புதன், டிசம்பர் 03, 2008

தடுமாறும் தமிழக ஊடகங்கள்

தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திப்பிரிவு தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. பல விஷயங்களில் மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் அவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குவதால் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் சார்பிலோ அல்லது அரசியல் சார்புடையதாகவோ உள்ளதால் அவை வெளியிடும் செய்திகள் ""முழுவதுமாக'' மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல் காரணமாக இவை தவிர்க்க முடியாதது என்றாலும்கூட மேற்கண்ட பட்டியலில் சேராத ஊடகங்களிலும் பொது ஜனத்தின் குரல் ஈனஸ்வரத்தில்தான் ஒலிக்கிறது. ஆனால் இவற்றிற்கு செய்தி நிறுவனங்களை மட்டுமே குறை கூறிவிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தமிழகத்தில் ஊடகங்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத் தேவைக்கேற்ப அனுபவம் வாய்ந்த செய்தியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தமிழகத்தில் தொலைக்காட்சிகள் முதன் முதலாக தொடங்கப்பட்டபோது, அவற்றில் பணியில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அச்சுப்பத்திரிகையில் இருந்து வந்தவர்கள்தான்.

அன்று இத்துறையில் கால்பதித்தவர்களின் அறிவும், பணி அனுபவமும், ஆழமான செய்தி ஆர்வமும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு அடியுரமாக பயன்பட்டது. ஆனால், இன்று செய்தித்துறைக்கு வரும் புதிய செய்தியாளர்களிடம் அத்தகைய ஆர்வத்தையும், பணி ஈடுபாட்டையும் காண்பது அரிதாக உள்ளது. மேலும், கற்றுக்கொள்வதில்கூட அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க மூத்த செய்தியாளர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. இதுவும் ஊடகச் செய்திகளின் தரத்தைப் பாதிக்கும் காரணியாக உள்ளது.

மேலும், தொலைக்காட்சி செய்தி என்பதை ""பைட்'' ஜேர்னலிஸம் என்று கூறுவார்கள். உதாரணமாக ஒரு கட்சியின் தலைவர் அல்லது பிரபலமானவர் பேசுகிறார் என்றால் செய்தி நிறுவனத்தின் ""கொள்கைக்கு'' ஏற்ப அவரது பேச்சின் சில விநாடிகளை அல்லது நிமிடங்களை மட்டும் ஒளிபரப்பத் தேவையான தகவல்களை அந்த நிறுவனச் செய்தியாளர் சேகரித்தால் போதுமானது. எனவே, தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் எளிதானதாகி விடுகிறது. ஒளிப்பதிவு கருவியில் பதிவு செய்த அரசியல் கட்சி அல்லது பிரபலமானவரின் பேச்சை அலுவலகத்திற்கு வந்து 10 வரி எழுதிக் கொடுத்தால் போதுமானது.

மேலும், இப்போது பரவலாக வரும் ""லைவ்'' என்ற நேரலை செய்தி சேகரிப்பின்போதும் கூட, சம்பவ இடத்தில் நடந்ததை ஒளிப்பதிவு கருவி முன்னால் நின்று ஒப்புவித்தால் போதும் அல்லது ஸ்டுடியோவில் இருந்து செய்தி வாசிப்பாளர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொன்னாலேகூட போதுமானது என்ற அளவில் தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் மேலோட்டமாகவே உள்ளது. ஆனால், இது மட்டுமே தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி அல்ல.

அச்சுப் பத்திரிக்கை போலவே ஒவ்வொரு தகவலையும் நுணுக்கமாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து, அந்த செய்தியின் பின்புலம் அறிந்து செய்திக்கோவையாக மாற்ற வேண்டியது தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மிகவும் அவசியம். செய்திகளைத் தேடிச் சென்று அல்லது கிடைக்கும் தகவல்களை செய்திகளாக உருவாக்கும் பணியும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் நாள் ஒன்றுக்கு ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகளை ஒளிபரப்புவதால் அதற்கேற்ப செய்திகளை ""அப்டேட்'' செய்ய செய்தியாளர்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும்கூட இத்தகைய சூழலிலும் தங்கள் திறமைகளையும், பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது. எனவே அச்சு செய்தியாளர்களை ஒப்பிடும்போது, தொலைக்காட்சி செய்தியாளர்கள் இதற்கு அதிகம் உழைக்க வேண்டியது மட்டுமல்லாமல் அர்ப்பணிப்போடும் செயலாற்றுவதும் அவசியமாகிறது. ஆனால், இத்தகைய தன்மையும் இப்போது அதிகம் காண முடிவதில்லை. எனவே, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொலைக்காட்சி செய்திகளில் (பொதுவாகவே ஊடகச் செய்திகளில்) ""நடுநிலை'' என்ற தன்மை காணவே முடிவதில்லை. ""நடு நிலை'' என்பது இரு தரப்பினரின் கருத்துகளையும் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அத்தகைய தன்மை அவசியமானதாக இருந்தாலும்கூட செய்தி நிறுவன உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகள் இதற்கு மாறாக இருப்பதால் செய்திகளின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது.

வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல. அவர்களுக்காகத்தான் செய்தி நிறுவனமே செயல்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இரு தரப்பு கருத்துகளையும் முன்வைத்தால் அவர்கள் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். ஆனால், ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே செய்தியின் வாயிலாக மக்களிடையே திணித்தால் நீண்டகாலம் வாசகர்களையோ, பார்வையாளர்களையோ தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை செய்தி நிறுவனங்களாட்டும் அல்லது அவற்றை நடத்தும் அரசியல் வாதிகளாகட்டும் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொலைக்காட்சி செய்தியாளர்களின் நிலை இவ்வாறு இருக்க, அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களின் நிலை சற்று வேறாக உள்ளது. மேலே குறிப்பிட்டவாறு தொலைக்காட்சிகளில், செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதால் அந்த பற்றாக்குறையைப் போக்க அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களுக்குத்தான் இப்போது வலை வீசப்படுகிறது. இதனால், அச்சுத்துறையில் அனுபவம் வாய்ந்த பல செய்தியாளர்களை அப்பத்திரிகைகள் தற்போது இழந்து வருகின்றன. எனவே, தொலைக்காட்சிகளின் அதிகரிப்பால் அச்சுப்பத்திரிகைகளிலும் செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. எனவே, அச்சுப்பத்திரிகையின் செய்தித் தரத்திலும் இது தாக்கத்தை உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.

செய்தியாளர்களின் பணி என்பது மகத்தான பணி. தவறு செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தினசரிச் செய்திகளை கண்டு அலறி தங்களை திருத்திக்கொண்ட கால கட்டம் கடந்து விட்டது. காரணம், புலனாய்வுச் செய்திகள் அப்போது அதிகம் வெளியானது. ஆனால், தற்போது புலனாய்வுச் செய்திகளை பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காண முடிவதில்லை. இதுவும் ஊடகங்களின் பலத்தை வெகுவாக பாதித்துள்ளது.

இதற்கு உதாரணமாக இலங்கைப் பிரச்னையைக் கூறலாம். இந்திய அரசியல்வாதிகள் இப்பிரச்னையில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அரசியல் லாபத்திற்காக ஒரு தெளிவற்ற தன்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், ஊடகங்களும் இப்பிரச்னையில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இத்தனை ஊடகங்கள் இருந்தாலும்கூட எந்த பத்திரிகையோ, தொலைக்காட்சியோ இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணத்தை வெளிப்படுத்தவே இல்லை.

நமது அண்டை நாட்டில், தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில்கூட தமிழ் ஊடகங்கள் நடு நிலையோடு செயல்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலை மாறவேண்டும்.

ஏனெனில், ஊடகங்கள் நினைத்தால் இப்பிரச்னையில் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதோடு, நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய முடியும். இதே போலத்தான் ஒவ்வொரு பிரச்னையும்.

தமிழ் ஊடகங்கள் தரமானதாக மாற, ஊடக உரிமையாளர்களின் பார்வை சமூக நலன் கொண்டதாக அமைதல் அவசியம். மேலும், ஊடகத்தில் பணியாற்றும் அல்லது கால்பதிக்கும் செய்தியாளர்களுக்கு ""தேடுதல்'' தேவை. இதற்கு விசாலமான பார்வை மிக முக்கியம். இல்லாவிடில், செய்திகளும் வருங்காலத்தில் பொழுதுபோக்காக மாறிவிடும் அபாயம் உள்ளது.


-டி. எம். விஸ்வநாத்
நன்றி: தினமணி, 03-12-2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக