செவ்வாய், ஏப்ரல் 15, 2008

தமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா? -ஞாநி

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது. கோரிக்கையைக் கைவிடுகறோம்; ஆனால் பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள அப்படியே இருக்கின்றன என்றார் அறிஞர் அண்ணா.


அவர் சொல்லி சுமார் அரை நூற்றாண்டு ஓடியபிறகும், பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. ஆனால் திராவிட நாடு பிரிவினைக்கல்ல. தமிழ்நாடு பிரிவினைக்குத்தான். இதற்கான இன்னொரு சாட்சியம்தான் ஒகேனக்கல்.


ஐம்பதுகளிலிருந்தே பேசப்பட்ட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொண்ணூறுகளில்தான் திட்ட வடிவம் பெற்றது. அப்போது கர்நாடக அரசு பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க, தன் பங்குக் காவிரி நீரை எடுக்கத் திட்டமிட்டபோது தமிழக அரசும் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து காவிரி நீரை ஒகேனக்கல் திட்டத்தில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தது. இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சகச் செயலாளரும், இரு மாநில அரசுகளின் அதிகாரிகளும் சந்தித்துப் பேசியபோது ஏற்றுக் கொண்டனர்.


கர்நாடக அரசு பெங்களூரு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி முடித்துவிட்டது. தமிழக அரசு பத்து வருடங்களாகியும் தன் திட்டத்தை நிறைவேற்றவில்லை. இப்போது கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலையில் கன்னட வெறியைத் தூண்டினால், ஓட்டு லாபம் கிடைக்கும் என்று பி.ஜே.பி.யின் எடியூரப்பாவும், காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜனதா தளத்தின் தேவெ கவுடாவும் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.


சுறுசுறுப்பாக 1998-ல் கருணாநிதியோ அல்லது 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவோ ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. ஏன் செய்யவில்லை என்பதற்கு கருணாநிதி சார்பில் கனிமொழி ஜப்பான் மீது பழி போடுகிறார். இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கிக் கடன் தருவதாக இருந்தது. வாஜ்பாயி அரசு அணுகுண்டு சோதனை செய்ததில் ஜப்பான் கோபமடைந்து கடன் தர மறுத்து விட்டதாம். எனவே தாமதமாகிவிட்டதாம். இந்த பொய்ச்சாக்கை டாக்டர் ராமதாஸ் தன் புள்ளி விவரங்களால் உடைத்து நொறுக்கி விட்டார்.


திட்டத்துக்கு அன்று தேவைப்பட்ட தொகை வெறும் 576 கோடி ரூபாய்தான். பத்து வருட தாமதத்தினால் இப்போது செலவு மதிப்பீடு மூன்று மடங்கு உயர்ந்து 1334 கோடி தேவைப்படுகிறது! இலவச டி.வி. பெட்டி வழங்க வருடந்தோறும் 750 கோடி ரூபாய் வீதம் 2250 கோடி ஒதுக்கிய கருணாநிதிக்கு, ஏன் தர்மபுரி கிருஷ்ணகிரி வட்டாரத்து மக்கள் 40 லட்சம் பேரின் குடிநீர்த் தேவை, அதை விட முக்கியமானதாகப் படவில்லை? என்று ராமதாஸ் கேட்கிறார். இதற்கு எந்த தி.மு.க ஜால்ராவாலும் பதில் சொல்லமுடியாது.


வன்முறையைத் தவிர்ப்பதற்காக கர்நாடகத் தேர்தல் முடியும்வரை இப்போது திட்டத்தை தள்ளி வைப்பதாக கருணாநிதி அறிவித்ததும், தமிழக உரிமையையே கர்நாடகத்திடம் அடகு வைத்துவிட்டார் என்று அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்கு, இதைப் பற்றி வாயைத் திறக்கவே தார்மிக உரிமை இல்லை. தன் ஐந்து வருட ஆட்சியில் இந்தத் திட்டத்தை அவர் அரை அங்குலம் கூட முன் நகர்த்தவில்லை.

தமிழகத்துக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பக்கத்து மாநிலங்களுக்கும் இடையே 52 வருடங்களாகத் தண்ணீர், எல்லை இரண்டிலும் பிரச்னைகள் இருந்து வருகின்றன.


தமிழ்க் கடவுள் முருகனைக் கும்பிடுங்க. ஏன் ராகவேந்திரரைக் கும்பிடப்போறீங்க? என்று நடிகர் சத்யராஜ் உண்ணாவிரத நிகழ்ச்சியில் தமிழர்களிடம் எரிந்து விழுந்தார். ம.பொ.சி எனப்படும் தமிழறிஞர் ம.பொ.சிவஞானமும், அவரது தமிழரசுக் கழகமும் மட்டும் போராடாமல் இருந்திருந்தால், தமிழ்க் கடவுள் முருகன் ஆலயம் இருக்கும் திருத்தணி கூட இன்று தமிழ்நாட்டில் இராது. தமிழும் வேண்டும், இந்தியாவும் வேண்டும் என்று போராடியவர் என்பதால் பின்னாளில் அவரை தேசிய, திராவிட இயக்கங்கள் இரண்டுமே உரிய அளவுக்குக் கொண்டாடவில்லை. துக்ளக் சோ அவரை ஒரு கோமாளியாக சித்திரித்து அவமானப்படுத்தினார்.


இன்று ஆந்திராவிடம் இருக்கும் சித்தூர், திருப்பதி இரண்டுமே பழைய சென்னை ராஜதானியில் தனி மாவட்டங்களாகக் கூட இல்லை. வட ஆற்காடு ஜில்லாவுக்குள்ளேயே இருந்தவை. திருப்பதி வேங்கடவன் கோயிலில் உள்ள 38 கல்வெட்டுகளில் மூன்றில் மட்டுமே தெலுங்கு உள்ளது. தமிழில் இருப்பவை 24. தெலுங்கு மொழியில் இருக்கும் பழைய பக்தி இலக்கியங்களில் திருப்பதி பற்றி இல்லை. ஆனால் சிலப்பதிகாரமும் ஆழ்வார் பாசுரங்களும் திருப்பதி பற்றிப் பேசுகின்றன. திருப்பதி என்ற சொல்லே தமிழ்ச் சொல்தான்.


கேரளத்திடமிருந்து குமரி மாவட்டத்தைக் காப்பாற்ற, நேசமணி, சங்கரலிங்கனார் போன்றோர் இயக்கம் நடத்திப் போராட வேண்டியிருந்தது. தமிழக கேரள மொத்த எல்லை நீளம் 830 கிலோமீட்டர். இதில் 200 கி.மீ.தான் இதுவரை துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. கண்ணகிக்காக என்னை மிரட்டுபவர்களுக்கு இன்னமும் கண்ணகிக் கோவில் பகுதியில் தொடர்ந்து அத்து மீறல்கள் செய்யும் கேரள அரசை மிரட்ட முடியவில்லை.


அதிக அளவில் காவிரி நீரை தங்களிடமே முடக்கிக் கொள்வதற்காக கர்நாடக அரசு பல வருடங்களாக அணைகள் கட்டி வருவது ஓரளவு நாம் அறிந்த செய்தி. நாம் அறியாதது பாலாற்றையும் அது இப்படி முடக்கியது என்பதுதான். தமிழக எல்லையிலிருந்து 23 மைல் தூரத்திலேயே 25 ஏரிகளைக் கட்டி பாலாற்று நீரை முடக்கினார்கள். இதைப் பற்றி 104 வருடங்களுக்கு முன்பே சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னைகள் பற்றியெல்லாம் தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் அக்கறை காட்டியதே இல்லை. நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் மட்டும்தான் கொஞ்சமாவது சத்தம் போடுகிறார்கள். அவர்களே ஈழத்துக்காக எழுப்பும் கூக்குரலில் இந்த உள்ளூர் பிரச்னைகள் எல்லாம் அமுங்கிப் போய்விடுகின்றன.


எல்லா கோளாறுகளுக்கும் அடிப்படை இந்திய அரசியல் சட்டம்தான். இந்தியாவில் இருக்கும் தமிழ், பஞ்சாபி, ஹிந்தி, மணிப்பூரி, அசாமி என்று பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக, ஒன்றியமாக இந்தியாவை உருவாக்காமல், ஒற்றை மத்திய அரசு, அதற்குக் கட்டுப்பட்ட மாநில அரசுகள் என்று உருவாக்கியதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது.


ஒகேனக்கல் பிரச்னைக்காக உச்ச நீதிமன்றம் போவேன் என்று சொல்லும் கிருஷ்ணாவும் தேவெகவுடாவும், காவிரி நீர் பிரச்னையில் இதே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காதவர்கள். ஆனால் கர்நாடகம் தனி நாடு; தமிழ்நாடு இன்னொரு தேசம் என்றிருந்தால், உலக நீதி மன்றம் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுத்தான் தீரவேண்டியிருக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் சிந்து மாநிலத்துக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையே தீர்க்கமுடியாமலிருந்த தண்ணீர்ப் பிரச்னை, அவை பாகிஸ்தான், இந்தியா என்று இரு நாடுகளான உடன் தீர்க்கப்பட்டுவிட்டது !


எனவே பிரிவினைக்கான மன நிலையை இன்றைய அரசியல் அமைப்புச் சட்டமும், பல்வேறு மாநில அரசியல்வாதிகளும் ஆங்காங்கு உள்ள அந்தந்த மொழி வெறியர்களும்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல தேசங்களை ஒன்றாகத் தைத்து அமைத்த தேசம் இந்தியா. அதன் தையல்கள் இப்போது பலவீனமாகிக் கொண்டிருக்கின்றன என்று உண்ணாவிரத நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து எச்சரித்தார். இந்தக் கவலை சுதந்திரத்துக்கு முன்பே தமிழக அறிஞர்களுக்கும், அன்றைய அரசியல் தலைவர்களுக்கும் இருந்தது. அதனால்தான் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சியாக சுதந்திர இந்தியா உருவாக்கப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.


யார் யார் தெரியுமா? தமிழறிஞர், தொழிற்சங்கத்தலைவர் திரு.வி.க, அரசியல் தலைவர்கள் காமராஜர், டாக்டர் சுப்பராயன், ஜீவானந்தம், செங்கல்வராயன், படைப்பாளிகளான பாரதிதாசன், வ.ரா, கல்கி, தமிழறிஞர் தெ.பொ.மீ, ம.பொ.சி முதலானோர்தான்.


இந்தப் பார்வையை காங்கிரஸ், திராவிட இயக்கம், பொது உடைமை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களுமே 1947-க்குப் பின் கைவிட்டுவிடாமல் இருந்திருந்தால், சோவியத் யூனியனுக்கு நிகரான இந்திய யூனியன் உருவாகியிருக்கும். ஜனநாயகத்துடன் கூடிய தேசிய இனக் கூட்டாட்சி என்பதால், அரசியல் வடிவத்தில் அது சோவியத் யூனியனை விட சிறப்பானதாகக் கூட இருந்திருக்கும். தேர்தல் முறையும் இப்போதைய சிம்பிள் மெஜாரிட்டி என்ற அபத்தம் இல்லாமல், விகிதாசாரப் பிரதிநிதித்துவமாகிற வாய்ப்பும் அதில் இருந்தது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. அந்தத் தவறை ஓரளவேனும் சரி செய்யத்தான் மொழிவாரி மாநிலங்கள் என்ற கொஞ்சம் கெட்டித் தையலை 1956_ல் போட்டார்கள். இப்போது அந்தத் தையல் நெகிழ்ந்துகொண்டிருக்கிறது. மறுக்கப்பட்ட தேசிய இனங்களின் கூட்டாட்சி என்ற தத்துவம்தான் இப்போது புது வடிவநீதில் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் மத்தியில் ஆட்சி அமைந்தாக வேண்டும் என்ற அரசியல் கட்டாயம் ஏற்பட்டிருப்பது அந்த அடையாளம்தான்.


கூட்டணி வழியாகக் கூட்டமைப்பை நோக்கிப் போகிறது இந்தியா. இந்த வாய்ப்பையும் தவறவிட்டால், பக்கத்தில் இருக்கிற குட்டி நாடான இலங்கையிலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும்.


தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியின் 40 லட்சம் மக்கள்தான் உடனடியான நம் பரிதாபத்துக்குரியவர்கள். ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் இப்போது தொடங்கினால் கூட அவர்களுக்கு தினசரி 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் என்பது 2012ல்தான் கிடைக்குமாம். தினசரி 160 மில்லியன் லிட்டர் நீர் என்பது 2016ல்தான் கிடைக்குமாம். வாய்க்கும் கைக்கும் இடையில் எத்தனை தடுமாற்றம். Many a slip between the cup and the lip என்பது இதுதானா?.
-ஞாநி
நன்றி: குமுதம்

வியாழன், ஏப்ரல் 10, 2008

விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் -- சோலை

நமது மத்திய நிதியமைச்சர் சிறந்த பொருளாதார மேதை என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவர் நல்ல நகைச்சுவைப் பேச்சாளர் என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.

'விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. நாட்டின் பொருளாதாரம் வளரும்போது விலைவாசியும் உயருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் நான் சொன்னால் அறுபது பேர் (இடதுசாரி உறுப்பினர்கள்) பிலுபிலு என்று பிடித்துக் கொள்வார்கள். அதனால்தான் மக்களிடம் சொல்கிறேன்!' என்றார்.

'ஊதியம் உயரும்போது விலைவாசியும் உயரத்தான் செய்யும்' என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதாவது, விலைவாசி உயர்விற்கு அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வும் ஒரு காரணம் என்கிறார். குப்பனுக்கும் சுப்பனுக்கும் யார் ஊதிய உயர்வு அளிப்பது? விலைவாசி அவர்களின் வயிற்றோடுதானே விளையாடுகிறது.

இந்தியாவை விட சீனத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அங்கே மட்டும் ஏன் விலைவாசி அந்த அளவிற்கு உயரவில்லை? ஒரு பொருளின் விலை நாடு முழுமையும் ஆண்டு முழுமையும் ஒரே விலையாக இருப்பதன் ரகசியம் என்ன?

