திங்கள், ஜனவரி 02, 2017

ஜெயலலிதா: இனி எதைப் பேச வேண்டும் நாம்?

மரணம் ஒருவரின் எல்லா தவறுகளையும் தடயம் இல்லாமல் அழித்து, எல்லா குற்றங்களில் இருந்தும் விடுவித்து, புனிதப்படுத்திவிட முடியுமா? முடியும். ஜெயலலிதாவுக்கு அவ்வாறே முடிந்திருக்கிறது. நேற்று வரை எது சர்வாதிகாரம் எனக் கண்டிக்கப்பட்டதோ, அது இன்று தலைமைப்பண்பு; எது ஆணவமாக அறியப்பட்டதோ, அது கம்பீரம்; திமிர் என விமர்சிக்கப்பட்டது எல்லாமே இன்று திறமையாகப் போற்றப்படுகிறது; செயலின்மை எனக் கருதப்பட்டவை, செயற்கரியச் சாதனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. தர்மபுரியில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டபோதும்,  தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்கள் உயிரைப் பறித்தபோதும், சிறையில் இருந்த நாட்களில் ரத்தத்தின் ரத்தங்கள் தமிழகத்தை வன்முறை பூமியாக்கியபோதும், செம்பரம்பாக்கம் ஏரி நீரைத் திறந்துவிட்டு, ‘யார் செத்தால் எனக்கென்ன’ என்று அமைதி காத்தபோதும், ‘இவரெல்லாம் ஒரு பெண்ணா?’ எனத் தூற்றியவர்கள், இன்று அனைத்தையும் மன்னித்து, ‘இரும்புப் பெண்மணி’ என்ற பட்டத்தோடு ஜெயலலிதாவை வழியனுப்பி வைத்திருக்கின்றனர். சுமார் 40 ஆண்டுகால  அரசியல் வாழ்வில்,  குடும்ப உறுப்பினரின் இழப்பைப் போன்ற நெருக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கலாம். அது மட்டுமல்ல, எப்போதும் தன்னை மிடுக்காகக் காட்டிக்கொள்ளும் ஒருவர், நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடப்பது ஒருவிதக் கழிவிரக்கத்தைக் கோரியிருக்கலாம். அதெல்லாம் மனித இயல்புதான்.  அதனாலேயே ஜெயலலிதாவின் அத்தனை தவறுகளையும் எல்லோருமே மன்னித்துவிட்டனர். மன்னிப்பு மாபெரும் நற்பண்புதான், மறுப்பதற்கு இல்லை. அதுவும் மரணித்துவிட்ட ஒரு (சர்வாதிகாரத்) தலைவருக்கு மன்னிப்பைத் தவிர வழங்குவதற்கு (பாதிக்கப்பட்ட) மக்களுக்கு வேறு வழி இல்லை. இப்படியான மன்னிப்பு அனைவருக்கும் கிடைக்கப் பெறுவது இல்லை. ஜெயலலிதாவுக்கு அளப்பரியதாக அது வழங்கப்பட்டுள்ளது.

நல்லது. ஆனால், எது அச்சுறுத்துகிறது என்றால், இந்தச் சமூகத்தின் மறதி. எட்டுத் திக்கிலும் இருந்து ஓங்கி ஒலித்த புகழஞ்சலிகள், ஜெயலலிதாவை மன்னிக்க மட்டுமில்லை, அவரின் அனைத்து எதிர்மறைச் செயல்பாடுகளையும் மறந்துவிட்டதைச் சுட்டிக் காட்டியது. ரத்தத்தின் ரத்தங்களை விட்டுத் தள்ளுங்கள்... பொதுச் சமூகம், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், ஊடகத் துறை, திரைத் துறை, எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள் என எல்லோருமே ஜெயலலிதாவிடம் ஏதோவொரு நல்லதைத் தேடியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது; அவரது ஏதோவொரு குணத்தோடு தம்மை இணைத்துப் பார்க்க எல்லோருமே முயன்றனர். அரசியல் தலைவர்கள், ‘அவர் போராடும் குணம் கொண்டவர்’ என்றனர்; பெண்கள், அவரை ‘ஆணாதிக்கத்தைத் தகர்த்தவர்’ என்றனர்; ஊடகங்கள் பலவாறு அவரைப் போற்றிப் பாடின; கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள்கூட அவரது புகைப்படத்தை முகநூலில் ‘ப்ரொஃபைல் பிக்சர்’ வைத்தனர். நல்லது கெட்டதை சீர்தூக்கிப் பார்க்கவியலாத  உணர்ச்சிவசப்பட்ட சமூகமே, கும்பல் மனப்பான்மைக்கு ஆட்படுகிறது.  ஒட்டுமொத்தத் தமிழகமே ஜெயலலிதாவிடம் இல்லாத மனிதப் பண்புகள் பலவற்றைக் கூறி அவரைப் புனிதப்படுத்துவதைப் பார்க்கும்போது, பேராபத்துமிக்க மறதி இங்கே கட்டமைக்கப்படுவதை உணர முடிந்தது. மக்களின் மறதி ஒரு சமூக நோய். தமிழகம் அந்த நோயால் வீழ்த்தப்பட்டுக்கிடக்கிறது என்பதை ஜெயலலிதாவுக்கு கிடைத்த புகழஞ்சலிகள் நிரூபிக்கின்றன.

ஜெயலலிதா இறந்த பிறகான இந்த ஒரு மாத காலத்தில், அவரைப் பற்றி ஆகச் சிறப்பானதொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரும் போற்றிப் புகழ்பாடும் இப்படியொரு திருப்பத்தை ஜெயலலிதாவே கற்பனை செய்திருப்பாரா தெரியவில்லை!

கோடிக்கணக்கான தமிழர்களின் ஒற்றைத் தலைவியாக முப்பதாண்டு காலம் அரியணையில் வீற்றிருந்தவர்தான். அந்த அரியணையில் ஏறி அமர ஒரு பெண்ணாக நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்தான். மும்முறை அவரது பதவி முடக்கப்பட்டதில் ஆறு முறை முதல்வரானார். தமிழக மக்கள் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்தனர் அல்லது அதற்கான ‘சூழலை’ அவர் உருவாக்கிக்கொண்டார். இறுதி வரையில், இறுதி ஊர்வலம் வரையில் ஜெயலலிதாவை அந்த அரியணையில் இருந்து இறக்காமலேயே  வழியனுப்பிவைத்தது தமிழகம். ஆனால், அந்த நல்லுணர்வுக்குத் தகுதியான தலைவராக ஜெயலலிதா இருந்தாரா என்ற விஷயத்தை நாம் நேர்மையாக அணுக வேண்டும்.

நல்லவை எல்லாமே பேசப்பட்டுவிட்டன. ஜெயலலிதாவின் பிறப்பு, அவரது படிப்புத்திறன், அவரது வாசிப்பு ஆர்வம், சுறுசுறுப்பு, கலை ஆர்வம், துணிச்சல், சாதனைகள் என அவரது ஆளுமையைக் கட்டமைக்கும் விஷயங்களை வாய் வலிக்கிற அளவு பேசியாயிற்று; ரேகை தேய்கிற அளவுக்கு எழுதியாயிற்று. ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்வித்ததைவிடவும் மேலதிகமான ஆண்டுகள் அரசியல் வாதியாகச் செயலாற்றிய ஜெயலலிதா, ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் அரியணையில் அமர்ந்து, அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக உருவெடுத்த பின்னர் நடந்தவைதான், நம் மறதிநோயில் அடித்துச் செல்லப்படும் ஆபத்தில் தத்தளிக்கின்றன.



இந்தச் சமூகம் உண்மையில் எதை மறந்திருக்கிறது எனில், ஜெயலலிதா என்ற தனிநபர் ராஜ்ஜியத்தின் இருண்ட காலத்தை… அதனால் தான் அடைந்த பெருந்துயரங்கள், இழப்புகளை. 1991-ல் தொடங்கி 2016 வரையிலும் மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றபோது, அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி இந்தச் சமூகத்தைப் பின்னோக்கி நகர்த்தியதே தவிர, முன்னோக்கி அல்ல. அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களில் பெரும்பாலானோர் அடித்தட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அடிப்படையில் அது ஏழை மக்களின் கட்சி. ஒரு தேர்ந்த நடிகையாக ஏற்கெனவே மக்களிடம் பரவியிருந்த ஈர்ப்பு, எம்.ஜி.ஆர் மீது அடித்தட்டு மக்கள் கொண்டிருந்த பாசத்தின் தொடர்ச்சி, கூடவே எதிர்த்து நிற்கும் பிடிவாதக்குணம் என, அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவை அங்கீகரித்ததன் பின்னணியில் இந்த மூன்று காரணங்களும் இருந்தன. எம்.ஜி.ஆருக்குப் பின்னர் கட்சி, ஜெயலலிதாவால் காக்கப்படும் எனத் தொண்டர்கள் நம்பினர். அவ்வாறே நடந்தது. கட்சி காப்பாற்றப்பட்டு தமிழகம் மரணப்படுக்கையில் வீழ்ந்தது.

