வியாழன், மே 29, 2008

M.S. சுவாமிநாதன் - நேற்று விவசாயி, இன்று மீனவ நண்பன்...

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையைத் (COASTAL REGULATION ZONE NOTIFICATION) துடைத்தெறிந்துவிட்டுக் கடல்சார்சமூகங்களைக் கடற்கரையிலிருந்து வெளியேற்றித் தனியார் ஏகபோகத்துக்குக்கடற்கரையைத் தாரைவார்க்கும் உள்நோக்கத்தின் கவர்ச்சியான வடிவமே எம். எஸ். சாமிநாதனின் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கை (COASTAL ZONE MANAGEMENT NOTIFICATION).

விவசாயிகளின் தற்கொலைகளைத் தொடர்ந்து இந்தியக் கடலோரம் முழுவதும் பரவி வாழுகிற பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்ளும் நெருக்கடி உருவாகி வருகிறது. நடுவண் அரசின் குருட்டுத்தனமான ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கையினால் (1991) 2.02 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்புள்ள இந்தியத் தனியுரிமைப் பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) அந்நிய ஆலைக் கப்பல்களால் சூறையாடப்பட்டு வருகிறது. ‘மீன்வள வளர்ச்சி’ என்ற பெயரில் பாரம்பரியக் கடலோர மீனவர்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கும் கொள்கைகளை அரசுகள் முனைப்புடன் நிறைவேற்றி வருகின்றன.
.
அரசு கொண்டுவர விரும்பும் ஒரு மேலாண்மைத் திட்டத்தில் தல சமூகங்களின் (பயனாளிகளின்) கருத்துப் பங்களிப்பு இருக்க வேண்டும். திட்டமிடுதலிலும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அங்கு வாழும் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் தனியாரின் இலாபதோக்கு நடவடிக்கைகளைத் தாராளமாய் அனுமதிக்கும் நோக்குடன் சுற்றுச்சூழல் சட்டங்களையும் ஒழுங்காற்று விதிகளையும் வளைப்பது அல்லது ஒழிப்பது என்பதான போக்கினை நெடுங்காலமாக அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த அணுகுமுறையின் இன்னொரு வடிவமாகவே கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கை அமைந்திருக்கிறது. அறிவியல் கருத்துகளை ஆயுதமாகப் பிரயோகித்துக் கடற்கரைகளைத் தனியாரின் பெருந்தொழில் முதலீடுகளுக்குத் தாரைவார்க்கும் அரசின் இரகசியத் திட்டம் இந்த அறிவிக்கையில் பூடகமாகத் தெரிகிறது. பெரும் தொழிற்சாலைகளைக் கடற்கரைகளில் நிறுவுவதற்கு ‘இடையூறாக’ இருக்கும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை விதிகளையும் பிற சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளையும் துடைத்தெறிவதே சாமிநாதன் அறிவிக்கையின் மைய இலக்காகத் தென்படுகிறது.
.
இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் குடியிருக்கும் மீனவர்கள் ஒரு கோடி கடல் மீன்வளங்களை மட்டுமே நம்பி வாழும் இந்தப் பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்திற்கும் வாழிடங்களுக்கும் புதிய வடிவங்களில் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்றன. வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம், மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டம், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம்-இப்படி ஒவ்வொரு காலத்திலும் வருகிற சட்டங்கள் வறுமையுற்ற மக்களுக்கு எதிராகவே பாய்கின்றன். மீன் இறக்குமதிக் கொள்கை, அந்தியக் கப்பல்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்கும் கொள்கை, பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள் (Marine Protected Areas) கொள்கை என்று பலப்பல அரசுக் கொள்கைகளால் கடல்சார் சமூகங்கள் தொடர்ந்து பேரிழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த வேளையில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோர மக்களுக்கும் பேரிடியாக விழுந்திருக்கும் ஒரு அறிவிக்கைதான் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கை. இந்தியப் பசுமைப் புரட்சியின் பிதாமகர் என்று புகழப்படும் ம. சா. சாமிநாதனின் தலைமையிலான கமிட்டி பிப்ரவரி 2005இல் கடற்கரை மேலாண்மை மண்டல வரைவுக் கொள்கையை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு 2007 மே மாதம் கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கையை (Draft Notification on Coastal Management Zone) வெளியிட்டுள்ளது. இவ்வரைவு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப்பின் மத்திய அரசு இதனைப் பரிசீலித்து ‘அறிவிக்கை’ (சட்டம்) ஆக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
.
பாரம்பரிய மீனவர்கள் இருவேளை உணவுக்கே திண்டாடும் நிலையில் கரைக்கடலும் கடற்கரையும் பாரம்பரிய உரிமையாளர்களாகிய மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் சூழ்நிலையை மத்திய அரசின் தேசியக் கொள்கைகள் உருவாக்கி வந்திருக்கின்றன. ஆண்டுக்கு 2.25 மில்லியன் டன் புரத உணவினை நாட்டுக்கு அறுவடை செய்து வழங்குகிற, ஆண்டுக்கு ரூபாய் 6300 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிற பூர்வகுடி மீனவனுக்கு இனி கடற்கரை சொந்தமில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்குறது.
.
மத்திய அரசு 1991இல் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையை அறிமுகம் செய்த்தும் அதனடிப்படையில் கடலோர மாநில அரசுகள் தங்கள் மாநிலக் கடற்கரைப் பகுதிக்கான ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத்திட்டத்தைத் (Integrated Coastal Zone Management Plan) தயாரித்து நடுவண் அரசின் ஒப்புதலோடு நடைமுறைப்படுத்த நடுவண் அரசு ஆணை பிறப்பித்ததும் பழைய கதை.
.
கடற்கரையில் பெருந்தொழிற்சாலைகள் நிறுவவும் பெருந்தொழில் சுற்றுலா நடவடிக்கைகளைத் துவக்கவும் கடற்கரைப் பொழுதுபோக்குப் பண்ணைகள் நிறுவவும் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2003 வரை 19 முறை திருத்தம் செய்யப்பட்டது. கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை (1991) வகைப்படுத்தியுள்ள நான்கு வகைக் கடற்கரை மண்டலங்களில், குறிப்பாக மீனவ சமூகங்களின் குடியிருப்புகளை உட்படுத்துகிற இரண்டாம் வகை மண்டலத்தில் தொழிலதிபர்கள் நடத்திவரும் விதிமீறல்கள் இன்றுவரை இந்த அறிவிக்கையின்கீழ் தண்டிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டம் ஏராளமான மீனவக் குடியிருப்புகளை இடம்பெயரச் செய்தவேளையிலும் ஊடகங்கள் மௌனம் காத்து நின்றன. பாரம்பரிய மீனவர்கள் இதனால் கடற்கரையிலிருந்து பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். பாரம்பரிய மீனவர்கள் தினமும் கடலைத் தொட இருபத்தைந்து ரூபாய் செலவிடவேண்டும். பணம் படைத்தவர்களின் பண்ணை விடுதிகளோ அலைவாய்க் கரையில் அமைக்கப்பட்டு தொலைவிலிருந்து வரும் சுற்றுலா அன்பர்கள் கடலை முகமுகமாய்த் தரிசிந்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
.
இந்த வேளையில்தான் 2004 டிசம்பர் ஆழிப்பேரலை இந்தியக் கடலோரத்தைத் தாக்கி 14,000 பேரைக் காவு கொண்டதுடன் மதிப்பிட முடியாத உடமைகளையும் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தியது. மக்களின் காவலர்கள் அப்போது புதிய அவதாரம் எடுத்தனர். குடும்பத்தின் வருவாய் ஈட்டும் உறுப்பினரையும் உற்றாரையும் இழந்து துயர்ப்பட்டு நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அந்தக் கட்டத்திலேயே மீனவ மக்கள் கடல் விளிம்பிலிருந்து இடம்பெயர்ந்து உட்பகுதிக்குப் போய்விட வேண்டும், அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என்று ஓதத் தொடங்கினார்கள்.
.
இயற்கைப் பேரிடர் அச்சத்தில் ஆட்பட்டிருந்த மக்களை இடம்பெயர்த்த பிறகு கடற்கரையைப் பெருமுதலீட்டாளர்களுக்குத் தாரைவார்க்கும் அரசின் இரகசியத் திட்டத்தைப் பல மீனவர் நல இயக்கங்கள் மக்களுக்கு உயர் வெளிச்சம் போட்டுக் காட்டின. சில தொண்டு நிறுவனங்கள் “மீனவர்களுக்குப்பழைய இடத்திலேயேதான் வீடுகட்டித் தருவோம்” என்ற தெளிவான நிலைப்பாட்டுடன் இயங்கின. விளிம்பு நிலையினர் சார்பு நிலைப்பாடு என்னும் வகையில் இவை பாராட்டுக்குரிய நடவடிக்கைகளாகும்.
.
பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள் (Marine Protected Areas) என்னும் ஒரு புதிய கொள்லையை 1980களில் அறிவித்த நடுவண் அரசு இந்தியக் கடல்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மூன்று விழக்காடு பரப்பை அடையாளப்படுத்தி அங்கெல்லாம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதித்தது. மாநில அரசுகளின் வனத்துறையினர் கடற்கரைக் காட்டுப் பகுதிகளில் மீனவர்களுக்குப் பல்வேறு வகையில் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் ஜம்புதீப் கடல் தீவுப் பகுதி மீனவர்கள் பயன்படுத்தி வந்த பகுதி. மஹாராஷ்டிராவின் மால்வான் பகுதியும் அதுபோன்றதே. கடந்த சில ஆண்டுகளாக, பாரம்பரிய மீனவர்களுக்கு இங்கெல்லாம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாற்பது வருடங்களாகப் பத்தாயிரம் மீனவர்கள் புழங்கிவந்த ஜம்புதீப் தீவிலிருந்து அவர்களை 2002 செப்டம்பரில் மேற்கு வங்காள வனத்துறை வெளியேற்றியது.
.
‘பாரம்பரிய மீனவக் குடிகளின் கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகளையும் அவர்களின் கடலியல் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நோக்குடன்’ என்கிற கவர்ச்சி வாசகத்துடன் தொடங்குகிறது சாமிநாதனின் கடற்கரை மேலாண்மை வரைவு அறிவிக்கை. கடற்கரைச் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் காப்பதை முதன்மை நோக்கமாகப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் சாமிநாதன் கமிட்டியானது, கடற்கரையில் கனிம வண்டல் மற்றும் கனிமங்களைத் தோண்டியெடுப்பது தேசிய முன்னுரிமை என்கிறது.
.
கரைக்கடல் மீன்வள வளர்ச்சிக்குக் கழிமுகங்கள் மிக முக்கியமானவை. சாமிநாதன் கமிட்டி கழிமுகப் பகுதிகளின் நீடித்த மேலாண்மைக்கான எவ்விதமான கொள்கையையும் வெளிப்படையாகப் பேசவில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நன்னீர் வளங்களைக் காப்பதற்கும்கூட எந்தவிதமான வழிமுறைகளோ, கொள்கையோ இந்த வரைவு அறிவிக்கையில் இல்லை. 1991இல் அமல்படுத்தப்பட்ட கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையில் கடல் ஏற்றவற்றப் பகுதியில் (Interidal area) அமைந்திருக்கும் மீனவர் குடியிருப்புகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமிநாதன் வரைவு அறிவிக்கையில் இக்குடியிருப்புகளுக்கான பாதுகாப்பு உரிய முறையில் வலியுறுத்தப்படவில்லை.
.
‘கடற்கரை வளங்களை அறிவியல் ரீதியாக மேலாண்மை செய்யும்’ நோக்கத்தை முன்வைத்துப் பேசும் சாமிநாதன் அறிக்கையில் கடல் ஏற்றவற்றப் பகுதியில் பல்கிப்பெருகும் உயிரின வளங்களும் அவற்றின் வாழிடங்களும் பற்றிய புரிதல் சற்றும் இல்லை. கரைக்கடலின் அடித்தளத்தில் உயிர்வாழுகிற, எளிதில் அழிந்துவிடும் பல்லுயிர்ப் பெருக்கங்கள் குறித்து இந்த மேதாவிலாச அறிக்கையில் ஏதும் மேசவில்லை. நீடித்த மீன்வளத்திற்குஇப்பல்லுயிர்ப் பெருக்கம் இன்றியமையாதது என்பதை சாமிநாதன் குழு புரிந்துகொள்ளவில்லையா?
.
சாமிநாதன் வரைவு அறிவிக்கை முழுவதும் பல மாயையான சொல்லாடல்கள் விரவி வருகின்றன. 1991இல் அமல்படுத்தப்பட்ட ‘ஒழுங்காற்றுதல்’ (Regulation) என்ற பதத்துக்குப் பதிலியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையின் அரசியலைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும். இங்கு பிரயோகிக்கப்படும் ‘மேலாண்மை’ என்ற வார்த்தை கடற்கரை வளங்களைத் தனியார் ஏகபோகத்துக்குத் திறந்துவிடப் பரிந்துரைக்கும் அளவில் விளக்கப்படுகிறது. கடற்கரை ஓழுங்காற்று அறிவிக்கை அமலில் இருந்த காலத்தில் அரசுத் துறையினரின் ‘நல்லாசியுடன்’ தனியார் நிறுவனங்கள் கடற்கரையில் பல்வேறு அத்துமீறல்கள் செய்தன். எனினும் 1991 ஒழுங்காற்று அறிவிக்கையின் அடிப்படையில் பொதுநலன் கருதி நீதித்துறை தலையீடு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
.
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை தந்து வரும் பாதுகாப்பு

* கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை (1991) மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட்டு பாதிப்படைந்தோருக்கு நீதி வழங்க வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டின் கடலோரங்களில் மக்கள் இயக்கங்களின் நடவடிக்கைகளாலும் நீதிமன்றத் தலையீடுகளாலும் மேற்சொன்ன இரு அறிவிக்கைகளின் மூலமாக பல அழிவுப்பூர்வமான திட்டங்கள் முடக்கப்பட்டன; இதனால் மீனவ மக்களின் கடலோரக் குடியிருப்புப் பகுதிகளும் கடற்கரை வளங்களின் மீதான அவர்களின் பாரம்பரிய உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

*கடலோரத்தில் உவர்நீர் இறால் பண்ணைகள் உச்கநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தடை செய்யப்பட்டன.