விலைவாசிக்கான மத்திய அமைச்சர்கள் குழு உண்டு. அண்மையில் அந்தக் குழு டெல்லியில் கூடியது. நடுத்தர வர்க்கத்தையும் ஏழை எளிய மக்களையும் விலைவாசி உயர்வு பந்தாடுகிறது. எனவே, அதனைத் தடுத்து நிறுத்த என்ன வழி என்பதனை ஆராய்வதற்காக அந்தக் குழுக் கூட்டம் கூடியது.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய இந்தக் கூட்டத்தில் நமது நிதியமைச்சரும் கலந்து கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்துதான் விலைவாசி குதியாட்டம் போட்டு உயர்ந்து வருகிறது. இன்றைக்கு விலைவாசி உயர்வால் காங்கிரஸ் கட்சியே கதி கலங்கிப் போய் இருக்கிறது. ஆகவேதான், இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த பாமாயில், சோயா எண்ணெய் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரியை ரத்து செய்வதென்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், விலைவாசி உயர்விற்கான அடிப்படைக் காரணங்களை ஆராயவே இல்லை. ஏனெனில், அதன் ஆதிமூலங்களும் காரணகர்த்தாக்களும் நமது பிரதமரும் நிதியமைச்சரும்தான்.

ஒரு பக்கம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கம் யூகபேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

விலைவாசி உயர்வு பற்றி நமது நிதியமைச்சர் ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருப்பது அதற்கு உடன்பாடானது அல்ல என்பதனை காங்கிரஸ் தலைமையின் செய்திப் பிரிவாளர் வீரப்பமொய்லி நிருபர்களிடம் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் காரியக்குழுக் கூட்டமும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், முன்பேர யூக வணிகத்தைக் கண்ணின் மணி போல் இன்று வரை கவனித்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங் அரசுதான். உணவு தானியங்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய முன்னர் தொழில் நிறுவனங்களும் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தகச் சூதாடிகளின் பலன்களுக்காக அந்தக் கோட்பாட்டை வாஜ்பாய் அரசு சிறிது தளர்த்தியது. அந்தச் செயல், உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம். இன்னொரு பக்கம் முன்னர் ஜனசங்கம், பி.ஜே.பி.யின் கஜானாவாக வணிகப் பெருமக்கள்தான் செயல்பட்டனர்.

மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் உலக வங்கியின் சொல்லைத் தட்டாதவர்களாயிற்றே? எனவே, அந்த வங்கி மனம் மகிழும் வண்ணம் கோதுமை கொள்முதல் செய்வதற்குக் கூட வர்த்தகச் சூதாடிகளை அனுமதித்தன.

இன்னொரு பக்கம், யூக வணிக பேரம் செழித்துக் கொழித்து வளர தடைகளைத் தகர்த்தெறிந்தனர். ஒரு பெரிய வர்த்தகர், விவசாயிகளிடம் _ உற்பத்தியாளர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு முழுத் தொகையையும் கொடுக்க வேண்டியதில்லை. வங்கிகளே அதற்கு உதவும். எனவே, விளைகின்ற இடங்களிலேயே உணவு தானியங்களை வாங்கிக் குவித்தனர். உதாரணமாக பரோடா வியாபாரியிடம் சென்னை வியாபாரி இத்தனை டன் சரக்கு வேண்டும் என்கிறார். பரோடா வியாபாரி பத்து சதவிகிதம் லாபம் வைத்து விலை சொல்கிறார்.

சென்னை வியாபாரி இன்னொரு பத்து சதவிகிதம் விலை வைத்து விருதுநகர் வியாபாரிக்கு விற்கிறார். இப்படிச் சரக்கைக் கண்களில் பார்க்காமலே விலையை உயர்த்துகிறார்கள்.

கடைசியாக விருதுநகர் வியாபாரி மக்களுக்கு விற்கும் போது ஐம்பது சதவிகிதம் விலை உயருகிறது. இப்படி யூகத்தின் அடிப்படையில் வியாபாரிகள் விலையை உயர்த்துகிறார்கள். அதனால் வர்த்தகச் சூதாடிகள் வளம் கொழிக்கிறார்கள். நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்குகிறார்கள்.

எனவே, வர்த்தகச் சூதாடிகளின் யூக வணிக பேரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகள்தான் போராடின. நாடாளுமன்றத்திலும் போராடின.

விவசாய உற்பத்தி விலைவாசியைக் கண்காணிக்கும் ஆணையம், யூக வணிக பேரத்தின் அபாயத்தை உணர்ந்தது. '24 அத்தியாவசிய உணவுப் பொருள்களை யூக வணிக பேரப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்' என்று மத்திய அரசிற்குப் பரிந்துரை செய்தது. மன்மோகன் சிங் அரசு அந்தப் பரிந்துரையைக் கண்டு கொள்ளவேயில்லை.

விவசாய உற்பத்தி விலைகளைக் கவனிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைக்குழு, '25 விவசாயப் பொருட்களை யூக வணிக பேரக் கொள்ளையிலிருந்து நீக்க வேண்டும்' என்றது. அந்த வேண்டுகோளும் மன்மோகன் சிங் அரசின் காதுகளில் விழவில்லை.

சமுதாயத்தில் மிகப் பெரும் சலனத்தை ஏற்படுத்தும் முறையில் இன்றைக்கு விலைவாசி உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் ஆவேசம் கொள்ளச் செய்திருக்கிறது. அந்த ஆவேசம் சுனாமியாகச் சுழன்றடிக்குமா, புயலாய் சீறிப் பாயுமா என்பதனை மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்.

விலைவாசி உயர்வை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துவது என்று இடது சாரிக் கட்சிகள் முடிவெடுத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வை எதிர்த்து 'போர் போர்' என்று பி.ஜே.பி. பிரகடனம் செய்திருக்கிறது.

உணவுப் பொருள் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கடைசியாக காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்து விட்டது. ஆனால், ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் பதுங்கியது மாதிரி மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய அமைச்சரவைக் குழு, இந்தக் கோரிக்கை பற்றி மூச்சே விடவில்லை.

யூக முன் பேர வணிக முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் குரல் கொடுத்து விட்டன. ஆனால், அதனை அமைச்சரவைக் கூட்டம் அடியோடு புறக்கணித்து விட்டது.

பின்னர் எதற்காகக் கூடினார்கள்? குரோட்டன்ஸ் செடியை ட்ரிம் செய்வது போல சில முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். பாமாயில் இறக்குமதிக்கு வரி ரத்து, பாசுமதி அரிசியைத் தவிர இதர அரிசிகளை ஏற்றுமதி செய்யத் தடை என்று தெரிவித்திருக்கிறார்கள். யூக பேர வணிகம்தான் விலைவாசி உயர்விற்குப் பிரதான காரணம் என்பதனை நாடே அறிவிக்கிறது. ஆனால், அதனை ஏற்க மறுக்கிறார்கள். கடிக்க வரும் கரடியைப் பிடிக்கச் சொன்னால் காடையைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கொடுமை!

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

திங்கள், ஏப்ரல் 07, 2008

கலாமின் அபாயகரமான யோசனை - நீரஜா செளத்ரி

அனைத்து எம்.பி.க்களையும் வார்ட்டன் அல்லது ஹார்வர்டில் உள்ள மேலாண்மைப் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி பயிற்சி அளிக்க வேண்டும் என்கிற யோசனையைத் தெரிவித்திருக்கிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் ஓராண்டுக் காலம் அவர்கள் பயிற்சி பெறும் வகையில் எம்.பி.க்களின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ""கட்சி விசுவாசம் மிக்கவர்களாக''வும் மாறிவருகின்றனர் என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.

கடந்த காலங்களிலும், ஆழம்பார்க்கும் வகையில் இது போன்ற யோசனைகள் கூறப்பட்டதுண்டு. இந்திரா காந்தியின் தூண்டுதலின் பேரில், மக்களுடைய கருத்து என்ன என்பதை அறிவதற்காக, இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை அப்போது கூறினார் வசந்த் சாத்தே. எனினும், இப்போது கலாம் தெரிவித்த இந்த யோசனை, பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலே போய்விட்டது.

கலாம் கூறிய யோசனையில் மூன்று அம்சங்கள் பொதிந்திருக்கின்றன
1. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை ""படிப்பறிவில்லாதவர்''களுக்குக் கிடையாது.
2. தொழில் நிறுவனத்தை நடத்துவதைப்போல தேசத்தை நடத்திச் செல்ல வேண்டும்; எனவே மேற்கத்திய நாடுகளின் புகழ்பெற்ற மேலாண்மைப் பயிற்சிக் கல்லூரிகளில் மேலாண்மைத் திறனில் எம்.பி.க்கள் பயிற்சி பெற வேண்டியது அவசியம்.
3. எம்.பி.க்கள் கட்சியின் விசுவாசிகளாக இருக்கக் கூடாது.
கலாமின் யோசனையை மேலும் ஆழ்ந்து ஆராய்ந்தோமானால், வார்ட்டன் அல்லது ஹார்வர்டுக்குச் செல்லத் தகுதி உடையவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையவர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். எனவே, அவர்கள் எம்.ஏ. அல்லது குறைந்தபட்சம் பி.ஏ. படிப்பாவது முடித்தவர்களாக இருந்தால்தான் இது சாத்தியம்.

நமது தேசியத் தலைவர்கள் நாட்டின் அரசியல் சட்டத்தை வகுத்த பொழுது, ""ஒருவருக்கு ஒரு வாக்கு'' என்பதை அடிப்படை உரிமையாக்கியதற்குக் காரணம் உண்டு. இப்போது இருப்பதைவிட அப்பொழுது நாட்டில் கல்வியறிவில்லாதோர் விகிதம் அதிகமாக இருந்தது. அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் என்பதால், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு, குறிப்பாக சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்கு ஒரே வழி ""அனைவருக்கும் வாக்குரிமை'' அளிப்பதுதான் என்பதை உணர்ந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு கல்வியை ஒரு தகுதியாகக் கருதாததற்கு அதுதான் காரணம்.

இந்தியாவின் பெரும் தலைவர்களில் பலர் முறைப்படி கல்வி பயின்றவர்கள் அல்லர் என்பது வரலாறு. தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த காமராஜர், காங்கிரஸின் தலைவிதியை நிர்ணயித்த தலைவர். வசந்த்தாதா பாட்டீல் உயர் கல்வி கற்றவரல்லர்; ஆனால் மகாராஷ்டிரம் கண்ட மிகச் சிறந்த நிர்வாகிகளில் அவரும் ஒருவர் என்று அந்த மாநில மக்களால் நினைவுகூரப்படுபவர்.

ஹரியாணாவைச் சேர்ந்த ஜாட் சமுதாயத் தலைவரான தேவிலால் துணைப் பிரதமராக இருந்தவர். அவர், ""விஐபி'' என்பதற்கு "மிக அறியாமையில் இருக்கும் மனிதர்கள்' என்றும் நாட்டைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் என்று விளக்கம் கூறுவார்.

அசோகரும் அக்பரும் உயர்கல்வி கற்றவர்கள் அல்லர். ஆனால், தீன் இலாகி சமயத்தை உருவாக்கிய அக்பரை இன்றும் நினைவுகூர்கிறோம். அசோகரின் சக்கரத்தைத் தேசியக் கொடியிலேயே பொறித்து வைத்திருக்கிறோம். கபீரைப் பற்றி தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன.

கலாமின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், பிகாரில் எலிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்துவரும், தலித்துகளில் ஒரு பிரிவான முசேஹர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வி கற்காத பகவதி தேவி போன்றோருக்கு நாடாளுமன்றத்தில் இடமே இல்லாமல் போயிருந்திருக்கும். தனது தலித் ஆதரவுக் கொள்கையை உறுதிசெய்வதற்காக எம்.பி. தேர்தலில் போட்டியிட பகவதி தேவிக்கு, லாலு யாதவ் வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஜனநாயக உணர்வுநிலை என்பது தனக்கே உரித்தான வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருக்கிறது. மாயாவதியின் வளர்ச்சியானது இதைத்தான் நிரூபிக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார் லாலு. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான லாலு பிரசாத், மாநிலத்தின் முதல்வராகவும் ஆகி, மத்திய அமைச்சராகவும் ஆகி இருப்பதை அறிந்து வியப்படைந்தனர் பாகிஸ்தானியர். சொல்லப் போனால், வளர்ச்சியின் சூட்சுமத்தை அவரிடம் கேட்டறிந்து கொள்வதற்காக வார்ட்டன் மற்றும் ஹார்வர்டு மாணவர்களே லாலு பிரசாத்தைச் சந்திக்க வந்தனர்.

யாருக்கெல்லாம் வாக்களிக்க உரிமை இருக்கிறதோ அவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடவும் தகுதி இருக்கிறது என்பதால், சிலர் எதிர்வாதமாக, யாருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதி இருக்கிறதோ அவர்கள்தான் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறக்கூடும். வேறு வார்த்தைகளில் சொன்னால், ""படித்தவர்கள்'' மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம்; நாட்டை யார் ஆள்வது, எப்படி ஆள்வது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் கூறக்கூடும். இது நாம் அறிந்த மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை சுருக்கிக் குறுக்குவதாகவும், காலச் சக்கரத்தை பின்னோக்கித் திருப்புவதாகவும் ஆகிவிடும்.

பல்வேறு மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருந்த சொத்துடையவர்களுக்கே வாக்குரிமை, படித்தவர்களுக்கே வாக்குரிமை, ஆண்களுக்கே வாக்குரிமை என்ற ""அரைகுறை'' ஜனநாயகத்தை எதிர்த்து நெடிய போராட்டத்தை நடத்தித்தான் அனைத்து மக்களும் வாக்குரிமையைப் பெற்றனர். ஆனால் இந்தியாவில் எவ்விதச் சிக்கலுமின்றி பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர்; காரணம், நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த தலைவர்களுக்கு இருந்த தொலைநோக்கு.

ஏழ்மையான, பின்தங்கிய நாடான இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா என்ற அவநம்பிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் பொய்யாக்கி, 60 ஆண்டுகளாக ஜனநாயக ஆட்சிமுறை இருந்துவரும்போதிலும், ஒலித்திருக்க வேண்டிய அளவுக்கு ஏழைகளின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.

ஒரு வகையில், மேலும் மேலும் மேட்டுக்குடியினருக்கு உரியதாக நமது ஜனநாயகம் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லாதிருந்திருந்தால், வளர்ச்சியின் பயன்கள் ""மேலிருந்து கீழாகக் கசிவதை''ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல், ""அனைவரையும் சமநிலையில்'' வைத்துப் பேசிக்கொண்டு இருந்திருப்போம்.

இப்போதைய நிலையில், நாட்டு மக்களில் வெறும் 3 சதவீதம் பேரை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மேட்டுக்குடியினர், இந்தியாவில் உள்ள மக்களைவிட, வெளிநாடுகளில் உள்ள தம்மைப் போன்ற மேட்டுக்குடியினருடன்தான் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த நிலையில், வார்ட்டனிலும் ஹார்வர்டிலும் கல்வி கற்றுக்கொண்டு வந்தால், நம் எம்.பி.க்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய மக்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துக்கொண்டுதான் செல்லும்.
உண்மையில், ஏழைகளை மேலும் மேலும் ஓரங்கட்டுபவர்களே படித்தவர்கள்தான். மக்களை முட்டாள்களாக்கி, சட்ட விதிகளைத் தமக்குச் சாதகமாக வளைத்து, செல்வ வளங்களை அபகரிக்கும் கலையில் வல்லவர்கள் அவர்கள்.

