிடும் அளவு மன திடம் கொண்ட தமிழக முதல்வர் பரிதாபத்திற்குரிய ஒருவரின் விடுதலைக்கு எதிராக இருக்கமாட்டார் என்று நம்புவோம்.

-மனுஷ்ய புத்திரன்
நன்றி: உயிர்மை.காம்

செவ்வாய், அக்டோபர் 14, 2008

'மீடியா வன்முறையும், அதீத மீடியா ஆர்வமும்...'

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்வதைப் போல 'மீடியா வன்முறை' என்று குற்றம் சாட்டுவதும் தற்போது பேஷனாகிவிட்டது இடுப்புக்குக் கீழே ஜட்டி தெரிய ஜீன்ஸ் போடுவதைப் போல.

கருத்தரங்குகளுக்குத் தோதான கட்டுரை வாசிக்கத் துணியும் எழுத்தாளர்கள் 'மீடியா வன்முறை மற்றும் மீடியா பயங்கரவாதம் தனிநபர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகையான தாக்கம்' எனத் தலைப்பிட்டு வாசிக்கும் கட்டுரைகள் ஒரு விஷயத்தை மறைக்கின்றன. தமிழர்களின் 'அதீத மீடியா ஆர்வம்' எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை.

மீடியாக்கள் தனிநபர்களைப் பயன்படுத்துவது என்பது எப்படி விவாதத்திற்குரியதோ, அதைப் போல தனிநபர்கள் அசட்டுத்தனமாக மீடியாவில் பங்கு பெற நினைப்பது எந்தளவிற்கு உச்சக்கட்டமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. கதையைச் சொல்கிறேன். இதில் பயங்கரவாதி யார் என்பதைப் படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தனியார் தொலைக் காட்சியொன்றின் க்ரைம் ரிப்போர்ட் சார்ந்த நிகழ்ச்சி அது. நாள்தவறாமல் பிள்ளை பிடிக்கிறவனைப் போல, இராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மார்ச்சுவரிகளில் ஆம்னி வேன், கேமரா சகிதம் ஆஜராவோம். பச்சைக் குழந்தை பிணம் முதல் வெட்டுப்பட்ட மூத்த குடிமகனின் பிணம் வரை அத்தனையும் பார்த்துப் பார்த்து முகர்ந்து முகர்ந்து மனம் ஒருவிதமான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டு விட்டிருந்தது. பிண வாடையை வைத்தே அது கொலையா, எனச் சொல்லும் அளவிற்கு பிணங்கள் குறித்த நிபுணத்துவம் எங்களுக்கு மார்ச்சுவரி பணியாளர்களால் சொல்லித்தரப்பட்டது.

எங்கள் தொலைக்காட்சிக் குழுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அசைன்மெண்ட்டின் தாரக மந்திரம் 'எதையும் மாத்தி யோசி'!

காலை 11 மணிக்கே ஓல்ட் காஸ்க் ரம் ஆஃப் வாங்கி நானும் கேமரா மேனும் அடித்துவிட்டுத்தான் அடுத்த கட்ட வேலையைப் பற்றியே யோசிப்போம். இந்தக் காலகட்டத்தில்தான் வெட்டியான்களும் துப்புரவுத் தொழிலாளர்களும் காலை எழு மணிக்கே ஒயின் ஷாப் திறக்கும் போதே (அப்போது பிச்சைக்காரர்களைப் போல குடிகாரர்களை நடத்தும் டாஸ்மாக் இல்லை. தவிர அரசாங்கத்தின் புண்ணியத்தில் ஓல்டு காஸ்க்கும் தற்போது வழக்கொழிந்து விட்டது.) ஏன் முண்டியடிக்கிறார்கள் என்கிற தேவாமிர்த ரகசியம் புரிபடத் துவங்கியது.

மார்ச்சுவரி சகவாசமே வாழ்க்கையில் இனி வாய்க்கக்கூடாதென இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்ட காலகட்டமும் அதுதான். தினமொரு பிணம் தினமொரு கொலை என எங்கள் ஆம்னி வேன் சென்னையின் சுற்றுச் சாலைகளைச் சுற்றி வந்தது.

மெல்ல மெல்ல ஹிட் அடித்த அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போட்டோ போட்டியே நடப்பதுண்டு. எங்களுக்காகக் காவல்துறை உயரதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். சொன்னால் நம்புங்கள், நாங்கள் சரக்கடித்துவிட்டு சுற்றி வருகையில் தூக்கம் கண்களைச் சுழற்றினால், வட சென்னையிலுள்ள காவல்நிலையமொன்றில், காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் ஓய்வறையில்தான் தூங்குவோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அக்யூஸ்டுகளை 'சார் இன்னொரு தடவை அடிங்க சார்' என்றால் அடிப்பார்கள்.

நானேகூட காக்கிச் சட்டை போடாமல் காவல்துறை ஆய்வாளரின் சேரில் அமர்ந்து கொண்டு ஒரு முறை ஒரு குற்றவாளியை விசாரித்த போது எனக்குக் கிடைத்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவரமுடியாது.

காக்கிச் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு விசாரித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதே குதூகலமாக இருந்தது.

காவல்துறையினர்களின் குரூர ஆக்கிரமிப்பு மனநிலை படிப்படியாக எப்படி உருவாகிறது என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்தவன் என்கிற முறையில் அதைப் பற்றித் தனியாகவே இன்னொரு கட்டுரை எழுத முடியும்.

'கால் காசுனாலும் கவர்மெண்ட் காசு என்பதைப் போல, போலீஸ் காசு' என்று மாற்றிக் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்துக் கோயில் படிக்கட்டுகளில் நடந்து வரும் போது கொண்டு வரும் பழங்களைத் தட்டிப் பறிக்கும் குரங்கு என்ன நினைக்கும்? அப்படித்தான் காவல்துறையினர் தட்டிப் பறிக்கும் போது நினைத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்

காவல்துறையினர் முதல் சமூகத்தின் பல தரப்பினரும் விரும்பிப் பார்த்த அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் நடந்த சம்பவத்தைச் சொல்வதற்குத்தான் இப்படிச் சுத்திச் சுத்தி வருகிறேன். நாங்கள் எங்கும் நுழையலாம் எதையும் செய்யலாம் என்கிற செல்வாக்குடையவர்களாக இருந்தோம் என்பதைச் சொல்லத்தான் இத்தனை 'பில்டப்'புகளும்.

நொளம்பூர் கொலை வழக்கு அது. கொல்லப்பட்டவர் ஓட்டேரியைச் சேர்ந்தவர். தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். நான் நெருங்கிப் பார்த்த போது மூன்று விரல்கள் உள்ளே செல்லும் அளவிற்குப் பின்னந்தலையில் ஒரு ஓட்டை இருந்தது. அடி பலமாக விழுந்ததால் ஆள் ஸ்பாட் அவுட். அக்யூஸ்டு சரண்டர்.

சாவுச் செய்திகளை இப்படித்தான் எந்தவித உணர்ச்சியுமின்றி வர்ணிப்போம்.

