சனி, ஏப்ரல் 25, 2009

சென்னையில் பெண்கள் உண்ணாவிரதம் 13வது நாளாக நீடிப்பு

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் மதிமுக தலைமை அலுவலகமாக தாயகத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது.
முதலில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. ஆனால் இதை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ம.தி.மு.க தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரத இடத்தை மாற்றி இருந்து வருகின்றனர். பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் 21-04-09 மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி. கனிமொழி உண்ணாவிரதம் இருக்கும் பெண்களை சந்திக்க தாயகம் வந்தார். தரையில் சோர்வுடன் படுத்திருந்த பெண்களுக்கு அருகே தரையில் அமர்ந்து உடல்நலன் குறித்து விசாரித்தார்.

அப்போது உண்ணாவிரதம் இருந்த பெண்களில் ஒருவர் இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு முன் எங்கள் 20 பேரின் உயிர் ஒரு பொருட்டு அல்ல என் கண்ணீருடன் தெரிவித்தார்.

இதையடுத்து கனிமொழியின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. இதையடுத்து கனிமொழி அவர்களிடம் கூறுகையில், போர் நிறுத்தம் ஏற்பட முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உங்கள் கோரிக்கையை சோனியா காந்தி கவனத்திற்கு கொண்டுசெல்வேன்.


இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை யாரும் நியாயப்படுத்த வில்லை. உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் நலமாக இருந்தால்தானே இலங்கை தமிழர்களுக்காக போராட முடியும். எனவே, தயவு செய்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்து அங்கிருந்து கிளம்பினார்.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த பெண்களில் 5 பேரின் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் போலீஸார் திடீரெனக் கைது செய்தனர். 22-04-09 அன்று அதிகாலை ஐந்தே முக்கால் மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.




பின்னர் அவர்களை வேனில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தற்போது கைது செய்யப்பட்ட ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி, லோகநாயகி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மிச்சமுள்ள 15 பெண்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 13வது நாளை எட்டியது. இந்தப் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றனர். எழக் கூட முடியாமல் படுத்தபடியே உள்ளனர். இவர்களது உடல் நிலையை அவ்வப்போது டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பேராசிரியை சரஸ்வதி, மற்றும் பாண்டிமா தேவி, பழனியம்மாள், லிட்வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்ததால் ஆம்புலன்சும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது.

இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண்களே முன் நின்று நடத்தும் இந்த உணர்வுப் போராட்டத்தின் வலியை, பெண்ணாகிய நானும் உணர்வேன். என் அன்புச் சகோதரர் மணி உள்பட ஈழத்தமிழர்களுக்காக தங்கள் இன்னுயிரை 14 தமிழர்கள் மாய்த்துக் கொண்டும், கருணாநிதி போர் நிறுத்தத்திற்கு தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருப்பதை தவிர்த்து, பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதுதான் இப்போதைய முக்கியத் தேவை.

எனவே, உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் அனைவரும் தங்களுடைய உண்ணாவிரத அறப்போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


போராட்டத்தை கைவிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரித்துவிட்ட இவர்கள் அவ்வப்போது தண்ணீர் மட்டுமே குடித்து வருகின்றனர்.


அவர்களை பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் சந்தித்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Courtesy: thatstamil

வியாழன், ஏப்ரல் 16, 2009

ராஜீவ் காந்தியை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் நளினிக்கு இல்லை - பிரியங்கா

எனது தந்தை ராஜீவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற தீய நோக்கம் நளினிக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.


தன்னைச் சூழ்ந்திருந்த சிக்கல்களால் கொலை சதிக்கு நளினி உடந்தையாகிவிட்டதாகவே தெரிகிறது என்றும் அவர் கூறினார்.