*மன்னார் வளைகுடாப் பகுதியிலிலுள்ள கடல் உயிர்ககோளச் சூழலியலைப் பாதுகாத்திடும் பொருட்டு வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் துறைமுகம் தடைசெய்யப்பட்டது.

*செய்யூரில் அமையவிருந்த அனல்மின் நிலையம் தடை செய்யப்பட்டுக் கழிவேலிக் கழிமுகம் பாதுகாக்கப்பட்டது.
.
ஆனால் சாமிநாதன் அறிவிக்கை அந்த அத்துமீறல்களையெல்லாம் சட்டபூர்வமாக்கிவிடுகிறது. அதுபோலவே ‘தடை’ என்ற சொல்லுக்குப் பதிலாகக் ‘கட்டுப்பாடு’ என்ற சொல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாசுக்குறைப்பு செய்யாமல் ஆலைக் கழிவுகளைக் கடலில் கொட்டுவதைத் தடை செய்யும் பேச்சுக்கே இந்த அறிவிக்கையில் இடமில்லை. இந்தக் கோணத்தில் நோக்கினால் ‘அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான சீர்திருத்தம்’ என்ற சொற்பிரயோகம் பூர்வகுடி கடலோர மக்களின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது.

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையில் (1991) பூர்வகுடி மீனவர்களுக்குப் பாதகமான பல கூறுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ‘கடற்கரை நிர்பந்தமாய்த் தேவையுறும் நடவடிக்கைகளுக்காக மட்டுமே கடற்கரைப் பகுதி பயன்படுத்தப்படலாம்’ என்ற கருத்தியல் அணுகுமுறைதான் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையில் மக்களுக்குச் சாதகமாக இருக்கும் சிறப்பு அம்சம். அதனால் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையைச் செயல்படுத்துவதில் மக்களின் ஒப்புதல் ஒரளவு இருந்தது. ஆனால் சாமிநாதன் பரிந்துரைக்கும் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கையானது மேற்சொன்ன ஒழுங்காற்று அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

கடற்கரை மேலாண்மை அறிவிக்கை ‘பலவீனக் கோடு’ (Set back line) என்ற புதிய பதத்தைப் புகுத்திக் கடற்கரைக்குத் தொடர்பில்லாத பல்வேறு நடவடிக்கைகளை அங்கே அனுமதிக்க வழிசெய்கிறது:

*நடப்பிலுள்ள ஒழுங்காற்று அறிவிக்கையில் கடற்கரை மண்டலங்கள் 2 மற்றும் 3இல் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலாண்மை அறிவிக்கையோ அந்தத் தடைகளனைத்தையும் நீக்கிக் கிராமப்புறங்களை நகர்மயமாக்கிட வழிகோலுகிறது.
.
*ஒழுங்காற்று அறிவிக்கையில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (மண்டலம் ஒன்று) என்று குறிக்கப்பட்ட இடங்களில் மேலாண்மே அறிவிக்கை பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. இதனால் கடற்கரைச் சூழலியல் வளங்கள் முற்றாய் அழிந்துவிடும் அபாயமிருக்கிறது.

.
*இப்படியெல்லாம் அனுமதிக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் முறைமைகள் ஏதும் மேலாண்மை அறிவிக்கையில் சொல்லப்படவில்லை. கடற்கரை மேலாண்மை அறிவிக்கையானது கடற்கரைப் பாதுகாப்பை முன்வைத்துத் தயாரிக்கப் பட்டதல்ல என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

.
*1991 கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையின் ‘குறைபாடுகளைச்’ சுட்டிக்காட்டும் சாமிநாதன் அறிவிக்கையில் தரப்படும் பரிந்துரைகள் மீனவர்களின் கடல் உரிமைக்கும் (sea access) வாழ்வாதார உரிமைக்கும் (right to livelihood) கடும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
.
கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையில் பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள், விதிவிலக்குகள் மற்றும் பாதுகாப்புகள் சாமிநாதன் குழு தயாரித்துள்ள கடற்கரை மேலாண்மை மண்டல வரைவுத் திட்டத்தில் காணாமல் போயின. கடற்கரை மற்றும் கடல் பகுதிகளின் பல்வகைப் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற 1991 க. ஒ. சட்டத்தின் மையச் சரடு சாமிநாதன் திட்டத்தில் அறுந்து கிடக்கிறது.
.
‘மேலாண்மை’ என்ற வளர்ச்சி வாசகம் தாங்கிவரும் இந்த சாமிநாதன் வரைவு அறிவிக்கை அனைத்துத் தரப்புப் பங்காளிகளுடன், குறிப்பாக மீனவ மக்கள் மற்றும் மீனவ இயக்கங்களுடன் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதே மீனவர்கள் முன்வைக்கும் முதல் கோரிக்கை. ‘ஒழுங்காற்று’ (முறைப்படுத்தல்) என்ற அணுகுமுறைக்குப் பதிலாக ‘மேலாண்மை’ (சாமிநாதன் பரிந்துரை) என்ற பிரயோகம் நுழைந்திருப்பதை மீனவ சமூகந்தின் வாழிட - வாழ்வாதார உரிமைக்கே அச்சுறுத்தலாக மீனவர்கள் கருதுகின்றனர்.
.
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை அமுல்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஓடிவிட்டன். சுனாமி பேரிடருக்கு முன்னர் எத்தனை கடலோர மாநிலங்கள் ‘ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத் திட்ட’ வரைபடங்கள் தயாரித்து நடுவண் அரசிடம் சமர்ப்பித்திருந்தன? எத்தனை மாநிலங்கள் தங்கள் கடற்கரைகளில் கடல் ஏற்றக் கோட்டிலிருந்து (High Tide Line) 500 மீட்டர் எல்லையை வரையறுத்திருந்தன?
.
சாமிநாதன் பரிந்துரைக்கும் புதிய அறிவிக்கையை நடப்பாக்குமுன் நடுவண் அரசு 1991இல் வெளியிட்ட ஒழுங்காற்று அறிவிக்கையை கடலோர மாநில அரசுகள் எந்த அளவு நடைமுறைப்படுத்தியிருக்கின்றன என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை இரண்டாவது மண்டலமாகக் குறிப்பிட்டுள்ள பகுதிகளை சாமிநாதன் வரைவு அறிவிக்கை மாற்ற முனைவது மீனவ சமூகங்களுக்கு ஏற்புடையதல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலம், துறைமுகங்கள், சுற்றுலா, கடற்கரை அழகுபடுத்தும் திட்டம், சுரங்க அகழ்வு முதலிய நடவடிக்கைகளுக்காகக் பாரம்பரிய மீனவர்களின் பூர்வீக வாழிடங்களாய் இருந்துவரும் கடற்கரை நிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது.
.
தொன்றுதொட்டு நீடித்துவரும் கடற்கரை நிலங்களின் மீதான மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி சாமிநாதன் அறிவிக்கை எள்முனையளவுகூடப் பேசவில்லை. இது இந்த அறிவிக்கையின் விசித்திரமான விடுபடல்களில் ஒன்று. க. ஒ. அறிவிக்கை (1991) இந்த உரிமையைத் தெளிவாக உறுதி செய்திருந்தது. சுற்றுலா வளர்ச்சிக்குச் சாமிநாதன் அறிவிக்கை காட்டியிருக்கும் தாராளம் மீனவர்களைக் கடற்கரைகளிலிருந்து இடம்பெயர்க்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
.
கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் குடியிருக்கும் உரிமை, மீன்பிடி தொழில் தேவைகளுக்குக் கடற்கரை நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை, கடல் வளங்கள் மீதான தொடர்பு உரிமை (access right to marine resources) என்கிற மூன்றும் மீனவர்களின் பிரிக்க முடியாத உரிமைகளாகும். இந்த வாழிட, வாழ்வாதார உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறித்துவிட வழிவகுக்கும் எந்தவொரு சட்டத்தையும் இந்தியாவின் ஒரு கோடி மீனவர்களும் ஒட்டுமொத்தமாய் எதிர்த்துப் போராடுவார்கள்.
.
கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (Coastal Regulation Zone) போலவே கரைக்கடல் ஒழுங்காற்று மண்டலம் (Littoral Regulation Zone) என்னும் மற்றோர் விஷயம் இருக்கிறது. சாமிநாதன் கமிட்டியோ 12 கடல் மைல் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளை க. மே. மண்டலத்தில் உட்படுத்திவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது. பாரம்பரிய மீனவர்களுக்குப் பாதகம் செய்யும் ஒரு எத்தனிப்பு இது. கடற்கரை மற்றும் கரைக்கடல் பகுதிகளை மேலாண்மை செய்வதில் மீனவர்களின் முழுமையான பங்கேற்பை உட்படுத்த வேண்டும் என்றோ, மீனவர்களின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றோ சாமிநாதன் அறிக்கையில் எங்கும் சொல்லக்காணோம். சÊ£மிநாதனின் ஆர்வங்கள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதை மீனவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
.
இந்தியாவின் கடலோரங்களில் வாழும் ஒரு கோடி மீனவர்களின் வாழ்க்கையை ஒரேயடியாய்ப் புதைத்தொழிக்கும் சூட்சுமத்துடன் சாமிநாதன் கமிட்டி சமர்ப்பித்துள்ள இந்தக் கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கையினை எல்லைக்கடலுக்கு அப்பால் எறிந்துவிடவேண்டும் என்பதே மீனவர்களின் நிலைப்பாடு. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வுரிமை காத்திட இவ்வறிவிக்கைக்கு எதிராக ஒட்டுமொத்த கடற்கரைச் சமுதாயத்தினரும் திரண்டெழுந்து நாடுதழுவிய எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
.
கடல்சார் சமூகங்கள் நடுவண் அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?
*சாமிநாதன் வரைவு அறிவிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும்.
*1991 கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையை (1991) முழுமையாக அமல்படுத்த மேண்டும்.
*1991 அறிவிக்கைக்கு எதிராக அத்துமீறல் செய்தவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.



-வறீதையா கான்ஸ்தந்தின்
நன்றி: http://www.wwfishers.net/

புதன், மே 28, 2008

"வெட்கம்... வெட்கம்.... நகைப்புக்குரிய நீதித்துறை"