நொளம்பூரில் கொள்ளப்பட்டவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மனைவி. நாங்கள் அன்றைய நிகழ்ச்சிக்கே அந்தச் சாவை படம் பிடித்து ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்ததால், எங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி பாடியைக் கீழ்ப்பாக்கத்தில் சீக்கிரமே போஸ்ட்மார்டம் செய்து ஓட்டேரிக்குக் கொண்டுவந்து விட்டோம். உறவினர்கள் அயலார்கள் எனப் பெருங்கூட்டமே சாவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே சின்னத் தெரு அது என்பதாலும் கொலையின் காரணமாக ஒருவர் செத்திருக்கிறார் என்பதாலும் கூட்டம் மொய்த்தது.

அப்போதுதான் என்னுடைய கேமராமேனுக்கு அந்த விபரீத ஆசை உதித்தது. எதையும் மாத்தி யோசி என்கிற பார்முலாவைக் கடைப்பிடித்துப் பார்ப்பது எனத் தீர்மானித்துவிட்டான். ஏற்கனவே அடித்த ஓல்டு காஸ்க் குவாட்டரின் வேலையாகக்கூட அது இருக்கலாம்.

சின்னச் சின்ன வீடுகள் சேர்ந்த தொகுப்பு வீடுகள் டைப் என்பதால் வெளியே பிணத்தைக் கிடத்தியிருந்தார்கள். சுற்றிலும் அவரது உறவினர்கள் அமர்ந்திருக்க நடுவே அவரது மனைவி இரண்டு குழந்தைகளைப் பக்கத்தில் அமரவைத்து அணைத்தபடி அழுது கொண்டிருந்தார். "மாப்ள வழக்கமா ஷூட் பண்ணி பண்ணி போரடிச்சுருச்சு. ஒரு சேஞ்சுக்கு ஷாட் வைக்கலாம்டா!" என ஆரம்பித்த கேமரா மேன் அவனது யோசனையைத் தெரிவித்த போது நான் ஆடிப் போய்விட்டேன்.

எவ்வளவோ அசட்டுத்தனங்களைப் பத்திரிகையாளன் என்ற முறையில் செய்திருந்த நான் இந்த யோசனையைக் கேட்டு ஆடிப் போய்விட்டேன். அதாவது பிணத்தின் நெத்தியில் உள்ள ரூபாய் நாணயத்தில் கேமராவை போகஸ் பண்ணி அப்படியே மெதுவாக ஜூம் அவுட் செய்து முழுப் பிணத் தோற்றத்தையும் காட்ட வேண்டும்.

அப்படிச் செய்ய வேண்டுமெனில் கிடத்தியிருக்கிற பிணத்தின் இரண்டு புறமும் கால்களைப் போட்டுக் கொண்டு நின்றபடியே ஷூட் செய்ய வேண்டும். நடக்கிற காரியமா இது? ஆனால் எனது கேமரா மேன் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியின்றித் தயங்கித் தயங்கி பிணத்தின் தம்பியை அணுகினேன்.

என்னை முந்திக் கொண்டு வந்த என்னுடைய கேமரா மேன், பிணத்தின் தம்பியிடம் 'சார் உங்க அண்ணார கடைசியா எப்ப பாத்தீங்க, அவரு என்ன சொன்னாரு' என அவரிடம் நேர்முகம் செய்து அதை கேமராவில் பதிவு செய்யவும் ஆரம்பித்துவிட்டான். அவரும் சளைக்காமல் சொன்னார்.

இடையிடையே சோடா குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சந்துக்குள் சென்று இன்னொரு ஆஃப் வாங்கி நாங்கள் மூவரும் பருகினோம். மீண்டும் அவர் நேர்முகம் கொடுத்தார். கடைசியில் அந்த ஷாட்டை அப்படி எடுப்பது என்பதை நாங்கள் மூவரும் தீர்மானித்து விட்டோம்.

அத்தனை பேரும் பிணத்தை விட்டுத் தள்ளி அமரச் சொல்லிவிட்டு நாங்கள் வேலையை ஆரம்பித்த போது அத்தனை பேரும் எங்களைத்தான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுதந்திரம் கிடைத்த திமிரில் என்னுடைய கேமரா மேன் இன்னொரு யோசனையையும் சொன்னான்.

'மாப்ள ஆம்பியன்ஸ் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்டா. நீ என்ன பண்றன்ன அந்தம்மா, அதாண்டா செத்தவரோட பொண்டாட்டி. அவங்க ஜாக்கெட் ஓரத்துல லேப்பிள் மைக்க குத்தி விடச் சொல்லு. அப்புறமா எல்லாரையும் இன்னும் கொஞ்சம் சத்தமா அழச் சொல்லு..." நான் தயங்கிய போது என்னுடைய கேமரா போர்வாள் அதையும் செய்து முடித்துவிட்டது.

நினைத்தபடி அன்று அந்த நொளம்பூர் கொலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மறுநாள் எனக்கு ஒரு போன் வந்தது. "சார் அதான் நேத்து எங்க வூட்டுக்காரரு செத்தாரே. ஆமாம் ஓட்டேரி சார். அவங்க ஒயிப் பேசறேன் சார். ப்ரோகிராம் எப்ப சார் டீவியில வரும்".

-நித்திலன்

நன்றி: உயிர்மை.காம்

சனி, அக்டோபர் 11, 2008

புகை பிடித்தால் 10 ஆண்டுகள் ஆயுள் குறைவு

உலகநாடுகள் பலவற்றிலும் இந்தியாவிலும் புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்கும் பொது இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்ட போதிலும், புகை பழக்கத்துக்கு மாறி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையவில்லை.பிற எந்த நாட்டையும் விட இந்தியாவில் பீடி, சிகரெட், பான் மசாலா, குட்கா போன்ற வஸ்துகளை பயன்படுத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகிலேயே இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
2001ம் ஆண்டு புகையிலை பொருள் சட்டவிதிமுறையின் படி இந்தியாவில் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது. ஆனால் விதிமுறைகளை அமல் செய்ய சரியான நடைமுறைகள் இங்கு இல்லை. சிறுவர்கள் தாராளமாக சிகரெட் பிடிக்கலாம். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சிறுவன் கடைக்கு சென்று சிகரெட் கேட்டு வாங்கும் போது அவனுடைய வயதை உறுதி செய்ய மொபைல் எண் அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை கேட்கிறார்கள். சிறுவனிடம் போலி விபரங்களை அளித்து சிகரெட் பெறுவதற்கு பரிசோதனைக்காக போலீசாரே அனுப்புவார்கள். ஒருவேளை அவனிடம் புகையிலைப் பொருட்களை கடைக்காரர் விற்பனை செய்தால் கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் இல்லாததால் சிறுவர்கள் எளிதில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டை புகையிலையை ஒதுக்கும் இளைஞர்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுவாச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நரசிம்மன் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்தது:புகைபிடிக்க பழகி விட்டவர்கள் மத்தியில் அதை விடுவதற்கு செய்யும் முயற்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்தியாவில் 2 சதவீதம் பேர்தான் புகைப் பழக்கத்தை கைவிட முன்வருகிறார்கள். இது மற்றநாடுகளை விட மிகக் குறைவு. ஆகவே புகை பிடிப்பதற்கு முன்பே அதை தடுக்க வேண்டுமானால் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். இதற்காக நாங்கள் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்து வருகிறோம். இதை பெரிய அளவில் செய்யும் போது 1015 ஆண்டுகளில் நல்ல விளைவு ஏற்படும்.இந்தியாவில் விளம்பரத் தடை, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை இருந்த போதிலும் புகைக்கும் பழக்கத்தில் மாற்றம் இல்லை.
இந்தியாவில் புகைபிடிக்கும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். பீடி, சிகரெட், மூக்குப் பொடி எதுவாக இருந்தாலும் அது நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதுதான். சிலர் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று கூறி சமாதானம் செய்கிறார்கள். அது தவறு. கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அடுத்தவர் புகையை நாம் சுவாசித்தால் அது நமது உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதை கடந்த 1015 ஆண்டுகளாகத்தான் உணரத் தொடங்கி யிருக்கிறோம். இவ்வாறு நரசிம்மன் தெரிவித்தார். எதிர்கால இளைஞர்கள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க, பள்ளிகளில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.புகையில் மறையும் வாழ்க்கை : புகை பிடிப்பவர்களின் ரத்த நாளங்களை நிகோடின் பாதிப்பதால் அதன் இயல்பு தன்மை மாறி, இருதய நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது. புகையால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. டி.பி. வருவதற்கும், சுவாச உறுப்புகளில் கேன்சர் ஏற்படவும், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படவும் காரணமாகிறது. புகை பிடிக்கும் ஆண்கள் 10 ஆண்டு வாழ்க்கையை இழக்கிறார்கள். புகையிலைப் பொருட்களால் உலகில் ஆண்டுக்கு 54 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பாதிப்பேர் மரணமடைய புகையிலையே காரணம்.
நன்றி: www.vizhippu.net