இந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தொண்டர்கள் ஆதரவு ஒன்றே ஜெயலலிதாவைக் காப்பாற்றிவிடவில்லை. பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கு, சமூகரீதியான அனைத்துப் பாதுகாப்பும் எல்லா மட்டத்திலும் அளிக்கப்பட்டது. கருணாநிதியின் ஊழல் வெறுக்கப்பட்ட அளவுக்கு ஜெயலலிதாவின் ஊழல் வெறுக்கப்படவில்லை; கருணாநிதியின் வன்முறைகள் விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ஜெயலலிதாவின் வன்முறைகள் விமர்சிக்கப்படவில்லை. கருணாநிதியின் நலத்திட்டங்கள் கண்டுகொள்ளப்படாதபோது, ஜெயலலிதாவினுடையவை கொண்டாட்டப்பட்டன. அவர் செய்த எல்லா குற்றங்கள் மற்றும் தவறுகளில் இருந்து, அவரது சமூகத் தகுதி அவரைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது. மக்கள் ஆதரவையும் சமூகத் தகுதியின் பலத்தையும் நெருப்பாற்று அனுபவங்களையும் வைத்து, அவர் ஒரு நல்லாட்சியை வழங்கியிருக்க முடியும்.  மாறாக, ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வந்த பின்னரும் அவர் தமிழக மக்களை நெருப்பாற்றில் நீந்தவிட்டார். ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற ஜெயலலிதாவின் முழக்கம், அவர் இருந்தபோது பகடி செய்யப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அதுவே அவரது கொள்கை முழக்கமாகப் போற்றப்படுகிறது. உண்மையில் ‘அதிகாரத்தால் நான்; அதிகாரத்துக்காகவே நான்’ என்பதே இந்த ‘இரும்புப் பெண்மணி’யின் அகக்குரல் என்பதை அகச்சான்றுள்ள சமூகம் மறுக்காது.

தமிழ்ச் சமூகம் எதையெல்லாம் மறக்க விழைந்திருக்கிறது என்ற பட்டியல் பயங்கரமானது. ஊழல், அத்துமீறல், ஆதிக்கம், அராஜகம், சீர்கேடுகள், செயலின்மை, சாதி அரசியல், மதப் பிரிவினைவாதம், வன்மம், பழிதீர்த்தல்…! அ.தி.மு.க கொடியின் கரையிடப்பட்ட வெண்புடவையில் வலம் வந்த ஜெயலலிதாவை முதல்வரான பின்னர் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் உடல் முழுவதும் நகைகளோடும் பட்டுப்புடவையிலும் பார்த்தபோது, இந்தச் சமூகமே வெறுப்புஉணர்வில் மருண்டது. வண்ணத் தொலைக்காட்சி ஊழல் வழக்குக்காக செய்யப்பட்ட ரெய்டில், அலிபாபா குகையில் கண்டதைப்போல தங்கமும் வெள்ளியும் காலணிகளும் புடவைகளும் கைக்கடிகாரங்களும் பிடிபட்டன. பேராசை மிகுந்த ஒரு பெண்ணாக, தமிழகம் அவரை நிராகரித்தது. 1991-96 ஆண்டுகள் வரையிலான காலத்தில் அவர் குவித்த சொத்துகள் மீதான வழக்குதான் மரணம் வரையிலும் அவரைத் துரத்தி வந்தது. அதற்குப் பின்னர் அவர் எவ்வளவோ சொத்துகள் குவித்திருந்தாலும் அந்த முதல் தவறின் வினை அவரை விடவில்லை. 1996-ல் தொடங்கி சுமார் 18 ஆண்டுகாலம் வழக்கை இழுஇழுவென இழுத்தடிப்பதற்கு, ஜெயலலிதா தனது பதவியையும் அதிகாரத்தையும் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தினார்; எத்தனை பேரை அதற்காகப் பழிவாங்கினார் என்பது ஒரு பெருந்துயர் வரலாறு. ஜெயலலிதா தனது குற்றங்களில் இருந்து தண்டனை பெறாமல் தப்பித்துக்கொண்டே இருந்ததைத்தான் ஃபீனிக்ஸ் பறவையின் உயிர்த்தெழுதலோடு ஒப்பிட்டு பலர் சிலாகிக்கின்றனர்.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்புக் கூறப்பட்டு பரப்பன அக்ரஹாரச் சிறையில் அடைக்கப்பட்டபோது, தமிழகமே இழவு வீடாகவும், வன்முறைக் காடாகவும் மாற்றப்பட்டது. ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தும் அரசு நிர்வாகம் செயலிழக்கவைக்கப்பட்டது. அ.தி.மு.க அமைச்சர்கள் குமுறிக்குமுறி வாய்விட்டு அழுதபடி பொறுப்பேற்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தன் மூச்சை நிறுத்திக்கொள்ள நிர்பந்தப்படுத்தப்பட்டது. மக்களுக்காகவே நான் என்று சொன்ன ஜெயலலிதா, மக்களுக்காகவா இவ்வளவு சொத்துகளையும் குவித்தார்; மக்கள் நலனுக்காகவா சிறைக்குச் சென்றார்? ஆனால், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதும் அ.தி.மு.க-வினர் அவருக்கு, ‘மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தை வழங்கினார்கள். பதவி பறிக்கப்பட்ட நிலையில்தான் அவர் மக்கள் முதல்வரெனில், பதவியில் இருக்கும்போது அவர் யாருக்கு முதல்வராக இருந்தார்..? அ.தி.மு.க-வினர் அம்மா விசுவாசத்தில் இந்த அடைமொழியை அவருக்குக் கொடுத்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பதவியை இழந்து தனக்குத் துயரம் நேரும்போது மட்டுமே ஜெயலலிதாவுக்கு மக்கள் நினைப்பு வந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, பெருமுதலாளிகளுக்கு, சாதி/மத ஆதிக்க சக்திகளுக்கு, உளவுத் துறைக்கும் காவல் துறைக்கும் மட்டுமே முதல்வராக இருந்து வழிநடத்தினார் என்பது அரசியல் நோக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தேர்தல் பிரசாரங்கள் தவிர்த்து ஜெயலலிதா மக்களைச் சந்திப்பது அரிதிலும் அரிதான விஷயமாக, அவர் முதல்வரான பிறகு மாறிப்போனது. எம்.ஜி.ஆர் ஆட்சியில், சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோது, கட்சியின் அனுமதியின்றித் தாமாகவே சத்துணவுக்கூடத்துக்குச் சென்று சோதனைசெய்த ‘அந்த ஜெயலலிதா’வின் ஊக்கத்தைத்தான் மக்கள் அவரிடம் எதிர்பார்த்து, ஒவ்வொரு முறையும் வாக்களித்தனர். ஆனால், அவர் மக்களைச் சந்திக்க விரும்பாத தலைவராக தன்னை உருவாக்கிக்கொண்டார். அரசுப் பொறுப்புகளில் இல்லாத, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக்கொண்டு நிழல் அரசாங்கத்தை நடத்தினார். அ.தி.மு.க ஆட்சி என்பது ஒருவழிப் பாதை. அந்தப் பக்கம் இருந்து மட்டுமே செய்திகள் வரும்; உத்தரவுகள் பறக்கும்.ஆனால், இந்தப் பக்கம் இடியே விழுந்தாலும் அது போய்ச் சேராது அல்லது போய்ச் சேரும் நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும்.



2015-ல் சென்னையில் உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்திற்குப் பின்னணியாக இந்த அவலமே இருந்தது. தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு உயர்ந்துகொண்டே போக, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முதல்வரைத் தொடர்புகொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்த செய்தி ஊரறிந்த ரகசியம். நிலைமை கைமீறிப் போகவே, ஏரி நீர் எந்த முன்னறிவிப்பும் இன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றித் திறந்துவிடப்பட்டது. வெள்ளத்தில் மாநகர் மூழ்கிய பின்னரும் அரசு நிர்வாகம் மிகத் தாமதமாகவே செயல்படத் தொடங்கியது. பல இடங்களில் மக்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை விரட்டி அடித்தனர். தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு வெள்ளத்தின் பாதிப்பைப் பார்வையிட வந்த ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து,  ‘வாக்காளப் பெருமக்களே...’ என்று விளித்தார். இதுதான் ஜெயலலிதா. அவர் மக்களை எப்போதும் வாக்காளர்களாக மட்டுமே பார்த்தார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதுமானது. ஆனால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-தானே ஜெயித்தது என விசுவாசிகள் வாதிடுவார்கள். உண்மைதான்.

இண்டு இடுக்கெல்லாம் ஊழல் மலிந்த இந்தியா போன்றதொரு நாட்டில், பலமுறை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை ஒரு சாதனை எனக் கருத முடியாது. பெரும்பணமும், பலவகையான அதிகாரமும் யாரை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர்த்தலாம். பிரிவினை வாதங்களையும் ஊழலையும் விரும்பி அனுமதிக்கும் அறியாமை மிகுந்த சமூகத்தில், தலைமைப் பொறுப்புக்கு வருதலென்பது நேர்மையான வழிகளால் சாத்தியப்படக் கூடியது அல்ல. தேர்தல் வருகிறது, குறைந்தபட்சம் ஒரு சில ஆயிரங்களையாவது பார்த்துவிட மாட்டோமா என்ற அவலச்சூழலை உருவாக்கியதில் ஜெயலலிதாவுக்குப் பெரும் பங்கு உண்டு. அ.தி.மு.க பெருவெற்றி பெற்ற தேர்தல்களில் பணப் பட்டுவாடா செய்து பெற்ற வாக்குகள், நினைவில் இருந்து அழிக்கப்படுகின்றன. கடந்த தேர்தலின்போது இரண்டு கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட 500 கோடி ரூபாய் யாருடையது என்ற கேள்விக்கான பதில், ஜெயலலிதாவுக்கு முன்னரே புதைக்கப்பட்டுவிட்டது அல்லவா?