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நம் வாழ்வின் பல தளங்களிலும் விரவிக் கிடக்கின்றன. அது எல்லைகளின்றி வெளியெங்கும் நிரம்பி வழிகிறது. ஒருபுறம் நீதித்துறை தன்னை யாரும் களங்கப்படுத்த, கேள்விக்குட்படுத்த முடியாத புனிதக் கூடமாக மாறிவருகிறது. மறுபுறம் பல முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே சீர்த்திருத்தங்கள் தேவை என கோரி வருகின்றனர். சீர்திருத்தங்களுக்கு உட்படாவிட்டால் இந்தத் துறை தன் செல்வாக்கை இழந்துவிடும். நாட்டில் 20 சதவிகித நீதிபதிகள் ஊழல் செய்வதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே சுட்டிக் காட்டியுள்ளார்.
.
இன்றளவும் தலைமை நீதிபதியின் ஒப்புதலின்றி எந்த நீதிபதியின் மீதும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய இயலாது. அண்மைக் காலமாக, பலரும் நீதித்துறையை கண்காணிக்க ஓர் உயர்மட்டக் குழு தேவை என்றும் அதில் குடிமை சமூகத்தைச் சார்ந்த பொதுவானவர்களும் இடம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
.
முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் மற்றும் அவரது இரு மகன்கள் அடித்த கூத்துகள் இந்தத் துறையைப் பற்றி ஒரு சிறு கீற்றே. தோண்டினாச்ல் பெரும் அவதூறுகள் கிட்டும். இந்தச் சூழலில் பிப்ரவரி 2008 இன் மூன்றாவது வாரத்தில் அரங்கேறிய ஒருநிகழ்வு கவனத்திற்குரியது.
.
2002 இல் கோத்ராவில் மோடியும் அவரது பரிவாரங்களும் அரசு உதவியுடன் நிகழ்த்திய இனப்படுகொலையை திட்டமிட்டு வழி நடத்தியவர்கள், ஆயுதங்களுடன் கொலை வெறியில் பிணங்களை குவித்தவர்கள் என அனைவரும் குஜராத்தில் பூரண கும்ப மரியாதையுடன் சுதந்திரமாக உலவுகின்றனர். இதில் எவரும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அக்டோபர் மாதத்தில் இந்த கொலையாளிகள், இவர்களை வழிநடத்தியவர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் மணிக்கணக்கில் ‘தெகல்கா' நடத்திய புலனாய்வில் 2002 இனப்படுகொலையை திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் விவரித்தனர்.
இந்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு அந்த இனப்படுகொலையில் வெட்டி துண்டாடப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியின் மனைவி உடனே உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரைத் தொடர்ந்து நாடு முழுவதிலிருந்தும் அறிவுஜீவிகள், முன்னாள் நீதிபதிகள், மதச்சார்பற்ற ஆர்வலர்கள் என ஏராளமானோர் 2007 டிசம்பரில் கோத்ரா வழக்குகளில் ‘தெகல்கா’ புலனாய்வின் தரவுகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இத்தனை மாதங்களாக அந்த கோப்புகளின் திசையில் நீதித்துறையின் கண்கள் திரும்பவே இல்லை. கொலையாளிகள் அரசு பாதுகாப்புடன் சொகுசாக உலவுகிறார்கள்.
.
எடுத்துக்காட்டாக, இந்த இனப்படுகொலையில் முன்னணியில் நின்றவர் பாபு பஜ்ரங்கி. வாஜ்பாய் ஓய்வாக இருக்கும் பொழுது ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள குஜராத் விருந்தினர் மாளிகையில் தங்கி கவிதை எழுதுவது வழக்கம். அவர் கவிதை எழுதிய அதே அறையில் தான் நரேந்திர மோடி பாபு பஜ்ரங்கியை குஜராத் அரசு விருந்தினருக்குரிய மரியாதையுடன் வரவேற்றார். வாஜ்பாய் கவிதை எழுதிய அறையில், பாபு பஜ்ரங்கி கத்தியை தீட்டினார். அது சரி, எல்லாம் சங்பரிவாரத்தை முன்னகர்த்தத் தானே!
.
கொலைகாரர்கள் இப்படி உலவ, அந்த இனப்படுகொலைக்குத் தொடர்பில்லாத 84 முஸ்லிம்கள், கடந்த 6 ஆண்டுகளாகத் தங்கள் வாழ்க்கையை சிறைச்சாலையில் தொலைத்து வருகின்றனர். அதுவும் இவர்கள் அனைவரும் ‘பொடா' சட்டத்தின் இரும்புப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக இவர்களுக்கு மட்டுமின்றி, கோத்ரா தொடர்புடைய எல்லா வழக்குகளுக்கும் தீஸ்தா செடல்வாட் மற்றும் அவரது அமைப்பைச் சார்ந்தவர்களே வாதாடி வருகின்றனர்.
.
பொடா மறு ஆய்வுக்குழு இந்த சட்டத்தையும் அதன் பெயரில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகளையும் ஆய்வு செய்து தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கை, கோத்ராவில் கைது செய்யப்பட்ட 84 நபர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உறுதியாகத் தெரிவிக்கிறது. அதன் பின்னர் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஆறு முறை பிணை கோரும் மனுவை இந்த 84 பேர் அளித்துள்ளனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை.
.
பிப்ரவரி 19 அன்று உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முன்பு இந்த 84 பேர் சார்பாக ஆஜரானார் தீஸ்தா செடல்வாட். ‘இந்த 84 பேர் சார்பாக தீஸ்தா ஆஜரானால் என்னால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது' என்றார் தலைமை நீதிபதி. இந்த செயல் பலரையும் பெரும் கவலைக்கு உட்படுத்தியுள்ளது. இப்படி ஒரு வழக்கறிஞர் மீது நீதிபதி வெறுப்பை உமிழ்வது சரிதானா? தீஸ்தாவின் குற்றம் தான் என்ன என்பது போன்று ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தான் இதை வெளிப்படையாகக் கண்டித்த முதல் நபர். இப்படி யாரையும் நீங்கள் வேறுபடுத்தவோ, ஓரங்கட்டவோ இயலாது என்றார் அவர்.
.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கோபத்திற்கு என்ன காரணம்? அண்மையில் தீஸ்தா செடல்வாட் எழுதிய கட்டுரை ஒன்று மலையாள வார ஏடான "மாத்ருபூமி'யில் வெளியானது. ‘வெட்கம்... வெட்கம்.... நகைப்புக்குரிய நீதித்துறை' என்ற தலைப்பில் தீஸ்தா எழுதிய கட்டுரை தான் தலைமை நீதிபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்தக் கட்டுரையில் தீஸ்தா 84 முஸ்லிம்களின் நிலையும் அவர்கள் விஷயத்தில் நீதிமன்றம் செயல்படும் விதம் குறித்தும் எழுதியிருந்தார். ‘பொடா' மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பெயரில் வைகோ மற்றும் பலர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பொழுது, அது ஏன் இந்த கோத்ரா தொடர்புடைய 84 முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என்று அவர் கேட்டிருந்தார்.
.
கடந்த ஆண்டு முழுவதும் ஆறு முறை இந்த முஸ்லிம்களின் பிணை மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாதது குறித்தும் விமர்சித்து எழுதியிருந்தார் தீஸ்தா. நீதிமன்றத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகக் கருதாமல் புனித கட்டுமானமாகக் கருதும் மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. தீஸ்தா எழுதிய கட்டுரையின் நோக்கம் தவறானது என்றார் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். மேலும் கணினியின் மூலம் தான் வழக்குகள் தேதியிடப்படுகிறது என்கிறார் அவர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது ‘பொடா', ‘தடா' எனப்பல்வேறு சட்டங்கள் பயன்படுத்தப்பட்ட முறை மீது அமைதி காக்கிறது நீதிமன்றம். இத்தகைய நடைமுறைகள் நீதிமன்றத்தின் மீது வெகுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யாதா?
.
தீஸ்தாவின் செயல்பாடுகள் இல்லாதிருந்தால், பெஸ்ட் பேக்கரி வழக்கின் நிலை என்னவாக இருந்திருக்கும்? பில்கிஸ் பானு வழக்கு நாட்டின் கவனத்தைப் பெற்றிருக்குமா? இதே நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் தீஸ்தாவின் கட்டுரைகளை விரிவாக மேற்கோள் காட்டியதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். வழக்கறிஞராகத் தனது பணியை சுருக்கிக் கொள்ளாமல் அவர் நீதி சார்ந்த போராளியாக வாழ்ந்து வருகிறார். மதச்சார்பின்மை சார்ந்த தளங்களில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
.
1962 இல் தத்துவத்துறையில் தனது முதுகலைப்பட்டத்தைப் பெற்ற தீஸ்தா, பத்திரிகைத் துறையில் நுழைந்தார். ‘தி டெய்லி', ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்களில் பணிபுரிந்தார். பின்பு ‘பிசினஸ் இந்தியா'வில் சில காலம் இருந்தார். தீஸ்தாவின் தந்தை அதுல் செடல்வாட் மும்பை நகரத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்; அம்மா சிதா கிராமப்புறக் கைவினைக் கலைஞர். தந்தையின் உதவியுடன் சட்டம் பயின்றார். இடதுசாரியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் தீஸ்தா, ‘கம்யூனலிசம் காம்பட்' பத்திரிகையை தனது கணவர் ஜாவேத் ஆனந்துடன் இணைந்து நடத்தி வருகிறார். 1999இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய நாளிதழ்கள் சங் பரிவாரத்தை அம்பலப்படுத்தும் விளம்பரங்களை தீஸ்தா வெளியிட்டு, மதச்சார்ப்பற்ற செயல்வீரர்களின் கவனத்தை ஈர்த்தார்.
.
பெஸ்ட் பேக்கரி வழக்கில் அவருடைய செயல்பாட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சி தேசிய அளவில் தீஸ்தாவை கவுரவித்தது. மகாராட்டிரா மாநிலத்தின் பொது வெளியில் செயல்பட்டமைக்கு மய்ய அரசு 2007 ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கியது. 1997இல் நாடு முழுவதிலும் உள்ள பாடப்புத்தகங்களில் குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய மத வெறுப்பை விதைக்கும் பகுதிகளை இனம் காணுவதற்கான தேடல் என்கிற வரலாற்று மீட்டுருவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து பெண்ணியம், தலித் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக செயல்பட்டு வருகிறார்.
.
பிப்ரவரி 28, 2008 அன்று தீஸ்தாவின் செயல்பாடுகளில் மிக முக்கிய நடவடிக்கை அரங்கேறியது. கோத்ரா நிகழ்வு களைத் தொடர்ந்து நடைபெற்ற இனப்படுகொலையின் பொழுது, "குல்பர்க்' குடியிருப்புகளின் மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அந்தக் குடியிருப்பில் மட்டும் 70 சடலங்கள் சிதறிக் கிடந்தன. அந்த குல்பர்க் குடியிருப்பில் இன்று வரை எவரும் குடியமர்த்தப்படவில்லை. ஆண்டுதோறும் அங்கு பலியானவர்களின் நினைவாக வழிபாட்டுக் கூடங்கள் நடத்தப்பட்டன.
.
அந்த மொத்த குடியிருப்பையும் மலிவு விலையில் வாங்கிட அகமதாபாத்தைச் சேர்ந்த இந்து மத பிரமுகர்கள் மற்றும் பா.ஜ.க. அரசியல்வாதிகள் முயன்றனர். இதை எதிர்த்து கடுமையாகப் போராடி வந்த தீஸ்தா, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று குல்பர்க் குடியிருப்பை எதிர்ப்பின் அருங்காட்சியமாக அறிவித்தார். இந்த அருங்காட்சியகம் அந்த சிதிலங்களைப் பாதுகாக்கும். மதசார்பின்மைக்கான நூலகம், ஆய்வகம், ஆவணப்படங்கள், செயல்பாட்டுக்கான நடவடிக்கை மய்யம் எனப் பல்வேறு இயக்க செயல்பாடுகள் புரியும் தளமாக அது உருமாற்றப்பட்டுள்ளது.
.
‘தெகல்கா' ஆசிரியர் தருண் தேஜ்பால் கூறுவது போல, “இந்தியாவில் நாம் எங்கும் நம் மூர்க்கத்தை உருவகப்படுத்திப் பேணுவதில்லை. அதனால்தான் அதைக் கண்டு திடுக்கிடவோ, பயங்கொள்ளவோ இயலவில்லை.'' இந்த வாசகங்களுக்கேற்பவே குல்பர்க் குடியிருப்பு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் சங்பரிவாரத்தின் ரத்த வெறி பிடித்த கரங்கள் தீட்டிய வெளியை நமக்கு தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். நாம் செயல்பட வேண்டிய திசைவழியை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.
.
இயக்கவாதிகள், அறிவுஜீவிகள் எனப் பலரும் ஆண்டு தோறும் சென்று தங்கள் பயணத்தின் ஊக்கத்தைப் பெறும் வாய்ப்பாக - மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்கள் நிகழ்ந்த இடங்கள், நினைவுச் சின்னங்களாக இனி உருமாற்றப்பட வேண்டும். 200 ஆண்டு கால சுதந்திரப் போராட்டத்தின் செயல்தளங்களில் நமக்குப் போதுமான நினைவுச் சின்னங்கள் இல்லை. அதுவே நம் சுதந்திரத்தின் மதிப்பு தெரியாமல் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
.
யார் இந்த தீஸ்தா என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதிக்கு, தீஸ்தாவின் செயல்பாடுகள் எப்படி தெரியாமல் போனது என்பது வியப்பூட்டுகிறது. பரத நாட்டிய அரங்கேற்றங்கள், புத்தக வெளியீடுகள், நூலக விழாக்கள், விழிப்புணர்வு முகாம்கள் என நாள்தோறும் சென்று அலுத்துப்போன நீதிபதிகளை, இனி ஆண்டு தோறும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட தீஸ்தா அழைப்பு விடுக்க வேண்டும்.
.
கரி படிந்த இந்த அறைகளின் தரையில் சிதறிக் கிடக்கும் சாம்பலிலிருந்து நாம் தெளிந்த புரிதலைப் பெறுவோம்.


-அ. முத்துக்கிருஷ்ணன்


நன்றி:
மார்ச் 2008

செவ்வாய், மே 27, 2008

பாமரனின் ஃபாசிசக்குரல் - மு.சிவகுருநாதன்

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையினர் நடத்திய ‘கனாக்காலம் - 2007’ என்ற கருத்தரங்கில் ‘சினிமாவும் சமூகமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த கவிஞர் லீனா மணிமேகலை ‘துப்பட்டா’அணியாததால் கல்லூரிவாசல் வரை சென்று திரும்பினார்.

அந்த கருத்தரங்கில் பாலு மகேந்திரா, அஜயன்பாலா, ஞாநி, பாமரன் போன்றோர் கலந்து கொண்டனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை ‘இந்த இடம் எங்களுக்கு கோயில் போன்றது’ என்று கூறுகிறார். அவருடைய பார்வையில் அது சரியானதுதான். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட பாமரன் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி நிறைய பிதற்றியிருக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர் - 27.12.2007).
பாமரனைப்போல வள்ளலாரையும், சங்காரச்சாரியையும் பெரியார் ஒன்றாகப் பார்க்கவில்லை; வேறுபடுத்தித்தான் பார்த்தார். விநாயகர் சிலை உடைத்தல், ராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரியாரை பாமரன் பண்பாட்டின் பெயரால் கொச்சைப்படுத்துகிறார். “இந்துக்கள் தவிர பிற மதத்தினர் உள்ளே வரக் கூடாது. ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது, பெண்களே வரக்கூடாது” என்றெல்லாம் விதிகள் உள்ளது செருப்பைக் கழற்றிப் போட வேண்டும் என்பதைப் போல.
.
மேலும் ‘தலித்கள், சூத்திரர்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது, அர்ச்சகர் ஆகக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, டீக்கடையில் தனி கிளாஸில்தான் டீ குடிக்க வேண்டும்... என்றெல்லாம் விதிகள் உள்ளன. பண்பாடு கருதி பாமரன்கள் இவற்றைக் கடைபிடிக்கட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.
“சண்டைக்கோழி வசனப் பிரச்சினையில் போராட்டம் செய்தவர்கள் ‘சிவாஜி’ ‘அங்கவை, சங்கவை’ பிரச்சினையில் எங்கே போனார்கள்?" என்றெல்லாம் ‘சோ’வைப்போல மிகவும் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் நாமும் கேள்வி எழுப்பலாம். எல்லாவற்றிற்கும் முன் நிபந்தனைகள் விதிக்கும் பாமரன் போன்றவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் - கொடுக்கவில்லை என்று விரிவாக எழுத இங்கு இடமில்லை.

தமிழ் சினிமா சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனுடையோர் போன்றோரை ஒவ்வொரு படங்களிலும் இழிவான முறையில் சித்தரித்து வருகிறது. தொடக்க கால கருப்பு-வெள்ளைப் படங்களிலிருந்து பாமரன் போன்றவர்கள் போற்றும் பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்கள் வரை இந்நிலைதான்.
.
அதைப்பற்றியெல்லாம் பாமரன் உள்பட பலர் தட்டிக் கேட்டதில்லை. ‘சிவாஜி’ படத்தில் ‘அங்கவை-சங்கவை’ கதாபாத்திரங்கள் மூலம் இவர்கள் கருமை நிறமுடைய பெண்களை கொச்சைப் படுத்தப்பட்டதற்காக கொதிக்கவில்லை.

பதிலாக தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க்குடிப்பெருமை மீதான தாக்குதல் என்று தாங்கமுடியவில்லை இவர்களால். அங்கவை-சங்கவைக்குப் பதிலாக குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என்று பெயர் வைத்திருந்தால் பாமரன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
.
அப்படி நடந்திருந்தால் ரஜினி, சுஜாதா, சங்கர், மன்னிக்கவும் ஷங்கர், சாலமன் பாப்பையா போன்ற வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். பாமரன் போன்றவர்கள் எழுதியும், பேசியும் வருபவை மாற்றுச் சிந்தனைகள் என்ற போர்வையில் கலாச்சார போலீஸ்களின் பாசிசக் குரலையே.