வெள்ளி, அக்டோபர் 10, 2008

தீபாவளி கொண்டாட்டம்.. கிரெடிட் கார்ட் திண்டாட்டம்..!

அன்பார்ந்த நண்பர்களே. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாகத் தோன்றினால் உடனடியாக வங்கிக்குப் புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளைக் களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்குப் புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களைத் தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையைச் செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதைத் தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரைப் பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனைப் பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத் தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் ‘ஸ்வாகா’ செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத் தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை நுகர்வோர் நலன் ( http://www.nukarvor-nalan.blogspot.com) என்ற வலைப்பூவில் பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)

- சுந்தரராஜன்

வியாழன், அக்டோபர் 09, 2008

அன்புள்ள (நடிகை) ஷகிலாவுக்கு...

திருநெல்வேலியில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி கேள்விப்பட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். உடலைக் காட்டும் விதமாக ஆடை அணிவதை எதிர்த்து கலாச்சாரக் காவலர்கள் களமிறங்கும் மாநிலத்தில் இப்போது உடலை முழுதாக மறைத்து ஆடை அணிந்ததற்காக உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வினோதமாக இருக்கிறது. பர்தா அணிவது ஒரு குற்றமா?

முதலில் உங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கே அபத்தமானது. திருநெல்வேலியில் ஏதோ ஒரு திரையரங்கில் "அதிரடி (!) ரெய்ட்" நடத்திய போது அங்கு ஓடிய படத்திற்கு நடுவில் நீங்கள் நடித்த, சென்ஸார் செய்யப்படாத 'பிட்' காட்சிகள் ஓட்டப்பட்டனவாம். அதில் நடித்த "குற்றத்திற்காக" உங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இத்தகைய படங்களில் நடிப்பது குற்றம் என்றால் அந்தக் குற்றம் திட்டமிட்டு நடத்தப்படுவதற்கு காரணமான லட்சோப லட்ச ஷகிலா 'பிட்' பட ரசிகர்களுக்கு எதிராக என்ன பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரியவில்லை.அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த போது உங்கள் பாதுகாப்பிற்கு 20, 30 "மெய்க் காவலர்களுடன்" பர்தாவை இன்னொரு மெய்க்காவலராக அணிந்து வந்ததில் புதிதாக எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. உங்களைப் போலவே "சமூக இழிவு" என்று கருதப்படும் காரியங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களுக்கு வரும் பல பெண்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

இந்தத் தருணத்தை வைத்து ஓ.சியில் காசு பண்ண நினைக்கும் ஊடுருவும் மீடியாவின் கண்களுக்கு பயந்தோ என்னவோ பாலியல் தொழில் நடத்தியதாக கூறப்பட்ட மகேஸ்வரி என்ற டிவி நடிகையும் இதே போல பர்தா அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் இப்போது "சமூக இழிவான காரியம் தொடர்பாக குற்றாம்சாட்டப்பட்ட" நீங்கள் பர்தா அணிந்து வந்ததுதான் இஸ்லாமிய கலாச்சாரத்தை அவமானப்படுத்துகிறது என்று திருநெல்வேலியில் உள்ள ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுவது எவ்வளவு பொருத்தமானது என தெரியவில்லை.

எத்தனையோ ஊர்களில், எத்தனையோ வழக்குகளில், எத்தனையோ பெண்கள், எத்தனையோ மதங்களைச் சேர்ந்த பெண்கள் இது போல பர்தா அணிந்து "பாதுகாப்பாக" நீதிமன்றங்களுக்கு வந்திருக்கிறார்கள்."நான் ஒரு முஸ்லிம். பர்தா அணிய எனக்கு முழு உரிமை உள்ளது" என்று இந்த விவகாரத்தில் நீங்கள் பதில் கூறியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் உங்களுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது என்றால் இதில் வேறு ஏதோ தூண்டுதல் இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை நீங்கள் பர்தாவில் வரும் போதும் உங்கள் முக தரிசனம் கிடைக்காமல் பத்திரிகை புகைப்படக்காரர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் "போச்சே, போச்சே, எல்லாம் போச்சே, கைக்கெட்டனது வாய்க்கு எட்டலையே" என்று திருவிளையாடல் படத்து தருமியைப் போல் புலம்பி வருகிறார்கள். ஒரு கவர்ச்சி 'பிட்' செய்தி போடுவதற்கான வாய்ப்பு இப்படி வீணாய்ப் போனதில் அவர்களுக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும்.இந்த விஷயத்தில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இப்போது உங்களுக்கு எதிராக போராடுவதாக அறிவித்தவர்களில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களில் பலர் திருநெல்வேலியின் கல்யாணி திரையரங்கில் உங்கள் திரைப்படத்தை மெய் மறந்து பார்த்தவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய முடியுமா?. "ஏ" படங்களுக்கும், "பிட்" படங்களுக்கும் பேர் போன அந்த திரையரங்கு இப்போது மூடிக் கிடக்கிறது.

ஏனெனில் பிற்போக்கு முகமூடி அணிந்துகொள்ளும் சமூகத்தில் இணையம், டி.வி.டிகள் மூலம் எந்த போலீஸ் கெடுபிடியும் இல்லாமல் இளைய தலைமுறையினர் தங்களின் உணர்வுகளுக்கு வடிகால் தேடத் தொடங்கி விட்டார்கள். தியேட்டர்களுக்கு வந்து சில விநாடிகள் ஓடி மறையும் 'பிட்'களுக்காக காத்திருக்கும் பொறுமை குறிப்பாக தொழில்நுட்பக் கருவிகளுக்கு பழகிவிட்ட இளைய தலைமுறைக்கு இல்லை.