ஊழல் புரியவும் பேரதிகாரத்தை நிறுவவும் மதப்பிரிவினை வாதத்தையும் சாதி அரசியலையும் ஜெயலலிதா ஊக்குவித்ததை அரசியல் விமர்சகர்கள் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளனர். சாதிய, மதவாதங்கள் இரு தடிகளாக இருந்து தமிழகத்தின் சமூகநீதியை அடிஅடியென அடித்ததை இந்த 15-20 ஆண்டுகளில் எத்தனை முறை எதிர்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் பெரும் உற்சாகம் பெற்றன. கள்ளர் அமைப்புகளும், கவுண்டர் பேரவைகளும் வலுவடைந்தன. ‘நீங்க எல்லாம் வாழணும், நாங்க மட்டும் ஆளணும்’ என முழங்கிய சாதி இந்துக்களுக்குப் பக்கபலமாக ஜெயலலிதாவின் ஆட்சி இருந்ததைத் தமிழகம் மறக்கக் கூடாது.

முஸ்லிம்களின் ஆதரவுக்காக தமது அரசியல் வாழ்வின் பின்னாட்களில் இஃப்தார் விருந்துகளில் கலந்துகொள்ளும் வழக்கத்தைக் கற்றிருந்தாலும், இந்துத்துவவாதிகளுக்கு அவர் அளித்துவந்த பேராதரவு மிக வெளிப்படையானது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து கரசேவகர்கள் அனுப்பப் பட்டனர். பாபர் மசூதி இடிப்பு ஒரு போற்றத்தக்க செயல் எனச் சிலாகித்தார் ஜெயலலிதா.

2002-ல் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்துத்துவ அமைப்பான சங் பரிவார் போன்றவற்றுடன் ஜெயலலிதா காட்டிய இணக்கமே பா.ஜ.க தமிழக அரசியல் களத்தில் வேரூன்றக் காரணமாக அமைந்தது. அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்காக அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்தனர். இருமுறை கூட்டணி வைத்து அடிவாங்கிய அனுபவத்தில்தான் 2016 தேர்தலில் பா.ஜ.க எத்தகைய நெருக்கடி கொடுத்தும் தனித்து நிற்கும் முடிவை எடுத்தார் ஜெயலலிதா. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கு முடிவை எட்டிக் கொண்டிருக்கும் முக்கியமான காலகட்டத்தில், வெற்றியைப் பணயம் வைக்கும் எந்த அபாயத்துக்கும் துணிய அவர் தயாராக இல்லை.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பக்குவமான அஞ்சலியைச் செலுத்தியது. அ.தி.மு.க-வினர் மற்றும் தமிழக மக்களின் வேதனையை தி.மு.கவினரும் பகிர்ந்துகொண்டனர். ஆனால், வாழ்வின் கடைசி நிமிடங்கள் வரை தி.மு.க-வையும் கருணாநிதியையும் வெறுத்தார் ஜெயலலிதா. அது போட்டியாளர் என்ற அடிப்படையிலான வெறுப்பு மட்டுமல்ல; ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக தி.மு.க-வினரால் அவர் எதிர்கொண்ட அவமானங்கள் மூட்டிய நெருப்பும் ஒரு காரணம். அந்த நெருப்பு, கடைசி வரையிலும்கூடத் தணிய வில்லை. கருணாநிதி எந்தத் திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதை ஒழிப்பதையும் முடக்குவதையும் ஜெயலலிதா தனது அரசியல் கொள்கையாகக் கொண்டிருந்தார். சமச்சீர் கல்வி, ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூலகம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவை பட்டபாட்டை தமிழகம் நன்றாகவே அறியும். மக்கள் வரிப்பணமான பல நூறு கோடி செலவழித்துச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்களை நாசம் செய்தார். அதிலும் ஆசியாவின் மிகப் பெரியதான அண்ணா நூலகத்துக்கு நேர்ந்த கதி, அறிவுச் சமூகத்தின் பெரும் வயிற்றெரிச்சல் வேதனை.



சொத்துக் குவிப்பு, சமூக அரசியல் தளத்தில் பிடிக்காதவர்களைப் பதம் பார்த்த பொடா, அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கிய எஸ்மா, டெஸ்மா, தர்மபுரி பேருந்து எரிப்பு எனத் தொடங்கி கருணாநிதியின் நள்ளிரவுக் கைது, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல், மாற்றுத்திறனாளிகள்மீது தாக்குதல், வீரப்பன் தேடுதல் வேட்டை, ஈழ இனப்படுகொலை குறித்த அலட்சியம் என வளர்ந்து, மின்வெட்டு, மக்கள் போராட்டம் வலுத்த போதும் டாஸ்மாக் கடைகளை மூடாதது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்தக் கவலையுமின்றி, காவல்துறையை மக்களுக்கு அல்லாமல் தன் சேவைக்கு மட்டுமே பயன்படுத்தியது; இயற்கை வளங்களைச் சூறையாட மாஃபியாக்களை அனுமதித்தது; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள்; செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பு; செயலற்ற நிர்வாகம் என இத்தனைக்கும் மத்தியில் வளர்ந்ததுதான் ஜெயலலிதா என்பவரின் அடையாளம்.

இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டால், அது ஜெயலலிதாவையே புறந்தள்ளுவதற்குச் சமம். அவர் தனது பொறுப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் எப்போதும் விலகியே நின்றிருந்தார் என்றாலும் ஒரு வித்தையால் அவர் மக்களைச் சுலபமாகக் கையாண்டார். அடித்தட்டு மக்களுக்குக் நலத்திட்டங்களையும், நடுத்தர மக்களுக்கு ஊழலையும் உயர் வகுப்பினருக்குக்  கூடுதலாக அதிகாரத்தையும் பகிர்ந்தளித்தார். அந்தந்தப் பிரிவினர் அதனதனோடு சமரசமடைந்தனர். இந்த மூன்றிலும் வலுத்தது மட்டுமே வாழும் என்பதால், எல்லோருமே வலுத்தவர்களாகப் போராட வேண்டியிருந்தது. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அரசு என ஒன்று இருக்கிறதா, இல்லையா என அறியும் துடிப்பு நீக்கப்பட்டது.

உரிமைகளுக்கும் சலுகைகளுக்குமான வேறுபாட்டை அறியாத சமூகம் தாலிக்குத் தங்கம், லேப்டாப், சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் போன்ற சலுகைகளில் மயங்கி நின்றது. அந்த மயக்கத்தை ஜெயலலிதா சரியாக அறுவடை செய்தார்; செய்து கொண்டே இருந்தார். ‘ஏன் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன? ஏன் எங்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது? ஏன் அரசு மருத்துவ மனைகளில் தரமான சுகாதாரம் வழங்கப் படவில்லை? ஏன் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை? ஏன் என் ஊருக்கு சாலை வசதியே இல்லை?’ என்றெல்லாம் மக்கள் கேட்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் என்ன பொருள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக தனக்கான ஒரு நற்பெயரை அவர் தக்கவைத்துக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெறவே கட்சிகள் கண்கவர் இலவசப் பொருட்களை வழங்குகின்றன. நியாயப்படி கட்சி நிதியிலிருந்தே இலவசங்கள் வழங்கப்பட வேண்டும்; மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் வசதிகளும் செய்துதரப்பட வேண்டும். ஜெயலலிதா, மக்கள் வரிப்பணத்தை சில ஆண்டுகளே பயன்படும் பொருட்களுக்கு வாரி இறைத்ததோடு, விலையில்லாப் பொருட்கள் வழங்குவதற்காக மதுச்சீரழிவை நியாயப்படுத்தவும் செய்தார். ஆண்டுதோறும் டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் கிடைக்கும் சுமார் 25 ஆயிரம் கோடிகள் இல்லாவிட்டால், இந்த நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் என அ.தி.மு.க அரசு, மக்கள் போராட்டங்களுக்கு மத்தியிலும் சசிபெருமாள் போன்றவர்களின் உயிர்த் தியாகத்துக்கு இடையிலும் மது விற்பனையை அதிகரித்தது.    

குடும்பம் இல்லாமல், வாரிசு இல்லாமல் தனியாக ஒரு பெண், கருணாநிதி போன்ற பலம்மிக்க, அரசியல் சாணக்கியத்தில் தேர்ந்தவரோடு ஒற்றைக்கு ஒற்றை எதிர்த்து நிற்பது, ஆணாதிக்கக் குடும்ப அமைப்பில் துவண்டு கொண்டிருந்த தமிழகத்துப் பெண்களிடையே ஜெயலலிதா ஆதரவு உளவியலை ஓரளவுக்குக் கட்டமைத்திருக்கலாம். அதற்காகவெல்லாம் ஜெயலலிதா பெண்ணுரிமைப் போராளியாகிவிட மாட்டார். ஜெயலலிதாவின் ஆதிக்கப்பண்பை, பெண்ணியம் எனக் குறிப்பிடும் அவலம்கூட அண்மையில் நடந்தது. ஒரு பெண்ணாக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்ட ஜெயலலிதா, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பழங்குடியினப் பெண்களைக் கொடூரமான முறையில் பலாத்கார வதை செய்த காவலர்களுக்குப் பெரும் பரிசுப் பொருள்கள் அளித்து கௌரவித்தார். சிறப்பு அதிரடிப்படையின் வதைகூடங்களில் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, சித்திரவதைக்கு ஆளான பழங்குடிப் பெண்களின் கதறலும் மனித உரிமைப் போராளிகளின் கூப்பாடுகளும், ஜெயலலிதாவின் சர்வாதிகாரச் செவிகளில் விழவே இல்லை. 1992-ல் ஜெயலலிதா ஆட்சியில் காவல் துறை மற்றும் வனத் துறையினரால் 18 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வாச்சாத்திக் கொடுமை, அவர் ஒரு பெண்ணாக எவ்வளவு ஓர்மையுடன் இருந்தார் என்பதற்கான ஆதாரம். சுமார் 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதி துடைத்தெறியப்பட்டது.