இவ்வாறு கூறுவதால், கல்வியறிவின்மைக்கு வக்காலத்து வாங்குவதாகவோ, திறமைகளை வளர்ப்பதைக் குறைகூறுவதாகவோ கருதிவிடக் கூடாது. நமது ஜனநாயகத்தில் சீரமைக்கப்பட வேண்டியிருக்கும் குறைபாடுகளைப் பூசிமெழுகுவதும் நோக்கமல்ல. ஆனால், நிறுவன மேலாண்மைத் திறன்கள், நிச்சயமாக எம்.பி. ஆவதற்கான அடிப்படைத் தகுதியாக முடியாது.

தேசத்திலிருந்து வேறுபட்டது தொழில் நிறுவனம். தொழில் நிறுவனத்தை தனியொருவர் நிர்வகிக்கலாம். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து மக்களின் குரல்களும் சேர்ந்தால்தான் அது ஒரு தேசமாக ஜீவித்திருக்க முடியும்.

இந்தியாவைப் பற்றிய புரிதலை மேம்படுத்தவும், சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவர்களது விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உறுதியை அதிகரிக்கவும் உரிய பயிற்சியை எம்.பி.க்களுக்கு அளித்தாலே போதும். இதர திறன்களையெல்லாம் காலப்போக்கில் பெற்றுக்கொண்டுவிட முடியும்.
முடிவாக, மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில், மொத்த சமுதாயத்தையும் பிரதிபலிப்பதாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும்.
பல எம்.பி.க்களின் குறுகிய கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டே, அவர்கள் ""கட்சிக்கு விசுவாசமாக'' இருப்பதை கலாம் குறைகூறியிருக்கக்கூடும். கட்சி அடிப்படையிலான ஜனநாயக அமைப்பில் கட்சியின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கட்சி உறுப்பினர் விசுவாசமாக இருந்துதான் ஆக வேண்டும். சொல்லப் போனால், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பல்வேறு கட்சிகளும் மக்களிடம் தமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வதால் ஏற்படும் இரைச்சலை ஒருசிலர் விரும்பாமல் இருக்கக்கூடும். ஆனால், நல்ல வேளையாக கட்சிகள் இல்லாத ஜனநாயகத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை.

நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை விரிவுபடுத்தி, மேலும் அதிக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆக்கும் முயற்சியாக டாக்டர் கலாமின் யோசனை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், உலகம் முழுவதுமே இப்போது ஜனநாயகத்தின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது; ஜனநாயகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதற்காகவே இந்தியாவும் பாராட்டப்படுகிறது.

""மக்களின் குடியரசுத் தலைவர்'' என்று போற்றப்பட்ட டாக்டர் கலாமிடமிருந்து இப்படி ஒரு யோசனை வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இது அபாயகரமானது!
-நீரஜா செளத்ரி
நன்றி: தினமணி

சனி, ஏப்ரல் 05, 2008

இந்தியச் சிறைகளில் மனித உரிமைப் போராளிகள் - அ. மார்க்ஸ்

2007 மே 14 அன்று சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்ட மருத்துவர் டாக்டர் பினாயக் சென் இன்றும் சிறைகளில். சென்ற ஜனவரி 17 அன்று ராய்பூர் மாவட்ட நீதி மன்றம் சென் மற்றும் நாராயண் சன்யால், பியுஸ் குஹா என்னும் இரு மாவோஸிஸ்டுகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. பின்னவர் இருவரும் தடை செய்யப்பட்டுள்ள மாவோயிசப் பொதுவுடமைக் கட்சியினர். டாக்டர் சென் சட்டீஸ்கர் மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) துணைத் தலைவர். அரசு சாரா நிறுவனம் ஒன்றின் பெயரை வைத்துக் கொண்டு மேற்படி இரு நக்சலைட்டுகளுக்கு இடையில் செய்தி கொண்டு செல்பவராக (Courier) செயல்பட்டார் என்பது சென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. தேசத்துரோகம், சதி, அரசுக்கு எதிரான யுத்தம் புரிந்தது முதலான குற்றங்கள் (இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவுகள் 124பு, 121, 121பு) சென் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதாரண சட்டங்கள் தவிர 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA 1967). 2005ம் ஆண்டு சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (CSPSA 2005) ஆகிய இரு அசாதாரணச் சட்டங்கள் (Extra- ordinary) அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவேதான் அவரைப் பிணையில் எடுக்க இயலவில்லை.

இந்திய அரசு அது தோன்றிய நாள் முதல் இன்று வரை இது போன்ற சிறப்பு அதிகாரங்களை அளித்துக் கொள்ளும் தடுப்புக் காவல் சட்டங்களின்றிச் செயல்பட்டது இல்லை. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே (1950) முதல் தடுப்புக் காவல் சட்டத்தையும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் அறிவித்தார். பின் UAPa (1967), மிசா (MISA 1971) பொதுப்பாதுகாப்புச் சட்டம் (PSA 1978), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA 1980 இது இன்று வரை அமுலில் உள்ளது), அவசியப் பணிகள் செயல்பாட்டுச் சட்டம் (ESMA 1980 1981), தடா (1985), பொடா (2001)... என தொடர்ந்து இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் பலவற்றை இச்சட்டங்கள் பறித்தன. இதன் மூலம் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளைச் சட்ட பூர்வமாகவே மேற்கொள்ளக் கூடியவைகளாக அரசுகள் தம்மை அதிகாரப்படுத்திக் கொண்டன.

சட்டபூர்வமான சட்டங்களால் (Regular Law) கட்டுப்படுத்த இயலாத சூழலின் விளைவாக இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களை இயற்ற வேண்டிய அத்தியாவசியம் (Rational of supreme necesity) உள்ளதாக அரசுகள் வாதிட்டன. இந்தச் சட்டங்களை எதிர்த்து தனிமனிதர்களும் மனித உரிமை அமைப்புகளும் நீதிமன்றங்களுக்குச் சென்ற போது, அவை இத்தகைய அத்தியாவசியம் (Supreme necesity) அரசுக்கு உண்மையிலேயே இருந்ததா என்கிற கேள்விகளுக்குள் செல்லாமல் பாராளுமன்றத்திற்கு இத்தகைய சட்டங்களை இயற்ற அதிகாரமுண்டா இல்லையா (Question of legislative competence) என்பதாகப் பிரச்சினையை மாற்றி, அத்தகைய அதிகாரமுண்டு எனக்கூறி இத்தகைய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கின (எ.டு : பி.யூ.சி,எல் வி இந்திய அரசு ரிட் மனு 129/2002).

பொது ஒழுங்கு கெட்டுவிட்டது, தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, அரசுடன் போர்ப்பிரகடனம், அரசுக்கு எதிராகச் சதி, பயங்கரவாதம் ஆகிய காரணங்களைச் சொல்லி இத்தகைய சட்ட விரோதச் சட்டங்களுக்கான அத்தியவாசியத்தை அரசுகள் வற்புறுத்தியதை நீதிமன்றங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டன. அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் இவ்வாறு விரிவுபடுத்தின. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசு தனது அவசிய அதிகாரம் (Necessary Power) என எதைக் கருதுகிறதோ அதை ஏற்று உண்மையிலேயே அரசியல் சட்டத்தால் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறுவதற்கு நீதிமன்றம் உதவி செய்தது ஏற்பு வழங்கியது.

இத்தகைய ஏற்பு வழங்குவது மூலம் அசாதாரணச் சட்டங்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் அளிப்பது மட்டுமின்றி, இத்தகைய அசாதாரணச் சூழல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை (measures) அரசு நிர்வாகம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்கிற சட்ட விரோத நடவடிக்கைகளும் அடக்கம். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள அரசே நிறுவியுள்ள ஆயுதம் தாங்கிய கூலிப்படையாகிய சல்வா ஜூடும் (பார்க்க : எனது உலகமயத்திற்குப் பின் இந்தியா) தொடங்கி கைது செய்யப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்படும் போதைப் பகுப்பாய்வு (Narco - analysis) எனும் மெய்யறிவும் சோதனை உட்பட அடக்கம்.

கடும் எதிர்ப்புகளின் விளைவாக தடா, பொடா முதலான சட்டங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், அல்லது அதன் காலக்கெடு முடிந்தவுடன் மறுபடி நீடிக்காமல் விடப்பட்ட போதிலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், (NSA) அவசிய பணிகள் செயல்பாட்டுச் சட்டம் (ESMA), சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) முதலியன தொடர்ந்து அமுலில் உள்ளன. தற்போது ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ல் பதவி ஏற்றவுடன் முன்பே அறிவித்தபடி பொடா சட்டத்தை அது நீக்கிக் கொண்டது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே இருந்து வந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, பொடா சட்டத்தின் சில மோசமான கூறுகளை அதில் இணைத்து அறிவித்தது. அது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (திருத்தப்பட்டது) 2004 என்றழைக்கப்படுகிறது. தற்போது அமுலில் உள்ள அச்சட்டத்தைப் பயன்படுத்தியே இன்று பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகள் மட்டுமின்றி இதர பல அரசியல் கைதிகளும், மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்படுகின்றனர். இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இன்று மெதுவாக மேலெழத் தொடங்கியுள்ளது.

இந்தச் சட்டங்கள் தவிர கொடூரமான பிரிவுகளை உள்ளடக்கிய இதுபோன்ற அசாதாரணச் சட்டங்கள் மாநில அளவில் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிடிவாதமாக நடைமுறைப் படுத்தப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் (AFPSA) 1958, அமைப்பு ரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் மஹாராஷ்டிரச் சட்டம் (MCOCA), சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (CSPSA)" முதலியன இவ்வகையில் அடக்கம். அமைப்பு ரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் கோகா (COCA) சட்டம் இப்போது மாநில வாரியாக இயற்றப்படக் கூடிய நிலை உள்ளது. பினாயக் சென் மீது இந்த மாநில அளவிலான (CSPSA) சட்டமும் பாய்ந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி சட்டீஸ்கர் அரசு எந்த இயக்கத்தையும் சட்ட விரோதமானது என அறிவிக்க முடியும். ஆயுதப் படையில் அந்த இயக்க உறுப்பினர்களை மூன்று ஆண்டுகள் வரை காவலில் வைக்கலாம். எந்தப் பேச்சையும், பொதுக்கூட்டத்தையும் சட்ட விரோதம் என அறிவித்து ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். இவ்வாறு அமைப்பு ரீதியாகத் திரள்வது, பேச்சுரிமை முதலான அடிப்படை அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே பினாயக் சென்னுக்குக் பிணை மறுக்கப்பட்டது.

இத்தகைய சட்ட விரோத அசாதாரணச் சட்டங்கள் குறித்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். இந்தச் சட்டங்கள் காலாவதியான பின்னும்கூட தொடர்ந்து செயல்படும் உரிமைகளை (Norm of Continuity) தன்னகத்தே கொண்டுள்ளன. தடா சட்டத்தின் s1(4) மற்றும் பொடாவின் s(16) பிரிவுகளின்படி, தண்டனை, சட்டக் கடப்பாடு (liabitity), உரிமைகள் (rights & Privileges) ஆகியவற்றோடு இந்தச் சட்டத்தின்படி தொடங்கப்பட்ட புலனாய்வுகள், வழக்கு நடவடிக்கைகள் ஆகிய இச்சட்டம் காலாவதியான பின்னும் கூட காலாவதி ஆகாதது போலவே கருதித் தொடரப்படும். எனவே ஒரு முறை தடா, பொடாவில் சிக்கியவர்களுக்கு அச்சட்டம் நீக்கப்பட்டாலும்கூட எந்தப் பயனும் இல்லை. தவிரவும் அதே வழக்கில் தொடர்புடையவர்கள் என யாரை வேண்டுமானாலும், சட்டம் காலாவதியான பின்னும் கூட எப்போது வேண்டுமானாலும் இணைத்து இச்சட்டத்திற்குள் கொண்டு வர இயலும். ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு : சென்ற செப்டம்பரில் (2007) தேனி, போடி, வருசநாடு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சிலர்கைது செய்யப்பட்டனர். சுமார் 14 பேர் இன்று இந்த அடிப்படையில் சிறைகளிலுள்ளனர். இவர்களில் முக்கியமானவராகப் போலீஸ் தரப்பில் கூறப்படுபவர் சுந்தரமூர்த்தி.

தர்மபுரி மாவட்டத்தில் 1992ம் ஆண்டு ஒரு பாலத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக தடா வழக்கொன்று அவர் மீது சென்னை தடா நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது. எனவே இவர் தடா நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளி (Proclaimed Offender). இன்று இவர் கைதானவுடன் அவர் தடா வழக்குக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். முன் குறிப்பிட்ட பிரிவுகளின் படி இந்நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஆனால் இன்று கைதாகியுள்ள மன்மதராசா (35), ரத்தினவேலு (38), பெருமாள் (33), திருப்பதி (36) ஆகிய நால்வர் மீது இதுவரை எந்தத் தடா வழக்குமில்லை. தடா காலாவதியாகி இன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் இந்த நால்வரும் முன்குறிப்பிட்ட சுந்தரமூர்த்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் கூறப்பட்டு அவர்கள் இன்று தடா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். 1985 முதல் 1995 வரை உயிருடனிருந்த தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 76,000 பேர்களில் 1.5 சதத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை மட்டுமே காவல்துறையால் நிரூபிக்க முடிந்ததது. மீதியுள்ள 98.5 சதத்தினரும் பிணையில் விடுதலையின்றிப் பல ஆண்டுகள் சிறையிலேயே கழிக்க நேர்ந்தது. அதே நிலைமை இன்று இந்த நால்வருக்கும் ஏற்பட்டுள்ளது.