இன்னும் தியேட்டர்களின் ஏ படங்களையும் பிட் படங்களையும் நம்பியிருப்பது முந்தைய தலைமுறை பெருசுகள்தான். ஏ படங்களுக்கென்றே இயங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், நடத்தப்படும் ரெய்டுகள், நடத்தப்படாத ரெய்டுகள் மூலம் அதிகாரிகளுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை, இப்போதுதான் நேர்மையை முதல் முதலாக கண்டுபிடித்தது போல சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் உங்களை வைத்து நீதியை நிலை நாட்ட போராடுகிறார்கள்.இது வரை பிட் படம் ஓட்டிய விவகாரத்தில் எத்தனையோ வழக்குகள் உள்ளன. முழு போர்னோ படங்களையும் அதிலிருந்து பிட் படங்களையும் தயாரிப்பது சற்று காலம் முன்பு வரை ஒரு தனி தொழிலாக இருந்து வந்தது. அதில் எல்லாம் நடித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இந்நேரத்திற்கு அந்த வழக்குகளை விசாரிக்க ஒரு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியிருந்திருக்கும். அது மீடியாவுக்கு செமை தீனியாக இருந்திருக்கும். ஆனால் உங்களை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதால் காட்சி இன்பம் கிடைத்திருக்கக்கூடிய பலருக்கு நீங்கள் பர்தா அணிந்து வந்ததில் பெருத்த ஏமாற்றம் இருந்திருக்கும்.

என்ன உடை அணிந்து வருவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதால், இந்த விவகாரத்தில் நீங்கள் குற்ற உணர்வு அடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் மிகத் துணிவாக பதில் கூறியிருப்பது உங்களின் தன்னம்பிக்கையையும் மனத் தெளிவையும் காட்டுகிறது. மீண்டும் ஒரு முறை நீதிமன்றத்திற்கு பர்தாவுடன் வந்தால் எங்களது மகளிர் பிரிவை வைத்து செருப்படி கொடுப்போம் என்று ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான பிறகு, அதைக் கண்டு அஞ்சாமல், "நானும் ஒரு முஸ்லிம், இந்த ஆடையை அணிய எனக்கு முழு உரிமை உண்டு என கூறியிருக்கிறீர்கள்."

ஆனால் ஒரு முஸ்லிம்தான் பர்தா அணிய வேண்டும் என்ற கட்டாயம்கூட இல்லை. ஒரு காலத்தில் வளைகுடா நாடுகளின் புழுதிப் புயலை சமாளிக்க எவ்வாறு உடலை முழுதும் மூடிய ஆடை தேவையாக இருந்ததோ அதைப் போலவே இன்றைய தமிழ்ச் சமூகத்தின் போலியான ஒழுக்கக் காவலர்களிடமிருந்து தப்ப உடலை மறைக்கும் ஆடை தேவைப்படுகிறது.

ஸ்ரேயாவின் கவர்ச்சியை சினிமாவிலும் டிவி மூலமாக வீட்டில் வரவேற்பறையிலும் காண்பதில் அவர்களுக்கு கூச்சமே இல்லை. ஆனால் மேடையில் அவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு வராவிட்டால் வீட்டுக்குப் போய் டிரஸ் மாற்ற வைத்துவிடுவார்கள்.கலியுக துச்சாதனர்கள் பொது சபையில் இருக்கும் பெண்களின் விருப்பத்தை மீறி அவர்கள் மீது ஆடைகளை போர்த்தி மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதில் முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் பழமைவாதிகள் அல்லாத பெரும்பான்மையினர் வாய் மூடி மெளனமாக இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய தமிழர்களிடம் தனிப்பட்ட கருத்து என்ன என்று கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். பொதுக் கருத்தாகக் கேட்டால் வேறொன்றை சொல்வார்கள். அதற்கெல்லாம் மாறாக யாருக்குமே தெரியாமல் மனதிற்குள் தங்கள் நிஜமான கருத்தாக வேறொன்றை கொண்டிருப்பார்கள்.

இத்தகைய தமிழ்ச் சமூக போலித்தனங்களையும் கையாலாகத்தனங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் போலி ஒழுக்கவாதிகளாலும் அவர்களின் சங்கராச்சாரியாராக இருக்கும் தமிழ் ஊடகங்களாலும் துன்புறுத்தப்படும் பல பெண்களில் நீங்கள்தான் லேட்டஸ்ட் பலிகடா. ஆனால் உங்கள் விஷயத்தில் உடலை ஆடையால் மூட வேண்டும் என்பதைத் தாண்டி, என்ன மாதியான ஆடையால் போர்த்த வேண்டும் என சமூகத்திற்கு தீர்மானிக்க உரிமை இருக்கிறது என சிலர் வாதம் செய்கிறார்கள்.

ஒரு பூகோளத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவான பர்தா பிற்பாடு அந்தக் கலாச்சார ஆடையாக மாறியது. ஆனால் அது ஒரு மதத்தவர் மட்டுமே அணியும் ஆடை என வரையறுக்க முடியுமா? ஆடையை மதத்தோடு தொடர்புபடுத்தினால் சீக்கியர் அல்லாதோர் சுடிதார் அணிய முடியுமா? இந்துக்கள் பிளேசர், டை அணிய முடியுமா? அல்லது 'ஒழுக்கமானவர்கள்'தான் இத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று வரைமுறைபடுத்தினால் என்னாவது? அப்படியானால் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு எந்தக் கலாச்சாரத்தையும் சாராத ஒரு புதிய உடையை தயார் செய்து அதை uniform போல அணிய கொடுக்க வேண்டியிருக்கும்.

நமது கலை, இலக்கியம், சினிமா, இசை ஆகியவை பெருமளவில் ஆண்களால், ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை என்று ஓஷோ சொன்னது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. போர்னோ படங்கள் அதற்கு விதி விலக்கல்ல. ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் தயார் செய்யப்படும் ஒரு காரியத்தில் நடிப்பவர்கள்தானா இங்கு குற்றவாளி?

என்ன செய்வது, இந்திய அரசியல் சாசனம் இத்தகைய ஆண் சார்பு பார்வைக்கு பேர் போனது. ஆண்களின் பாலியல் இச்சையை ஊற்றுக் கண்களாகக் கொண்ட பாலியல் தொழிலில் அதை பூர்த்தி செய்யும் பெண்தான் நமது சட்டத்தின் கண்களில் குற்றவாளி. தவிர்க்கவே முடியாத பாலியல் தொழிலுக்கும் போர்னோ படத் தயாரிப்புக்கும் சட்ட பூர்வ அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவற்றை புறக்கணித்து வரும் இந்திய அரசு இப்போது முதல் முறையாக நிஜமான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப் பார்க்கிறது. அதாவது, பாலியல் தொழில் செய்யும் பெண் மட்டுமல்ல, அதற்கு மூலக் காரணமாக இருக்கும் காசு கொடுத்து பாலியல் இச்சையைப் போக்க வரும் ஆணும் இனி குற்றவாளி. இந்தத் திருத்தத்தை ஆண்களே கணிசமாகக் கொண்ட ஆளும் வர்க்கம் அனுமதிக்குமா என தெரியவில்லை.