பழிவாங்க வேண்டும்; தீங்கு செய்ய வேண்டும் என்ற நோக்கம் நளினிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் பெரிய கொடூரத்தைச் செய்ய துணை போகிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருந்ததாகத் தெரியவில்லை என்றார் பிரியங்கா.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினியை கடந்த ஆண்டு வேலூர் சிறையில் பிரியங்கா சந்தித்தார். இந்தச் சந்திப்பு அப்போது பரபரப்பாக பேசப்பட்டாலும் சந்திப்பின் நோக்கம் பற்றியோ நளினியிடம் பிரியங்கா பேசிய விவரங்களோ முழுமையாக வெளிவரவில்லை.


இந்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரத்தையொட்டி செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் பிரியங்கா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நளினியைச் சந்தித்தது பற்றி குறிப்பிட்டார்.


எனது தந்தை ராஜீவ் காந்தியை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே, நளினி இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம். நளினியைச் சிறையில் சந்திக்கும்போது அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தந்தையை இழந்து நான் துயரப்படுவதைப் போலவே அவரும் ஒரு வகையில் துயரத்தில் சிக்கியுள்ளார் என்பது அவரைச் சந்தித்தபோது தெரிந்தது என்றார் பிரியங்கா.


ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, அது, சோனியா காந்தியின் கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் நளினியின் கணவர் ஸ்ரீகரன் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Courtesy: Dinamani, 16-04-09

திங்கள், ஏப்ரல் 13, 2009

ஸ்பெக்ட்ரம் - லட்சம் கோடி மெகா ஊழல்

ஒரு ரூபாய்... நூறு ரூபாய்... பத்தாயிரம்... லட்சம் ஊழல், பத்து லட்சம் ஊழல், ஒரு கோடி ஊழல், நூறு கோடி ஊழல், ஆயிரம் கோடி ஊழல் கேள்விப்பட்டிருக்கிறோம்!

லட்சம் கோடி ஊழல்... நம்ப முடிகிறதா? நடக்க சாத்தியம் உள்ளதா... 1947 முதல் 2007 வரை நாட்டில் நடந்த ஒட்டு மொத்த ஊழல்களைக் கூட்டினாலும், பெருக்கினாலும் வராத தொகை சில நூறு கோடி போபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியது. அரசையே மாற்றியது.

ஆனால் ஒரு லட்சம் கோடி ஊழல்! தேசத்தின் வருவாய்க்கு மிகப் பெரிய இழப்பு. வாங்கிய கடனை செலுத்த முடியாமல் நேர்மையான விவசாயிகள் ஒரு லட்சம் பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். பள்ளிக்கு செல்லும் வயதில் குழந்தைகள் செங்கல் சூளைகளில் இருக்கிறார்கள். வேலை இழந்த தொழிலாளிகள் தங்கள் வாழ்விற்காக சிறுநீரகத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வைரம் மிக உயர்ந்த ஆபரணம். ஆனால் 71 பட்டை தீட்டும் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது சமீபத்திய செய்தி. வைரத்திற்கு மதிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் உயிர்க்கு மதிப்பு இல்லை.

ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக ஆனவர்களை பார்த்திருக்கிறோம். அதே தலைமுறையில் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே வருடத்திற்குள், எந்த வித வேலையும் செய்யாமல் 5000 கோடி சம்பாதிப்பது எப்படி? அதற்கும் வழி உள்ளது இந்த நாட்டில். தேவை தொலைதொடர்பு அமைச்சரின் கருணை மட்டுமே!

சுவான் டெலிகாம், யூனிடெக் டெலிகாம் இந்தப் பெயர்களை நீங்கள் யாரும் கேட்டிருக்கிறீர்களா! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா! ஒரு டவர் கூட அமைக்காமல் ஓர் ஆபிஸ் கூட இல்லாமல் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல் ஒரு செல்போன் கம்பெனி 5000 கோடி சம்பாதித்திருக்கிறதே! சுவான், யூனிடெக் இவை எல்லாம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். ஒரு நகரையே கட்டி முடித்தால் கூட கிடைக்காத லாபம்! ஒரே ஒரு உரிமத்தில் கிடைத்தது எப்படி? செல்போன் சேவை மட்டுமா ஹை டெக். அதில் நடைபெற்றிருக்கும் ஊழல்களும் ஹைடெக்தான்.