பினாயக் சென் கதைக்குத் திரும்புவோம். வேலூரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் 1970ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற சென், சட்டீஸ்கார் பழங்குடி மக்கள் மத்தியில் மருத்துவப் பணி ஆற்றியவர். மாற்று மருத்துவம், நீரிழப்பு, காசம், மலேரியா, தொழுநோய் முதலானவற்றிற்கு எளிய மருத்துவங்களைச் செய்தல், வறுமையின் விளைவான நோய்களை எதிர்கொள்ளல் எனப் பணி செய்து வந்தவர். பி.யு.சி.எல் அமைப்பில் செயல்பட்ட அவர் சட்டீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடினார். வழக்குத் தொடர்ந்தார். பஸ்தார் மாவட்டத்தில் ஏழு பழங்குடியினர் கொல்லப்பட்ட பிரச்சினையை அவர் முன்னெடுத்தது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்தது. விளைவு : எந்த சட்ட விரோத தடுப்புச் சட்டத்தை அவர் எதிர்த்தாரோ அதே சட்டத்தின் கீழ் இன்று அவர் கைது செய்யப்பட்டு பிணையுமின்றி (bail) கடந்த ஏழு மாதங்களாகச் சிறையிலுள்ளார். அமார்த்திய சென், நோம்சோம்ஸ்கி, அருந்ததிராய் முதலானோர் சென் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளனர். முந்தைய மாநில அரசு 60,000 பெண் நல ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் ஒன்றை நிறைவேற்றியபோது அந்தக்குழுவில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்றுச் செயல்பட்டவர் சென் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை வைக்கப்பட்டுள்ள இன்னொருவர் மாவோயிச இதழான பீப்பிள்ஸ் மார்ச் ஆசிரியர் கோவிந்தன்குட்டி. கொச்சின் அருகிலுள்ள ஒரு ஊரிலிருந்து டிசம்பர் 19, 2007 அன்று அவர் கைது செய்யப்பட்டார். குட்டியின் இதழ் வெளிப்படையாக மாவோயிசச் சிந்தனைகளை ஆதரிப்பது. உந்தரகாந்த் பகுதியில் 17 ஆண்டுகள் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்த பிரஷான்த் ராஹி டிசம்பர் 2007ல் டெஹ்ராடூனில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சரியான தேதி குறித்து காவல்துறை பொய் சொல்கிறது. ஹிமாசல் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் பணியாற்றிய ராஹியை மாவோயிச அமைப்பொன்றின் படைப் பிரிவுத் தலைவர் என அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கோவிந்தன்குட்டியை முறையான எந்த சட்ட ஆவணமும் இன்றி ஆந்திர மாநில போலீசார் கேரளத்தில் வந்து கைது செய்துள்ளனர். வழக்கம் போல இ.பி.கோ 134, 124பு, 133ய முதலான பிரிவுகள் தவிர UAPA சட்டமும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. சிறையில் மிக மோசமாக இவர்கள் நடத்தப்படுகின்றனர். வழக்குரைஞருடன் பேசவேண்டுமானால்கூட சிறை அதிகாரிகள் முன்னிலையில் தான் பேச வேண்டும். கைதான நாள் முதல் அவர் சிறையில் உண்ணாவிரதமிருக்கிறார். கட்டாயாமாக அவருக்கு சலைன், குளுகோஸ் முதலியன ஏற்றப்படுகின்றன. பிரஷாந்த் ராஹியைப் பற்றி ஹிமாசல பிரதேஷ் முதல்வர் பி.சி.கந்தூரி, அந்த ஆள் ஒரு பத்திரிக்கையாளன் என்பதெல்லாம் சும்மா. தேசப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நபர் அவர் என எடுத்தெறிந்து பேசியுள்ளார். கோவிந்தன்குட்டி குறித்து மிக மோசமான தகவல்களை காவல்துறை பத்திரிக்கைகள் மூலமாக வெளியிட்டது. இவர்களின் கைது குறித்து எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பத்திரிக்கைகள் செய்தி வெளியாகியிருக்கின்றன. சஞ்சய் தத் பிரச்சினைக்கு பத்திரிக்கைகளில் அளிக்கப்படும் முக்கியத்துவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய விஷயம் இது. இத்தனைக்கும் குட்டியும் ராஹியும் பத்திரிக்கையாளர்கள். சென் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு மக்கள் மருத்துவர்.

சென்ற ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட மேலும் இரு மக்கள் பணியாளர்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். உத்திரப் பிரதேசத்திலுள்ள மிர்ஸாபூர் பகுதியில் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருந்த ரோமா என்கிற பெண் ஊழியர் ஆகஸ்ட் 2007ல் கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் இவர் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பு என்னும் இயக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தவர் ரோமா.

பாக்ஸைட் தாதுவைக் கொள்ளையிட முனையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரிசாவிலுள்ள காசிபூர் பகுதி மக்கள் போராட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாகத் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த ஒரியக் கவிஞரும், இலக்கிய இதழ் ஒன்றில் பணியாற்றியவருமான சரோஜ் மொஹந்தி சென்ற ஜூலை 2007ல் ராயகாடாவில் கைது செய்யப்பட்டார். கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள பேருல், ஹர்தா மற்றும் கந்த்வா மாவட்டங்களில் பழங்குடியினர் மத்தியில் பணி செய்து வந்த ஷ்ரமிக் ஆதிவாசி சங்காதனா மற்றும் சமாஜ்வாதி ஜன்பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த ஷமீம், அனுராக் என்னும் இரு மக்கள் பணியாளர்களுக்கு மாநில பாதுகாப்புச் சட்டத்தின்படி மாவட்ட மாஜிஸ்ட்ரேடால் சென்ற ஜூன் மாதம் Externment Notice வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் யாராலும் கண்டு கொள்ளப்படாத, ஆக ஒதுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் மத்தியில் பணி செய்தவர்கள். தலித்துகள், ஆதிவாசிகள் முதலான அடித்தள மக்களின் மிகவும் அடிப்படையான மனிதத் தேவைகளுக்கான போராட்டங்களில் துணை நின்றவர்கள். அதற்காகவே கடுமையான கண்காணிப்புகள், கைதுகள், சொல்லொனா சித்ரவதைகள், பிணையில் விடுதலை செய்ய இயலாத சட்டங்களின் தாக்குதல்கள், நீண்ட சிறை வாசகங்கள், ஊடகங்களின் வழியான கடுமையான அவதூறுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோரை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

உலகமயம் என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டு மக்களின் நில, நீர், கனிமவளங்களை எல்லாம் திறந்துவிடுகிற நடைமுறைகள் அதிகமாகிற போது அமைதி வழியில் சட்டபூர்வமாகப் போராடும் இத்தகைய மனித உரிமைப் போராளிகளும் தமது கொள்கைகளின் அடிப்படையில் சமரசமின்றித் தம் வழியில் நின்று போராடும் மாவோயிஸ்டுகளும் குறி வைத்துக் தாக்கப்படுகின்றனர். உலகெங்கும் மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடி வரும் செயல் வீரர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் அவை பொதுச் செயலாளரின் சார்பில் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டார். ஹினா ஜிலானி என்றும் இப் பிரதிநிதி சென்ற ஜனவரி 24, 2007 அன்று தன் அறிக்கையை வெளியிட்டார். நில உரிமைகள், இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் முதலான பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் மனித உரிமைப் போராளிகளே இன்று அதிக ஆபத்திலுள்ளனர் என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்காகப் போராடுகிற இப்போராளிகளின் மனித உரிமைகள் அரசால் மட்டுமின்றி அரசுக்கு அப்பாற்பட்டவர்களாலும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. எல்லா விதமான வடிவங்களிலும் இந்தத் தாக்குதல்கள் அமைகின்றன. எனக் கூறிய இவ்வறிக்கை இவர்களது பணிகள் மனித உரிமை சார்ந்தது என்பதே ஏற்கப்படாமல் தேசப் பாதுகாப்பு முதலான பெயர்களில் இவர்கள் குற்றம் சாட்டப்படுவதையும் சுட்டிக் காட்டியது. அரசின் விரோதம், பொருளாதாரக் பற்றாக்குறை, ஊடகப் புறக்கணிப்பு எனப் பல மட்டங்களில் இவர்களின் உரிமைகளும் செயல்பாடுகளும் பறிக்கப்படுகின்றன. தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. மோதலில் கொல்வது, ஆளையே தலைமறைவாக்குவது முதலான வடிவங்களையும் இப்போராளிகள் சந்திக்க நேரிடுகிறது.

பல்வேறு அரசியல் காரணங்களின் விளைவாக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள் ஆகியன மிகுந்துள்ள ஒரு காலகட்டத்தில் இன்றைய மனித உரிமைப் பணியாளர்கள் பணி செய்ய வேண்டிய நிர்பந்தத்திலுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியிலுள்ள அரசயில் பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேலும் மேலும் அடக்கு முறைகள், உரிமை பறிப்புகள், சட்ட விரோதச் சட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இவற்றை ஒடுக்க முனைகிறது அரசு. இதன் மூலம் வரலாறு காணாத அளவில் மனித உரிமைகள் பறிக்கப்படக்கூடிய அவலம் ஏற்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களின் சிவில் உரிமைகளுக்காக நிற்கும் மனித உரிமைப் போராளி எளிதில் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவராகக் குற்றம் சாட்டப்படுகிறார். தேசப் பாதுகாப்பு என்கிற பெயரில் அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் நிலையை நியாயப்படுத்தும் போக்கு இன்று உலகெங்குமுள்ளது. செப்டம்பர் 11க்குப் பின் இது மோசமாகிறது. மனித உரிமைகளைப் பேசுவதென்பதே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது என்பதாகப் பேசக் கூடியவர்கள் அதிகமாகிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லாவற்றையும் திறந்துவிடுகிற இன்றைய சூழலில் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பேசுகிறவர்கள் அரசின் மிகப் பெரிய எதிரியாகக் கருதப்படுகின்றனர். இந்த வகையிலேயே இன்று பினாயக் சென் முதலானோர் மீதான தாக்குதல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கனிவளமும் நீர் வளமும் மிகுந்துள்ள இடங்களில் மாவோயிஸ்டுகள் வளர்வதை எம்மால் சகிக்க முடியாது என மன்மோகன் சிங் ஒரு முறை கூறியதை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது.

1998ம் ஆண்டு மனித உரிமைப் போராளிகளின் பாதுகாப்பிற்கான பிரகடனம் ஒன்றை (Declaration on Human Right Defenders) ஐ.நா சபை வெளியிட்டது. இதற்கான ஒரு சிறப்புப் பிரகடனமும் 2000த்தில் வெளியிடப்பட்டது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் இவர்களின் பாதுகாப்பை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டுமென இப்பிரகடனம் கோருகிறது. மனித உரிமைகளுக்காகப் போராடும் உரிமை, அமைப்பு உருவாக்கும் உரிமை, உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் உரிமை, இத்தகைய பணிகளுக்காக நிதி திரட்டும் உரிமை, அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை, சர்வதேச அளவிலான பாதுகாப்பு அமைப்புகளிடம் உதவி கோரும் உரிமை ஆகியவற்றை இப்பிரகடனம் அங்கீகரிக்கிறது.

என்ன பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் இருந்து என்ன பயன். மனித உரிமை தொடர்பான விருப்ப ஒப்பந்தங்கள் பலவற்றில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. கையெழுத்திட்ட போதும் அவற்றை மீறுவதற்கு தயங்கியதுமில்லை.

இதுதான் இந்தியாவில் இன்றைய மனித உரிமைகளின் நிலை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஓர் இயக்கம்.

இந்தியாவெங்குமுள்ள சிறைகளில் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நோக்கில் அகில இந்திய அளவில் ஒரு இயக்கத்தைக் கட்டுவதற்கான தயாரிப்புக் கூட்டமொன்று டெல்லியிலுள்ள மனித உரிமைப் போராளிகளின் முன் முயற்சியில் சென்ற டிசம்பர் 20 அன்று புது டெல்லியில் கூட்டப்பட்டது. பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி (டெல்லி), பேரா. அமித்பட்டாசார்யா (மே.வ), ரோனாவில்சன் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்) முதலானோர் முன் முயற்சி எடுத்துள்ளனர். டெல்லி, ஜம்மு, காஷ்மீர், நாகலாந்து, அஸ்ஸாம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்கர்ன்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து அ.மார்க்ஸ¨ம், புதுச்சேரியிலிருந்து கோ.சுகுமாரனும் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேந்திர மோகன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஜிந்தர் சச்சார் முதலானோர் வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளர் அருந்ததிராய் ஒப்புதல் அளித்தும் கலந்து கொள்ள இயலவில்லை.

பேராசிரியர் அமித் பட்டாச்சார்யாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு (வரலாற்றுத்துறைத் தலைவர், ஜாதல்பூர் பல்கலைக் கழகம், மேற்கு வங்கம்) ஒரு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. வரும் மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக அகில இந்திய மாநாடு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 28ல் சிறை நிலைமைகளை குறித்த ஒரு கவன ஈர்ப்பாக நாடெங்கும் ஆர்ப்பாட்டம், சிறைப் போராட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வது பற்றியும் பேசப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மரண தண்டனையை ஒழித்தல், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தல், சிறை நிலைமைகளை திருத்துதல் சிமி அமைப்பின் மீதான தடையை நீக்குதல், நார்கோ அனாலிசிஸ் எனப்படும் மெய்யறியும் சோதனைகளை தடை செய்தல் முதலான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இந்திய அளவில் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் குறித்த ஒரு தகவல் தொகுப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் கைதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நால்வர், பொழிலன் உள்ளிட்ட த.ஒ.வி இயக்கத்தினர் மூவர், சமீபத்திய தேனி பகுதியில் கைதான மாவோயிஸ்டுகள் சுமார் 15 பேர் ஆகியோர் பற்றி முதற்கட்டமாக தகவல்கள் அளிக்கப்பட்டன.

அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மான வடிவங்கள் முதலியன விரிவாக அடுத்த இதழில் இடம் பெறும்.

இது தொடர்பாக தொடர்பு கொள்ள விரும்புவோர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

- அ. மார்க்ஸ்

நன்றி: இன்மை, www.keetru.com

வெள்ளி, ஏப்ரல் 04, 2008

‘சன்’ தொலைக்காட்சியில் இராமாயணம்! by விடுதலை ராசேந்திரன்

‘பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற பூரிப்பான அறிவிப்புடன், ‘சன்’ தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமாயணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், ‘இராமாயணம்’ ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு. ஏற்கனவே ‘இராம பக்தி’யில் மூழ்கிக் கிடக்கும் வடநாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, ‘சங்பரிவாரங்களின்’ இராமன் அரசியலுக்கு அவர்களை தயார்படுத்த, ‘என்.டி.டி.வி.’ இந்தி மொழியில் இராமாயணத் தொடரைத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மண்ணையும், பார்ப்பனியமாக்க இதோ, என்னால் இயன்ற ‘அனுமான்’ உதவி என்று ‘விபிஷணராக’ அவதாரமெடுத்துள்ளது ‘சன்’ டி.வி.!