இதே விதியை போர்னோ படங்களுக்கும் விரிவுபடுத்தினால் அந்த நிலைமை மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாலியல் படங்களை தயாரிப்பவர்கள், நடிப்பவர்கள் மட்டுமல்ல; அதைப் பார்ப்பவர்களும் குற்றவாளிகள்! அந்தச் சட்டம் அமலுக்கு வரும் போது இந்தியாவின் பாதிக்கும் சற்று அதிகமான ஜனத்தொகையை, அதாவது ஆண்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வயதில் சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். அந்த கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அதற்குப் பிறகு முழுமையாக பெண்கள் கையில் இருக்கும் இந்தியா மிக சுபிட்சமாக இருக்கும். போர்களிலும் அழிவிலும் அதிக நாட்டம் கொண்ட ஆண்கள்தான் சிறையில் இருப்பார்களே!

அப்படி ஒரு சூழல் வரும் வரை உங்களுக்கும் பிற பெண்களுக்கும் ஏற்படப் போகும் துன்பங்களுக்கு முடிவேதும் இல்லை.

அன்புடன்

மாயா
நன்றி: உயிர்மை.காம்

திங்கள், அக்டோபர் 06, 2008

அத்வானி-மோடி-கலாம்... வலதுசாரி அரசியலின் மூன்று முகங்கள்

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.

ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

பா.ஜ.கவின் சூலாயுதத்தின் மையத்தில் இருப்பது அத்வானியின் புதிதாக மேக்கப் போட்டு தயார் செய்யப்பட்ட சாத்வீகமான முகம். இன்னொரு வாஜ்பாயியாக தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை மக்களும் நம்ப வேண்டும் என்பதற்காக தசாவதாரம் கமல் போல என்னவோ செய்து, கமலைப் போலவே மண்ணைக் கவ்வி வருகிறார் அவர்.

தன்னை வாஜ்பாயியாக பாவிக்கும் போது அத்வானியாக இருக்க இன்னொருவர் வேண்டுமே! அதனால் தன்னையே மிஞ்சிய தனது இந்துத்துவ வாரிசான நரேந்திர மோடியை கலவர பேக்டரியின் சி.இ.ஓவாக நியமித்திருக்கிறார். சூலாயுதத்தின் இரண்டு முகங்கள் தயார்; மூன்றாவது? அதற்கான சரியான முகத்தை தேடி வந்தவர்களுக்கு இதோ இருக்கிறேன் என்று தனது பயங்கரவாத எதிர்ப்பு கருத்தை தெரிவித்தார் அப்துல் கலாம்.

இன்று இந்தியா சந்திக்கும் முக்கியமான பிரச்சனை பயங்கரவாதம் என்று கூறியிருக்கிறார் கலாம். இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் கரிசனம் எடுத்துக்கொள்ளும் கலாம் இந்தியா நியாயமாக சந்திக்கும் பிரச்சனையைப் பற்றி பேசினால் என்ன தவறு என்று கேட்காதீர்கள். என்ன சொல்கிறீர்கள் என்பதைவிட என்ன சூழலில் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். கொஞ்ச நாளாகவே பயங்கரவாதம்தான் முக்கிய பிரச்னை என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக பொது மக்களை திரட்டவும் முயன்று வருகிறது. அதை இந்தத் தேர்தலில் தனது வெற்றிக்கான துருப்புச் சீட்டாகவும் கருதுகிறது. இந்தச் சூழலில் கலாம் இவ்வாறு சொன்னது நிச்சயம் பா.ஜ.கவுக்கு சாதகமான, காங்கிரசுக்கு எதிரான விஷயம். இந்த அறிவிப்பு வந்த சில தினங்களிலேயே கலாமுக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அதை ஊடகங்களிடம் வெளியிடுகிறார் அத்வானி. "பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்த நீங்கள்தான் சரியான நபர். கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒன்று சேருங்கள்." எங்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்யுங்கள் என்றே அத்வானி நேரடியாக கேட்டிருக்கலாம். இந்தக் கடிதத்தின் அர்த்தம் அதுதான்.

பயங்கரவாத எதிர்ப்பை தாங்கள் பேசுவதைவிட ஒரு முஸ்லிமான, அரைவேக்காட்டு அறிவையும் மதிப்பீடுகளையும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் செல்லப் பிள்ளையான அப்துல் கலாம் பேசுவது மிகவும் பொருத்தமானது என்பது அவர்களின் கணக்கு.

ஆனால் அத்வானி கேட்பதை செய்யுமளவுக்கு கலாம் அப்பாவியல்ல. தனது இஸ்ரோ நாட்களிலேயே திறமைவாய்ந்த ' நடைமுறைவாதி' என்றுதான் கலாம் விவரிக்கப்பட்டிருக்கிறார். அதனால் பா.ஜ.க ஜெயிக்கும் முன்பே தனது அரசியல் சார்பற்ற பிம்பத்தை அவர் சிதைத்துக்கொள்ள மாட்டார்.

"பயங்கரவாதம்தான் முக்கியமான பிரச்சனை என்று சொல்லி நான்தான் பந்தை உங்களுக்காக செட் செய்து கொடுத்துவிட்டேனே!" என்று அவர் சொல்லக்கூடும். ஒரு வேளை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த உதவிக்காக கலாமுக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு தரக்கூட பா.ஜ.க முன்வரலாம். தங்களது இன அழித்தொழிப்பு அரசியலை மறைக்கும் முகமூடிக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அது போன்ற பேரம் முன்வைக்கப்பட்டால் கலாம் அதை மறுத்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதி என பல பொறுப்புக்கள் அவருக்கு பா.ஜ.க மூலம்தான் கிடைத்தன. சமீபத்தில் அமெரிக்க அணு சக்தி பேரத்தை கலாம் ஆதரித்ததுகூட காங்கிரஸ் சார்பு விஷயம் என்று கருத முடியாது. அணு ஒப்பந்தத்தை தொடங்கி வைத்ததே பா.ஜ.கதானே.

பெரிய அணு குண்டு முதலிய எல்லாமே வலது அரசியலின் பகுதி என்பதால் கலாம் அணு பேரத்தை ஆதரித்ததும் பா.ஜ.கவின் அணு சக்தி எதிர்ப்பு பாசாங்கு ஒதுக்கி வைக்கப்பட்டது. கலாம் அதை ஆதரித்த பிறகு கூடிய பா.ஜ.க கூட்டத்தில் அணு பேரத்தை நாம் எதிர்க்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் பாதி பேர் கூறியது, அவர்களது நீண்ட கால திட்டத்தில் கலாமுக்கு முக்கிய இடம் ஒதுக்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


கலாம் போன்றவர்களை முன்னிறுத்திவிட்டு, பா.ஜ.கவினர் திரைமறைவில் நடத்த நினைக்கும் இந்துத்துவ வேட்டைகளை ஏற்கனவே குஜராத்தில் தொடங்கி வைத்துவிட்டார் மோடி. குஜராத் இன அழித்தொழிப்புக்கு சாக்கு போக்காக பயன்படுத்தப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பற்றி எரிந்த விவகாரம் குறித்த நானாவதி கமிஷனனின் அறிக்கையை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் மோடி.

சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிந்ததற்கு திட்டமிட்ட சதிதான் காரணம் என்று சொல்கிறது அந்தக் கமிஷனின் அறிக்கை. பக்கத்தில் இருந்து பார்த்தது போல யார் ரயிலின் பெட்டிகளுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ கொளுத்தினார்கள் என்றெல்லாம் முஸ்லிம்கள் சிலரின் பெயர்களை பட்டியலிடுகிறது அந்தக் கமிஷன். இன அழித்தொழிப்பை நிகழ்த்திய அதே இந்துத்துவ அரசு நியமித்த கமிஷன்தான் இது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மத்திய அரசு நியமித்த யு.சி.பானர்ஜி கமிஷன் அறிக்கையோ அது வெறும் விபத்து என்கிறது. இரண்டு கமிஷன்கள் இரண்டு மாறுபட்ட அறிக்கைகளை கொடுத்திருப்பது நமது கமிஷன்கள் எந்த அழகில் இருக்கின்றன என்று காட்டுகிறது. எனினும் இந்த சமயத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்வது பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலின் தந்திரத்தைக் காட்டுகிறது.

2,000 பேரை கொன்று குவித்த தங்களது செயலை 49 பேர் இறந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பற்றி எரிந்த விவகாரத்தை வைத்து நியாயப்படுத்துகிறது. இந்துத்துவ வாக்கு வங்கியைச் சேர்ந்த மதில் மேல் பூனைகளை மீண்டும் மதவாதம் நோக்கி இழுக்கும் முயற்சி என்றும் இதைப் பார்க்கலாம்.

பா.ஜ.கவின் தேர்தல் சூலாயுதம் இதோ பட்டை தீட்டப்பட்டு தயாராகிவிட்டது. மோடியின் இந்துத்துவ சாதனைகள் அளவிட முடியாதவை. மோடி முன்னிறுத்தப்படுவதால் இந்தியாவையே குஜராத் ஆக்கிவிடலாம் என்று பா.ஜ.கவின் இந்துத்துவ அடிப்படைவாதிகள் பாபர் மசூதி இடிப்புக் காலகட்டம் போல கடும் உற்சாகத்துடன் களமிறங்குகிறார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பை வெற்றிகரமாக கலாமுடன் தொடர்புபடுத்திவிட்டதால் காங்கிரஸ் ஏற்கனவே நடுக்கத்தில் இருக்கிறது. இனி நடுத்தர வர்க்க வாக்கு வங்கியை வளைத்துவிடலாம் என பா.ஜ.க உற்சாகமாக இருக்கிறது. இந்த வாஜ்பாயியின் முகமூடிதான் அத்வானிக்கு சரியாகப் பொருந்தவில்லை. எப்படிப் பொருத்திப் பார்த்தாலும் முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் மதவாத விகாரம் தெரிந்துவிடுகிறது. ரொம்பவும் மிதமாகிவிட்டீர்கள் என்று பா.ஜ.கவினரும் இதெல்லாம் மிதவாதமே அல்ல என்று பொது மக்களும் கருதுவது அத்வானியை மிகவும் குழம்பச் செய்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் கொடுத்த மூக்கறுப்பு போல இந்த விஷயத்திலும் அத்வானி தனது பேவரைட் ஜோதிடர்களை அணுகக்கூடும். ஆனால் ஜோதிடர்களுக்கு பிம்பங்களை உடைக்கத்தான் தெரியும்; பிம்பங்களை கட்டமைக்கத் தெரியாது. பாவம் அத்வானி.


-மாயா


நன்றி: உயிர்மை.காம்

ஞாயிறு, அக்டோபர் 05, 2008

மனம் பிறழ்ந்தவரின் சட்டங்கள்

இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.

பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"

அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.

கேரளாவில் சகீனா எனும் 16 வயது பெண், ஒரு விபச்சார விடுதியில் அடைத்து வைத்து, மிரட்டி பணியவைக்கப்பட்டு 18 மாதங்கள் வெவ்வேறு அரசியல்வாதிகள், அரசு உயர்அதிகாரிகளால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். காவல்துறையால் காப்பாற்றப்பட்ட சகீனா பெற்றோர் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போது, மாட்சிமை பொருந்திய ஒரு நீதிபதி இவ்வாறு அவதானித்து வழக்கை ரத்து செய்தார்: "புணர்ச்சிக்காக பணம் செலுத்தும் ஒரு ஆண் விருப்பமற்ற பெண்ணை நெருங்குவான் என்பதை நம்பமுடியாது; இத்தகைய நடத்தை கொண்ட (அதாவது வன்முறையால் பாலியல் தொழில் நடத்த வற்புறுத்தப்பட்ட) பெண்ணின் வாதம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுபடியான புனிதத்தன்மை படைத்ததல்ல".

இங்கே மனித உரிமை அடிப்படையில் இரண்டு அபத்தங்கள் உள்ளன. (1) பாலியல் தொழிலாளிக்கும் வன்புணர்ச்சியிலிருந்து தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதை ஒரு நீதிமன்றம் மறுப்பதே மிகப்பெரிய அநீதி. (2) பாலியல் ஒழுக்கத்திலிருந்து விலகியவர்களின் வாக்குமூலம் புனிதமற்றது என்று மறுப்பதன் மூலம் நீதிமன்றம் அவர்களை பொருட்படுத்த வேண்டாதவர்களாய் ஒதுக்கி வைக்கிறது. இவை மேரி மெக்தலின் மீது அன்று வீசப்பட்டவற்றில் இன்றும் மீதமுள்ள 2 கற்களே.

1972-இல் மகாராஷ்டிரா சந்திரபூர் மாவட்டத்தில் மாதுரா எனும் இளம்பெண் கன்பத் மற்றும் துகாராம் எனும் காவல்துறையினர் இருவரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். 1974-ஆம் ஆண்டு இவ்வழக்கில், ஒரு செஷன்ஸ் நீதின்மன்றம் மாதுரா "நடத்தை கெட்டவள்" என்றும், "பொய் சொல்கிறாள்" என்றும் கூறி, வன்புணர்ச்சியாளர்களை விடுவித்து தீர்ப்பளித்தது. அடுத்து மும்பை நீதிமன்றம் இந்த காட்டுமிராண்டித் தீர்பை தள்ளி வைத்து இரண்டு காக்கிக் குற்றவாளிகளுக்கும் தலா 5 மற்றும் 1 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்தது. பொறுங்கள், 'சபாஷ்' சொல்வதற்கு கதை இங்கும் முடியவில்லை. உச்ச நீதிமன்றம் கோதாவில் இறங்கி இரண்டு காக்கிகளையும் விடுவித்தது. வன்புணர்ச்சியின் போது மாதுரா கூக்குரல் எழுப்பவில்லை என்பதும், அவளுடலில் வெளிக்காயங்கள் இல்லை என்பதுமே நீதிபதி சொன்ன காரணங்கள்.

குழப்பமாக உள்ளதா? நீங்கள் இந்தியனாய் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்.

ஆனாலும் சில பாமர சந்தேகங்கள்: துப்பாக்கி முனையில் வன்புணர்ச்சி செய்யப்படும் பெண்ணுக்கு கூச்சலிடும் தைரியம் எங்கிருந்து வரும்?