பிரதமர், நிதி அமைச்சர், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆலோசனை, எல்லாவற்றையும் மீறி ஓர் அமைச்சர் செயல்பட முடியுமா? மத்திய அமைச்சரவைக்கு பதில் சொல்ல வேண்டாமா? ஆனால் அமைச்சர் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு, தனக்கு மட்டுமே அதிகாரம் என்று செயல்பட்டுள்ளார். தட்டிக் கேட்க பிரதம அமைச்சருக்கு தைரியம் இல்லை. மானியங்கள் இருக்கக் கூடாது என்று கூப்பாடு போடும் நிதி அமைச்சருக்கும் துணிவு இல்லை. கூட்டணி அவ்வளவு பலமாக உள்ளது.

இந்த ஊழலை யார்தான் தட்டிக்கேட்பது? இந்த ஊழலைப்பற்றி யாராவது தட்டிக் கேட்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
(அறிவாலயம் பின்புறம்)
தேனாம்பேட்டை, சென்னை -600 018.

தொலைபேசி: 044-2433 2924

விலை ரூ. 5

காட்டிக்கொடுக்கும் கருணா - ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.

சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.

லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.

வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.

இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.

இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.

கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.

இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.

காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.

கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.

பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.

பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.

கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.

தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.

-சை. பீர்முகம்மது


Courtesy: http://www.kalachuvadu.com

ஞாயிறு, ஏப்ரல் 05, 2009

கலைஞர் கருணாநிதியும் வடிவேலுவும் ஒரு கற்பனை சந்திப்பு

ஈழச்சிக்கலில் கலைஞரின் நடவடிக்கைகள் நம்மை மயிர்க் கூச்செரிய வைக்கின்றன. ராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்று கொஞ்சநாள் பேசினார். சகோதர யுத்தம் என்று சில நாள் விளக்கமளித்தார். ஈழமக்கள் துயர்தீரும் நாளே தன் வாழ்வின் சாதனை நாள் என்று பிரமிப்பூட்டினார்.

நாளை ஈழம் மலரும் என்றால் இன்றே இந்த ஆட்சியை இழக்க தயார் என்று சவால் விட்டார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையிலும் இந்த ஆட்சியில் தான் இருப்பதே தமிழகத் தமிழர்களை பாதுகாக்க மட்டுமல்ல ஈழத் தமிழர்களையும் பாதுகாக்கத்தான் என்று பரவசப்படுத்தினார். நாளொரு நாடகமும், பொழுதொரு பொய்யும் சொல்லி நாட்களை கடத்துகின்றார்.

“அய்யகோ ஈழமக்கள் அழிகின்றார்களே இறுதித்தீர்மானம்” என்று அலறினார். மறுநாளே தி.மு.க பொதுக்குழு இறுதி முடிவெடுக்குமென்றார். தி.மு.க பொதுக்குழுவிலே பிரபாகரனை வசைபாடினர்.

காங்கிரசு எடுபிடிகளின் ஏவல்களுக்கு அஞ்சி; பெ. மணியரசன், சீமான், கொளத்தூர் மணி போன்றோரை கைது செய்தார். ஓ. பன்னீர்செல்வம் கூட செயலலிதாவிற்கு மட்டும்தான் பயந்தார். ஆனால் கருணாநிதியோ? செயலலிதாவின் மிரட்டலுக்கு அஞ்சி வைகோ, நெடுமாறன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றோரையும் கைது செய்தார்.

முதுகுத் தண்டுவடத்தில், அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ‘மல்லாக்க’ படுத்துக்கொண்டு ‘வீடியோ கான்பரசிங்’ மூலம் நடத்திய அரசியல் நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. இந்திய இறையாண்மை குறித்து அவர் பேசும்போதெல்லாம், ‘வேண்டாம் வலிக்குது விட்டுரு அழுதிடுவேன், என்ற நடிகர் வடிவேலுவின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி பரிதாபமாய் மருத்துவமனையில் படுத்திருக்கும் கருணாநிதியை வடிவேலு சந்தித்தால் உரையாடல் எப்படி இருக்கும்?