-மு.சிவகுருநாதன்
நன்றி:
மார்ச் - மே 2008

திங்கள், மே 26, 2008

அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் தலித் தொழிலாளி முனியம்மாவின் பேட்டி

("கை இல்லாத அவனுக்கு உன் கையைக் குடுடா" என்று அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் கையை தூக்கத்தில் வெட்டத் தொடங்கிய விபரீதத்தில் தெரிந்தது, வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று. அரசு ஊதியம் பெறுபவர்கள் செய்யத் தயங்கிய வேலையை, வெறும் 50 ரூபாய்க்காக செய்ய வேண்டிய நிர்பந்தம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் வேலை. கடந்த 13 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் அதிகமான பிணங்களை அறுத்து, தைத்துள்ள 35 வயதான, கணவனை இழந்த தலித் முனியம்மா, திண்டிவனம் உரோசனையில் வசித்து வருகிறார். பிணம் பிணம் என வாழ்நாளில் வேறெதுவும் தெரியாமல், அறியாமல் வாழ்கிறார். அழுகை, கவலை, சோகம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என மனித வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளுடனும் 'தலித் முரசு'க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...)


உங்கள் பிறப்பு, பெற்றோர் குறித்து தெரிந்து கொள்ளலாமா?

என்னோட அப்பா, அம்மா இதே ஊர்தான். அப்பா ராமகிருஷ்ணன், ரிக்ஷா ஓட்டினார். அம்மா நகராட்சி துப்புரவுத் தொழிலாளியாக வேலை செஞ்சாங்க. நான்தான் கடைசி. எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணன் இப்போது இல்லை. இறந்து விட்டார். இரண்டு அக்காவும் சென்னையில இருக்காங்க. நான் 3ஆவது வரை படிச்சி நின்னுட்டேன். ரிக்ஷா ஓட்டுனதால அப்பா நிறைய குடிப்பார். அதனாலயே அவருக்கு உடம்பு சரியில்லாம போனது. அம்மாவும் இறந்துட்டாங்க. அண்ணன், அக்கா எல்லாம் கல்யாணம் ஆயிபோயிட்டாங்க. 3ஆவது வர படிச்சிட்டு வீட்ல சும்மா இருந்த நான், என்னோட அப்பாவ காப்பாத்தறதுக்காக கட்டடம் கட்டறதுக்கு சித்தாள் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

உங்களோட திருமணம், குடும்பம் பற்றி சொல்லுங்கள்...

எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மனோகரன் அவரோட பேரு. அவரும் ரிக்ஷாதான் ஓட்டுனாரு. எங்க அப்பா மாதிரியே குடிச்சி, உடம்பு சரியில்லாம இருந்து செத்துட்டாரு. அதுக்கப்புறம் சித்தாள் வேலைக்குதான் போயிக்ச்கிட்டு இருந்தேன். அதுல கிடைக்கிறத வச்சிதான் என் பொண்ணு, பையன் ரெண்டு பேரையும் வச்சிகிட்டு வாழ்ந்தேன். இப்ப என்னோட பொண்ணு வள்ளிக்கு வயது 18, மகன் மணிமாறனுக்கு 13 வயது ஆவுது, 8ஆவது படிக்கிறான்.



கட்டட வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நீங்க, இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க?

என்னோட வீட்டுகிட்ட இருந்து மரகதம்னு ஒருத்தவங்க, ஆஸ்பத்திரில பெருக்கி, கூட்ற வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு தடவ உடம்பு சரியில்லாம போனப்ப, என்ன கூப்பிட்டு, உனக்குதான் அடிக்கடி வேலை கிடைக்கலையே, பசங்கள வேற வச்சிகிட்டு கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்கிற, எனக்கும் உடம்புக்கு சரியில்லாம இருக்கு. ஆஸ்பத்திரிக்கு கூடமாட வந்து ஒத்தாசை செஞ்சீன்னா, உனக்கும் ஏதோ வருமானம் வந்த மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. அப்ப அவங்க கூட ஆஸ்பத்திரிக்குப் போக ஆரம்பிச்சேன்.

அவங்களோட சேர்ந்து பிரசவ வார்டெல்லாம் சேர்த்துப் பெருக்குவேன். அதுக்கு அவங்க எப்பவாது 5 இல்ல 10 ரூபா தருவாங்க. இது 13 வருசத்துக்கு முன்னாடி. அப்புறம் ஆஸ்பத்திரிக்கு தினமும் போக ஆரம்பிச்சேன். அப்ப என்னோட பெரியப்பா மகன் துளசியண்ணன்தான் ஆஸ்பத்திரியில பிணம் அறுக்குற வேலையை செஞ்சிகிட்டு இருந்திச்சி. இப்படி ஆஸ்பத்திரியில பெருக்கி, கூட்டுறது, அப்புறம் யாராவது டாக்டர், நர்ஸ் சொல்ற வேலைகளை செஞ்சிகிட்டு இருந்தேன்.

ஒரு இரண்டு வருசம் இப்படிப் போச்சு, அப்புறம் எங்க அண்ணன் துளசி இறந்து போயிட்டாரு. அப்பதான் எங்க அண்ணன் கூட வேலை செஞ்ச நடராஜன்கிறவரு என்ன உதவிக்கு கூப்பிட்டாரு. நானும் அண்ணன் செஞ்ச வேலைதானேன்னு போனேன். அறுத்து, போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சி, தைச்சி வச்சிருக்கிற பாடிய நல்லா துணி சுத்தி, எடுத்துக்கிட்டு போற மாதிரி பேக் பண்ற வேலையைத்தான் முதல்ல செஞ்சேன். இப்படி ஒரு மூணு மாசம் அறுக்கறதையும், தைக்கறதையும் கூடவே இருந்து பார்த்தேன்.

கொஞ்சம், கொஞ்சமா பாடிகிட்ட போய் அறுக்கும்போதும் கூடவே நின்னு, அறுக்கறதுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். அந்த மாதிரி பாடிய அறுத்து, தைக்கும்போது மனசு பாதிச்சு வேலை பாதியில நின்னுடாம இருக்கறதுக்காக, பாடிய அறுக்கும்போது குடிச்சிட்டா ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிப் பழக்கப்படுத்தினாங்க.அதுக்கப்புறம் நான் தனியாவே நின்னு, அறுத்து, டாக்டர் சொல்றத எடுத்துக் கொடுத்திட்டு, தைக்கறது, பேக் பண்றதுன்னு எல்லா வேலையும் நானே செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல பாடிய அறுக்கும் போது மட்டும் குடிக்க ஆரம்பிச்ச நான், கொஞ்ச நாளைக்கப்புறம் நிறைய பாடி வர, வர ரொம்ப மனச பாதிக்க ஆரம்பிச்சதும், ஆஸ்பத்திரிக்கு வரும்போதே குடிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு உடலை அறுக்கும்போது உங்களுக்கு மனசுல எத்தகைய உணர்வுகள் தோன்றும்?

எனக்கு எதுவும் தோணாது. ஏன்னா, அந்த மாதிரி எதுவும் தோணக்கூடாதுன்னுதான் குடிச்சிட்டுப் போறது. இதுவரைக்கும் ஒரு பாடிய கூட நான் குடிக்காம தொட்டதே கிடையாது. குடிக்காம போனா தொடவே முடியாது. அதையும் மீறி சில நேரத்தில் மனசு சங்கடமா, அருவருப்பா தோணும். எதுன்னா, தண்ணில ஒரு வாரம், இல்ல 10 நாளுன்னு ஊறுன பாடி எல்லாம் ஊதிப்போய், அழுகிப்போய் பாக்கவே அருவருப்பா வரும். அந்த நேரத்தில் கூட கொஞ்சம் தண்ணிய போட்டுக்கிட்டு போய் செஞ்சிடுவேன். பாத்து, பாத்து மனசு ரொம்ப மரத்துப் போச்சி, எதிலயும் பிடிப்பே இல்லாம ஆயிடுச்சி.

அந்த மாதிரி அதிகம் கெட்டுப்போன உடலை அறுக்கும்போது மருத்துவர் உடன் இருப்பார்களா? தொற்று ஏற்படாம இருக்க என்ன செய்வீங்க?


எல்லா பாடிக்கும் டாக்டர் இருப்பாங்க. ஒரு 10 அடி தள்ளி நிப்பாங்க. பாடிய அறுத்ததும், அவங்க சொல்றத, கேக்குறத எடுத்துக் கொடுத்திட்டு தச்சிடுவேன். ஒரு வாரம், 10 நாளுன்னு தண்ணில ஊறியும், எங்கயாவது காடு, கீடுன்னு கண்காணாத இடத்துல வெட்டிப்போட்டு அழுகிப்போயும் வர்ற பாடிய செய்யும் போது, ரூம்ல நிறைய டெட்டால், ஸ்பிரே அடிச்சி விட்ட பிறகு டாக்டர் வருவாங்க. நான் அந்த மாதிரி பாடி வரும்போது வழக்கமா குடிக்கிறத விட, கூட கொஞ்சம் குடிச்சிடுவேன்.

எப்பவுமே கையில் கிளவ்ஸ் போட்டுகிட்டு, முகத்துல துணி கட்டிக்குவேன்.எதுவும் பிரச்சனை இல்லாத பாடியா இருந்தா 10 நிமிஷத்தல அறுத்து, தைச்சி முடிச்சிடுவேன். ஆக்சிடெண்ட் ஆன பாடியும், கொலை செய்யப்பட்டு வர்ற பாடியும்தான் செய்யறதுக்கு கூட கொஞ்சம் நேரம் ஆகும். ஏன்னா அந்த பாடியெல்லாம் சரியா இல்லாம சிதைஞ்சி போயி வரும். இந்த மாதிரி பாடியயெல்லாம் பெரிசா ஒண்ணும் டெஸ்டுக்கு எடுக்க மாட்டாங்க.

சிதைஞ்சி போயி வர்ரத சரியா வச்சி, தச்சி, பேக் பண்ணி கொடுக்கணும். ஆனா, பாய்சன் கேஸ் வந்தாதான் விஸ்ரா எடுக்கனும். விஸ்ரானா, பொணத்தோட கிட்னி, ஈரல், உணவுக்குழல், குடல். இந்த நாலிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தனித்தனியா 4 பாட்டிலிலும், உப்புத்தண்ணி 1 பாட்டிலும் என மொத்தம் ஒரு பொணத்துக்கு 5 பாட்டில்ல எல்லாம் எடுத்ததும் தச்சி கொடுத்துடுவோம். இந்த விஸ்ராவ செங்கல்பட்டுக்கு டெஸ்ட்டுக்கு கொடுத்தனுப்புவாங்க.

ஒரு நாளில் எத்தனை உடல்கள் வரும், எத்தனை செய்வீர்கள்?

இதுக்கெல்லாம் கணக்கு கிடையாது. முன்னாடி சொன்ன மாதிரிதான் 10 நிமிஷத்தில இருந்து 20 நிமிஷத்தில ஒரு பாடிய அறுத்து முடிச்சுடுவேன். பெரும்பாலும் ராத்திரியில செய்றது இல்ல. சாயங்காலம் 6 மணிக்குமேல செய்ய மாட்டாங்க. ஆனா, எப்பவாது, ஏதாவது எம்.எல்.ஏ., மந்திரின்னு யாராவது சொன்னாங்கன்னா ராத்திரியில செய்யச் சொல்வாங்க. அந்த மாதிரி நேரத்துல மட்டும் ராத்திரியில செய்வோம். இத்தனைதான்னு கணக்கெல்லாம் இல்ல. எத்தனை இருக்கோ செய்வேன். ஒரே நாள்ல அதிகமா செஞ்சது போன வருசம், இங்க திண்டிவனம் பக்கத்துல செண்டூர் ஊர்ல குண்டுவெடிச்சு செத்துப் போனவங்கள கொண்டு வந்தாக. அதுலதான் ஒரே நாளில் அதிகமா 14 உடம்ப செஞ்சிருக்கேன்.

அறுத்து முடிச்ச பிறகு எப்படி உணர்வீர்கள்?

அதை என்னான்னு சொல்றது? யாருகிட்டயும் எதுவும் பேசவோ, சொல்லவோ தோணாது. எனக்குள்ள நானே அமைதியா ஆயிடுவேன். வெறுமையா இருக்கும். அறுத்து முடிச்சிட்டு நேரா வீட்டுக்குள்ள போக மாட்டேன். குளிச்சிட்டு, துணி மாத்திட்டுதான் வீட்டுக்குள்ளே போவேன். முடியல்லன்னா வீட்டுக்கு வெளிய மரத்தடியில் படுத்திருந்திட்டு, அப்புறம் எப்ப எழுந்திருக்கிறனோ அப்ப குளிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள போவேன். பாடி அறுக்க ஆரம்பிச்ச இந்த 13 வருசமா கறி எதுவுமே சாப்பிடத் தோணல. இதுமட்டுமில்லாம சாதாரண சாப்பாடே சரியா உள்ள போகமாட்டேங்குது. சாப்பிடணும்னு தோணமாட்டேங்குது.

ஏதாவது உடலைப் பார்க்கும்போது உங்களுக்கு சங்கடமா இருந்திருக்குமே?

அப்படி ஒண்ணும் பெரிசா தோணாது. ஆனாலும் சின்ன சின்ன குழந்தைங்க பாடிய பாக்கும் போதெல்லாம் மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். எவ்வளவுதான் குடிச்சிருந்தாலும் என்னையும் அறியாம கண்ணுல தண்ணி கலங்கும். அதே மாதிரி கல்யாணம் ஆவாத பொண்ணு, பையங்க பாடிய பாத்தாலும் இந்த வயசில இப்படி ஆச்சே என்று சங்கடப்படும் மனசு.

அப்படி ஏதாவது உங்கள ரொம்ப பாதிச்சிருக்கா?