ஆதிக்கம் என்ற உணர்வுக்குப் பால் பேதம் இல்லை. அது ஆணுக்கும் வரும், வாய்ப்புகள் கிடைக்கும்போது பெண்ணுக்கும் வரும். ஆணுக்கு வந்தால் சர்வாதிகாரமாக, பெண்ணுக்கு வந்தால் கம்பீரம் அல்லது தலைமைப் பண்பாகக் கருத முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அரசின் உயர் பொறுப்புகளில் இருப்போரையும் காலில் விழவைத்ததும் வாகனத்தின் டயரைப் பார்த்து கும்பிடவைத்ததும், ஹெலிகாப்டரில் பறக்கும்போதும் கீழே வணங்கி நிற்கவைத்ததும் ஜெயலலிதா என்ற ஆதிக்கவாதியின் அதிகாரப் பக்கங்கள். நினைத்தால் யாரையும் பொறுப்பில் அமர்த்துவது, யாரையும் பதவியில் இருந்து தூக்கியடிப்பது என்றிருந்த சர்வாதிகாரத் தலைமையின் கீழ், அரசு உயரதிகாரிகளும் அமைச்சர்களும்  அஞ்சி அஞ்சியே காலத்தைத் தள்ளினர்.

ஒற்றை நபராக நடத்திய ராஜ்ஜியத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்களைப் பற்றி ஜெயலலிதா துளி அக்கறையும் கொண்டிருக்கவில்லை. அ.தி.மு.க என்ற திராவிட இயக்கம் தனக்குப் பின்னரும் நீடிக்க வேண்டுமென அவர் நினைத்திருந்தால், இணை, துணை அளவுகளில் தலைவர்களை கட்சிக்குள் வளர்த்தெடுத்திருக்க முடியும். தனது உடல்நிலை பற்றி அறியாதவர் அல்ல அவர். தனக்குப் பின்னர் எப்படியும் போகட்டும் என்ற மனநிலையில்தான் ஜெயலலிதா எப்போதும் இருந்தார்.

மக்களோடு கலக்காமல், மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காமல், மக்களிடமிருந்து வெகு தொலைவுக்கு விலகி, தன்னை மிக மிகத் தனிமைப்படுத்திக்கொண்டார். பொது வாழ்க்கையில் இருப்போர் ஓரளவுக்கேனும் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். அதிலும் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் தலைவர், தனது எல்லா விஷயங்களையும் ரகசியமாக வைத்துக் கொள்வது எப்போதுமே ஆபத்தானது. ஓர் ஒப்பீட்டுக்காகச் சொல்ல வேண்டுமெனில், கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை மிக வெளிப்படையானது. அவரது குடும்பச் சண்டைகளும் வெளிப்படையானவை. அவரது நண்பர் யார், பகைவர் யார், துரோகி யார் போன்றவை ஏறக்குறைய இந்தச் சமூகம் அறிந்ததே. அவரது உடல் ஆரோக்கியத்திலும் ரகசியங்கள் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கை மர்மமும் ரகசியங்களும் நிறைந்தவை. முதல்வரான பிறகு, அவர் தன்னை ரொம்பவே முடக்கிக்கொண்டார். வீட்டில் அவர் எப்படி இருப்பார்; அவருடைய அன்பிற்குரியவர்கள் யார்; அவரது பொழுதுபோக்குகள் என்ன போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. போயஸ் கார்டன் நட்சத்திர வசதிகொண்ட சொகுசு சிறையாக இருந்திருக்குமோ என்றுகூட இப்போது பேசப்படுகிறது. அந்த அளவு ரகசியங்கள். மர்மமாக வாழ்வோரின் மரணமும் பெரும்பாலும் மர்மமாகவே முடியும். ஜெயலலிதாவுக்கு அதுதான் நடந்திருக்கிறது.

பொதுவாக, மர்மங்கள் மக்களைப் பெரிதும் ஈர்க்கின்றன. அதனால்தான் ஊடகங்கள் மர்மம் நிறைந்ததாகச் செய்திகளைக் கட்டமைக்கின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதிவரையிலான கண்ணாமூச்சியில் எல்லோருக்குள்ளும் ஒருவித ஆர்வக் கிளர்ச்சி தோன்றியிருந்தது. முடிச்சுகளை அவிழ்க்கும் சுவாரஸ்யத்தை தன்னளவில் தேடிக்கொண்டிருந்தவர்கள், மரணம் அறிவிக்கப்பட்டதும் மர்மத்தை அருகே பார்க்கும் ஆர்வத்தோடு கிளம்பிவந்தனர். கேமராக்கள் இருந்த திசை தவிர்த்து எல்லா பக்கங்களும் மர்மத்தைப் பற்றித்தான் பேச்சிருந்தது. ஆனால், யாரும் கேள்வி கேட்கவில்லை. இதுதான் இன்றைய சமூக எதார்த்தம். அடுத்தடுத்த பரபரப்புகளில் எல்லாவற்றையும் செரித்து,  ‘அடுத்து என்ன’ என்று கேட்கும் காலச் சூழலில், ஜெயலலிதாவும் கடந்துபோய்விடுவார்.

ஜெயலலிதா ரசிக்கப்பட்டவர். அவரது தனிப்பட்ட திறமைகளுக்காக, முக மதிப்பீட்டுக்காக, எதிர்த்து நிற்கும் பண்புகளுக்காக! ஆனால், மக்களால் நேசிக்கப்பட்டவரா, மதிக்கப்பட்டவரா என்றால், அந்தக் கேள்விக்கு நேர்மையான பதிலைத் தமிழகம் கண்டறிய வேண்டும். இரண்டுக்குமே கூட்டம் திரளும், ஆனால், ரசிப்புக்கும் நேசிப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜெயலலிதாவின் இழப்புக்காக வருந்திய ஒட்டுமொத்த சமூகமும் அவரை ஏதொவொரு வகையில் அவரை ரசிக்கிறது என்பது நிச்சயம். ஆனால், நேசிக்கிறதா? ‘அதிகாரத்தால் நான், அதிகாரத்திற்காகவே நான்’ என வாழ்ந்து முடித்திருக்கும் ஜெயலலிதாவின் அரசியலை நேர்மையாக விவாதிக்க வேண்டியது தமிழகத்தின் கடமை. குற்றமும் குறைகளும் நிறைந்த ஒருவரை, அப்பழுக்கற்றவராகப் புனிதப்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியத்துக்கும் எதிர்காலத்துக்கும் செய்யும் துரோகம். ஜெயலலிதாவின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட அரசியல் பெருவாழ்க்கையே பேசப்பட வேண்டும். தமிழக அரசியலை தூய்மைப்படுத்த அதுவே பயனளிக்கும்.


உண்மைகள் வலிக்கும்தான் என்றாலும் வரலாறு திரிக்கப்படக் கூடாது, அதுவும் சமகாலத்திலேயே!

-ஜெயராணி

நன்றி: விகடன் தடம், ஜனவரி 2017

வியாழன், டிசம்பர் 15, 2016

தமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி

ஒரு மொழியின் பிறப்புக்கு அடிப்படை, அது பேசப்படும் நிலத்தின் சூழலியலே ஆகும். அவ்வகையில் பல்லுயிர்ச் செறிவுமிக்க நிலத்தில் தோன்றிய தமிழ்மொழி ஒரு சூழலியல் மொழி. இத்தகைய மொழியின் மீது தனக்கென்று தனித்த நிலமற்ற சமற்கிருதமும், பல்லுயிர்ச் செறிவற்ற நிலத்தில் உருவான ஆங்கிலமும் நிகழ்த்துகின்ற மொழி மேலாதிக்க வன்முறைகளும் அதன் எதிர்கால விளைவுகளும் என்னென்ன?

சமற்கிருதமும் தமிழ்ச்சூழலும்

உயிரினங்களுக்கான அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் சூட்டப்படுவது மரபு. இது 1730-களிலேயே உயிரியலாளர் கார்ல் லின்னேயஸ் வகுத்த வழிமுறை. ஓர் உயிரினத்தின் உருவக்கூறுகளைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லுடன், அது கண்டறியப்பட்ட இடத்தின் பெயரையோ, கண்டறிந்த ஆய்வாளரின் பெயரையோ, புகழ்பெற்ற ஒருவரின் பெயரையோ இணைத்து இப்பெயர் சூட்டப்படும். ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரு தவளைகளுக்கு இம்மரபை மீறி ‘Nasikabatrachus sahyadrensis, Philautus neelanethrus’ என சமற்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதைக் குற்றம் சாட்டுகிறார் உயிரியல் அறிஞரான க.யோகானந்த்.

இவற்றில் ‘நாசிகா (மூக்கு), சாயாத்ரி (மேற்குத்தொடர்ச்சி மலை), நீலா(ஊதா), நேத்ரா(கண்) முதலியவை சமற்கிருதப் பெயர்கள். ‘இத்தவளைகளைக் கண்டுபிடித்த இரு ஆய்வாளர்களும் மரபை மீற நினைத்தால், தம் தாய்மொழியான மலையாளத்திலோ, கன்னடத்திலோ, இல்லையெனில் திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மை மொழியான தமிழிலோ பெயர் வைத்திருக்கலாமே... ஏன் சமற்கிருதம்’ என வினவும் யோகானந்த், ஏற்கெனவே சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் இல்லாத உயிரினமான குதிரையை இந்துத்துவவாதிகள் தாமே உருவாக்கிக் காட்டியதைச் சுட்டி நம்மை எச்சரிக்கிறார்.