மெகா தொடர்களை அறிமுகப்படுத்தி பெண்களை அதில் மூழ்க வைத்து தமிழ்நாட்டில் குடும்ப - சமூக உறவுகளில் கடும் நெருக்கடிகளை உருவாக்கியதில் ‘சன்’ தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அடுத்த கட்டமாக, இவர்கள், ‘இராமராஜ்யத்துக்கு’ தாவியுள்ளார்கள் இதற்கான காரணத்தை, ஆழமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சி மீதும் - கலைஞர் மீதும் - சன் தொலைக்காட்சிக்குள்ள குடும்ப பகை காரணமாக தனது கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!

திராவிட இயக்க அரசியலை மூலதனமாக்கி, தொலைக்காட்சி நிறுவனத்தையும், தொழில் நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த ‘சன்’ டி.வி. குழுமத்தார்! தமிழினத்தை அவமதிக்கும் இராமாயணத்தை எரிக்கச் சொன்னார் அண்ணா! ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் இராமனை ‘தேசியத்’ தலைவனாக்க முயன்ற பார்ப்பன இராஜகோபாலாச்சாரிக்கு பதிலடி தந்து, ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் ராமனின் பார்ப்பன சுயரூபத்தை, கிழித்துக் காட்டினார் கலைஞர். ‘சன் டி.வி.’ குழுமத்தின் நாயகராகப் போற்றப்படும் முரசொலி மாறன் - 1995 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் இராவணனின் பரம்பரை’ என்று பெருமிதத்தோடு அறிவித்தார். ஆனால் அவரின் வாரிசுகளோ, அந்த உணர்வுகளுக்கு சமாதி கட்ட துடிக்கிறார்கள்!

இந்திய அரசின் ‘தூர்தர்ஷன்’ ஆண்டுக்கணக்கில் ஒளிபரப்பிய ‘இராமாயணத் தொடரால் உந்தப்பட்ட மக்களின் மத உணர்வை - மத வெறியாக்கி - ‘இராமன் கோயிலுக்கான’ அஸ்திவாரமாக்கி, அதை ஆட்சி பீடமேறுவதற்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டது பா.ஜ.க. கூட்டம்! மீண்டும் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க, இவர்களுக்கு ‘ராமன்’ தேவைப்படுகிறான். அதற்கான சதிவலை நாடு முழுதும் பின்னப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அதற்குள்ளே ‘ராமனை’த் தேடி, அந்த கற்பனை ராமனை தமிழகத்திலிருந்து இந்தியா முழுதும் தேர்தல் விற்பனைக்குக் கொண்டு போக முயற்சிக்கிறார்கள். அந்த விற்பனைக்கு மக்கள் சந்தையைத் தயார்படுத்தும் சதி வலைக்குள் ‘சன்’ தொலைக்காட்சி விருப்பத்தோடு இடம் பிடித்திருக்கிறது.

அயோத்தியில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடு முழுதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது, தமிழகம் மட்டும் ‘பெரியார் மண்ணாக’ தனது அமைதியை வெளிப்படுத்தி கம்பீரமாக எழுந்து நின்றது. பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் - ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று தமது சமூகத்தினருக்கு அறிவுரை கூறினார். பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி! அந்த எச்சரிக்கையை ‘வேதவாக்காகக்’ கருதி வரும் கூட்டம், இப்போது இராமாயணத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் எப்போதுமே பார்ப்பனர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்கத் துடிக்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் - இப்போது பச்சையாகவே வெளிவந்து விட்டது; வரலாறு இவர்களை மன்னிக்காது.

ஆனாலும் திட்டவட்டமாக கூறுகிறோம் - இது இராமாயன காலமல்ல; துரோகத்தை தமிழர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.

-விடுதலை ராசேந்திரன்.

நன்றி: புரட்சி பெரியார் முழக்கம், www.keetru.com

வியாழன், ஏப்ரல் 03, 2008

விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை ஒரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள் . . . அவர்கள் நமக்குச் சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள், என மனசு கனக்கப் பேசுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.


உணவே மருந்து என்ற நிலை மாறி, இன்று உணவு விஷமாகி விட்டது. இந்த விஷ உணவுகளிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தன் வயதையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுக்க பயணித்து உழைப்பவர் நம்மாழ்வார். அவரை நம் "உண்மை" இதழுக்காகச் சந்தித்தோம்.


உங்களைப் பற்றி முதலில் சொல்லுங்கள்.


என் பெயர் கோ. நம்மாழ்வார். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் இளங்காடு கிராமம். கோவிந்தசாமி - ரெங்கநாயகி என் பெற்றோர்கள். தொடக்கக் கல்வியைக் கிராமத்தில் முடித்த நான், இளங்கலை வேளாண்மைப் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பின்னர் 1963 இல் கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.


அங்கு ஒரு துண்டு நிலத்தை எடுத்து அதைக் கணக்கிட்டேன். அதற்காக உழைத்து, உழுது, விதைத்து, உரமிட்டு, அறுவடை செய்து அதனால் கிடைக்கும் பயன் குறித்துக் கணக்கிட்ட போது ஏமாற்றமும, அதிர்ச்சியுமே மிச்சமாகி இருந்தது. அதனால் அவ்வேலை எனக்கு மனநிறைவைத் தரவில்லை. எனவே விவசாய முறையில் மாற்றம் வேண்டுமென முடிவு செய்தேன். விளைவு அரசு வேலையை உதறிவிட்டேன்.


அந்த நேரத்தில் திருநெல்வேலி, களக்காடு எனும் சிற்றூரில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆர்பி டொமினிக் பியர் என்பவர் அமைதித்தீவு (Island of peace) எனும் பண்ணையைத் தொடங்கியிருந்தார். இது பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் இந்த இடத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன்.


பொதுவாக நம் நாட்டு விவசாயம் எந்த நிலையில் உள்ளது? நம் நாட்டு விவசாயம் agriculture என்பதாக இருந்தது agribusiness - ஆக மாறிவிட்டது. 1960 வரை விவசாயம் மக்கள் சார்ந்ததாக இருந்தது. பின்னர் தொழில் சார்ந்ததாக மாறிப்போனது.


விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்கி விற்பவரே இங்கு பணக்காரராக இருக்க முடியும். 10 மாதம் பாடுபட்டு ஒரு பொருளை விளைய வைக்கும் விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.13 கிடைக்கும். அதை வாங்கும் ஒரு வியாபாரி இரண்டே நாளில் ஒரு கிலோவை ரூ.26 க்கு விற்றுவிடுவார். இங்கு விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.


நிலம் உணவு உற்பத்திக்கு பயன்பட்ட வரை ஒரு பிரச்சினையும் இல்லை. அதே நிலத்தை வியாபாரமாகப் பார்க்கத் தொடங்கியதும் ஆபத்தும் வந்துவிட்டது.


எந்த வகையான ஆபத்து வந்தது?


நம் முன்னோர்கள் தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்து வாழ்ந்தார்கள். பின்னாளில் இந்த உற்பத்தியில் இலாபம் பார்த்த வியாபாரிகள் மீண்டும் மீண்டும் உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டினர். குறிப்பாக வெளிநாட்டு உர நிறுவனங்கள் தங்களின் உரத்தைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சலைப் பெறலாம் என ஆசை காட்டினர்.


இதன் விளைவாக நமது நிலத்தில் இரசாயனம் கலந்த யூரியா, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், டைஅமோனியம் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் போன்ற எண்ணற்ற உரங்களைப் போட்டு நிலத்தைச் சாகடித்து விட்டார்கள். இப்போது நமது நிலம் செத்துப் போய்விட்டது.இதோடு விட்டனவா வெளிநாட்டு நிறுவனங்கள்? இதுவரை இரசாயன உரங்களைத்தான் விற்பனை செய்தார்கள். இப்போது நேரடியாக விஷத்தையே விற்பனை செய்கிறார்கள். திம்மட், பியூரிடான் போன்றவைகள் கடுமையான விஷத்தன்மை உடையன. விஷத்தை மருந்து என்கிறான். ஆனால் அப்புட்டியிலேயே சிறிய எழுத்துகளில் விஷம் என எழுதியிருக்கிறான். நாமும் அதை மருந்து எனப் பயன்படுத்தி நிலத்தைப் பாழ்படுத்திவிட்டோம்.


நம்முடைய வேளாண்மை பாழ்பட்டுப் போனதற்கு வெளிநாட்டு உர நிறுவனங்களுக்குப் பெரும் பங்குண்டா? நிச்சயமாக உண்டு. பொதுவாகக் களைக் கொல்லி மருந்தைத் தொடர்ந்து போட்டாலே நிலம் கெட்டுவிடும். இந்நிலையில் பெஸ்டிசைடு, இன்செக்டிசைடு, பங்கிஸ் சைடு, ஹெர்பிசைடு என ஏராளமான பூச்சிக் கொல்லி மருந்துகளை ( முழுக்க இரசாயனம் கலந்தவை) நாம் பயன்படுத்தி வருகிறோம். “Cide” என முடிந்தால் அது கொல்வதைக் (கொலை) குறிக்கும். இன்செக்டி சைடு என்றால் பூச்சிகளைக் கொல்லும் மருந்து, பங்கிஸ் சைடு என்றால் பூஞ்சானை கொல்லும் மருந்து, இதுவே ஜினோசைடு, என்றால் மனிதனை மனிதன் கொலை செய்வது.


சூசைடு (Sucied) என்றால் மனிதன் தன்னைத் தானே கொலை ( தற்கொலை) செய்வது. ஆக இப்படி ஏராளமான இரசாயனம் மற்றும் விஷம் கலந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை மண்ணில் போட்டதன் விளைவை இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். மண்புழு உழவனின் நண்பன் என்கிறோம். இந்த இரசாயன உரங்களைப் போட்டு மண்புழுக்கள் அனைத்தையும் சாகடித்து விட்டோம்.


பெரும் முதலாளிகள் விற்பனைக்காகப் பல பொய்களைக் கூறுவார்கள். அவர்களின் இலாப வெறிக்காக இந்தி-யாவில் தோன்றிய அனைத்து அரசுகளுமே உதவி செய்து வருகின்றன. இந்திய உரங்கள் எரு போன்றவை. வெளிநாட்டு உரங்கள் விஷம் போன்றவை. உரம் வேறு; விஷம் வேறு!


அவனுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கிறது பார் என நம் நாட்டில் சொல்வதுண்டு. உரம் என்பது உள்ளுக்குள் உள்ள ஊக்கத்தைக் குறிப்பது. நம் நாட்டு நிலங்களில் உரம்தான் எருவாக இயற்கையாகவே அமைந்திருந்தது. ஆனால் அவற்றை நாமே அழித்தொழித்து விட்டோம். கடந்த 5000 ஆண்டுக்காலமாக நாம் விவசாயம் செய்து வருகிறோம். அப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை; எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.


ஆனால் இந்த 50 ஆண்டுக்காலமாக நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் உரத்தைப் போட்டு விவசாயம் செய்து வருகிறோம். 1960 வரை ஆண்டுக்கு 5000 டன் உரங்களைப் பயன்படுத்தி வந்தோம். அதன்பிறகு ஆண்டுக்கு 13 இலட்சம் டன் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.


விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்-படுவதாகத் தெரிவதில்லையே?


கடந்த 10 ஆண்டுகளில் 1,66,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசாங்கமே புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. 300 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரில் கூட நஞ்சு கலந்திருக்கிறது. உணவும் நஞ்சாகிப் போனது. மக்கள் உணவுக்கு செலவழிப்பதை விட, மருந்துக்கு அதிகம் செலவழிக்கின்றனர்.


தஞ்சாவூரை நெற்களஞ்சியம் என்கிறோம் . ஆனால் தஞ்சாவூரில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு ஆந்திராவிலிருந்து அரிசி வருகிறது. நம் தேவைக்குப் போக, பிறருக்கு அனுப்பிய காலம் போய்விட்டது. நாமே பிறரிடம் கையேந்தும் நிலையில் இருக்கிறோம்.பொதுவாகவே உணவுப் பொருள்கள் அதிக தூரம் பயணம் செய்யக் கூடாது. அந்தந்த மாவட்டத் தேவைகளை அங்கேயே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி செய்பவரும், நுகர்வோரும் அருகிலேயே இருந்தால்தான் விலையேற்றமும் இருக்காது.


விஷத்தைப் பூமியில் போடாத அந்தக் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. இன்று உணவே விஷமாக மாறிப் போனது. மருத்துவமனை கட்டுவது பெரிய விசயமல்ல; நோயில்லாமல் வாழ்வதே சிறப்பாகும். விலைவாசி உயர்வு மற்றும் நோய்கள் வருகிற போது மட்டும் மக்கள் தற்காலிகமாகக் கொதித்துப் போகிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் உள்ள உழவர்களின் நிலையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உழவர்கள் சிறப்பாக இருந்தால்தான் மக்கள் நலமுடன் வாழ முடியும்.


இப்போது நீங்கள் கூறும் பிரச்சினைகளுக்கு முற்றிலுமான மாற்று வழிதான் என்ன?


மாற்றுவழி என்று புதிதாக ஒன்றும் இல்லை. நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றிய இயற்கை விவசாய முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அது ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர்களுக்கான சேவை மையம் தொடங்கப்பட வேண்டும். முதலில் உழவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இரசாயன உரம் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் பெற முடியும் என்கிற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ, விளைநிலம் செத்துவிடும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.


பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மண்புழு உற்பத்தி செய்கிறார்கள். அதுபோல ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும். நம்மால் முடிந்தளவு அந்தந்தப் பகுதிகளில் இயற்கை வேளாண்மைக்கு உதவிகள் செய்ய வேண்டும்.


வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்ப்பது பெரிய விசயமல்ல. சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் கியூபா நாடு அமெரிக்காவை எதிர்த்துத் தலைநிமிர்ந்து வாழ்கிறது. கியூபா நாட்டிற்கு எந்தப் பொருளையும், யாருமே ஏற்றுமதி செய்யக் கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. ஆனாலும் கியூபா மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தாங்களே இயற்கை வழியில் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். கரும்பு மட்டுமே விளைந்த அந்த கியூபா நிலத்தில் இன்று கோதுமை, காய்கறி என அனைத்துமே விளைகின்றன. இன்னும் சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட பகுதி அந்த இடத்திலேயே உற்பத்தி செய்கிறார்கள்.


உதாரணமாக திருச்சி மாவட்ட மக்களுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் திருச்சி மாவட்டத்திற்குள்ளேயே உற்பத்தியாகிறது. அதனால் பொருள்கள் விரைவாகவும், தரமாகவும், குறிப்பாக விலை மிகக் குறைவாகவும் கிடைக்கிறது. மாறாக திருச்சி மக்களுக்குக் கோதுமை பஞ்சாப் மாநிலத்திலிருந்தும், அரிசி ஆந்திராவிலிருந்தும் வந்தால் விலைவாசி உயராமல் என்ன செய்யும்? எனவே கியூபா நாட்டை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல வியட்நாம் நாடு. அமெரிக்காவால் அழிந்த நாடுகளில் அதுவும் ஒன்று. இப்போது விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, அந்நாட்டில் ஏழ்மை குறைக்கப்பட்டுள்ளது.