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கை இல்லாம ஒரு பாடி வந்திருந்தது. அதை முடிச்சி கொடுத்தேன். அன்னிக்கு ராத்திரி தூக்கத்துல என்னோட மகன் மணிமாறன் கையைப் பிடித்து இழுத்து, “அந்த பாடிக்கு கை இல்ல உன்னோட கையை குடுடா'' ன்னு கத்திக்கொண்டே அறுக்குற மாதிரி செஞ்சிருக்கிறேன். சத்தம் கேட்டு என்னோட மகனும், மகளும் எழுந்திருச்சி என்ன எழுப்பினாங்க. கனவுதான்னாலும் எல்லாரும் பயந்துட்டோம். அதிலிருந்து நான் வீட்டுல பசங்க கூட படுக்கறது இல்ல. வெளியில தனியா படுக்குறேன்.

உங்களுக்கு வருமானம் எப்படி?

எங்க கூட இருக்கிற நடராஜன் சார்கிட்டதான் சொந்தக்காரங்க கொடுப்பாங்க. செத்துப்போனவங்க கொஞ்சம் நல்ல வசதியா இருந்தா 600 இல்ல, 700 ரூபாய் தருவாங்க. அதுல நடராஜன் எனக்கு 60 இல்ல 70 ரூபாய் தருவாரு. என்ன மாதிரி இல்லாதப்பட்டவங்களா இருந்தா 300 இல்ல 400 ரூபாய் தருவாங்க, அதுல எனக்கு 30 இல்ல 40 ரூபாய் தருவாறு நடராஜன் சார். இதான் எனக்கு வருமானம். வேற வருமானம் எதுவும் இல்ல. இப்படி அடிக்கடி எனக்கு உடம்புக்கு முடியாம ஆவறதால, முன்ன மாதிரி தினமும் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியல. அதனால இப்ப என் பொண்ணு லெதர் கம்பெனிக்கு வேலைக்குப் போவுது, மாசம் 800 ரூபா சம்பளம். இத வச்சிதான் எங்க குடும்பத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

உங்கள் உடலில் என்ன பிரச்சனை?

பொணத்த அறுத்து, பாத்துப் பாத்து மனசு மரத்துப்போச்சு. அறுக்கும்போது எதுவும் தோணாம இருக்க குடிக்க ஆரம்பிச்சது; பாடி கெடாம இருக்க ஆசிட், பவுடர் போன்ற கெமிக்கல்ஸ் போடறது, நாள் பட்ட அழுகிய பொணத்த அறுக்க அதிக கெமிக்கல் பயன்படுத்தினது. இது எல்லாம் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சமா சாப்பாடு சாப்பிட முடியாம போனது. சத்து இல்லாம, ரத்தம் இல்லாம ஆச்சி. ரெண்டு கையும் முழங்கை வரையில் வெளுத்துப்போய் வேற வீட்டு வேலை எதுவும் செய்ய முடியாம பாதிக்கப்பட்டிருச்சி. இப்ப கொஞ்ச நாளா துணைக்கு என்னோட பையனையும் நான் கூட்டிக்கிட்டு போய் செய்றேன். கூட வந்த பழக்கத்துல இப்ப 8ஆவது படிக்கிற என்னோட பையன் மணி மாறன் தனியாவே பாடிய அறுத்து, தைக்கிற வேலையை செய்றான். என்னால முடியாத நேரத்துல அவன்தான் போய் செய்றான்.

உங்களோட மகனும் இதே வேலையை செய்வது கஷ்டமா இல்லியா?

8 வது படிக்கிற பையன் இந்த வேலையை செய்றது கஷ்டம்தான். ஆனா வேற வழியில்லையே என்னா செய்றது? பள்ளிக் கூடமும் ஆஸ்பத்திரியுமா அவன் வாழ்க்கை போகுது. இப்ப அவன் படிக்கிற பள்ளிக்கூடம் 8ஆவது வரைக்கும் தான். வர வருசம் என்னா செய்றதுன்னு தெரியில.

இந்த 13 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதுவரைக்கும் 1000க்கும் மேலான பாடிய அறுத்திருக்கேன். பாடிய அறுத்தத மட்டுமே வேலையா பாக்கல. இந்த ஆஸ்பத்திரியில 13 வருசமா நான் பாத்தது எல்லாம் ரத்தமும், சதையும்தான். முதல்ல ஆஸ்பத்திரிய கூட்டி பெருக்கிட்டு இருந்தப்போ பிரசவ வார்டுல விழுற அவ்வளவு உதிரத் துணியையும் வெறுங்கையால அள்ளிக்கிட்டு போய் வெளியில் கொட்டியிருக்கேன். தூமத்துணியை அலசிப் போட்டிருக்கேன். அதுக்கப்புறம் பொணம் அறுக்க ஆரம்பிச்ச பிறகு, ஆக்சிடெண்ட் ஆகி தொடக்கூட முடியாம ரத்தக்குவியலா வர்றத எல்லாம் தூக்கியிருக்கேன்.மத்தவங்க பாக்கக்கூட முடியாத அழுகி, நாத்தம் அடிக்கிற சதையை எல்லாம் அறுத்து தைச்சிருக்கேன்.

13 வருசமா ஆஸ்பத்திரியில மத்தவங்களோட ரத்தமும், சதையுமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும். ஆனா, இப்ப எனக்கு ரத்தம் இல்லாம போச்சி. உடம்பு சதையெல்லாம் உருகிக்கிட்டே போகுது. இந்த 13 வருசமா தெனம் தெனம் நான் எத்தனையோ பேரோட வாழ்க்கையின் கடைசி கட்டத்த நல்லபடியா முடிச்சி வச்சிருக்கேன். எனக்கு எப்படின்னு தெரியல. இதையே நம்பி இருந்து வாழ்ந்துட்ட நான், என் பிள்ளைகளோட வாழ்க்கை எப்படியாகுமோன்னு இப்பத்தான் நினைக்கிறேன்.
சந்திப்பு: ரா. முருகப்பன்
நன்றி:
மார்ச் 2008

சனி, மே 24, 2008

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்

வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

மனுவின் காலம்

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

மனு செய்த கொடுமை

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

தமிழ்நாட்டில் மனுதர்மம்

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’..........என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம்.ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும்செய்யுள் வடிவில் அமைந்தன.

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

- ஆ. சிவசுப்பிரமணியன்
நன்றி:
ஜனவரி, 2008.

வெள்ளி, மே 23, 2008

மஞ்சள்காமாலை தடுப்பூசி தேவையா? - மரு. வீ. புகழேந்தி MBBS

குறிப்பிட்ட ஒரு நோயால் ஒரு நாட்டில் ஒரு இடத்தில் அதன் பாதிப்பு, இறப்புவிகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக அது உறுதியாக தடுக்கப்படும் என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருந்தால், செலவுகுறைந்த மாற்று வழிகளில் அதை தடுக்கமுடியாது என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
.
நம் நாட்டில் மஞ்சள்காமாலை தடுப்பூசியை நடைமுறைப்படுத்த, அரசு மருத்துவர்கள் மற்றும் மருந்துக் குழுமங்கள் சொல்கின்ற காரணம்.
1. இது ஒரு ஆட்கொல்லி நோய்.
2. இதன் பாதிப்பு மக்களிடையே மிகவும் அதிகம். 10% மக்கள் மஞ்சள் காமாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
3. இந்நோய் பாதிப்பின் காரணமாக ஈரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்வது.
4. இந்நோய் காரணமாக ஈரல் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறப்பது.
5. இந்த தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது... போன்றவை.
.
இனி, இவை உண்மைதானா? இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப் படுவதற்கு மக்கள் நலன்தானா காரணம்? என பார்க்கலாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பாஸ்கர் ராவ் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
.
"ஆட்கொல்லி நோயாக கொள்ளை நோயாக இருக்கும் பட்சத்தில் மட்டும் (அல்லது) கொள்ளை நோயாக உருவாகககூடிய அபாயமுள்ள நோய்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஞ்சள்காமாலை கொள்ளை நோயாகவோ அல்லது அப்படி உருவாகவோ வாய்ப்பு இல்லை என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஆட்கொல்லி நோய் என்பதும் உண்மைக்கு புறம்பானது. இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர்".
.
இது பற்றி உலகின் மிகச்சிறந்த வல்லுநர் மருத்துவர். ஷீலா செர்லாக் கூறுவது. "மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் இக்கிருமிகள் (ஹெபாடைடிஸ் பி) 100 பேர் உடம்பில் உட்புகும் போது 95 பேருக்கு அதன் உடனடி தாக்கம் தெரியும். அதில் 94பேர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர்". இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களுக்கே இறப்பு நிகழும் போது இதை எப்படி ஆட்கொல்லி நோய் என அழைக்க முடியும்?
.
இந்தியாவைப் பொறுத்தவரை இதன் உடனடித் தாக்கத்திற்கு ஆளானவர்கள் குறித்த புள்ளி விபரங்கள், ஆய்வுகள் இல்லை. இக்கிருமி காரணமாக பாதிப்பு ஏதும் சிறிதளவு இல்லாமலும், ஆனால் அதே சமயம் இக்கிருமியை பிறருக்கு பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்கள் பற்றிய ஆய்வு, புள்ளிவிபரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
.
இவ்வாய்வுகளில் நோய் சுமப்பவர்கள் 1.62% - 4% எனத் தெரியவந்துள்ளது. அதிலும் 1% இவ்வியாதியின் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஆக விஷயம் இப்படி இருக்க அனைத்து குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசிகள் போடுவது தேவை தானா? கொழுத்த வியாபாரியான பில்கேட்சுக்கு நம் குழந்தைகள் நலன் மீதுதான் அக்கறையா?
.
பின்விளைவுகளால், அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்படுவது, நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்த குழந்தைகள் மீது இல்லாத கரிசனம், நம் குழந்தைகள் மீது மட்டும் எழக் காரணமென்ன? இந்தியாவிலே நல்ல, தரமான மஞ்சள்காமாலை தடுப்பூசி குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறபோது இதனை வாங்குவதற்குப் பதிலாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த மருந்துக்குழுமத்தில் இருந்து வாங்கி பயன்படுத்துவதை, வெளிநாட்டு மருந்து குழுமத்தின் வணிக நலனை கருத்தில் கொண்டதாகவும் நம் குழந்தைகளை சோதனை விலங்குகளாக மாற்றுவதாகவுமே எடுத்துக் கொள்ள முடியும்.
.
வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் தடுப்பூசித் திட்டங்கள் இந்திய குழந்தைகளை பரிசோதனை விலங்குகளாக மாற்றும் நோக்கத்துடனேயே செய்யப்படுவதை யுனிசெப் அஸ்ஸாமில் செய்த ஆய்வில் 15 குழந்தைகள் (போலியோ) இறந்ததையும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் ஆய்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், ஹைதராபாத்தில் மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தினை (இரண்டிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்/அமைச்சகம் இருந்து அனுமதி பெறாமலே) பரிசோதித்தது குறித்து வழக்கு தொடரப்பட்டிருப்பதையும், கிளாக்சோ மருந்து நிறுவனம் கிறித்தவ மடங்களின் உதவியோடு அனாதை குழந்தைகளிடத்து எய்ட்ஸ் மருந்தின் பின்விளைவுகளை அனுமதி பெறாமலே சோதித்ததும் - மக்கள்மீது இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தோலுரித்து காட்டியுள்ளது.
.
மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு 10% மக்களுக்குள்ளது எனும் தவறான புள்ளிவிபரத்தை அரசு/மருத்துவர்கள்/மருந்துக்குழுமங்கள் சொல்ல காரணமென்ன? மக்கள் நலனா? வணிக நலனா?
.
அரே சுக்கர்மேன் எனும் புகழ்பெற்ற மருத்துவர் மஞ்சள் காமாலை (ஹெபாடைடிஸ் பி) காரணமாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் (90%க்கு மேல்) தானாகவே இயல்பு நிலைக்கு திரும்புவர் என்பதும் 1% கீழ் தான் பாதிப்பு மோசமாக இருப்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பொது சுகாதார சேவை, அமெரிக்க குழந்தை மருத்துவர் சங்கம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்காவில் 1997ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்க வேண்டும் எனும் ஆணை திரும்ப பெறப்பட்டது. அதே ஆண்டு தொற்றுநோய் தடுப்பு அமைச்சகமும் மஞ்சள் காமாலை பாதிக்கப்படாத தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட வேண்டும் என்பதை திரும்ப பெற்றுக்கொண்டது.
.
அமெரிக்க அரசு மஞ்சள் காமாலையால் கருவுற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது மட்டும் பிறக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மீதிக்குழந்தை களுக்கு இது தேவையில்லை. ஏனெனில் இந் நோய் பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக உள்ளதால் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியால் பலன் அதிகம் இல்லை என்று அறிவித்துள்ளது.
.
இனி மஞ்சள்காமாலை தடுப்பு குறித்து உலக வல்லுநர்களின் கருத்து:
.
1. சிறுகுழந்தைகளுக்கு (1 வயதிற்கு கீழ்) மஞ்சள் காமாலை தொற்றும் வாய்ப்பு 1-3% மட்டுமே - அமெரிக்க பொதுசுகாதாரத்துறை.
2. கருவுற்ற பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலொழிய பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. அதனால் அனைத்து குழந்தைகளுக்கும் இது கொடுக்க வேண்டிய தேவையில்லை (1999ம் ஆண்டு அறிக்கை) - அமெரிக்க அரசு.
3. மஞ்சள் காமாலையால் பெரும்பாலும் பாதிக்கப்பட முடியாத பிறந்த குழந்தைகள்/சிறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லாமலே கொடுக்கப்படுகிறது. - பார் கிரிஜ்ஜின்மக்கி.
4. இந்த தடுப்பூசியால் எவ்வளவு காலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், பாதுகாப்பை பெருக்க கூடுதல் ஊசி தேவையா என்பதும் தெளிவாக இல்லை. - தேசிய தடுப்பூசி தகவல் மையம், அமெரிக்கா.
5. மஞ்சள்காமாலை நோய் கண்டு, அதிலிருந்து விடுபட்டவர்களின் வாழ்க்கை முழுக்க அந்நோய் திரும்ப தாக்காத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக்கப்படுகின்றது.
6. குழந்தை கருப்பையில் இருக்கும் காலத்திலே பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் போது பாதிக்கப்பட்டு இருந்தால் இத்தடுப் பூசியால் எந்த ஒரு பயனும் இல்லை - சுக்கர்மேன்.
7. ஏற்கனவே ஒருவர் நோய் கொண்டு இருந்தால் அவருக்கும் இந்த தடுப்பூசியால் ஒரு பயனும் கிடையாது. - தேசிய மருத்துவ இதழ் 2001.
8. 1987ல் மரபீனிமாற்ற தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான விளக்கம் இல்லை: மேலும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்படும் இவ்வூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு கொடுக்கும், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பருவத்திலும் பாதுகாப்பை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. குழந்தைகள் மீது பரிசோதிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
9. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி கொடுத்தால், அவர்களுக்கு நோய்தடுப்பைக் காட்டிலும் இவ்வூசியின் பின் விளைவுகள் காரணமாக இறப்போ/பிறபின் விளைவுகளோ ஏற்படுவது 3 மடங்கு அதிகமாக உள்ளது. - மருத்துவர். ஜேன் ஓரியன்ட்
10. அமெரிக்காவில் கட்டாயப் படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை, அங்கு விற்கமுடியாத, தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை மட்டுமின்றி இலாபமும் சம்பாதிக்க நினைப்பதை என்ன வென்று சொல்லுவது. கரிசனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
.
இந்தியா போன்ற ஏழை (ஆக்கப்பட்ட) நாடுகளில் தடுப்பூசியின் பின்பிளைவுகளை ஆராய தொடர்ஆய்வு செய்யப்படாமல் போவதால் இத்தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சனைகளும் பின் விளைவுகளும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனினும் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையாவது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
நியூசிலாந்தில் மஞ்சள்காமாலை தடுப்பூசி திட்டத்திற்கு பின் அங்கே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது.- நியூசிலாந்து மருத்துவ இதழ், 1995.
.
1987 ம் ஆண்டு முதலே பல மருத்துவ உலக ஆய்வுகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக நாட்பட்ட தன்நோய் எதிர்ப்புத்திறனை அழிக்கும் நோய்கள் நரம்பு மண்டலங்களை பாதிக்கும் நோய்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும். - மருத்துவர் பிலிப் இன்காவோ.
.
மஞ்சள் காமாலை தடுப்பூசியின் மோசமான பின்விளைவுகளை அறிய மே 1999ல் அமெரிக்க செனட்டின் துணைக்குழு கூட்டத்தில் 81 புகழ்பெற்ற மருத்துவ கட்டுரைகளிலிருந்து பின்வருவனவற்றை பட்டியலிட்டு கூறுகிறார். - மருத்துவர். பஸ்டன் ஏ. வெய்ஸ்பிரன்
.
1. வலிப்பு நோய்
2. முக ஜன்னி
3. இடுப்பு நரம்புவலி
4. கண்பார்வை பாதிப்பு
5. தண்டுவட பாதிப்பின் காரணமாக கை, கால் வாதத்தால் பாதிக்கப்படுவது
6. பல நரம்புகள் பாதிக்கப் படுதல்
7. தசைகளை தளர்த்தி பாதிக்கும் நோய்.
8. நரம்பு உறைகள் பாதிக்கப் படுதல்
9. மூளை, பிற நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஒருவகை நோய்
10. நரம்புகளை பாதிக்கும் நோய்
11. மூளைக்காய்ச்சல்
12. கண்களை பாதிக்கும் நோய்
13. மூட்டுகளை பாதிக்கும் நோய்
.
இவை அனைத்தும் உலக மருத்துவ ஏடுகளில் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள். தவிர பல இறப்புகளும் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதிப்புகள் என்றால், ஏற்றுக் கொள்ளப்படாத பாதிப்புகள்..????
.
ஆக தீவிர மஞ்சள்காமாலை தடுப்பூசித்திட்டத்தை கைவிட்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அதனைக் கொடுப்பது சிறந்தது. (அயோடின் சத்துக்குறைவு உள்ள இடங்களில் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது நல்லது. எல்லோரும் அயோடின் கலந்த உப்பைத் தான் உட்கொள்ள வேண்டும் என்பது சரியில்லாதது).
.
மாற்று:அரசானது கருவுற்ற அனைத்துப் பெண்களையும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என அறிய Hbs Ag பரிசோதனை செய்வது மட்டும் நல்லது. பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் குழந்தைகளுக்கு மட்டும். இத் தடுப்பூசி போடுவது நல்லது. இது பாதுகாப்பானது, விலையும் குறைவு, தேவையற்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது.
.
மேலும் இத்தடுப்பூசிகளை நம்மூரிலே தயாராகும் தரமான, குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துக் குழுமங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாருக்குக் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