இதோ கற்பனை நேர்க்காணல் :

வடிவேலு : அய்யா, வணக்கம்

கலைஞர் : வாஙக் தம்பி வடிவேலு. ஓய்வு நேரத்துல உங்க நகைச்சுவை காட்சிகள் தான் மனதுக்கு ரொம்ப ஆறுதலா, தெம்பா இருக்கு.

வடிவேலு : எப்படி இருக்கீங்க அய்யா?

கலைஞர் : முடியல. கண்ணக்கட்டுது. (சிரிக்கிறார்)

வடிவேலு : முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குக் குப்புற படுக்கச் சொன்னதுக்கு நான் எதுக்காகவும் குப்புற விழமாட்டேன்னு சொன்னீங்களாமே?

கலைஞர் : இந்த பத்திரிக்கைகாரங்க ஏன்தான் இப்படி எழுதுறாங்களோ. உட்கார்ந்து யோசிப்பாங்களோ தம்பி. இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதான் என்னை ரணகளப்படுத்துறாங்கப்பா.

வடிவேலு : எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மத்தவங்க உணர்ச்சிய உருவாக்கினாலும் , உசுப்பேத்தினாலும் நீங்கதான் ‘பொசுக்’;குன்னு இறக்கிவிட்டுருங்களே?

கலைஞர் : எதச் சொல்ற தம்பி?

வடிவேலு : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராகப் போராடிய கன்னடர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் திரையுலகினர் நாங்களும் உங்களுக்கு ஆதரவா உண்ணாவிரதம் இருந்தோம். ஆனா நீங்க கர்நாடக தேர்தல் முடிஞ்சவுடன் பேசிக்கலாமுன்னு சொல்லித் தமிழக உணர்ச்சியை மடைமாற்றி விட்டுட்டீங்க.

கலைஞர் : நான் சமயோசிதமா சிந்தித்து; எடுதத் முடிவாலதான் கர்நாடக- தமிழக மத்தியில் பகையுணர்ச்சி வளராம தடுக்க முடிஞ்சது. இந்திய இறையாண்மைக்கு வரவிருந்த ஆபத்தை என்னுடைய ராஜதந்திர நடவடிக்கையால தடுத்து நிறுத்தினதை நீங்க புரிஞ்சிக்கனும். நீங்க புரிஞ்சுக்காம போனா பரவாயில்ல. என்னுடைய ராஜதந்திரத்தை தோழர் என். வரதராஜனும், தம்பி வீரமணியும் வரவேற்று பாராட்டியதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்.

வடிவேலு : அய்யா வரதராசனும் - அய்யா வீரமணியும் உங்கள பாராட்டியதை என்னுடைய திரைப்படத்துல பயன்படுத்தியிருந்தேனே - பார்த்தீங்களா?

கலைஞர் : நீங்க நடிச்ச படத்துலேயே நான் அதிகம் ரசித்த படமாச்சே இம்சை அரசன் 23-ம் புலிகேசி . எதிரி மன்னன் படையெடுத்து வந்தவுடன் வீரர்களிடம் ஆவேசமாக பேசிவிட்டு, வௌளைக் கொடியோடு ஒரு ஆட்டம் போட்டு சரணடைவீங்க. உடனே இரண்டு புலவர்கள் வந்து உங்களப்பாத்து வெள்ளைக் கொடியோடு வந்து எதிரியை விரட்டிய மாமன்னா என்று பாராட்டுவாங்க. இந்த காட்சியதான சொல்றீங்க.

வடிவேலு : ரொம்ப சரியா சொன்னீங்க அய்யா.

கலைஞர் : இநத் படத்துல வௌ்ளைக்காரன்கிட்ட இனாம் அது ரொம்ப முக்கியமுன்னு சொல்லுவீங்களே அந்தக் காட்சியில நடிப்பும் முகபாவனையும் ரொம்ப அருமை.