பணக்காரனைக் கோடீஸ்வரனாக ஆக்கும் வேலையைத்தான் நம் நாட்டில் செய்து வருகிறோம். கொஞ்சம் பணக்காரர்கள், நிறைய ஏழைகள், இதுதான் இந்தியா! எனும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்கிறது. ஆனால் அது வெள்ளமாக மாறுகிறது. அம்மழை பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக மாற வேண்டும். அந்தச் சூழலை நாம் உருவாக்க, வேண்டும்.


மதுரை நீதிமன்றம், புதுக்கோட்டை பேருந்து நிலையம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவை கூட ஏரியில்தான் உள்ளன. அதுமட்டுமின்றி மதுரையைச் சுற்றி 40 அரசுக் கட்டிடங்கள் ஏரியில் உள்ளன. சென்னையில் 200 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் காணவில்லை. இதுபோன்ற சூழல்கள் இருந்தால் விவசாயம் எப்படிச் செழிக்கும்? எனவே இரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.


இந்தியாவில் பசுமைப்புரட்சி என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சுத்தப் பொய். சென்ற வாரம் தமிழக வேளாண்துறைச் செயலாளர் சுர்ஜித் கே. சௌத்ரி அய்.ஏ.எஸ் அவர்கள் ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் பசுமைப் புரட்சி எனச் சிலர் கூறிவருகிறார்கள். அவை காலத்திற்கு சரிப்பட்டு வராத விசயங்கள். வேளாண் விஞ்ஞானி எனக் கூறப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு நாம் தவறான பாதையில் சென்று விட்டோம், என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.


இப்போது தமிழ்நாட்டில் யாரேனும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்களா?


இயற்கை வேளாண் முறையைக் கைவிட்ட காரணத்தால் இந்தியா முழுவதும் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது கியூபா நாட்டை முன்னோடியாகக் கொண்டு கேரளா மாநிலத்தில் அந்த அரசாங்கமே இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகிறது. அது தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு அண்மையில் நானும் சென்று வந்தேன்.


தமிழ்நாட்டில் ஒரு சிலர் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வெற்றி பெற்று வருகிறார்கள். பட்டுக்கோட்டை அருகிலுள்ள கிளாமங்கலம் அருகில் ஆடிட்டராக இருந்த அய்யாவு என்பவர் 65 ஏக்கர் நிலத்தில் மிகச் சிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தென்னை மரங்கள், லவங்கு செடி, கோகோ செடி, சாதிக்காய், காப்பிச் செடி என அனைத்தும் அங்கு விவசாயம் செய்யப்படுகிறது. உதகையின் தட்ப வெப்பத்தில் மட்டுமே விளையக் கூடிய மிளகு போன்றவையும் பட்டுக்கோட்டையில் விளைகின்றன.


அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுகம்பட்டி கிராமத்திலும் இயற்கை விவசாயம் முன்னுதாரணமாகச் செய்யப்பட்டு வருகிறது. நான் தொடக்கத்தில் களக்காடு பகுதியில் பணியாற்றிய போது அங்குள்ள இளைஞர்களுடன், இயற்கை வேளாண்மை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி அடிக்கடி நடைபெறும். அந்நிகழ்ச்சியில் ப.சுப்பிரமணியன், ப.சீத்தாராமன் ஆகியோர் தவறாமல் பங்கேற்பர். அவர்களிருவரும் தற்போது பெரியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். எனது குடும்பம் பெரியார் பாரம்பரியத்தில் வந்ததுதான்!


எனப் பெருமையோடு குறிப்பிடும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி அய்ரோப்பா உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி வருகிறார்.


2004 இல் சுற்றுச்சூழல் சுடரொளி விருது, 2007 இல் காந்தி கிராமப் பல்கலைக்கழத்தின் முனைவர் பட்டம், கிராமப்பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம், ஈரோட்டில் மக்கள் சிந்தனையாளர் விருது, பாரதியார் விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளார். தமிழப் பத்திரிகைகளில் தொடர்நது எழுதி வரும் இவர் தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுசூழல் இயக்கம் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.


- சந்திப்பு: வி.சி.வில்வம்


நன்றி: உண்மை

புதன், ஏப்ரல் 02, 2008

கேள்விகளுக்குட்படுத்தப் பட வேண்டிய திருமண அமைப்புகள் by நந்தா

கேள்விகள் ஏதும் கேட்காமல் அன்றாட வாழ்வில் நமது குடும்பத்தில் நடக்கும் சிறப்பு விசேஷங்களில், நாம் கடைபிடிக்க ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களிலும், நாம் சார்ந்த சாதீயத்தின் உட்கூறுகள் பல்லிளித்துக் கொண்டுதான் இருந்துக் கொண்டிருக்கின்றன. நமது சடங்குகளைக் கேள்விக்குட்படுத்தாது இருக்கும் வரை நமது சமூகத்தின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இடத்திலும் இந்த சாதீயக் கூறுகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும் .

இதை ஏன் இப்படி செய்கிறோம்? இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்டுத் தெளிவு பெற வெகு சிலரால் மட்டுமே முடிந்திருக்கின்றது.

வளர்ந்து வரும் எந்த ஒரு விஞ்ஞானத் துறையில் வேலை செய்யும் ஆணோ , பெண்ணோ, ஜாதகம் பார்த்து, முகூர்த்தக் கால் ஊன்றி,பாலிகை போட்டு, கூரைப் புடவை கட்டி(கட்டச் செய்து), தாலி கட்டி, மந்திரம் ஓதி, வகிட்டில் குங்குமமிட்டு, காலில் மெட்டி போட்டு (மற்றும் போட்டுக் கொண்டு), அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, ஏழடி நடந்து,அக்கினியை வலம் வந்து, கணையாழியை எடுத்து , இன்ன பிற சடங்குகள் செய்துதான் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இதில் தமிழ் மட்டும் படித்தவர்களும் சரி, சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களும் சரி எவரும் விதி விலக்கல்ல.

இவற்றில் ஒவ்வொருவருக்கும் தான் சார்ந்துள்ள சாதியைப் பொறுத்து இந்த சடங்குகளும், வரிசை முறைகளும் மாறிக் கொண்டிருக்கும். தாலி ஒன்றிலேயே , சிறுதாலி, பெரு தாலி, முப்படைத் தாலி என்று அதே சாதியின் ஒவ்வொரு உட்பிரிவிலுமேயே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன. இது எல்லாவற்றுகும் மேலாக, தமது சமூக அமைப்பில் இப்படித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பூதாகரமான அறிவுடன், எந்த ஒரு மணமக்களின் பெற்றோரும் இருப்பதாய்த் தெரியவில்லை. குறைந்தது இரண்டு தலைமுறைகளைப் பார்த்த அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூத்தவர் மேடையில் கட்டளைகள் பிறப்பிக்க மேற்குறிப்பிட்ட காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும்.

பெரிதாய் ஒரு குற்ற உணர்ச்சியோ அல்லது ஏன் இப்படி செய்ய வேண்டும் என்ற கேள்வியை யாரும் கேட்க முன் வராததற்குக் காரணம் நாம் இதை எல்லாம் பார்த்துப் பார்த்தே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் அவ்வப் போது நடக்கும் சுய மரியாதை திருமணங்களையே நாம் ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்க்கின்றோம். என் அப்பா இப்படித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனது தாத்தா இப்படித்தான், இத்தனை சடங்குகள் செய்துதான் திருமணம் செய்து கொண்டார். அவரது அப்பாவும் அப்படியேத்தான். ஆகையால் இத்தனை சடங்குகளை செய்ய நான் ஏன் யோசிக்க வேண்டும் என்ற எண்ணமே நம் எல்லோருக்குள்ளும் மேலோங்கி நிற்கின்றது. கேள்விகளும் எழும்ப மறுக்கின்றது.

திருமணம், காது குத்தல், மொட்டையடித்தல் ,சீமந்தம், கருமாதி என்று நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியின் சடங்குகளும், சாதியப் பொறுத்தே அமைவதால்தான் கவுண்டர் சாதியில் பிறந்தவர்கள் கவுண்டர் சாதியிலேயும், முதலியார் சாதியிலே பிறந்தவர்கள் முதலியார் சாதியிலேயே மணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். இதற்கு எந்த சாதியினரும் விதி விலக்கல்ல.

இவை எவற்றிற்குமே தீர்வு காணாமல், நம் சமூகத்தில் புரையோடிப் போய்விட்ட இந்த சாதீயக் கூறுகளை ஒழிக்க முடியாது.

1938ல் நடைபெற்ற தமிழர் திருமண மாநாட்டில் முதன் முதலாக கலாச்சாரம் என்ற பெயரில் நடை பெறும் இத்தகைய திருமண அமைப்புகள் கேள்விக்குட்படுத்தப் பட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த மாநாடும் அதற்குப் பின்பு அதைக் கேள்விக்குட்படுத்தியவர்களும் புரோகிதர் எதிர்ப்பு மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு என்று தன் வட்டத்தைச் சுருக்கிக் கொண்டார்கள். இன்ன பிற சடங்குகள் தமிழனின் கலாச்சாரங்களாகக் கற்பிக்கப்பட்டு, அவை தேவைகளுக்கேற்ப கூடவோ, குறைச்சலாகவோ அந்த காலகட்டத்தில் அடக்கி வாசிக்கப்பட்டன்.

அதற்குப் பின்பு வெகு காலங்களுக்குப் பிறகே, நாம் ஓதும் மந்திரங்களிலும், சடங்குகளிலும் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட பிற்போக்குத் தனங்களையும், பெண்ணடிமைத் தனங்களையும், முழுமையாகப் புறம் தள்ளி விட்டு ஒரு முழுமையான, சமத்துவம் நிரம்பிய, பெண்ணடிமைத் தனம் இல்லாத, சுயமரியாதைத் திருமண அமைப்பு முறை பெரியாரால் முன் மொழியப்பட்டது.

தமிழர் திருமண மாநாட்டில் முன் வைத்த, புரோகிதரற்ற, சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாத, ஆனால் பிற்போக்கு மற்றும் பென்ணடிமைத்தனங்கள் நிறைந்த சடங்குகள் நிறைந்த திருமண அமைப்புகளுக்கு மாற்றாக பாவேந்தர் பாரதிதாசன் "திராவிடர் புரட்சித் திருமணம்" என்ற புதிய வடிவத்தைக் கொணர்ந்தார். அதில்தான் தாலி கட்டும் முறைக்கு எதிராக மோதிரம் மாற்றும் முறையைக் கொணர்ந்தார். ஆனால், "கணவன் விரும்பும் பெண்ணாக இரு " என்று அறிவுரைகளனைத்தும் மணப்பெண்ணை நோக்கியே அமைந்துள்ளதும், கணையாழி மாற்றுதல் போன்ற அவர் மேற்கொண்ட இன்ன பிற சமரசங்களும் தான் ஒரு முழு சுயமரியாதைத் திருமணத்தை பெரியார் வடிவமைக்க காரணமாயிருந்தது.

28.05.1928 ல் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் பெரியாரால் நடத்தி வைக்கப்பட்டது.

1953ல் சென்னை உயர்நீதிமன்றம், தெய்வானை ஆச்சி -சிதம்பரம் செட்டியார் பாகப்பிரிவினை வழக்கில் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. நெருப்பை ஏழுமுறை சுற்றிவரும்- சப்தபதிச் சடங்கு நடக்காத திருமணத்தை வழக்கமான திருமணமாக அங்கீகரிக்க மறுத்தது நீதிமன்றம். இதன் மூலம் எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே உறவு முறையை நிர்ண்யிக்கின்றன என்ற கருத்துக்கள் நம் அடி மனதில் எவ்வளவு ஆழமாய் ஆணி அடித்து ஏற்றப் பட்டிருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்.

1954இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தனித்திருமணச் சட்டத்தின் மூலம் சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் 1967இல் அண்ணா அவர்கள் கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டத்தின் மூலமே சுயமரியாதைத் திருமணத்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்தது. சரி இவை யாவும் 50 வருடங்களுக்கு முன்பு. நடந்தவை. ஆனால் தற்போது????

எனக்குத் தெரிந்த வரை (அல்லது என் அனுபவத்தைப் பொறுத்த வரை) தற்போது சுய மரியாதைத் திருமணங்கள் ஆட்களைப் பொறுத்து சில சமரசங்களுடனும், சில சடங்குகளுடனும் இணைந்தே நடை பெற்று வருகின்றது.

ஆனால் அவற்றை விட மோசமான ஒன்று மக்களின் மனதில் கற்பிக்கப் ப்ட்டு விட்டிருக்கின்றது. "அது இத்தகைய திருமண முறை தனக்கு சம்பந்தமற்றது. இது கறுப்புச் சட்டைக்காரர்களின் திருமண முறைதானேயொழிய, மந்திரம் ஓதி, தாலி கட்டி, தனது சாதியின் உட்பிரிவின் கீழ் வரும், எல்லாவித சடங்குகளையும் (அவை பிற்போக்குத்தனங்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி) முறையாகக் கொண்டு செய்து கொள்ளும் திருமணங்கள்தான் தமிழர் திருமண முறை. அவைதான் நாம் கடைபிடிக்க வேண்டியவை. அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை என்பதே."

இவற்றை நாம் கேள்விகளுக்குட்படுத்தாமல் இருக்கும் வரை, இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், இன்ன சாதியில் இந்த உட்பிரிவைச் சேர்ந்த மாதம் இத்தனை லகரங்கள் சம்பாதிக்கும், தற்போது அமெரிக்காவில் ஆன்சைட்டில் இருக்கும், இந்த மணமகனுக்கு, வேலைக்குப் போகும், குடும்பப் பாங்கான, அதே சாதியில், அதே உட்பிரிவைச் சேர்ந்த சேர்ந்த மணப்பெண் தேவை எனும் விளம்பரங்கள் ஹிந்து பேப்பரிலும், மேட்ரிமோனியல் தளங்களிலும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும் .