கொடுக்கக்கூடாதோர்
1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படாத கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.
2. ஹெபாடைடிஸ் பி உள்ள குழந்தைகளுக்கு
3. முழுவளர்ச்சி இல்லாத குறைப்பிரசவ குழந்தைகளுக்கு
4. சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு எடை குறைவான குழந்தைகள்
5. இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
6. அதிக சளித்தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு
7. ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு
முக்கிய பிரச்சனை என்னவெனில் பெற்றோர் அனுமதியின்றி குழந்தைகளுக்கும் ஒப்புதல் இன்றி (அதன் சாதக/பாதங்களை விளக்கிய பின்னரும்?!) யாருக்கும் இதைக் கொடுக்ககூடாது.
.
இது "உரிமை மீறல்" பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். விஷயம் தெரிந்து கொள்வது சாதக/பாதகங்களை (விளக்கப்பட்டால் தானே?) தெரிந்த பின்னர் தன் உடல்நலன் குறித்தான முடிவெடுக்கும் உரிமைகள் நோயாளிகள்/மக்கள் தெரிந்து பின்பற்றுவது முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பலரும் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு, எடைக்குறைந்தும், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டும் இருக்கும் தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.
.
யாருக்கு கொடுக்கவேண்டும் - அமெரிக்க நோய் தடுப்புதுறை.
1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு
2. விபரீதமாக இரத்தம் ஒருவர் உடம்பில் கலக்கும் போது (இது பரிசோதிக்காத இரத்தம் ஒருவர் உடம்பில் ஏற்றுகையில் இதன் பாதிப்பு வரலாம்)
3. ஹெபாடைடிஸ் பி உள்ள ஒருவரிடத்து உடலுறவு கொள்ளும் போது இதன் பாதிப்பு ஏற்படலாம்.
4. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஹெபாடைடிஸ் பி மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருக்கையில் அக்குடும்பத்திலுள்ள 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக கொடுக்கலாம்.
.
அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொறுத்த வரை மருத்துவர்களால்/மருந்து குழுமங்களால் உருவாக்கப்படும் தேவையற்ற, பொய்யான மாய வலையில் சிக்காமல், இந்நோய் பரவ முக்கிய காரணமாக நீர், இரத்தம்/இரத்தப்பொருட்கள் ஒருவருக்கு ஏற்றுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய பாதுகாப்புகள், பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து மக்களும் பெற, அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்கள் (அனைவருக்கும் உரிய இடம், உண்ண சத்தான உணவு (வறுமை நீங்கி) அனைவருக்கும் வேலை-வேலைக்கேற்ற, ஆண் - பெண் பாகுபாடு இன்றி கிடைக்கக்கூடிய உரிய கூலி, வேலைப்பாதுகாப்பு, நிரந்தர வேலை, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படல்), உடுக்க உடை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதே நிரந்தர தீர்வை நோக்கிய பாதையாக அமையும்.
.
தடுப்பூசிகளை விடவும் இவை முக்கியமானவை. நீண்ட கால, நிரந்தர தீர்வைப் பற்றியான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அவை செலவு குறைந்தும் இருப்பது தெளிவாக புரியும்.
.
தடுப்பூசி/மருந்தின் சாதக பாதங்களை விளக்கி, பின் மக்கள்/நோயாளிகள் கொடுக்கும் ஒப்புதல் இல்லாமல் குழந்தைக்கோ/பெரிய வருக்கோ தடுப்பூசி கொடுத்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சட்டப்படி மருத்துவர்களும், மேலும் அத்தடுப்பூசியை உயர்த்திப் பிடிக்கும் மருந்து உற்பத்தியாளர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, ஏன் அரசோ பொறுப்பேற்க வேண்டும்.
.
பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஹெபாடைடிஸ் பி மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம், அவ்வூசி "Multiple Sclerosis" எனும் நரம்புமண்டலத்தை பாதிக்கும் வியாதியை ஏற்படுத்தியதின் விளைவாக நிறுத்தப்பட்டது.
.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் இத்தடுப்பூசியின் விளைவாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதால், இங்கிலாந்தின் ஸ்மித்கிளைன் பீச்சம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் அவ்விருவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
.
அமெரிக்காவில் மட்டும் 1990-1998-க்கு இடைப்பட்ட காலத்தில் 17,497 பேர் காமாலை தடுப்பூசியின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 5,983 பேர் உயிரை பாதிக்கும் அளவிற்கு, மருத்துவமனையில் அவசியம் சேர்ப்பதற்கு, நிரந்தர உடல் ஊனத்திற்கோ, இறப்பு ... முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
மெர்க் நிறுவனத்திற்கு மட்டும் இத்தடுப்பூசி விற்பனையின் விளைவாக ஓராண்டில் கிடைக்கும் பணம் -சுமார் 4500கோடி ரூபாய்.
மருத்துவர் போனி டன்பர் - உடல் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான ஆய்வில் மிக முக்கியமானவரான மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பிறகு பலரும் இறப்பு உட்பட மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனத் தெளிவாக கூறியுள்ளார்.
.
அக்டோபர் 1998ல் பிரான்சு சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொடுத்து வந்த மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை கைவிட்டது.
.
தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2004ல் சேலத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தீபனுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக வலிப்பு நோய் வந்துள்ளது.
1990ல் இங்கிலாந்தில் 598 மருத்துவர்களை உள்ளடக்கிய ஆய்வில் 50% மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட மறுத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியும் 50% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். - இங்கிலாந்து மருத்துவ இதழ்.
.
மஞ்சள் காமாலை தடுப்பூசியானது, மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அவர்களுக்கு எய்ட்ஸ் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஊசி போடப்படுபவர்களுக்கும் எய்ட்ஸ் தொற்றும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் விளைவாகவே எய்ட்ஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் தான் அமெரிக்காவில் முதலில் மஞ்சள் காமாலை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
.
அமெரிக்காவில் இப்பகுதிகளில் தான் எய்ட்ஸ் தாக்கம் அதிகம் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.
.
பெரும்பாலான குழந்தைகளைப் பொறுத்தவரை, காமாலை தடுப்பூசியில் கிடைக்கும் பாதுகாப்பைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் 100 மடங்கு அதிகம். - மருத்துவர். ஜேன் ஓரியன்ட்.
.
1991ல் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்கப்பட்ட 358 காம்பிய குழந்தைகளில் 20% பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவரான நான் கல்பாக்கம் கதிர்வீச்சின் பாதிப்பை எலும்பு மஜ்ஜை புற்றுநோய், இந்தியாவிலே, கல்பாக்கத்தில் அதிகம் என்றும், அதற்கான காரணம் இங்குள்ள கதிர்வீச்சுதான் என புள்ளிவிபரங்களுடன் நிறுவிய பின், அதுவரை பெருமளவில் சுற்றுப்புற மக்களுக்கு ஒன்றும் செய்யாத அணுசக்தி நிர்வாகம், பல மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தியது (என்னை ஓரங்கட்ட) அதில் மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக பலருக்கும் கொடுத்தது (கெடுத்தது) தான் வேடிக்கை.
.
எனினும், அம் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பல அணுசக்தி துறை மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, என்பதும் குறிப்பிடத்தக்கது.

-மரு. வீ. புகழேந்தி, MBBS
நன்றி: புதிய தென்றல்

வியாழன், மே 22, 2008

பஞ்சாங்கப் பித்தலாட்டம் அம்பலம்!

தமிழ் வருடப் பிறப்பு சித்திரையில் தொடங்குவதாகக் கூறிக் கொண்டு, வருடத்தின் மாத, நாள்களோடு மட்டுமின்றி நாழிகை, நல்ல நேரம், கெட்ட நேரம், சகுனம், ராகுகாலம் என்ற மூட நம்பிக்கைகளையும் சேர்த்து - ‘பஞ்சாங்கம்’ தயாரிக்கப்படுகிறது. இந்துக்களின் காலண்டராக, பழமைவாதிகளால் கூறப்படும் பஞ்சாங்கத்தை பல்வேறு சோதிடர்கள் வெளியிட்டு வருகிறார்கள். தமிழக அரசு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்த நிலையில், இந்துக் கோயில் இந்த ஆண்டும் சித்திரையிலேயே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறிக் கொண்டு, விசேட பூசைகளை அறிவித்து வருகின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் கோயில் நிர்வாகம்கூட தமிழக அரசின் முடிவுக்கு மாறாக சித்திரையை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்துள்ளன.
அந்தக் காலத்திலேயே இந்து மதத்தின் முன்னோர்கள் - வானவியலைக் கணித்து, நாட்காட்டியை உருவாக்கியுள்ளதாக பழம் பெருமையை, பார்ப்பனர்களும் இந்துப் பழமைவாதிகளும் பீற்றிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இந்து காலண்டரின் ஓட்டைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

கையில் கட்டியுள்ள கடிகாரம், காலை 8 மணியை காட்டுவதற்கு பதிலாக - இரவு 12 மணியை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் அதை நாம் கையில் கட்டிக் கொண்டு, இதுதான் சரியான நேரம் என்று ஊரில் கூறிக் கொண்டிருந்தால் - ஊர் மக்கள் என்ன சொல்வார்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா என்று கேட்பார்கள். எனது கடிகாரத்தின் நேரம் இரவு 12 மணி தான் என்று காலை 8 மணிக்கு ஒருவன் கூறிக் கொண்டே இருப்பதைப் போல்தான் இந்து காலண்டரான பஞ்சாங்கத்தின் கதையும் இருக்கிறது.