வடிவேலு : பல்வேறு பணிகளுக்கு இடையிலும் என்னுடைய படங்களையெல்லாம் பார்க்குற நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி அய்யா.

கலைஞர் : என் காதுபட என்னைப் புகழாதீங்க தம்பி, கவியரங்கம் ஏற்பாடு செய்கிறேன். அங்க வந்து பேசுங்க. ஆஸ்தான கவிஞர்கள் பட்டியல்ல உங்களையும் சேர்த்துக்கிறேன்.

வடிவேலு : அய்யா இந்த முத்துக்குமார் அறிக்கையை பார்த்தீங்களா?

கலைஞர் : என்ன, சின்னப்புள்ளத்தனமா கேக்குற, அறிக்கையா தம்பி அது ! இல்லப்பா என்னைப் போன்றவர்களுக்கு வைத்த பெரிய ஆப்பு. நீங்க நடித்த வின்னர் படத்து கைப்புள்ள கதாபாத்திரத்தோடு என்னை கனக்கச்சிதமாப் ‘பொசுக்’குன்னுபொருத்திட்டானே.

வடிவேலு : ஆமாங்கய்யா. நீங்களும் அனைத்துக்கட்சி கூட்டம், சட்டமன்றத் தீர்மானம், பேரணி, மனித சங்கிலின்னு செய்றீங்க. ஒண்ணும் எடுபடலையே.

கலைஞர் : நல்லா கேட்கிறாங்க டீடெய்லு. இருப்பது ஒர் உயிர். அது போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமுன்னு நான் ஆயிரத்து நானூறு முறை சொல்லியிருந்தேன்.

வடிவேலு : எத்தனைபேர் அடிச்சாலும் வலிக்காத மாதிரி நான் நடிப்பது போல நீங்களும் நல்லா சமாளிக்கிறீங்க அய்யா.

கலைஞர் : உண்மை தம்பி. அதுமட்டுமல்ல. கைப்புள்ள நீங்க அடிபட்டு சட்டைகிழிஞ்சு நடக்க முடியாம பாலத்துல உட்கார்ந்து இருப்பீங்க. அந்த வழியா நடந்துபோற ரெண்டு பேர் உங்களப் பார்த்துச் சொல்லுவாங்க அடி கொடுத்த கைப்புள்ள நிலையே இப்படின்னா, “அடி வாங்குனவன் கதி என்னவாயிருக்குமோ?” அப்படின்னு சொல்லும்போது, “இன்னுமாடா நம்பள நம்புறாங்க”ன்னு நீங்க சொல்வது போலத்தான் என் நிலையும்.

வடிவேலு : எதிர்ப்புகளை எப்படி எதிர் கொள்றீங்க.

கலைஞர் : உடம்புல எங்க வேண்ணாலும் அடிச்சுக்குங்க. ஆனா ஃபேசுல மட்டும் அடிக்காதீங்க, பர்சனாலிட்டி முக்கியமுன்னு நீங்க சொல்லுவீங்க. அதுமாதிரி தான் நானும் என் குடும்ப உறுப்பினர்களை யாராவது குறை சொன்னா உடனே கவிதை எழுதிடுவேன். கண்டன அறிக்கை கொடுத்துடுவேன். “பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கு. பேஸ் மட்டம் வீக்கா இருக்குறதால வேகமா செயல்பட முடியல.” மருதமலை படத்துல போலீசுகாரர் உங்கள அடிச்சு கத்திக்குத்து கந்தன், பீடா ரவியெல்லாம் பெரிய ரவுடிகளா ஆனது போல பலர் என்னைப் பேசி பெரிய ஆளா வரப்பார்க்குறாங்க. போகட்டும் தம்பி, உங்களுக்கும் ஏதாவது ஒரு பட்டம் தரணும்னு ரொம்ப நாளா ஆசை.

வடிவேலு : (தனக்குள்) (பார்க்க வந்தது ஒரு குத்தமாடா) பட்டமெல்லாம் ஒண்ணும் வேண்டாங்கய்யா. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.