- நந்தா(medianandha@gmail.com)

நன்றி: www.keetru.com

செவ்வாய், ஏப்ரல் 01, 2008

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்''

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்கிற நூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய ரா. முருகவேள் மற்றும் பதிப்பித்த விடியல் பதிப்பகத்தினருக்கு முதலில் நம் வாழ்த்துகள். மூல ஆங்கில நூலை வாசித்தது போன்ற மிகவும் நெருக்கமான, எந்த நெருடலுமின்றி இடைவிடாத பயணமாக நூல் தன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. மிகவும் பொருத்தமான வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், அடிக்குறிப்புகள் என ஒரு முக்கிய நூலுக்குத் தேவையான அனைத்து குணங்களும் பொருந்தியதாக விளங்குகிறது.
.
உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - உடனடியாக இந்தக் கட்டுரை வாசிப்பதை நிறுத்திவிட்டு, இந்நூலைக் கையில் எடுங்கள்; அதற்கு உங்களை ஒப்புக் கொடுங்கள்.
.
பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வங்கிகள் ஆகியவற்றுக்கு ரகசியமாகவும் வெளிப்படையாகவும் ஒத்துழைக்கும் அரசுகள் - என இந்த மூவர் கூட்டணியின் இயக்கத்தை மிக விரிவாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார் ஜான் பெர்கின்ஸ். அமெரிக்காவின் பல பன்னாட்டு நிறுவனங்கள், சி.அய்.ஏ., ஆளும் வர்க்கம், நிறுவன அதிகார வர்க்கம் என சகலமும் வெவ்வேறு அல்ல; ஒரே மரத்தின் கிளைகளே என்பதையும் வெளிச்சப்படுத்துகிறார். அமெரிக்காவின் உள்கட்டுமானங்கள் பற்றிய புதிய சித்திரங்கள் பல உருவாகின்றன. உலகைத் தன் பிடிக்குள் கொண்டுவர அமெரிக்கா தீட்டிய திட்டங்கள், அதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் என மாபெரும் வலை நம் முன் விரிந்து செல்கிறது. மேற்கூறியவை, ஏகாதிபத்தியம் பற்றி அறிந்திருப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்தவை தான் என்ற போதிலும், இந்த நூல் ஒரு புனைவைப் போல் நாவலுக்கு ஒப்பாக நம் மனங்களை லாவகமாகப் பற்றிக் கொள்கிறது.
.
ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல பெர்கின்ஸ், நம்மைப் பல அதிசயத்தக்க மறைவான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். நாம் கண்டிராத, காண முடியாத இடங்கள் அவை. வெவ் வேறு குரல்கள் நம் செவிப்பறைகளில் அலைமோதி, நம்மை வேதனைக்குள்ளாக்குகின்றன. பொம்மலாட்டக்காரர், பழங்குடியினர், இந்தோனேசிய ஆங்கில மாணவி, ஆப்கான் பிச்சைக்காரர், இளவரசர் டயிள்யூ, பொன்னிறக் கூந்தல் கொண்ட அழகான இளம் பெண்கள், நீலக் கண்களுடன் சாலி, புஷ் குடும்பத்தினர், பின்லேடன், இடி அமின், அழுகிப் போன உடல்கள், வீச்சமடிக்கும் துர்நாற்றம், 9/11 கட்டட இடிபாடுகள், கெரில்லாக்கள், அமேசான் காடுகள், சவுதி அரச குடும்பத்தினர், ரோல்டோஸ், ஓமர், அலாண்டே, ‘மெய்ன்' நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அதன் பங்குதாரர்கள், மிஷினரிகள், பேதி மருந்து புட்டிகள், மதுக் கோப்பைகள் என இந்நூல் நம் கண்முன் நூற்றுக்கணக்கான காட்சிகளையும் படிமங்களையும் உருவாக்கி வித்தை காட்டுகின்றன. நாள்தோறும் 24,000 பேர் பட்டினியால் செத்து மடிய, மறுபுறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செழிப்புடன் விளக்கொளியில் மின்னுகிறது.
.

இதுவரையிலும் நாம் படித்த பல நூல்கள் மனதில் சமமாகத் தோன்றிய வண்ணம் உள்ளன. ‘பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்ட நூல்கள், காஸ்ட்ரோ அலாண்டே, சேயின் உரைகள்; சூசன் ஜார்ஜின் மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சனைகள்; மைக்கேல் மூரின் பாரன்ஹீட் 9/11 திரைப்படம் எனப் பட்டியல் நீண்டு செல்கிறது. குறிப்பாக, இந்தப் புத்தகத்தின் 40 சதவிகித பக்கங்களை மைக்கேல் மூரின் திரைப்படத்தில், புள்ளிவிவரங்களுடன் காட்சி வடிவமாகப் பார்க்கலாம்.
.
அதைப் போலவே இப்புத்தகம் நெடுகிலும், நம் இந்தியச் சூழல் கண்முன் தோன்றிய வண்ணமிருக்கிறது. ஆனால், இந்தியச் சூழலில் பொருளாதார அடியாட்களுக்கான அவசியம் ஏதும் இல்லை. மன்மோகன் சிங், அலுவாலியா, ப. சிதம்பரம் என்ற மூவர் கூட்டணி, பெர்கின்சின் தேவையை இல்லாமல் செய்துவிட்டது. இந்தியா வாங்கி குவித்துள்ள கடன்கள், இங்கு பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம், 50 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முட்டாள்தனமான திட்டங்கள் என அனைத்தும் மனசஞ்சலத்தின் உச்சங்கள்தான்.
.
சவுதி அரேபியாவைப் போல் சென்னையில் ஓனிக்ஸ் நிறுவனம் குப்பை அள்ளுவது, பாதாள சாக்கடைகள், அணு உலைகள், நர்மதா அணை எனப் பல நூறு திட்டங்களில் முடங்கிக் கிடக்கும் கோடான கோடி டாலர்கள்; அதைவிட இந்தியா முழுவதும் போடப்பட்டு வரும் நான்கு வழி சாலைகள் - நடப்பில் நாம் காணக்கூடிய எடுத்துக்காட்டுகளாகும். முற்றிலும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை யாருக்கான சாலை? இந்த சாலைகளை ஒட்டிச் செல்லும் பல கிராம சாலைகள் ஆண்டுக்கணக்காகப் பராமரிப்பின்றி கிடப்பது ஏன்? இந்த சாலைகளில் எளிய இந்தியர்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? அலுவலகக் கோப்புகளின் துர்நாற்றம், இந்திய சிவில் சமூகத்தின் பரப்பளவெங்கும் வீசிக் கிடக்கிறது.
.
நம் ஊரில், மாநிலத்தில், நாட்டில் உலாவரும் அப்பட்டமான அமெரிக்க முகவர்கள் வரிசையாக மனக்கண்களில் வந்த வண்ணமிருக்கின்றனர். அவர்கள் அரசியல்வாதிகளாக, நிறுவன அதிகார வர்க்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்களாக, தொண்டு நிறுவனங்களின் தலைவர்களாக, பாதிரியார்களாக, பெரும் முதலாளிகளாக, பத்திரிகையாளர்களாக, மீடியா பிரமுகர்களாக, திரைப்பட நடிகர்களாகப் பல்வேறு உருவங்களில் உலா வருகிறார்கள். யாரைப் பார்த்தாலும் இனி நம்பிக்கை வராத மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார் பெர்கின்ஸ். இந்தோனேசிய பொம்மலாட்டக்காரருக்கு இருக்கும் அரசியல் உணர்வு, ஏன் இந்தக் கேடு கெட்ட நடுத்தர வர்க்கத்திற்கு இல்லை?
.
பனாமா, ஈக்வெடார், நிகரகுவா, சவுதி அரேபியா, கொலம்பியா, இந்தோனேசியா எனப் பல நாடுகள் ஏகாதிபத்தியத்தால் வீழ்ந்த கதை அடுக்கடுக்காய் நம் கண்முன் விரிகிறது. பழங்குடியினர் மத்தியில் மிஷினரிகள் முதலில் உதவிகளை செய்து விட்டு, பின்பு அவர்களின் நிலத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குத் தருவது; பல நாடுகளின் அரசுகள் திட்டமிட்டு கவிழ்க்கப்படுவது; சவுதி அரச குடும்பம் மற்றும் ஜார்ஜ் புஷ் குடும்பத்தினர், பின்லேடன் உள்ளிட்ட பல தீவிரவாத குழுக்களுக்கு அளித்த பெரும் நிதியுதவிகள்... இந்தப் பொருளாதார திட்டங்கள் எந்த விதத்திலும் வியட்நாம் போருக்கு சளைத்தவை அல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறார் பெர்கின்ஸ்.
.
பெர்கின்சின் மொழி நடை - பொதுவாகவே அவர்களுக்கு இருக்கும் பரந்த வாசிப்பையும், மொழி வளத்தையும் செறிவாக்குகிறது. இந்நூலில் அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களை, கோப்புகளை அலுவலக நிமித்தமாக வாசிப்பதைப் பார்க்க முடிகிறது. பெர்கின்சுக்கு அவரது வேலையில் இருக்கும் ஈடுபாடும், அவரது வாசிப்புக்கு காரணமாய் அமைகிறது. அதே நேரத்தில், புத்தகம் நெடுகிலும் பெர்கின்ஸ் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் அவரது எண்ண ஓட்டங்கள், மீண்டும் மீண்டும் வாசித்ததையே வாசிப்பது போன்ற அயர்வைத் தருகிறது; பல நேரங்களில் அவை எரிச்சலடையச் செய்கின்றன. இந்த எழுத்தின் வாயிலாக பெர்கின்ஸ் தனது மொத்த வாழ்வையும் தற்செயல் நிகழ்வுகளின் கோர்வையாகத் தலைப்பிட விரும்புகிறார். மறுபுறம் தனது மொத்த பணியையும் சட்டத்துக்கு உடன்பட்டதாக (legitimize) உருவகப்படுத்த முயல்கிறார். அதற்காக அவர் நமக்கு அளிக்கும் நீண்ட நெடிய வாதங்கள் நகைப்பிற்குரியதாக மாறுகின்றன.
.
தான் ஒரு தவறான செயலை செய்வதாக உணர்கிறார் பெர்கின்ஸ். தான் செய்யும் பணி குறித்த முழுமையான அரசியல் தெளிவைப் பெறுகிறார். இருப்பினும், அந்த நிறுவனத்தின் பணியாளராக இருந்து பங்குதாரராக அவர் உருமாறும் பயணத்தில் எந்த மனத் தடையும் அவருக்கு இல்லை. டாலர்களை அள்ளிக் குவிக்கிறார். அவரது சொகுசு கப்பல் நீரில் மிதக்கிறது. அவருடைய சுகபோகங்களுக்கு எந்தக் குறையும் இல்லை.
.
இளவரசர் டயிள்யூவுக்கு விருப்பமான அழகான பொன்னிறக் கூந்தல் கொண்ட இளம் பெண்களை அனுப்பி வைத்து, அந்த நாட்டை கடன் வலையில் மூழ்கச் செய்வதற்காக பகல் எல்லாம் அயராது உழைத்துவிட்டு, இரவில் பீர் பாட்டிலும் கையுமாக உட்காரும்போது மட்டுமே - மூன்றாம் உலக நாடுகளின் மீது அவருக்குப் பாசம் பொங்குகிறது. இத்தகைய மனநிலைதான் பிரதி முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன. கேடுகெட்ட, இரக்கமற்ற சூறையாடலை செய்துவிட்டு, அதற்கு அந்த நிறுவனம் பெர்கின்சுக்கு அளிக்கும் பதவி உயர்வையும் நற்சான்றிதழையும் சன்மானங்களையும் - நம்மிடமே பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறார். அந்த உயர்வுகளை நோக்கியேதான், தன் பணியையும் அமைத்துக் கொள்கிறார் பெர்கின்ஸ்.
.
பெர்கின்ஸ் இந்த நூலை எழுதுவதன் நோக்கம் என்ன? ஏன் இந்த நூல் அமெரிக்க சமூகத்தில் பதிப்பு பெறுகிறது? அதிகப்படியான பிரதிகள் விற்பனை என்ற சாதனைப் பட்டியலில் எப்படி இது இடம் பெறுகிறது? இந்த நூலை அமெரிக்க நிறுவன அதிகார வர்க்கம் ஏன் சகித்துக் கொண்டிருக்கிறது? ‘மெய்ன்' நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தால், பெர்கின்ஸ் இத்தகைய நூலை எழுதியிருப்பாரா? என அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் எழுகின்றன.
.
பெர்கின்ஸ் இன்று அமெரிக்க சமூகத்தில் வாழக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவர். தன் சொத்துகளுடன் சுகபோகமாக வாழ்ந்து வருபவர். அவர் தற்பொழுது பெரும் தொகை புழங்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார். அவரது சிறு குற்ற உணர்வின் வடிகாலாகத்தான் இப்பிரதி திகழ்கிறது. அரவது பாவ மன்னிப்பு உரையை, அமெரிக்க சிவில் சமூகம் தனதாக்கிக் கொள்வதற்கான வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம். அமேசான் புத்தக வலைத்தளம், நியுயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் என அதிகப்படியாக விற்பனை ஆனதற்கு இதுதான் காரணம்!
.
தனது வாழ்க்கை முழுவதும் அரசாங்கங்களுடன் உரையாடிய பெர்கின்ஸ், இந்தப் புத்தகத்தில் அத்தகைய அரசாங்கங்கள், நிறுவன அதிகார வர்க்கம், மூன்றாம் உலக நாடுகள் என அவர்களை நோக்கி பரப்புரையை ஆற்றுகிறார். எய்ட்ஸ் நோயுள்ள ஒருவரிடம் கொஞ்சம் சாப்பாட்டில் உப்பு, புளியை குறைத்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்குவது போல, மொத்த மூன்றாம் உலக வாழ்நிலையை நிர்மூலமாக்கிவிட்டு, அதன் அரசுகளை, மக்களை நிரந்தரமான கடன் வலையில் சிக்கவைத்துவிட்டு, அதன் வாழ்வாதாரங்களை, இயற்கை வளங்களை சூறையாடுவதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்து விட்டு, இப்பொழுது பெர்கின்ஸ் நம்மிடம் வந்து - பள்ளிக் கூடத்தில் உரை நிகழ்த்துங்கள், சிக்கனமாக எரிபொருளை செலவழியுங்கள் என்று கூறுவது நகை முரணாக உள்ளது. அவர் கூறும் செயல்பாட்டு யோசனைகள், தொண்டு நிறுவன ‘ப்ராஜெக்ட்' டுக்கு இணையாக இருக்கிறது.
.
ஜான் பெர்கின்சின் வாழ்க்கைக் குறிப்புகள் பலவற்றில் அவர் விவிலியத்தின் அடிப்படையிலான செயல்பாட்டாளர், முன்னறிவிப்பாளர், வலது சாரி ஆர்வலர் என்றே உள்ளது. அவர் விவிலியத்தின் அடிப்படையிலான பல நூல்களை எழுதி உள்ளார். டன்கல் அறிக்கை விவிலியம் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் விசுவாசமான வராக உள்ளார் பெர்கின்ஸ். இந்த நூலில் வருவது போன்றே பேதி மருந்து தடவப்பட்ட உணவை இலவசமாக வழங்கிவிட்டு, சிறிது இடைவெளிக்குப் பிறகு மருந்துகளுடன் பழங்குடியினரிடம் செல்லும் மிஷினரிகள் போல், நம்மிடம் வந்து கழிவிரக்கத்துடன் மன்றாடுகிறார் பெர்கின்ஸ்.
.
இந்த ஒட்டுமொத்த சீரழிவுகள், சுரண்டல்கள் - மனித சமூகத்திற்கே விரோதமான செயல்களுக்கு துணைபோவது மட்டுமின்றி, இவைகளை மக்கள் ஏற்கச் செய்யும் கொடுமையையும் ஊடகங்கள் செய்து வருகின்றன. பெர்கின்ஸ் தயாரித்த போலி புள்ளிவிவரங்களைப் போல, ஊடகங்கள் தொடர்ந்து வர்ண ஜாலங்களை - நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வாயிலாக ஒவ்வொரு நொடியும் பரப்பிக் கொண்டேயிருக்கின்றன. பட்டினியால் வாடும் குழந்தைகளின் முகத்திலும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் சடலத்தின் மீதும், வேலையற்ற இளைஞர்கள் மீதும் ஊடகங்களின் ஜிகினா தூள் சமமாகப் படிகிறது. இந்த மொத்த கொள்ளையின் சரியான பங்கை, பெர்கின்சைப் போல் உலக ஊடகங்களும் பெறுகின்றன. பொழுதெல்லாம் பொய்யைப் பரப்பும் ஊடகங்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து, மக்களை இவர்களின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
.
பெர்கின்சைப் போல் நம்மைச் சுற்றி முகமூடிகளுடனும், முகமூடிகளின்றியும் பலர் உலவுகின்றனர். இவர்களை அடை யாளம் காணும் பணி முக்கியமானது. அதற்கான கையேடுகளைக்கூட நாம் கூட்டாக உருவாக்கலாம். சென்னையில் நங்கூரமிட்டுள்ள ‘நிமிட்ஸ்' அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலிலிருந்து பல பெர்கின்ஸ்கள் (மாலுமிகள்) துடைப்பங்களுடன் சென்னையை சுத்தம் செய்யத் தரையிறங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் சமூக சேவைகளை தொடங்கிவிட்டதாக ‘சன்' தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்திற்கு தலைப்புச் செய்தியாக வழங்குகிறது. பெர்கின்சையும் அவரது பங்காளிகளையும் சேர்த்தே அடையாளம் காண்போம்.
.
இந்நூலிலிருந்து...
.
ஆங்கில மாணவி தீர்க்கமாக என் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள்
.
இவ்வளவு பேராசை கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சுயநலத்தையும், மாளிகை போன்ற வீடுகளையும், பேன்சி ஸ்டோர்களையும் தவிர, உலகில் வேறு விஷயங்களும் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
.
மக்கள் உணவின்றிப் பட்டினி கிடக்கிறார்கள்; நீங்களோ உங்கள் கார்களுக்குத் தேவையான பெட்ரோலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகள் குடிக்க நீரின்றி மடிந்து கொண்டிருக்கின்றன; நீங்களோ நவநாகரிக பாணிகளுக்காக ‘ஸ்டைல்' ‘பேஷன்' இதழ்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
.
எங்களைப் போன்ற நாடுகள் வறுமையில் கழுத்தளவு மூழ்கிப் போயிருக்கிறோம். எங்கள் ஓலக்குரல்கள் உங்கள் செவிகளில் விழுவதில்லை. யாராவது உங்களுக்குச் சொல்ல முயற்சித்தால், உடனே அவர்களுக்குப் புரட்சியாளர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள்.
.
ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை மேலும் மேலும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் தள்ளுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு உங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் ஒழிந்தீர்கள்!
.
நூல்: ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
.
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ்
.
தமிழில்: ரா.முருகவேள்
.
வெளியீடு: விடியல் பதிப்பகம்11, பெரியார் நகர்,
மசக்காளி பாளையம்,கோயம்புத்தூர் - 641 015.
.
தொலைபேசி: 0422 - 2576772
.
-அ. முத்துக்கிருஷ்ணன்
.
நன்றி: தலித்முரசு, http://www.keetru.com/