இந்து சோதிடர்களின் விஞ்ஞான அடிப்படையில்லாத தவறான கணிப்புகளால் ஊகத்தால் உருவாக்கப்பட்ட வானவியல் அடிப்படைகள். மிக மோசமான நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பருவ காலங்களை வேகம் வேகமாக - கடந்த 60 ஆண்டுகளில் பாய்ச்சல் வேகத்தில் கடந்து போய் விட்டது. ‘இந்து’க்கள் கணித்த நேரம், இதன் விளைவாக - இப்போது 24 நாட்கள் இடைவெளியில் இந்து காலண்டரான பஞ்சாங்கம், தேங்கிப் போய் நிற்கிறது. அதாவது உலகம் முழுதும் ஆகஸ்டு 1 ஆம் தேதி என்றால், இப்போது, பஞ்சாங்கப்படி, ஆகஸ்டு 25 அய் காட்டிக் கொண்டு நிற்கிறது. இந்த பஞ்சாங்கம் - சரியான வழிகாட்டியல்ல என்பதால் 1955 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய அரசு மேக்னக் ஷா என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இந்து பஞ்சாங்க காலண்டரை விரிவாக ஆராய்ந்த குழு, தனது அறிக்கையில் “இந்து காலண்டர் என்பது - மனிதர்கள் தங்கள் சிந்தனையின் கற்பனையில் உருவாக்கப்பட்டதால், அதில் ஏராளமான மூடநம்பிக்கைகளையும், அரை உண்மைகளையும் இடைக்காலத்தில் இணைத்துவிட்டார்கள். இதில் பல குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்தக் குறைகளை துணிவோடு எடுத்துக்காட்டி மாற்றங்களைக் கொண்டுவர - எவருக்கும் துணிவில்லை. 23 நாட்கள் இடைவெளியில் இந்து பஞ்சாங்கம் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 நாட்களாக வந்து நிற்கிறது” என்று கமிட்டி தனது பரிந்துரையில் சுட்டிக் காட்டியதுடன், “தவறுகளும் - மூடநம்பிக்கைகளும் நிறைந்த ‘களஞ்சியத்தை’ நாம் இந்து வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு வாழப் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால், அதை மாற்ற முடியாத புனிதமாக்கி - பாதுகாத்து வருகிறோம்” என்றும் சுட்டிக்காட்டியது. விஞ்ஞானிகள் குழு - புதிய தேசிய காலண்டர் முறையையும் உருவாக்கியது. ஆனால் - பார்ப்பனர்களும், பழமைவாதிகளும், சோதிடர்களும், இந்த மாற்றத்தை ஏற்காமல், கிடப்பில் போட்டுவிட்டனர்.

உண்மையில் சூரியன் உச்சிக்கு வரும் நாளான - தமிழர் திருநாள் - பொங்கல் நாள் என்று கொண்டாடப்படும் நாள் டிசம்பர் 22 ஆம் தேதியே ஆகும். ஆனால், தவறான கணிப்புகளால் அது ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதிக்கு தள்ளப்பட்டுவிட்டது. 1955 இல் 23 நாட்களாக இருந்து, இப்போது 24 நாட்கள் அதிகரித்துள்ள தவறான இடைவெளியில்தான் நாள், நட்சத்திரம், நல்ல நேரம், எதிர்காலம் எல்லாமுமே கணிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையிலே சோதிட “மேதைகள்” பத்திரிகைகளில் சோதிடக் கணிப்புகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் படித்தவர்கள் முதல் பாமரர் வரை படித்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள்!
வெட்கக் கேட்டைப் பார்த்தீர்களா?

(ஆதாரம்: ‘பிரன்ட் லைன்’ இதழில் (மார்ச் 20) பீமன் நாத் என்ற வானவியல் விஞ்ஞானி எழுதிய கட்டுரை)

நன்றி:




ஏப்ரல் 2008.

செவ்வாய், மே 20, 2008

உலகமய சூழலில் பெரியாரின் பொருத்தப்பாடு - செல்வ புவியரசன்

வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து விழாக் காலங்களின் போது மட்டும் அவசர அவசரமாக நினைவு கூரப்படுவதும் விவாதிக்கப்படுவதும், அதே வேகத்தில் கவனமாக மறந்துவிடுவதும் அறிவுலகின் வாடிக்கை. இந்த நடைமுறையை மீறி, தான் சொல்லிச் சென்ற கருத்துக்களையட்டி தொடர்ந்து அதிர்வலைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் மிகச்சிலரில் பெரியாரும் ஒருவர்.


அறிவியலின் துணைகொண்டு காரல் மார்க்ஸ் செய்த சமுக மற்றும் பொருளாதார பகுப்பாய்வு முடிவுகள் ஒவ்வொரு தசாப்தத்திலும் முகிழ்த்தெழும்பும் வெவ்வேறு இசங்களினால் விரிவான பதவுரை மற்றும் பொழிப்புரைகளால் பொருள்விளக்கம் கொள்ளப்படுகிறது. மார்க்ஸ் ஆய்வுகளி னூடாக கண்டறிந்து கோட்பாட்டு வடிவத்தில் நிரூபணம் செய்ததையே வாழ்வியல் அனுபவங்களிலிருந்து உணரப்பெற்று கருத்துப் பகிர்வாக பெரியார் முன்வைத்துச் சென்றிருப்பதால் அதன் மீதான மறுவாசிப்புகளும் முக்கியத்துவம் கொண்டவையே.


நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ காலகட்டங்களில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து தன்னை மிக வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பன்னாட்டுப் பெருமுதலாளித்துவத்தின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து நொறுக்க வேண்டுமெனில், பொருளாதார அடிப்படையிலான ஆட்சியதிகாரங்களிடமிருந்து தொழிலாளிகளை மீட்டு சமதர்மத்தை நிலைநாட்டும் மார்க்சிய கொள்கைத் திட்டங்களை நிகழ்காலத்தின் சூழல்களுக் கேற்றவாறு கூர்தீட்ட வேண்டியிருக்கிறது; என்றபோதும், முதலாளித்துவத்தை / நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழித்து சமதர்ம சமுதாயத்தைக் கட்டமைத்து அதை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் போன நாடுகளாலும் உலகமயம் தவிர்க்கவியலாத தீங்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


நாடு பிடிக்கும் வெறியில் அடுத்தடுத்து இரணடு உலகப் போர்களை நடத்தி பொருளாதார அளவில் நலிந்துபோன சில நாடுகள், தமக்குள் கருத்தொருமித்து பன்னாட்டு வணிக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தி உலக நாடுகள் அனைத்தையும் நூதனமாக சுரண்டும் முடிவுக்கு வந்து அதன் வெற்றிக்கனியை இப்போது சுவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெரியாரை எங்ஙனம் கைகொள்வது என்றெண்ணுவது மிக்க பயனுள்ளதாய் இருக்கும்.


1944 சேலம் மாநாட்டில் கூலி உயர்வுக்குப் பதிலாக இலாபத்திலும் நிர்வாகத்திலும் தொழிலாளர்களுக்குப் பங்கு வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார். ஆடம் ஸ்மித்தையும் டேவிட் ரிக்கார்டோவையும் அடிக்கடி மேற்கோள் காட்ட இயலாத ஈரோடு ராமசாமி கூலிஉயர்வு என்பது தற்காலிகத் தீர்வு மட்டுமே என்று பேசியதைக் கேட்ட கற்றறிவாளர்கள் கொண்ட கோபமும் அடைந்த எரிச்சலும் இயல்பான விஷயங்கள்தான்.


தொழிற்புரட்சியின் போதும் அதையட்டிப் பின்வந்த காலகட்டத்திலும் உபரிமதிப்பு முழுவதும் முதலீட்டாளர்களையே சென்றடைந்து, உழைப்பின் பலன் தொழிலாளிகளுக்கு மறுக்கப்பட்டது. அப்போது கூலி உயர்வு கேட்டுப் போராடுவதும் அதையொட்டி தொழிலாளர் அமைப்பை ஒருங்கிணைப்பதும் மார்க்சியத்தை முன்வைத்து இயங்கிய அமைப்புகளுக்கு போதுமானதாய் இருந்திருக்கலாம். ஆனால் பெரும் முதலீடுகள் அனைத்தும் பங்குமூலதனமாக மாற்றப்பட்டு, அதன் பயனில் கொஞ்சம் பங்குதாரர்களுக்கும் அளிப்பதற்குத் தயாராகிவிட்ட இச்சூழலில் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்கு மறுபயனாகப் பெறும் ஊதியத்தின் ஒரு பகுதியை மூலதனத்தில் தம் பங்காக சேர்க்கவும் அதிலிருந்து பயனடையவும் பலமடையவும் உரிமைகோர வேண்டும் என்ற யோசனை மட்டுமே மிகச்சரியானது. ஆனால் கூலி உயர்வுப் போராட்டத்தின் போது கொஞ்சமேனும் இறங்கி வரும் முதலாளிகள் மூலதனத்தில் பங்குகள் வழங்க அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.


ஏனெனில், பெரியாரின் கோரிக்கைகள் அனைத்தும் நிரந்தரத்தீர்வை எதிர்நோக்கியவை. எனவே நிறைவேறும் காலம் தாமதிக்கவே செய்யும். நடப்பிலிருக்கும் பெருமுதலாளித்துவம் தன் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காமல் எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து வெளியேற்றும் நிலையில் ஒப்பந்தக் கூலிகளாகவே தொடர்வதற்கு முனைகிறது. உருவாகிவரும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லப்படும் கண்துடைப்புச் சட்டங்கள்கூட கண்டுகொள்ளப் படப்போவதில்லை. ஆனால் அதே வேளையில் முதலாளித்துவம் என்பது எந்தவொரு தனிநபருக்கும் முற்றுமுழுதாக உரிமையாகிவிடுவதில்லை. அது எந்நேரத்திலும் அவரைவிட்டு நீங்கி, பிறிதொருவர் அந்நிலைக்கு வரலாம். இந்த உறுதியற்ற நிலையை எதிர் கொள்ளவே முதலாளித்துவம் பெருமுதலாளித்துவமாக உருமாற்றம் கொள்கிறது.அதை துடைத்தழித்து சமதர்மத்தை நிர்மாணிக்கும் கூடுதல் சுமையை தோள்மீது ஏற்றிக் கொள்ளாமல் பங்கு மூலதனத்தில் உழைப்பின் பங்கை உறுதிசெய்வதே காலத்திற்கேற்ற மாற்று வழிமுறை.


பெருமுதலாளித்துவத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் மூன்றாம் உலக நாடுகளின் முற்போக்குச் சக்திகள் பன்னாட்டு வியாபார நிறுவனங்கள் உள்ளே நுழைவதைக் கடுமையாக கண்டித்து வருகின்றன. தொழிலாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் கதர்த்துணி கட்டச் சொல்வது நாணயமற்றது என்ற பெரியாரின் விமர்சனம் இதற்கும் பொருந்தும். வளர்ந்த நாடுகள் தமது அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கு உலகளாவிய காப்புரிமையை கொண்டாடிவரும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் இன்னும் தமது பழைய தொழில் நுட்ப முறையிலிருந்து கிஞ்சித்தும் மாறவில்லை. காரணம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்காக பெரும் தொகையை செலவழிக்க முடியாது என்பது மட்டும்தான். இதையும் பெரியார் அறியாதவரல்ல. சித்தையன் கோட்டையில் 22.6.1931 அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவில் (குடி அரசு 28.6.1931) மேல்நாட்டுக்காரர்கள் தினம் தினம் அறிவை விருத்தி செய்வதாலேயே பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். சரி நம்மால் ஏன் அவ்வளவு பணம் செலவழிக்க முடியவில்லை? அதற்கும் அவரிடமே பதிலிருக்கிறது...


“நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்கும் ‘பண்டு’, பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும் பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. ஆகவே இந்த மாதிரியாகவெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் எந்த வகையில்தான் பொருளாதாரத்தில் சீர் அடையமுடியும்?’’

(களக்காட்டில் 27.12.1930ல் சொற்பொழிவு, குடி அரசு 18.1.1931).


மதநம்பிக்கையின் காரணமாக வழிபாட்டிற்கு செலவழிக்கப்படும் தொகையையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு வேண்டிய தொகையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்.


கடவுள் மறுப்புக் கொள்கையை அழுத்தி அழுத்தி சொல்லவேண்டிய அவசியம் இப்போது புரிகிறதா?


-செல்வ புவியரசன்


நன்றி:
டிசம்பர் 2007

சனி, மே 17, 2008

மக்கள் பார்வையில் செய்தி ஊடகங்கள் – ஒரு சிறப்புப்பார்வை

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பீரிஸ் என்ற இயக்குனரின் “பிரபாகரன்” என்ற திரைப்படம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது நினைவிருக்கலாம். சிங்கள இனவெறி அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ‘பிரபாகரன்’ என்ற பெயருடைய தமிழ்ச் சிறுவன் விடுதலைப்புலிகளிடம் சிக்கி, அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட கட்டாயத்தின் பேரில் ஆயுதமேந்துவதாக கதை செல்கிறது. சராசரி வாழ்வில் ஈடுபடவிரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை அரசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்குவதைப் போலவும், அதை விடுதலைப்புலிகள் தடுத்து அவர்களை ஆயுதப்போராட்டத்தில் திணிப்பதுபோலவும் ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்துவதே இந்த திரைப்படத்தின் நோக்கம். சிங்கள மொழிப்படத்தை தமிழாக்கம் செய்ய இப்படத்தின் இயக்குனர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து செய்திகள் வந்துவிட்டன.