துப்பாக்கி முனையில் கற்பழிக்கும் காக்கிச் சீமான்கள் என்ன பிளேடு பக்கிரிகளா வெளிக்காயங்கள் ஏற்படுத்த?

மேலும், நம்மூரில் காவல் வன்புணர்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடக சாகசங்கள் இன்னும் நிகழவில்லை. வன்புணர்ச்சிகள் பொதுமேடைகளிலல்ல தனியறைகளிலும், காவல் நிலையங்களிலுமே பெரும்பாலும் நடக்கின்றன (சட்டசபை மானபங்க முயற்சி குற்றசாட்டு வேறு தினுசு!). வன்முறை, மிரட்டல் மூலம் பணிய வைக்கப்பட்டு நடத்தப்படும் வன்புணர்ச்சியை நம் நீதிமன்றங்கள் ஒருபக்க சாய்வுடன் ஆணாத்திக்க சார்போடுதான் அணுகுகின்றன.

(1) கொலை வழக்குகளில் நிகழ்வது போல், கற்பழிப்பு வழக்குகளில் சூழ்நிலை சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறது? குற்றம் நடக்கும்போது பெண் கூச்சலிட வேண்டும், காயங்கள் பெற வேண்டும், நேரடி சாட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அடுக்கிக் கொண்டே போகும் நம் சட்டம் ஆணைப் பாதுகாப்பதில் குறியாய் உள்ளதை கவனிக்கலாம்.

(2) சட்டத்தின் நம்பிக்கையைப் பெற பாலியல் ஒழுக்கம் இத்தனை முக்கியமாய் உள்ளது ஏன்? ஒரு பாலியல் தொழிலாளி கற்பழிக்கப்படும் போது அது அவள் விருப்பப்படி நடப்பதாய் நீதிமன்றம் நாடகம் ஆடுவது ஏன்? பாலியல் ஒழுக்கம் = மதக்கட்டுப்பாடு என்பது தாண்டி உயிரியல் பின்னணியைப் பார்ப்பது மற்றொன்றைப் புரியவைக்கும். பழப்பூச்சி, சில பட்டாம்பூச்சி வகைகள் போன்று மனிதனும் தன் ரத்தவழியை கலப்பின்றி வைத்திருக்க ஒரு ஏமாற்று வித்தை வைத்திருக்கிறான்: கற்பொழுக்கம். பழப்பூச்சி புணர்ச்சிக்குப் பின் தனக்கான சின்ன அளவில் பெண்துணையின் புழையை புரதபொருள் கொண்டு அடைக்கும், அடுத்து வரும் ஆண்பூச்சியை தடுக்க. மனிதனோ பாலியல் ஒழுக்கம் பற்றிய கற்பிதங்கள் கொண்டு, கோடிக்கணக்கான ஆண் பெண்களை கட்டிப் போட்டிருக்கிறான். பாலியல் சட்டங்களை மீறுபவர்களுக்கு சமூகம் அடிப்படை மனித உரிமைகளை மறுத்து தள்ளி வைக்கும். இவர்கள் குப்பைத்தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைப் பொருட்கள் போன்று. யார் வேண்டுமானாலும் மிதிக்கலாம்.

ரத்தவழி சுத்திகரிப்பு பற்றிய ஆணின் நிரந்தர பதற்றம் தான் கற்பழிப்புச் சட்டங்களை ஒருதலை சார்பாய் இப்படி திருகி வைத்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநில மதுர்க்கர் vs. மர்திக்கர் வழக்கில் , நீதிமன்றங்களின் இந்த மனித உரிமை மீறல் போக்கை உச்ச நீதிமன்றமே கடுமையாக விமர்சித்துள்ளது.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூல உண்மையை வருணாசிரம முறைப்படி மறுத்த கொடுமையும் நடந்தது. பன்வாரி தேவி வழக்கில் நீதிபதி ஒருவர் பன்வாரி தேவி ஒரு தலித் என்பதால் அவரை ஒரு உயர்சாதி நபர் வன்புணர்ச்சி செய்திருக்க முடியாது என்று அபத்தமானதொரு தீர்ப்பு வழங்கினார்.

இந்தியாவில் பெண்களுக்கான நீதி ஆணாதிக்கவாதிகளால் செய்யப்பட்டு, ஆணாதிக்கவாதிகளாலே வழங்கப்படுகிறது. குரங்கு அப்பம் பங்கிட்டது போல்!

இங்கிலாந்து சட்டம் 'துளைப்பு வழி தாக்குதல்' எனும் குற்றமுறையை அடையாளம் காண்கிறது. இதன்படி குற்றவாளி ஒருவரது அனுமதி இன்றி அவரது புழை, வாய் அல்லது ஆசன வாயை உடலின் ஏதாவது பகுதி அல்லது பொருள் கொண்டோ துளைக்கும்பட்சத்தில் இக்குற்றத்திற்கு உள்ளாகிறார். ஆனால் குடுமி கலையாத நம் இந்திய பிற்போக்கு சட்டமோ நடைமுறை பாலியல் குற்றமுறைகளை கருத்தில் கொள்ளாமல், பெண்ணின் குறியைத் துளைப்பதை மட்டுமே வன்புணர்ச்சி என்று முரண்டு பிடிக்கிறது. 1997-இல் ஒரு 8-வயது பெண்குழந்தையை (பெயர், பிற விபரங்களை தவிர்ப்போம்) அவள் தந்தை புழை, ஆசனவாய், வாய் என மூன்று வழிகளில் வன்புணர்ச்சி செய்தார். சி.எஸ்.ஓ சாக்ஷி எனப்படும் பெண்கள் அமைப்பு இக்குழந்தையின் நீதிக்காக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தந்தை அக்குழந்தையை ஆண்குறியால் துளைப்பு செய்யவில்லை, ஆண்குறி நுழைப்பு மட்டுமே சட்டப்படி கற்பழிப்பு எனச் சொல்லி, வழக்கை தள்ளுபடி செய்தது.

கொஞ்சம் விலகி, மற்றொரு முக்கியமான கேள்வி. ஒருபால் உறவுகள் சட்டரீதியாய் அங்கீகரிக்கப்படாத நிலையில், ஒருபாலுறவாளர் மற்றொரு ஒருபாலுறவாளரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டால் நீதிக்கு யாரிடம் செல்ல வேண்டும்?


சில ஒப்புமைகள்:

இங்கிலாந்து சட்டப்படி ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தது கணவனே என்றாலும் தண்டனை உண்டு. நம்மூரில் மனைவியை மண்ணெணெய் ஊற்றிக் கொளுத்தும் உரிமையே உள்ளபோது, கணவனது கற்பழிப்பு பொருட்படுத்தத் தகுந்த ஒன்றல்ல.

இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் பெண்ணின் வன்புணர்ச்சிக்கு துணை நிற்கும் மற்றொரு பெண்ணை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து சட்டம் இவர்களை குற்றவாளிகளாக கருதி விசாரிக்கும்.

பெண்கள் இந்தியாவில் ஒரு ஆணை கற்பழிக்கலாம். சட்டப்படி இத்தகைய கற்பழிப்பு செல்லுபடியாகாது. ஆண்களில் உடல் பலவீனர்கள், நோயாளிகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரது பாதுகாப்பின்மையை கருத்திற் கொள்கையில், கனடாவில் உள்ளது போல், இங்கும் கற்பழிப்புக் குற்றம் இருபாலாருக்குமானதாய் மாற்றப்படுவதில் தவறில்லை.