விலை கொடுத்து வாங்கும் அவமானம் by சோலை

அமெரிக்க ராணுவ வட்டத்திற்குள் இந்தியாவை மன்மோகன் சிங் அரசு இழுத்துச் செல்கிறது என்பதனை, தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். அதன் ஒரு விளைவு இப்போது அம்பலமாகி இருக்கிறது.

பழைய இரும்புக் கடைக்கு அனுப்பவேண்டிய ஒரு கப்பலைச் சீவிச் சிங்காரித்து இந்தியாவின் தலையில் அமெரிக்கா திணித்துவிட்டது. அதற்கும் வண்ணம் பூசி ஐ.என்.எஸ். என்று நாமம் சூட்டி, நமது கப்பற்படையிலேயே இணைத்துவிட்டனர். இந்த மாபெரும் மோசடி இப்போது அம்பலமாகி இருக்கிறது.

அமெரிக்கக் கப்பற்படையில் யூ.எஸ்.எஸ். டிரென்டன் என்ற கப்பல் இணைந்திருந்தது. தொடர்ந்து முப்பது ஆண்டுகள் அந்தப் போர்க் கப்பல் பணி செய்து முடித்துவிட்டது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில் அரும்பணி ஆற்றியிருக்கிறது.

1971_ம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பலுக்கு அமெரிக்கக் கப்பற்படையும் பிரியாவிடை கொடுத்துவிட்டது. 2003_ம் ஆண்டு பணி முடித்த அந்தக் கப்பலை உடைப்பதற்கும் தயாராக இருந்தனர். ஏனெனில், கப்பல் கட்டுவதற்குப் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. வளர்ந்தும் வருகின்றன. அந்தக் காலத்துத் தொழில்நுட்ப அடிப்படையில் கட்டப்பட்ட அந்த டிரென்டன் கப்பலைப் பழுது பார்க்கவும் முடியாது. பழுது பார்த்தாலும் அதன் ஆயுள் மாதக்கணக்கில்கூட நீடிக்காது. எனவே, அந்தக் கப்பலை உடைக்கும்படி 2006_ம் ஆண்டே அமெரிக்கக் கடற்படை அறிவித்தது.

சுருக்கமாகச் சொல்கிறோம். 1971_ம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பல் முப்பதாண்டுப் பணி முடித்தபின்னர் அதன் அடுத்த பணி பற்றி முடிவு செய்யவேண்டும். எனவே, 2003_ம் ஆண்டு அந்தக் கப்பல் தனது கடல் பயணத்தை நிறுத்தியது. அந்தக் கப்பலை உடைத்துவிடலாம் என்று 2006_ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கின் கண்டுபிடிப்பின்படி அமெரிக்கா இந்தியாவின் நண்பன் அல்லவா? எனவே, பயன்படாத அந்தக் கப்பலை இந்தியாவிற்கே விற்பது என்று அமெரிக்கா முடிவு செய்தது. ஏனெனில், வேறு எந்தப் பித்துக்குளி நாடும் அந்தக் கப்பலை வாங்காது. ஆகவே, அந்தக் கப்பலை அமெரிக்கா 217 கோடிக்கு விற்றிருக்கிறது. எந்தவித பேரமும் இல்லை. அமெரிக்கா சொன்னதுதான் விலை. இந்த வெட்கக்கேட்டை விலை கொடுத்து வாங்கியதில் கப்பற்படைத் தளபதிகளுக்கும் பங்கு உண்டு என்று இந்திய அரசின் தணிக்கைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தக் கப்பலின் வரலாறு _ தொழில் நுட்பத்திறன் _ இனி எந்த அளவிற்குப் பயன்படும் என்பதுபற்றியெல்லாம் எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கையில் காசு. வாயில் தோசை என்று இந்த ஓட்டைக் கப்பலை இந்தியாவின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்றும் அந்தத் தணிக்கைக் குழு சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்தக் கப்பல் அமெரிக்காவிடம் இருந்தபோது நச்சு வாயு தாக்கி மூன்று மாலுமிகள் இறந்துவிட்டனர். இப்போது இந்தியா பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், அதே நச்சு வாயுக் கசிவால் ஆறு மாலுமிகள் இறந்து விட்டனர். இன்னும் எத்தனை உயிர்களை இந்தக் கப்பல் காவு கேட்கும்?
உண்மையிலேயே இந்தக் கப்பலின் மாலுமிகள் அச்சப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ரஷ்யா உள்பட எத்தனையோ நாடுகளிலிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. இப்படி கசாப்புக் கடைக்குப் போக வேண்டிய மாட்டை நல்ல விலைக்கு விற்றதுபோல் வேறு எந்த நாடும் நமது தலையில் கட்டியதில்லை. இனி இந்த ஓட்டைக் கப்பல் பழுதுபட்டால் அதனைச் சரிசெய்யவும் அமெரிக்க ஆசாமிகள்தான் வரவேண்டும்.

இந்த அவமானத்தை விலைகொடுத்து வாங்கிய இந்தியாவிற்கு, அமெரிக்கா இன்னொரு நிபந்தனை விதித்திருக்கிறது. இந்தக் கப்பலில் என்னென்ன போர்த்தளவாடங்கள் ஏற்றப்படுகின்றன என்று அவ்வப்போது பரிசோதிக்க அமெரிக்காவிற்கு உரிமை உண்டாம். தேவையில்லாமல், அவசியமில்லாமல் இந்தக் கப்பலை வாங்கியதற்கு அமெரிக்கா இந்தத் தண்டனையையும் அளிக்கிறது.

என்றைக்கு விலைகொடுத்து வாங்கிவிட்டோமோ, அப்போதே அந்தக் கப்பல் இந்தியாவிற்குச் சொந்தமாகிவிட்டது. அதன் பின்னர் அந்தக் கப்பலை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காவிற்கு எதற்கு இந்தச் சுதந்திரம்? இந்தியாவின் மானம் மரியாதை என்ன ஆனது?

காயலான்கடைக்கு அனுப்பவேண்டிய இரும்புக் குப்பையை விலை கொடுத்து வாங்குவதற்கும் நிபந்தனையா? கப்பல் கட்டும் துறை புதிய புதிய தொழில் நுட்பங்களோடு வளர்ந்து வருகிறது. அத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கப்பல்களைக் கட்டும் வல்லுனர்கள் உண்டு. அவர்கள் ஏற்கெனவே புதிய கப்பல்களைக் கட்டியிருக்கிறார்கள். நமது வல்லுனர்களைக் கொண்டே காலத்தின் தேவைக்கு ஏற்ற புதிய போர்க் கப்பல்களைக் கட்ட முடியும்.

நமது பாதுகாப்பிற்கு அமெரிக்க ஓட்டைக் கப்பல்கள் எப்படிப் பயன்படும்? பாதுகாப்பு உடன்பாடுகள் ரகசியமானவை. ஆனால், அந்த விதியையே பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா தனக்குப் பயன்படாத தளவாடங்களை நமக்கு விற்பனை செய்கிறது. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்தத்தான் அமெரிக்கா நமக்கு உதவ முன் வருகிறது என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவோடு இன்னும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது என்கிறார். அந்த ஒப்பந்தங்கள் இந்தியாவை எந்த அளவிற்கு ஏமாளியாக்கும் என்பதற்கு அமெரிக்க ஓட்டைக் கப்பல் வாங்கியதே ஓர் உதாரணம்.

இந்தியாவிற்கே தெரியாமல் அமெரிக்காவோடு மன்மோகன் சிங் அணுசக்தி உடன்பாடு கண்டிருக்கிறார். அந்த உடன்பாடு ரொம்ப ரகசியமாக இருந்தது. ஆனால் படிப்படியாக அந்த உடன்பாட்டின் உட்பிரிவுகள் கசிந்து வந்தன. அதன் பின்னர்தான் இந்தியா அமெரிக்காவின் வலைப் பின்னல்களில் வகையாகச் சிக்கவைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. நாடே துடித்துப்போனது.

அந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் ஆயுள் கைதியாக்குகிறது. இந்தியாவின் இறையாண்மையையே பலி கேட்கிறது என்பதனை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் கண்டித்தன. ஏன்? இந்த உடன்பாட்டிற்குப் பிள்ளையார் சுழி போட்ட பி.ஜே.பி.யே அதில் நாட்டிற்குப் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று எதிர்க்கிறது.
மூன்றே சதவிகித மின்சார உற்பத்திக்காக அமெரிக்க அடிமைச் சாசனம் நமக்குத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டை இந்தியாவின் தலையில் கட்டியே தீருவது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. என்ன காரணம்?

அணுமின் உலைகளை அமைத்துத் தரும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவை கோடீஸ்வரர்களுக்குச் சொந்தம். பதினைந்து ஆண்டுகளாக அந்த ஆலைகள் செயல்படவில்லை. காரணம், எந்த நாடுமே தமக்கு அணு உலை அமைத்துத் தரும்படி அமெரிக்காவை கேட்டதில்லை. எந்தவித நிபந்தனையோ, ஒப்பந்தமோ இல்லாது தொடர்ந்து நமக்கு அணு உலைகளை ரஷ்யா அமைத்துத் தருகிறது.

துருப்பிடிக்கும் நிலையிலிருக்கும் அமெரிக்க அணு உலை நிறுவனங்களுக்கு நிரந்தர வேலை தேவை. அதனை நிறைவு செய்துகொள்ள மன்மோகன் சிங்கை அமெரிக்கா பிடித்தது. அமெரிக்க ஓட்டைக் கப்பலை போர்க் கப்பலாக்கி இந்தியாவின் தலையில் சுமத்தியதுபோல், அணு உலைகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய அமெரிக்கக் கோடீஸ்வரர்கள் துடிக்கிறார்கள். ஏன் இன்னும் தாமதம் என்று ஒவ்வொரு அமெரிக்க வி.ஐ.பி.யும் ஓடிவருகிறார்கள். இந்திய நலன்களில் அக்கறை கொண்டா அவர்கள் வருகிறார்கள்?

பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், அமெரிக்காவோடு போடும் ஒப்பந்தங்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கப்படவேண்டியவை என்பதனை ஓட்டைக் கப்பல் போர்க்கப்பலாக உருமாறி வந்த நிகழ்வே சரியான உதாரணமாகும்.

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்