பண்பாட்டின் மீது முன்னரே தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கும் சமற்கிருதம், மொழியைக் கருவியாக்கி இயற்கை அறிவியலையும் சூழலியலையும் தம் வசப்படுத்த முயல்கிறது. மாற்று மொழிகளை அழுத்தித் தன்னைச் சூழல் மொழியாகக் காட்டிக்கொள்ளும் இம்முயற்சி அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

மரங்களைக் காப்பாற்ற அவற்றைக் கட்டித்தழுவிப் போராடிய பழங்குடியினப் பெண்களின் போராட்டம் ‘சிப்கோ’ இயக்கம் என்றழைக்கப்படுகிறது. சிப்கோ என்பது சமற்கிருதத்தின் குழந்தையான இந்தி மொழிச் சொல். ஆனால், இப்போராட்டத்தை நடத்தியதோ பழங்குடியினப் பெண்கள். அவர்களுக்கு ஏது இந்தி? அவர்கள் இப்போராட்டத்துக்கு தங்களின் தாய்மொழியான ‘கார்வால்’ மொழியில் வைத்திருந்த பெயர் ‘அங்கலவாள்த்தா’. இச்சொல்லின் பொருள் ‘தழுவுதல்’. சிப்கோ என்ற இந்தி மொழிச் சொல்லுக்குப் பொருள் ‘ஒட்டிக்கொள்’ என்பதாகும்.  இராமச்சந்திர குகா கூறும் இவ்வுண்மையில் இருந்து ஒரு பழங்குடி மொழிச் சொல்லை இன்னொரு மொழிச் சொல் கைப்பற்றும்போது பொருள் மட்டுமல்லாது போராட்டத்தின் வரலாறே திரிவதை விளங்கிக்கொள்ளலாம்.

‘இப்படித் திரிந்த வரலாற்றின் ஒரு காட்சியை இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காணலாம். அங்குள்ள கான் துறையால் கானகச் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளில், ‘இந்துக்களின் வேத நூல்கள் கூறுகின்றன. மரங்கள் இன்றி மகிழ்ச்சி இல்லை’ என்கிற வரிகள் காணப்படுகின்றன. இவ்விளம்பரம் மரங்களையும் காட்டையும் காப்பதற்காகவே அவதரித்தது இந்து மதம் என்ற பொய்த் தோற்றத்தை தருகிறது. ஆனால், மகாபாரதத்தின் ‘கந்தேவா வனச்சருக்கம்’ பகுதியில் காட்டுயிர்கள் கொல்லப்படுவதும், மரங்களுக்குத் தீ வைக்கப்படுவதும் வீரகாவியப் பண்பாக வருணிக்கப்படுவதுடன் சிந்து, கங்கை சமவெளிப் பகுதிகள் குறித்துப் பதியப்பெற்ற அக்காலத்தில் ‘காடுகள் அழிப்பதற்கானவை’ என்பதே இந்துக்களின் சிந்தனையாக இருந்தது’ என்கிறார் இராமச்சந்திர குகா. இவ்விடத்தில்தான் காட்டுயிர்களுக்குச் சமற்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

‘இந்திய அறிவரங்கில் ‘சமற்கிருத மயமாக்குதல்’ எனும் சொல்லாடல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ‘பாரத’ திருநாட்டில் அனைத்தையும் சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ‘இந்து மானுடவியல்’ அறிஞர்கள் பயன்படுத்துகிற ஒரு பெயர்தான் சமற்கிருதமயமாக்குதல்’ என்கிறார் முனைவர். க. த. திருநாவுக்கரசு. ‘இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங்குவது சமற்கிருத மொழி வழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே இந்தியா முழுமையும் நாகரிகமும் பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியது’ என்று கூறி இச்சொல்லை 1956-ம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய இந்திய மானுடவியல் அறிஞரான முனைவர் எம்.என்.சீனிவாசனின் நோக்கம் தெளிவானது.

‘இனவழிச் சொல்லான ஆரியமயமாக்கல் என்கிற சொல்லைப் பயன்படுத்தாது, சமற்கிருதமய மாக்குதல் என்கிற மொழிவழிச் சொல்லை இவர்கள் தெரிவு செய்வதற்குப் பின்னே ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. ஆரியர்களே உலகில் ஆளப்பிறந்தவர்கள் என்கிற ‘ஆரியமயமாக்கல்’ சிந்தனையில் வேர்கொண்ட இட்லரின் போர் வெறியால் விளைந்த உயிர்ச்சேதத்தை நாம் அறிவோம். இந்நிகழ்வுக்குப் பின்னர் யுனெஸ்கோ நிறுவனம் ‘இனத்தூய்மைக் கொள்கை’யை முறியடிக்கும் பொருட்டு உலகின் பல பகுதிகளிலும் ‘இனத்தூய்மை என்பது கட்டுக்கதை’ என்கிற தலைப்பில் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. இதன் தாக்கத்தால் ‘ஆரியம்’ அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளான அதேநேரத்தில், தமிழகத்தில் திராவிட இனச் சிந்தனை முளைத்தெழுந்தது. எனவே, இக்காலகட்டத்தில் ஆரியம் இனவழிப் பண்பாட்டை ஒதுக்கி மொழிவழிப் பண்பாட்டைக் கைக்கொள்ளத் தொடங்கியது’ என்கிறார் திருநாவுக்கரசு.

தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடிகளும் உயர்சாதியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் வழி தம்மை உயர் இனத்தவராக மேல்நிலையாக்கம் செய்யும் முயற்சியைச் சுட்டிக்காட்டவே ‘சமற்கிருத மயமாதல்’ என்கிற சொல் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் பல்வேறு துறைகளுக்கும் தன்னை விரிவாக்கிக்கொண்டே வந்து தற்காலத்தில் சூழலியல் வரையிலும் வந்து சேர்ந்துள்ளது. ஆனாலும், சமற்கிருதமயமாக்குதல் என்கிற இச்சொல்லை, ஆசிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும் மேற்கத்திய அறிஞர்கள் பலர் ஏற்கவில்லை. அவர்கள் இன்றளவும் இதனை ‘பெரிய நெறி’ (Great Tradition) என்றே அழைக்கின்றனர். அதாவது சமற்கிருத வழிப்பட்ட எண்ணப்போக்கும் பண்பாடும் இப்பெயரால் அழைக்கப்பட, சமற்கிருதத்தின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப்போக்கும், பண்பாடும் ‘சிறிய நெறி’ (Little Tradition) என்று எதிர்நிறுத்தப்படுகிறது. இச்சிறிய நெறியில்தான் தமிழும் தமிழர்களின் பண்பாடும் உள்ளடங்குகிறது.

தமிழர்கள் பழங்குடிகளைப்போலவே இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள். இயற்கை வளத்தையும் உயிரின வளத்தையும் வளம்குன்றா முறையில் தமது தேவைக்குப் பயன்படுத்தி வந்ததோடு, தம் பண்பாட்டுச் செயல்கள் வழி அதனைக் காத்து வந்தவர்கள். ‘ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) போன்ற அமைப்புகள் ‘பண்பாட்டு வளம்’ (Cultural Diversity) என்று இதனை அங்கீகரிப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதனைத் தம் வாழ்வாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்’ என்கிறார் கு.வி.கிருட்டிணமூர்த்தி.

இவ்வுலகை அல்லது இயற்கையை கடவுளின் சித்தம் என வேதக் கோட்பாடு. போதிப்பதற்கு நேர்மாறாக, ‘நிலம் தீ நீர் வளி விசும்பொடு கலந்த மயக்கம் உலகம்’ என்று அறிவுபூர்வமாக விளக்கியது தொல்காப்பியம். இத்தகைய மேன்மையான தமிழ்நெறி சமற்கிருதமயப்படுவது இழுக்காகும். ‘சமற்கிருதமயமாதல்’ என்கிற சொல் விளக்கத்தின்படி பார்த்தோமெனில், தமிழ் மொழியானது தன் கீழ்மை நிலையிலிருந்து ஆரியமரபின் மேன்நிலைத் தகுதிக்கு வரத் துடிக்கிறது அல்லது தவிக்கிறது என்னும் தவறான பொருளைத் தந்துவிடுகிறது. ஆனால், இயற்கை அறிவியலில் தமிழைப்போலத் தெளிந்த பார்வையோ, அறிவோ கொண்டதல்ல சமற்கிருதம்.

நெருப்பின் எரிக்கும் திறனுக்கும், கடல் நீரின் உப்புத்தன்மைக்கும், நிலவு தேய்ந்து வளரும் காட்சிப்பிழைக்கும் காரணமான அறிவியல் என்னவென்று பள்ளி மாணவர்களும் அறிவர். இவற்றுக்கு மநுசாத்திரம் அளிக்கும் விளக்கம் என்ன தெரியுமா? ‘எந்தப் பிராமணருடைய சாபத்தினாலே அக்கினி எல்லாவற்றையும் சாப்பிடுகிறவனாயும், சமுத்திரம் உப்புத் தண்ணீராயும், சந்திரன் விருத்தி சயம் இரண்டையும் அடைகிறவனாயும் இருக்கிறார்களோ அவர்களைக் கோபிக்கச் செய்த எவன்தான் அழியாமலிருப்பான்’ (மநு - 10:126) தெள்ளிய செய்தி என்னவெனில், குறிப்பிட்ட இனத்தாரைப் பகைத்துக் கொண்டால் மனிதர்கள் மட்டுமல்லாது இயற்கையும் சபிக்கப்படும் அல்லது அழிவுறும் என்பதுதான். என்னே சிறந்த சூழலியல் பார்வை! இயற்கை என்பது கடவுளின் படைப்பு என்பதையும் மீறி அது கடவுளின் கட்டுப்பாட்டின் கீழ் அல்ல, அவ்வினத்தாரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறது என்று இங்கு அறிவிக்கப்படுகிறது.