பாகிஸ்தானில் கற்பழிப்பு சட்டம் மேலும் பிற்போக்கானதுதான். கற்பழிக்கப்பட்ட பெண் நீதியைப் பெற, கற்பழித்தவர் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது கற்பழிப்பை பார்த்த நான்கு ஆண்கள் சாட்சி சொல்ல வேண்டும். மான், முயலுக்கெல்லாம் சிங்கம் நீதி வழங்கிய கதைதான்.

ஒப்பிடுவதில் பயனில்லை. நமது ஆணாதிக்கவாத, பிற்போக்குச் சட்டங்கள் திருத்தப்படுமா? தர்மம் எப்படியும் வெல்லும் என்கிறது கீதை. அதை விடுங்கள், அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட நாம் இந்தியர்களுக்கு இல்லை. ஆனால் ஓட்டப்பந்தயத்தில் ஆமை எப்படியும் ஜெயித்து விடும் என்பதைத் தவிர.


-ஆர்.அபிலாஷ்


நன்றி: உயிர்மை.காம்

வெள்ளி, அக்டோபர் 03, 2008

‘இந்தியா டுடே'யின் பயங்கரவாதம்!

சுதந்திர நாள் என்றாலே காவல் துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, “சார்! தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?'' என்பதுதான். அதற்கு அவர், மூன்று அல்லது நான்கு முஸ்லிம் பெயர்களைச் சொல்லி, அவர்களை எல்லாம் கைது செய்து பாதுகாப்பை தீவிரப்படுத்தி விட்டோம் என்பார். கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான பின்னணி குறித்தெல்லாம் கேள்விகள் ஏதும் கேட்காமல், போலிசார் கொடுக்கும் ‘ஒற்றைப் பத்தி' செய்திக்காக காவல் துறை சொன்னதை அப்படியே அடுத்த நாள் பத்திரிகைகளில் வாந்தியெடுத்து, தங்களின் விசுவாசத்தைக் காட்டுபவர்கள்தான் இங்குள்ள பத்திரிகையாளர்கள்.

இவ்வளவு அழும்பாய் கிடக்கும் இந்தத் துறையில் பார்ப்பனர்களும் பனியாக்களும் கைகோத்தால் என்ன நடக்கும்? 5 வயது குழந்தை குண்டு வைத்திருந்தது என்று செய்தி வெளியிட்டு அக்குழந்தையை தீவிரவாதியாக்கி, தூக்கில் போட பக்கம் பக்கமாய் எழுதுவார்கள். அதிலும் இந்து பயங்கரவாத ‘இந்தியா டுடே' பற்றி சொல்லவே வேண்டாம். தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாகக் கட்டமைப்பதில் அதன் பங்கு, இந்திய உளவுத்துறையைக் காட்டிலும் ‘மகத்தானது'. அந்த ‘மகத்தான சேவை'யின் இன்னொரு சாதனைதான் ‘சுரணையற்ற இந்தியா' என்று தலைப்பிடப்பட்டுள்ள (ஆகஸ்டு 13) தமிழ் ‘இந்தியா டுடே'. இதே கட்டுரைக்கு ஆங்கில ‘இந்தியா டுடே' வைத்துள்ள தலைப்பு ‘ஆண்மையற்ற இந்தியா'.

அட்டைப்படக் கட்டுரை என்ற பெயரில் ‘தோற்றுப் போன தேசம்' தொடங்கி 7 தலைப்புகளில் முஸ்லிம் எதிர்ப்புக் கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள தலைப்புகளை எடுத்துவிட்டால், அது ஒரே கட்டுரைதான். இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக்கி, பின்னர் அவர்களை தூக்கில் போட்டு கொன்றுவிட்டால் இந்தியாவின் ‘தர்மம்' காக்கப்பட்டு விடும் என்ற தன்மையில் அது இருக்கிறது. மூக்கில் கட்டு, நெற்றியில் பிளாஸ்திரி போட்ட இந்து மதத்தினரின் புகைப்படங்களை வெளியிட்டு ஒப்பாரி வைக்கும் ‘இந்தியா டுடே'வுக்கு குஜராத் கொடூரங்கள் நினைவுக்கு வராது. மற்றவர்கள் மீதான நியாயத்தை அழிப்பதுதானே பார்ப்பனியம். இவ்வாறு தொடர்ந்து ‘முஸ்லிம் எதிர்ப்பு பத்திரிகை இயக்கத்தை' நடத்தி வரும் ‘இந்தியா டுடே'யின் ‘சுரணையற்ற இந்தியா'வைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க சென்னை ‘இந்தியா டுடே' அலுவலகம் எதிரில் 13.8.2008 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த த.மு.மு.க.வின் மாநில துணை செயலாளர்களில் ஒருவரான ஹாரூண்ரஷீத், “அகமதாபாத், பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பிற்குப் பொறுப்பேற்று மெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம். அதில் குஜராத் கொலைக்கு பதிலடியாக இது செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்ததாம். இதனை யார் அனுப்பியது, எங்கிருந்து வந்திருக்கிறது என்று வேரைத் தேடிப்பார்த்தால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை பிரித்து தாங்கள் ஆதாயம் அடைய அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதே போல அமெரிக்காவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ‘தினமலர்' ‘இந்தியா டுடே' உள்ளிட்ட பத்திரிகைகள் செயல்படுகின்றன. “போர்க்களத்தில் கூட பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. யார் குண்டு வெடிக்கச் செய்தாலும் அது தண்டனைக்குரியது; கண்டிக்கத்தக்கது. ஆனால், எது நடந்தாலும் முஸ்லிம்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. அதுவும் ஒரு மதத்தோடு முடிச்சுப் போடுவது என்பது, இங்குள்ள முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்களின் பங்கு பொறுப்புடன் இருக்க வேண்டும். ‘இந்தியா டுடே' சில செய்திகளை கூறும்போது உளவுத்துறை சொல்வதாக கூறுகிறது. அது உண்மையாக இருந்தால், உளவுத்துறை அரசுக்காக வேலை செய்கிறதா அல்லது ‘இந்தியா டுடே' பத்திரிகைக்காக வேலை செய்கிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். சுதந்திர நாள் விழா நேரத்தில் நாகர்கோயிலில் மினி லாரி ஒன்று வெடிகுண்டு மருந்தோடு பிடிக்கப்பட்டதாக ‘தமிழ் முரசு' செய்தி வெளியிட்டது. பின்னர் நடந்த விசாரணையில் கல்குவாரிக்காக வெடி மருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. அப்போது மக்கள் மனதில் எதை விதைக்க விரும்புகின்றன இந்தப் பத்திரிகைகள்?'' என்ற கேள்வியோடு முடித்தார்.

பயங்கரவாதத்தின் மூல காரணமான பத்திரிகைகளின் கருத்தியல் பயங்கரத்திற்கு முதலில் முடிவு கட்டுவோம்!

-அநாத்மா
நன்றி: தலித்முரசு, ஆகஸ்ட் 2008