கலைஞர் : எதுக்குப்பா?

வடிவேலு : நான் 23-ம் புலிகேசி, தீப்பொறித் திருமுகம், கைப்புள்ளன்னு பல கதாபாத்திரங்கள்ள நடிச்சிருக்கேன். நீங்க என்னுடைய கதாபாத்திரங்களுக்கே உயிர் கொடுத்து வாழ்ந்துகிட்ருக்கீங்க. அதுக்காகத்தான்.

“என்னை வைச்சு காமெடி - கீமெடி பண்ணலயே” - என்றவாறு கலைஞர் முறைக்க வடிவேலு வேகமாக வெளியேறுகிறார்.

-நா. வைகறை

நன்றி: தமிழர் கண்ணோட்டம், மார்ச் 2009, www.keetru.com

புதன், ஏப்ரல் 01, 2009

ஞாநியின் ‘தர்க்க வாதங்கள்’ - ஒரு விளக்கம்

'ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை; அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை’ என்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பேசியதை ‘கீற்று’ இணையதளம் வெளியிட்டிருந்தது.

‘குமுதம்’ பத்திரிகையில் வாரம்தோறும் ‘ஓ’ பக்கங்கள் எழுதி வரும் ஞாநி, இதைத் தேடி எடுத்து வெளியிட்டு, “மரண தண்டனையை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்கிறதா? ராஜீவ்காந்தியுடன் இறந்த 20 அப்பாவி போலீசாருக்கும் மரணதண்டனை தரப்பட வேண்டுமா? அப்படியானால் ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனையை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் கையெழுத்து இயக்கம் நடத்தலாமா?” என்ற கேள்விகளை ‘தர்க்க’ ரீதியாக எழுப்பியிருந்தார் (‘குமுதம்’ 4.3.2009).

கொளத்தூர் மணியின் அந்த உரையை பல லட்சம் மக்கள் படிக்கும் ‘குமுதம்’ இதழில் வெளிப்படுத்தியதற்காக அவருக்கு முதலில் நன்றி கூறுகிறோம். ‘குமுதம்’ இதழில் ஞாநி அந்த உரையை வெளியிட்டதற்குப் பிறகு தமிழக அரசின் காவல்துறை, முதல்வர் ஆணைக்கேற்ப கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. கொளத்தூர் மணி இப்போது மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டார்.

எல்லோரையும் ‘தர்க்க’ ரீதியாக மட்டுமே பார்க்கக் கூடியவர் ஞாநி. ஆனால், பார்ப்பன பாரதிக்கு மட்டும் விதிவிலக்கு தந்து விடுவார். எனவே கொளத்தூர் மணியின் இந்த பேச்சுக்கு காரணமாக இருந்த உணர்வுகளை, நியாயங்களை ஞாநியால் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்ட சமூகத்துக்கும், வர்க்கத்துக்கும் தானே அந்த ‘வலி’யும் உணர்வும் புரியும்.

கொளத்தூர் மணி இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய காரணத்தை அவரே ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி : ராஜீவ்காந்தி கொலையை நீங்கள் நியாயப்படுத்தி வருவதாக உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறதே?
பதில் : அப்படி நாங்கள் ஆரம்பத்திலிருந்தே பேசியிருக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால், ஓர் இனமே அழிந்து கொண்டிருப்பதைவிட ஒரு மனிதர் இறந்ததுதான் பெரிதென்று அவர்கள் பேசாமல், அமைதியாக இருந்திருப் பார்கள். அப்படி நாங்கள் பேசாமல் விட்டதன் விளைவாகத்தான் அளவுக்கு அதிகமாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு, தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சும்மா அதையே இன்னும் பேசிக் கொண்டிருந்தால் எப்படி?என்று கொளத்தூர் மணி விளக்கியுள்ளார்.

இதே கருத்து, “ஞாநி ‘குமுத’த்தில் எடுத்துக்காட்டியுள்ள கொளத்தூர் மணி பேச்சிலும் இடம் பெற்றுள்ளது” என்றுதான் நாம் பேசியிருக்க வேண்டும் என்று கொளத்தூர் மணி, தனது உரையோடு சேர்த்து குறிப்பிட்டுள்ளார். 18 வருடங்களாக அந்த ஒரு சாவை மட்டுமே முன் வைத்து ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பும், பகையும் தொடர்ந்து காங்கிரசாரால் வெளிப்படுத்தப்பட்டு வருவதற்கான எதிர் வினையே கொளத்தூர் மணியின் உரை.

ராஜீவ்காந்தி மரணத்தில் விசாரணை நடத்திய புலனாய்வுத் துறைக்கு உதவியவர் ஞாநி. எனவே ஞாநிக்கு இது தொடர்பான தார்மீகக் கடமைகள் உண்டு. ராஜீவ் கொலை விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சிவராஜன் என்பவர் திருவள்ளூரில் நடந்த வி.பி.சிங் கூட்டத்தில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பதை ஞாநி ஒலிநாடா ஒன்றின் வழியாக கண்டுபிடித்தார். உடனே ‘இந்து’ பத்திரிகை ஆசிரியர் ‘ராம்’ உடன் தொடர்பு கொண்டு, அவரையும் அழைத்துப் போய் புலனாய்வுத் துறை இயக்குனர் கார்த்திகேயனிடம் அந்த ஒளி நாடாவை அளித்தார். ‘ஒரு இந்தியக் குடிமகன் என்ற கடமையுணர்வோடு இதை நான் செய்தேன்’ என்ற கருத்தையும் வெளியிட்டிருந்தார். எனவே அந்தக் கடமை உணர்வின் தொடர்ச்சியாக - ஞாநி இப்போதும் எழுதியிருக்கலாம். ஆனாலும் கொளத்தூர் மணி பேச்சின் நோக்கத்தை அதன் ஆதங்கத்தை தெளிவுபடுத்தியப் பிறகும், அதைப் புரிந்து கொள்ள பிடிவாதமாக ஞாநி மறுக்கிறார். அதற்கான காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்!

உடனடியாக இந்த பதிலை நாம் எழுதாமைக்கும் காரணம் உண்டு. கொளத்தூர் மணியின் ஒரு மேடை பேச்சுக்காகவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் - ஞாநி ‘குமுத’த்தில் அதை வெளிப்படுத்தியது இந்தக் கைதுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஒரு கருத்தை பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை - கருணாநிதி பயன்படுத்தலாமா? என்ற “தர்க்கவாதத்தை” ஞாநி ‘குமுத’த்தில் எழுப்புவாரா என்று எதிர்பார்த்திருந்தோம். அப்படி இதுவரை - தனது ‘ஓ’ பக்கங்களில் அவர் எழுதவில்லை; அதற்காக ‘குட்டு’ வைக்கவில்லை; ஞாநியின் கணிப்பொறி தட்டச்சுப் பலகையில் அவரது கரங்கள் இந்த ‘தர்க்க வாதங்களை’ ஏன் தட்டாமல் போய்விட்டன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. கொளத்தூர் மணியைக் கைது செய்ததற்காக கலைஞர் கருணாநிதிக்கு நான் “பூச்செண்டு” தரவில்லையே என்றுகூட ஞாநி - இதற்கும்கூட தர்க்க வாதம் புரியலாம்.

ஆனால், வார்த்தைகள் - வாக்கியங்களில் - சொற்களை மட்டும் தேடிக் கொண்டிருக்காமல் உணர்வுகளைத் தேடுவது முக்கியம். ஆனால், அதைத் தேட வேண்டிய கவலையோ, உணர்வோ எனக்கில்லை என்பவரிடம் நாம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்? நிச்சயமாக ‘ஓ’ போட முடியாது.

-விடுதலை இராசேந்திரன்
நன்றி: புரட்சி பெரியார் முழ்க்கம், மார்ச் 2009, www.keetru.com