ஆனால், தொல்காப்பியமோ தனது முதற்பொருளை நிலமும் பொழுதும் என வரையறுத்தது. பாற்கடலில் படுத்திருப்பவரின் கொப்பூழ்க் கொடியிலிருந்து பிறந்தவரோ அல்லது பூசனை செய்யும் இடைத்தரகரோ இங்கு முதற்பொருள் ஆகவில்லை. தொல்காப்பியத்தில் தெய்வம் எங்கே வருகிறது தெரியுமா? முதற்பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் அடுத்து மூன்றாவதாக வரும் கருப்பொருளில்தான் உணவு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் போன்ற உயர்திணை மற்றும் அஃறிணைப் பொருட்களுக்கு இணையாக தெய்வம் வைக்கப்படுகிறது. தெய்வத்துக்குத் தமிழ்நெறி தந்திருக்கும் இடம் இதுதான். வேறு வகையில் கூறினால், தமிழுக்கு இயற்கையே முதன்மை. இதனாலேயே இயற்கை குறித்த தமிழ்மொழியின் பார்வை தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தது. இத்துல்லிய மொழியினூடே சமற்கிருதத்தோடு ஆங்கிலமும் இணைந்து நிகழ்த்திவரும் ஆதிக்கம் தமிழைச் சிதைத்துவருகிறது

2. ஆங்கிலம் நிகழ்த்தும் அழிவு

அன்றைய காலனிய ஆட்சியாகட்டும் அல்லது இன்றைய கார்ப்பரேட் ஆட்சியாகட்டும்... இரண்டும் வெறும் பொருளாதார மேலாதிக்கம் மட்டுமேயல்ல. பொருளாதார மேலாதிக்கம்தான் பின்னர் பண்பாட்டு மேலாதிக்கமாக உருவெடுக்கும். பண்பாட்டுத் தாக்குதலின் முதல் இலக்காக மொழி அடையாளம் காணப்பட்டு காலனியமயப்பட்ட நாட்டு மக்களின் மொழி அவர்களிடமிருந்து பறிக்கப்படும். கல்வியிலும் கலைகளிலும் ஆதிக்கவாதிகளின் மொழி உள்நுழைக்கப்பட்டு அதைக் கட்டாயமாக்குவதன் வழி, காலனிய நாட்டு மக்களின் தாய்மொழி அவர்களின் உணர்வு நிலையிலிருந்து மெள்ள மெள்ள அகற்றப்பட்டுவிடும். (உணர்வுநிலை என்பது அடிக்கோடிட்டுப் படிக்கவேண்டிய சொல்) மொழியை இழப்பது என்பது அடையாளத்தை இழப்பதன் முற்றிய நிலை. மொழியை இழந்த இனம் தன் பண்பாட்டு வேர்களை இழந்து, தன்னம்பிக்கை இழந்து, அந்நியப் பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு அடிமையாக்கப்படும். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுதான் நடந்தது.

இதனாலேயே 17 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதிவந்த உலகப்புகழ் பெற்ற கென்ய நாட்டு எழுத்தாளர் கூகி வா தியாங்கோ ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்தி தம் தாய் மொழியான ‘கிக்கூயூ’ மொழியில் எழுதத் தொடங்கினார். காலனிய ஆட்சியின் நோக்கமே, ஒரு நாட்டு மக்களை அவர்தம் மண்ணிலிருந்தும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் வாழ்விலிருந்தும் அந்நியமாக்கி, தனிமைப்படுத்தி, செயலிழக்கச் செய்து அடிமைப்படுத்துவதுதான்; எனவே, தமது அடையாளங்களை மீட்கவும், வாழ்வையும் நிலத்தையும் மீட்கவுமாகத் தாய்மொழியில் தேர்ச்சிபெறுவதே மக்களின் முதல் தேவை எனக்கூறிய கூகி, அதற்குத் தன்னுடைய பங்களிப்பாகத் தாய்மொழியில் எழுதுதலை மேற்கொண்டார். இவருக்கு இணையாக மொழியின் இலக்கியத்தின் அரசியலை விளங்கச் செய்தவர் வேறு எவரும் இல்லை.

ஆங்கிலம் என்பது வெறுமனே இங்கிலாந்தின் மொழி அல்ல. இது முதலீட்டியத்தின் வினைப்பொருளும் பன்னாட்டு நிறுவனங்களின் கருத்துருவுமான உலகமயமாக்கலின் கருவி. இம்மொழியைச் சுரண்டப்படும் நாடுகளின் கல்வி மொழியாக மாற்றுவதில் வெற்றிகண்டிருக்கும் முதலீட்டியம், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக்கொண்டு பயின்றவர்களுக்கு முதலீட்டியம் உருவாக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை நல்குவதன் வழி, தம் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இப்பொருளாதார மேலாதிக்கம் உருவாக்கும் பண்பாட்டு மேலாதிக்கம் மக்களிடத்து மனரீதியாகப் பார்வையற்ற  தன்மையையும், கேளாத் தன்மையையும் உண்டாக்கிவிடும். எனவேதான் இம்மக்கள் தம் நாட்டில் தாம் என்ன செய்யவேண்டும் என்பதைக்கூட அந்நியர் வந்து கற்றுத்தருவதை அனுமதித்துக் கொண்டிருப்பர். பண்பாட்டு வல்லாதிக்கத்தால் மேற்கத்திய வாழ்வுமுறையை நகலெடுத்து வாழும் போக்கு சுரண்டப்படும் நாட்டு மக்களிடையே அதிகரித்துவருகிறது. இம்முறை மேற்கத்தியமயமாதல் ஆகும். சமற்கிருதமயமாதல், மேற்கத்தியமயமாதல் இரண்டுக்குமே அடிப்படைக் கருவியாக மொழி விளங்குவதை கவனிக்கவும்.

பண்பாட்டு மேலாதிக்கம் ஆங்கிலவழிக் கல்வியினால் நிகழ்வது மட்டுமல்லாது அரைகுறைத் தமிழான தமிங்கிலம் வழியாகவும் நிகழ்கிறது. முன்பு சமற்கிருதத்தின் பாதிப்பான மணிப்பிரவாளம் ஏற்படுத்தியதை விடதமிங்கிலத்தினால் ஏற்பட்டுவரும் தீமைகள் மிகுதி. தற்கால இதழியல் எழுத்திலும், இலக்கிய உருவாக்கத்திலும் இவ்விபத்து தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தேய்வழக்குச் சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச்சொற்களைப் புதுக்காமல், அந்நிய மொழிச் சொற்களைப் புகுத்துதல் நடைபெறுகிறது. இது தாய்மொழிக்குள் ஆதிக்க மொழி மேலாதிக்கத்தை அனுமதித்து விடுகிறது. இப்பிழை அறிந்தோ, அறியாமலோ தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  

இதுவொரு வரலாற்றுப் பிழை என்பதற்கு மணிப்பிரவாளம் சான்று. மேற்கத்திய மயமாதல் என்கிற முனைப்பும் நம் மொழியைப் பலியாக்கிவருகிறது. இச்செயல்பாடு எதிர்காலத்தில் என்னவாக மாறும் என்பதை ‘மொழியியல் அகழாய்வு’ நமக்கு விளக்குகிறது. ‘மொழியியல் அகழாய்வு’ (Linguistic archiology) என்பது ஓர் அறிவியல் துறை. இதன்வழி ஒரு மொழியின் பழைமையை மட்டுமல்லாது அம்மொழியைப் பேசும் மக்களின் இனவரலாற்றையும் ஆய்ந்தறியலாம். ஆனால், மொழிக்கலப்பு இதற்குத் தடையாக மாறுகிறது. எடுத்துக் காட்டாக, ஒரு வாக்கியத்தைப் பார்ப்போம்.

“என்னப்பா, உன் பிசினஸ் நல்லா டெவலப் ஆகுதா? நல்லா ஹார்டுவொர்க் பண்ணினால், உன் பிசினஸில் நல்ல எஃபெக்ட் கிடைக்கும்.”

மேற்கண்ட வாக்கியத்தில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களாக மாற்றுவோம். பிசினஸ் – தொழில், ஹார்டு வொர்க் – உழைப்பு, டெவலப் – வளர்ச்சி, எஃபெக்ட் – விளைவு.

இந்நான்கு தமிழ்ச் சொற்களையும் மொழியியல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தி இச்சொற்களின் வேரையும், அதன்வழி வெளிப்படும் வரலாற்றையும் அறிவோம். தொழில் என்ற சொல் தொல்லில் என்கிற சொல்லில் இருந்து கிளைத்ததாகும். தொல் என்பதற்குத் தோண்டு என்பது பொருளாகும். அதாவது தோண்டுதல் தொடர்பான பணியை இது குறிக்கிறது. இதுபோலவே உழைப்பு என்ற சொல்லின் வேர்ச்சொல் உழுதல் தொடர்பான பணியில் சென்று முடியும். வளர்ச்சி என்பது பயிர் வளர்த்தல் தொடர்பான பணியையும், விளைவு என்பது விளைச்சல் தொடர்பான பணியையும் குறிக்கும். ஆக மொத்தமாக இச்சொற்கள் கூறும் செய்தி என்னவெனில் இம்மொழியைப் பேசும் இனம், மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே வாழ்ந்துவரும் ஓர் இனம் என்பதாகும்.

மனிதர்கள் தொடக்கத்தில் உணவு சேகரிப்புக் குமுகமாக வாழ்ந்தனர். பின்னரே உணவு உற்பத்திக் குமுகமாக மாறினர் என்பது மானுடவியல் கூறும் வரலாறு.  தமிழ் இனமும் தோண்டுதல் பணியில் தொடங்கிய உணவு சேகரிப்புக் குமுக காலம் தொடங்கி இம்மொழியைப் பேசி வரும் ஓரினம் என்ற தொன்மை வரலாறு இச்சொல் வழி அறியக் கிடைக்கிறது. பின்னர் குறிஞ்சி நிலத்தில் ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என உழாது விதைத்த காலம் தொடங்கி, ‘முழுக் கொழு மூழ்க ஊன்றி’ என அகன்ற கலப்பையால் உழுத மருதநிலக் காலம் வரை வேளாண்மையை விரிவாக்கம் செய்து வாழ்ந்த இனம் எனும் வரலாறும் இச்சொற்களின் பின்னேதான் மறைந்திருக்கிறது. ஆனால், இச்சொற்களை மாற்று மொழிச் சொற்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்கும்போது, இந்த வரலாறே அழிக்கப்படுகிறது.

‘இலத்தீன் வேர்ச்சொற்களை விட்டுவிட்டால், ஆங்கிலம் தெளிவற்ற மொழியாகிவிடும்’ என்கிற கால்டுவெல் கூற்றை இவ்விடத்தில் நினைவுகொள்ளலாம். நேற்று பிறந்த மொழி தொன்மைமிகு மொழியை அழிக்கவிடலாமா? தன் மொழிக்கு வளமை கூட்ட நினைக்கும் எந்தவொரு நேர்மையான எழுத்தாளரும் இத்திட்டமிட்ட சதிக்கு உடன்பட மாட்டார்.

தமிழ் மிகச்சிறந்த சூழல் மொழி. ஒவ்வொரு சொல்லிலும் நிலவியல் தன்மையும் இனவரலாறும் பிணைந்து கிடக்கின்றன. முன்னர் சமற்கிருதம் நிகழ்த்திய வன்முறையிலிருந்து தமிழ் சற்று மீண்டிருக்கிறது. கால்டுவெல் குறிப்பிட்டதை இங்கு நினைவுகூரலாம். ‘தமிழில் வழங்கிவரும் சமற்கிருதச் சொற்களுள் பெரும்பாலானவற்றையோ முழுவதையுமோ உடனடியாக ஒழித்துவிட முடியும்; ஒழித்தால் தூய்மையும் இனிமையும் மிகுந்த நடையை அம்மொழி பெறும்’ என்று குறிப்பிடுகிறார். சமற்கிருதத்தோடு ஆங்கிலச் சொல்லையும் நீக்கி எழுதுவதிலும், புதிய கலைச் சொற்களை உருவாக்குவதிலும் இன்றைக்குப் பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் தம் ஓர்மையைச் செலுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட முயற்சிகள்தாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தில் தோல்வி காணாத ஒரு மொழியாக தமிழ் வாழ்ந்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது.

 மொழியும் சுற்றுச்சூழலும்

உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில் நான்கிலொரு பங்கு அழிவுக்குக் காத்திருக்கிறது. பல்லுயிரியச் செறிவைப் போலவே பன்மொழிச் செறிவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 21% பாலூட்டிகள், 13% பறவைகள், 15% ஊர்வன வகைகள், 30% நீர்நில வாழ்விகளோடு 400 மொழிகளும் விரைவில் அழிவதற்குக் காத்திருக்கின்றன. மொழிக்கும் பல்லுயிரியத்துக்கும் உள்ள தொடர்பை டார்வின் தனது நூலில் பேசியிருக்கிறார். பன்மொழிச் செறிவும் பல்லுயிர்ச் செறிவும் அசாத்தியமான விதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், துருவ மற்றும் பாலைநிலப் பகுதிகளைக்காட்டிலும் செறிவான பல்லுயிரியம் மிக்க வெப்ப மண்டலக் காட்டுப் பகுதிகள்தான் மொழிச்செறிவு மிக்க மண்டலமாக விளங்குகின்றன என்றும் சொல்கிறார் மொழியியல் அறிஞர் ஜொனாதன் லோ (Jonathan Loh).

இப்புவியிலேயே மொழி அடர்த்திமிக்க பகுதி பாப்புவா நியூகினியா தீவு. 4,62,840 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவில் 830 மொழிகள் புழங்குகின்றன. அதாவது 558 ச.கி.மீட்டருக்கு ஒரு மொழி புழங்குகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 200 ச.கி.மீட்டருக்கு ஒரு மொழிகூடப் புழங்குகிறது. இத்தகைய மொழிச் செறிவுமிக்க பகுதி உலகில் வேறெதுவும் இல்லை. இங்கு மட்டும் இத்தனை மொழிகள் குவிந்திருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. முதற் காரணம் ‘காலம்’. பாப்புவா மக்கள் ஏறத்தாழ 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்நிலத்தில் குடியேறிவிட்டனர். வில்லியம் ஏ ஃபோலே (William A. Foley) என்பவரின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்ட குமுகம் பேசும் ஒரு குறிப்பிட்ட மொழி ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுக்கும் இரண்டாக உடைகிறது. ஆக 40,000 ஆண்டுகளில் 1,012 மொழிகள் உருவாகிவிடும். இதில் மொழிக்கலப்பும், அழிவுக்குள்ளாகும் மொழிகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இரண்டாவது காரணம், நிலவியல் அமைப்பு. மலைப்பகுதிகள் மொழிகளின் பன்மயத்துக்கு நீண்டகாலக் காரணியாக அமைந்திருப்பதை இவர் குறிப்பிடுகிறார். இதற்கடுத்த காரணியாக தீவு, சதுப்புநிலம், வெப்பமண்டலக் காடுகள் ஆகியவை உள்ளன. இவ்வனைத்துக் கூறுகளும் பாப்புவாவில் உள்ளன.

தமிழ்ச்சூழலை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம். உலகின் பல்லுயிர்ச் செறிவு மிக்க பன்னிரண்டு பகுதிகளுள் ஒன்று தமிழகத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை. தமிழர்கள் முதலில் வசித்தது இம்மலைப்பகுதியான குறிஞ்சி நிலத்தில்தான். தமிழ் நிலம் ஒரு தீவாக இல்லாததால் மொழி பேசும் பரப்பு விரிந்து பரந்ததோடு ஃபோலேயின் கருத்துப்படி பிற திராவிடக் குடும்ப மொழிகளாக உடைந்து பிரிந்ததையும் கருத்தில் கொள்ளலாம். ஆனாலும், தமிழ் தன் சிறப்பை இழக்காமல் தனித்தியங்கும் தன்மைகொண்ட செம்மொழியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

மொழி என்பது அது பேசப்படும் நிலத்தின் கண்ணாடி. அந்நிலத்தின் சூழலியலை அம்மொழி ஆடிதான் பிரதிபலிக்கிறது. காலூன்றுவதற்கு நிலமற்றுத் திரியும் சமற்கிருதமோ, பல்லுயிரியம் என்றால் என்னவென்றே அறியாத அய்ரோப்பிய மண்டலத்து மொழியான ஆங்கிலமோ இத்தகைய செறிவைத் தம்முள் கொண்டிருக்கவில்லை. எனினும், இவ்விரு மொழிகளும் தமிழ்மொழியை மட்டுமல்லாது நிலத்தின் வரலாற்றையும் சீரழித்துள்ளன. நமது எழுத்தாளுமைகளும் இதற்கு இணங்கியே எழுதி வருகின்றனர். இந்நிலத்தின் சூழலை வேராகக்கொண்ட தமிழ்ச் சொற்களை விடுத்து, வேற்றுநிலப் பண்புகளை வேராகக்கொண்ட அந்நியச் சொற்களைத் திணிக்கையில் நடைபெறும் கோமாளித்தனம் இவர்களால் உணரப்படவே இல்லை.

அனைத்து மொழிகளைப்போலவே ஆங்கிலம், தமிழ் மொழிகளிலுள்ள சொற்களின் உருவாக்கத்தையும் இம்மொழிகள் தோன்றிய பகுதியின் நிலவியலே தீர்மானித்திருக்கிறது. ஆங்கிலம் உருவான இடம் குளிர் மண்டலப்பகுதி. தமிழ் தோன்றியதோ வெப்பமண்டலத்தில். நெடுநாள் குளிரில் வாடும் ஆங்கிலேயர்களுக்கு வெப்பம் என்பது மகிழ்வைக் கொண்டுவரும். எனவேதான் அவர்கள் வேனிற் காலத்தை (Spring) வரவேற்கிறார்கள். இதற்கு நேர்மாறாக வெப்பமண்டலவாசிகளான தமிழர்கள் நெடுநாள் வெப்பத்தில் வாடுவதால் குளிர்ச்சியைக் கொண்டுவரும் கார்காலத்தை வரவேற்றார்கள். இந்நிலவியல் தன்மையே இவ்விரு மொழிகளின் சொற்களிலும் ஆட்சி செலுத்துகின்றன. இதனாலேயே கடுமையான வெப்பமானது தமிழ் இலக்கியங்களில் கடியப்பட, அய்ரோப்பிய, அமெரிக்க இலக்கியங்களில் அன்புக்கும் பக்திக்கும் மிதவெப்பம் ஒப்பிடப்பட்டு வரவேற்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார் தனிநாயகம் அடிகள்.

ஒருவரை வரவேற்க ஆங்கிலத்தில் ‘வார்ம் வெல்கம்’ (warm welcome) என்ற சொல்லும், நன்னெஞ்சைக் குறிப்பிட ‘வார்ம் ஹார்ட்’ (warm heart) என்ற சொல்லும் வெப்பத்தோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது.  தமிழில் இதே பொருளுள்ள சொற்கள் இதற்கு நேர்மாறாக குளிர்மையோடு ஒப்பிடப்பட்டு ‘மனம் குளிர்ந்த வரவேற்பு’, ‘ஈரநெஞ்சம்’ எனக் குறிக்கப்படுகிறது. மழைகொண்டு வரும் கருமுகிலைத் தமிழ் ‘எழிலி’ என வருணிக்க, ஆங்கிலமோ தமது குழந்தைகளுக்கு ‘Rain rain go away’ எனச் சொல்லித்தருகிறது. இப்பின்னணி வடமொழிக்கும் பொருந்தும்.

அய்ரோப்பிய அளவுக்கு இல்லாவிடினும் வடஇந்தியாவும் குளிர்ப்பகுதியே. ஆண்டில் நெடுநாள் குளிர் நிலவும் இங்கு வெப்பமே வரவேற்கப்படுகிறது. இதனால்தான் வேனிற் காலமான வசந்தம் வடபுலத்தில் கொண்டாடப்படுகிறது. நிலவியல் சார்ந்த இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தமிழில் புழங்கும் வசந்தகாலக் கவிதைகள் உண்மையில் எரிச்சலூட்டுகின்றன. இளவேனில் என்கிற தமிழ்ச் சொல்லை ‘வசந்தம்’ என்கிற வடமொழிச் சொல் ஆக்கிரமித்து தவறான பொருளையும் தந்துவருகிறது. கவிதைகளைச் சற்று ஒதுக்கி, அனைவரும் அறிந்த திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்கொள்வோம். ‘வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்.’ இப்பாடலை இளவேனிற் காலமான சித்திரை வைகாசியில் நீரற்று வறண்டு கிடக்கும் தமிழகத்தின் ஓர் ஆற்றங்கரையில் நின்று பாடுவதைக் கற்பனை செய்யுங்கள். இதுபோலவே ‘வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்’ என்று கசகசக்கும் கோடை வெயிலைப் போன்றே தன் வாழ்வும் அமைய வரவேற்கும் பாடலாசிரியரை என்னவென்று சொல்வீர்கள்? கவிதைகளிலும்கூட இந்த ‘வசந்த’ அபத்தங்கள் இடம் பெற்றிருப்பதை வாசித்துப் பாருங்கள். தமிழ்நிலத்தில் இல்லாத பருவமான ஆங்கிலத்தின் Autumn என்கிற இலையுதிர் காலத்தின் கதையும் இப்படித்தான். தனியே ஒரு நூல் எழுதும் அளவுக்கு இவ்வாறான அபத்தங்கள் தமிழில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

பயிற்றுமொழி வழியாக ஆங்கிலத்தின் தாக்கம் இன்றைய தமிழ்க் குழந்தைகளின் மொழியையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு ‘எலிஃபன்ட், டைகர்’ என்கிற இரு சொற்களைக்கொண்டுதான் அடையாளம் தெரிகிறது. யானையோ  புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம். ஆனால், இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியைச் சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு. புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் எனத் தமிழில் பல சொற்கள் உள்ளன.

புல் என்றால் புல்லுதல். அதாவது, பொருந்துதல் அல்லது தழுவுதல். புல் என்பது புல்லி ஆக மாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகள் என்கிற அறிவியல் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர். ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது, ஒரு அய்ரோப்பியர் முதன்முதலில் அங்குதான் அவ்விலங்கைப் பார்த்தார். ஆனால், தமிழ் நிலத்தில் இன்று புலி இருக்க, புலி என்ற சொல்லை மட்டும் காணோம்.

ஆங்கிலச் சொல்லான எலிபன்ட் என்கிற சொல் பழைய ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து பிறந்ததா அல்லது இலத்தீன், கிரேக்க மொழியிலிருந்து பிறந்ததா என இன்னும் ஆய்வில் இருக்கையில், தமிழில் இதற்கு யானை, எறும்பி, தும்பி, தூங்கல், தோல், கறையடி, பொங்கடி, உம்பல், வாரணம், ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், குஞ்சரம், அத்தி, வேழம், உவா, கரி, களிறு, பிடி, கைம்மா, மறமலி, ஆம்பல், கோட்டுமா, கடிவை, புகர்முகம், பகடு, கரிணி, களபம், மருண்மா, தந்தி, வழுவை, கயம், மதகயம், இபம், கும்பி, பூட்கை, புழைக்கை, மதமா, மந்தமா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன.

இவையனைத்தும் யானையின் உருவமைப்பு, நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர்கள். ‘நிகண்டுகளில் யானையின் உடலில் 25 பாகங்களுக்கு மேல் தனிப்பெயர்கள் காணப்படுகின்றன’ என்கிறார் பி.எல்.சாமி. பல்லுயிரியச் செறிவு மிக்க பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் அத்தன்மையைத் தம் மொழியிலும் ஏற்றிவைத்தனர். இப்படியாக ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களைக் கொண்ட ஒரு மொழியை, அவ்வுயிரினத்தைக் குறிக்கச் சொல் ஏதும் சொந்தமாக இல்லாத ஒரு வேற்று மொழி அடித்து வீழ்த்தி வருகிறது. மற்ற சொற்களுக்கும் இது பரவினால், எதிர்காலத்தில் அது மொழியை ஒழித்த பண்பாட்டு மேலாதிக்கமாக மாறிவிடும். கூகி வா தியாங்கோவும் இதைத்தான் தெளிவுபடுத்துகிறார்.

இயற்கை என்பது தொடக்ககால மனிதர்களால் அறிவியல் என்று அறியாமலேயே பயின்றுவரப்பட்ட ஓர் அறிவியல் துறை. தமிழும் அவ்வழி பயின்றதே. ஒரு மலர், மொட்டிலிருந்து மலராக மாறுவதற்குள் அதன் நிலைகளைக் குறிக்க நனை, முகை, அரும்பு, போது, மலர், அலர், வீ எனப் பல சொற்கள் தமிழில் உண்டு. சூழலுக்கு நெருக்கமாக வாழ்ந்ததால்தான் மலரும் நிலைகளைக் கூர்ந்து கவனித்து இப்பெயர்களைச் சூட்ட முடிந்திருக்கிறது. இயற்கை அறிவியலைப் பயின்ற இத்தமிழர்கள் ‘மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே’ எனச் சூழல் மண்டலத்தை உயிர்த்தன்மை உடையதாக வரையறுத்தனர், ஐந்திணைகளையும் ஓர் அமைவாகப் பதிவுசெய்தனர். பல்லுயிர்ச் செறிவற்ற நிலத்தில் பிறந்த ஆங்கில மொழிவழித் தோன்றிய பண்பாடோ சூழல்மண்டலத்தை உயிரற்ற அமைப்பாகக் கருதியது. இத்தகைய பண்பாட்டின் துணைப்பொருளாக விளைந்த இதன் தொழில்நுட்பங்கள் இயற்கையின் உயிர்த்தன்மை அறியாது அதனை அழித்துத் தாம் வாழ முற்பட்டன. இக்கருத்தாக்கம் தமிழர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தியிருப்பதன் விளைவே இன்றைய தமிழ்நிலத்தின் சுற்றுச்சூழல் சீர்கேடு.

ஏற்கெனவே இயற்கை அறிவியல் உள்ளிட்ட குறித்த கலைச்சொற்கள் விரவிக்கிடக்கும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. அறிவியல் இன்று விரிவாகக் கிளைபிரித்து வளரும்போது, மொழிக்கு மேன்மேலும் பல கலைச்சொற்கள் தேவைப்படுகின்றன. தமிழ் பசுமை இலக்கியத்தின் மறுமலர்ச்சி நிறைய தமிழ்ச் சொற்களைப் புதுக்கியும், புதிய கலைச்சொற்களை உருவாக்கியும் மொழிக்குப் பங்களித்து வருகிறது. தூய இலக்கியவாதிகள் செய்யத் தவறிய இச்செயலைப் பசுமை இலக்கியம் செய்துவருவதோடு அச்சொற்களைப் பொதுவெளிப் புழக்கத்துக்கும் கொண்டுவந்து வெற்றி கண்டிருக்கிறது.

2000-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு பதிவின்படி லுவா (Lua) என்கிற மொழியை ஒரே ஒருவரே பேசினார். இன்று அவரோடு அவர் மொழியும் அழிந்துவிட்டிருக்கலாம். ஆனால், முரணாக ஒரு புகழ்பெற்ற கணினி மொழிக்கு லுவா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் என்பது கணினியிலும் வாழும் மொழியாக நிலைத்திருக்க வேண்டும். அதுவொரு கணினி மொழியின் பெயராக மாறிவிடக் கூடாது. இப்பொறுப்பு தமிழில் எழுதும் அனைத்து எழுத்தாளுமைகளுக்கும் இருக்கிறது.

-நக்கீரன்
விகடன் தடம். டிசம்பர் 2016