ஆனால் விடுதலைப்புலிகள் மீதான உளவியல் போரின் ஒரு அம்சமாக இலங்கை அரசு மேற்கொண்ட மற்றொரு முயற்சி அதிக அளவில் கவனிக்கப்படவில்லை. இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் கடந்த 2007 டிசம்பரில் LTTE in the Eyes of Tamil Nadu என்ற நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் 250 பக்கங்களை கொண்ட இந்த நூல் மிகவும் தரம் உயர்ந்த தாளில் பல வண்ண புகைப்படங்களுடன் மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் “தி ஹிந்து”, “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, “டெக்கான் கிரானிக்கிள்”, “நியூஸ் டுடே”, “பிரண்ட்லைன்”, “தினத்தந்தி”, “தினமலர்”, “தினமணி”, “தினகரன்”, “மக்கள் குரல்”, “மாலைமலர்”, “மாலைச்சுடர்” போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தலையங்கங்கள் மற்றும் செய்திகளைத் தொகுத்து இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் முன்னுரை மட்டுமே இலங்கை அரசால் எழுதப்பட்டுள்ளது. ஒரே பக்கத்தில் உள்ள இந்த முன்னுரையில், இலங்கையின் வடபகுதியில் சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களை விடுதலைப்புலிகள் இனப்படுகொலை செய்வதாகவும், இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பல்வேறு மனித உரிமை மீறல்களில் புலிகள் ஈடுபடுவதாகவும் மேற்கண்ட பத்திரிகைச்செய்திகளின் அடிப்படையில், அந்நூலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசின் சொந்த சரக்கு இந்த ஒரு பக்க முன்னுரை மட்டுமே. இதைத்தவிர மீதமுள்ள சுமார் 250 பக்கமும் தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்களின் கைகளைக் கொண்டே விடுதலைப்புலிகளின் கண்களைக் குத்துவதற்கு இலங்கை அரசு முயன்றுள்ளது.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியில் செய்தித்தாள்களின் தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. “லங்கா ரத்னா” விருது பெற்றவர் நடத்தும் “தி ஹிந்து”, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையை விமர்சிக்கும் போக்கில் இலங்கையில் பிரபாகரனும் அவரது படையினரும் மட்டுமே ஆயுதம் தாங்கி இருப்பதுபோல் ஒரு காட்சியை தீட்ட முயற்சிக்கிறது. இந்த ஆயுதங்கள் தமிழ்நாட்டிலும் பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று மற்றொரு தலையங்கம் எச்சரிக்கிறது. ஏறத்தாழ இதே தொனியில் “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, “டெக்கான் கிரானிக்கிள்”, “நியூஸ் டுடே”, “தினமணி” முதலிய ஏடுகளும் தலையங்கம் தீ்ட்டியுள்ளன.

அடுத்தப் பகுதியில் ஆங்கில ஏடுகளில் வெளியான, விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்ட செய்திகளும், ‘ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை காங்கிரஸ் மன்னிக்காது’ என்பது போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் “வீர” வசனங்களும் இடம் பெற்றுள்ளன (தற்போது, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவும், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நளினியும் சந்தித்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள காமராஜர் ஆட்சி “கனவா”ன்கள் என்ன பேசுவார்கள் என்பது சுவாரஸ்யமான புதிர்!). இடையில் தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும், பின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரைத்தவிர மற்றவர்கள் யாரும் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு ஏனோ அனுமதிக்கப்படவில்லை என்பது மட்டும் இந்தச் செய்திகளில் இடம் பெறவில்லை. அந்த மீனவர்கள் கடத்தல் சம்பவம் குறித்து எப்போது, யாரிடம், என்ன பேசினாலும் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டு வாயடைக்கப்பட்டதும் இடம்பெறவில்லை.

இறுதிப்பகுதியாக, தமிழ் ஏடுகளில் வெளியான செய்திகள் பகுதியும் இவ்வாறாகவே தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமே அவ்வாறு செய்தி வெளியிட்டது என்ற பாகுபாடில்லாமல் பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் பத்திரிகைகளும்கூட இவ்வாறே செய்தி வெளியிட்டுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை திமுகவின் தீவிர எதிர்ப்பு நிலையிலிருந்த “தினத்தந்தி”, அரசுக்கு இணக்கமான நிலை என்ற அதன் வழக்கமான நிலையில் நின்று, தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டச் செய்திகளில்கூட சிரித்த முகத்துடன் கூடிய முதலமைச்சரின் புகைப்படத்துடன் செய்திகளை வெளியிட்டுள்ளது.

முற்றுப்புள்ளி எங்கே வரவேண்டும்; கால்புள்ளி எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதுகூட தெரியாத தமிழ் பத்திரிகையான “தினமலர்”, வழக்கம் போல செய்தி என்ற பெயரில் கருத்துத்திணிப்பை மேற்கொண்டுள்ளது. ‘நடுநிலை’ப் பத்திரிகையான தினமணியும், தலையங்கத்தில் மட்டுமல்லாது, செய்திகளிலும் இதே பாணியை தொடர்ந்துள்ளது.

தமிழ் ஊடக உலகில், விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களின் பிதாமகனாகிய ‘சோ”வின் “துக்ளக்” இதழில் வெளிவந்த செய்திகள் இந்த வெளியீட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த முரண் ஆகும்.

LTTE in the Eyes of Tamil Nadu என்ற இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்துச் செய்திகளும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகளே என்பதை தனியாகக் கூறத் தேவையில்லை.

இலங்கை அரசால் தமிழர்களும், தமிழக மீனவர்களும் தாக்கப்பட்ட - கொல்லப்பட்ட சம்பவங்களும் தமிழகத்தின் செய்தித்தாள்களில் இடம் பெறவேயில்லை என்று கூறமுடியாது.

ஆனால் அந்தச் செய்திகள் வெளியான விதத்தைக் கூர்ந்து கவனித்தால், கடந்த சில காலமாக இலங்கைப் பிரச்சினை குறித்து வெளியாகும் செய்திகளில் பல புதிய பரிமாணங்கள் இருப்பது தெளிவாகும். குறிப்பாக, தமிழர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானால் உடனடியாக அந்தச்செய்தி குறித்த இலங்கை அரசின் மறுப்பு அல்லது எதிரொலியும் வெளியாகிறது.

எடுத்துக்காட்டாக, செஞ்சோலைப் படுகொலை உட்பட பல நிகழ்வுகளில் தமிழர்கள் தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட செய்திகள் வெளியான உடனேயே, அந்தச் செய்திகள் குறித்த இலங்கை அரசின் கருத்தும் வெளியாகி வருகின்றன. செஞ்சோலையில் தமிழ் மாணவர்கள் தங்கியிருந்த பள்ளி வளாகத்தில் இலங்கை அரசால் குண்டுவீசி கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியானால், இலங்கை அரசுத்தரப்பில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ராணுவப்பயிற்சி மேற்கொண்டிருந்த குழந்தைப்போராளிகள் என்ற வாதமும் உடனடியாக வலிந்து பரப்பப்படுகிறது.

எந்த ஒரு செய்திக்கும் இரண்டு பக்கங்கள் உண்டென்பதையும், அந்த இரண்டு பக்கங்களையும் எடுத்துக்கூறுவதே செய்தி ஊடகங்களின் நடுநிலையைக் கூறும் அளவுகோல் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த “நடுநிலை” எந்த அளவுக்கு, எந்தெந்த விவகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது; எந்தெந்த விவகாரங்களில் நடுநிலை தவிர்க்கப்படுகிறது. என்று கூர்ந்து பார்த்தால் பல விவரங்கள் வெளிவரும்.

குறிப்பாக சென்னையில் இலங்கையின் துணைத்தூதராக “பச்சைத்தமிழர்” திருவாளர். அம்சா அவர்கள் பொறுப்பேற்ற பின்பே இலங்கை அரசுத்தரப்பு வாதங்கள் தமிழ்நாட்டு ஊடகங்களில் மிகப்பரவலாக இடம்
பெறுகின்றன.




இவர் சென்னையில் உள்ள துணைத்தூதர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தது முதல், இலங்கை அரசின் சார்பில் தமிழகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புகள் நடைபெறுகிறது. செய்தியாளர்கள் சந்திப்புக்கே உரிய “அனைத்து” அம்சங்களுடன் இவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புகளில் இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்துவதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசுத்தரப்பு வாதங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக எடுத்துவைக்கப்படுகின்றன.

தமிழ்ப்போராளிகள் தரப்பு செய்திகளை வெளியிடும் தமிழக செய்தியாளர்களின் உரிமையை இலங்கை அரசு மிகவும் மதிப்பதாகவும், ஆனால் நடுநிலையான தமிழக செய்தியாளர்கள் இலங்கை அரசுத்தரப்பு வாதங்களையும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய செய்தியாளர்கள் சந்திப்புகளில் அறிமுகமாகும் செய்தியாளர்களிடம் பின்னர் தனிப்பட்ட முறையிலும் உறவு பேணப்படுகிறது. இதைத்தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகள் சற்றுக்கூடுதலாகவே தமிழ்நாட்டு ஊடகங்களில் இடம் பெறுகி்ன்றன.

இவ்வாறு வெளியான செய்திகள்தான் LTTE IN THE EYES OF TAMILNADU என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் விரலை எடுத்து தமிழரின் கண்ணையே குத்துவது போன்ற இந்த செயலுக்கு துணைபோவதை எத்தனை தமிழ்ச்செய்தியாளர்கள் உணர்ந்துள்ளனர் என்பது கேள்விக்குறியே.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்து மட்டுமே தமிழக ஊடகங்களிலும், தமிழக மக்களிடமும் நிலவுவதாக ஒரு தவறான கருத்தைத் திட்டமிட்டு பரப்ப இலங்கை அரசின் இந்த வெளியீடு மிகவும் உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உளவியல் ரீதியான இந்த யுத்த தந்திரம், ராஜதந்திரம் என்ற பெயரில் உலகில் உள்ள அனைத்து அரசுகளும் மேற்கொள்ளும் ஒரு வழக்கமான உத்திதான். இதன் மூலம் அரசு அமைப்புகள் அனைத்தும் மக்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் மட்டுமே செயல்படுவது போலவும், விடுதலைப்புலிகள் போன்ற போராளிகள் மட்டுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது போலவும் ஒரு தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான செய்திகளின்போது, அரசுத்தரப்பின் விளக்கத்தையும் வெளியி்ட்டு “நடுநிலை” பேணும் ஊடகங்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்தி வெளியிடும்போது இந்த ‘நடுநிலை’ குறித்து கவலை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களின் உளவியலில் மிக அதிகமான ஆதிக்கம் செலுத்தும் மீடியா உலகத்தினர், இதுபோன்ற விவகாரங்களை கையாளும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும். ஏனெனில் இதுபோன்ற அரசு சார்பு செய்திகளை வெளியிடும்போது, அரசு சார்பு ஆயுதப் படையினர் ஈடுபடும் அராஜக செயல்பாடுகளும், மனித உரிமை மீறல்களும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளும், அரசின் ஆயுதப்படையும் சட்டப்படியும், நியாயப்படியும் நடப்பதுபோன்ற பாவனைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.

நடுநிலை என்ற பெயரில் தவறான அல்லது அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத மிகைப்படுத்தப்பட்ட அல்லது அரைகுறையான தகவலை செய்தியாக வெளியிடுவது எந்த வகையிலும் பத்திரிகை தர்மத்தில் அடஙகாது என்பதை செய்தியாளர்கள் உணர வேண்டும்.



*************


இவ்வாறு நடுநிலை தவறிய செய்திகளும், தவறான புரிதலில் / கண்ணோட்டத்தில் வெளியாகும் செய்திகளும் இலங்கை தொடர்பான செய்திகளி்ல் மட்டுமே வெளியாவதில்லை.

உள்ளூர் செய்திகள் முதல் உலகச்செய்திகள்வரை அனைத்து செய்திகளும் இவ்வாறு பழுதுபட்ட அல்லது அரைகுறைப் பார்வைகளுடன்தான் வெளியாகின்றன. இதில் காட்சி ஊடகமான தொலைக்காட்சியும், அச்சு ஊடகமான பத்திரிகை உலகமும் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுவதாகவே கூறலாம்.

தொலைக்காட்சி ஊடகம் என்பது காட்சி வழியே செய்தியை உணர்த்தும் மிக நவீன வடிவமாகும். ஆனால் இந்த வடிவம் “செய்தி” என்ற கருத்தின் உள்ளடக்கத்தையே மாற்றிவிட்டது. காட்சிகளுடன் வரும் தகவல்களே தொலைக்காட்சி ஊடகத்தின் செய்திகளாக உருவாக்கப்படுகின்றன. கருத்தியல் ரீதியான அம்சங்கள், அவை எவ்வளவு முக்கிய அம்சமாக இருந்தாலும், அவற்றிற்கு செய்தி என்ற அந்தஸ்து மறுக்கப்படுகிறது.

இதன் விளைவாகவே நாடு முழுவதும், விவசாயிகள் தற்கொலை போன்ற முக்கிய நிகழ்வுகள் செய்தியாக ஒளிபரப்பப்படும் அந்தஸ்தை இழந்து விடுகின்றன. உலகமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டபின் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் (கடன் தொல்லை காரணமாக) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Records Bureau) தெரிவித்தாலும் அது நமது செய்தியாளர்களுக்கு முக்கிய நிகழ்வாகப் படுவதில்லை.
கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 112 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு தற்கொலை நிகழ்வதாக தெரிய வருகிறது. அதே 2006ம் ஆண்டில் தமிழ்நாட்டிலும் 12 ஆயிரத்து 381 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் பத்தாம் வகுப்புவரைகூட படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள். விவசாயம் உள்ளிட்ட சுயதொழில் செய்தவர்கள். வறுமை காரணமாக குடும்பத் தேவைகளையும், மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றெல்லாம் புள்ளிவிவரங்களை அரசுத்துறைகளே அளித்தாலும், இதற்கான பின்புலங்கள், காரணங்கள், தீர்வுகள் குறித்து தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் விமர்சனங்களையோ, விவாதங்களையோ முன்வைப்பதில்லை.

மாறாக இந்தத் தொ(ல்)லைக்காட்சி செய்திகளின் தினசரி காட்சிகளில் தங்கத்தின் விலையும், பங்கு மார்க்கெட் ஏற்ற, இறக்கங்களும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சி பார்க்கும் மக்களில் சுமார் சுமார் 90 சதவீதம் பார்வையாளர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத அம்சங்களை ஒலிபரப்பும் இந்த தொலைக்காட்சி செய்திகளில், மக்களின் அன்றாடத் தேவைகளான உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் தாறுமாறாக விலை ஏறினாலும் அது குறித்து எந்தவிதமான செய்தியோ, விமர்சனமோ, சிறப்புப்பார்வையோ இடம் பெறுவதில்லை. அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுகூட வானிலை செய்தியைப்போல மிகவும் சாதாரணமாக மக்களிடம் எடுத்து வைக்கப்படுகிறது. அதற்கு பின்னால் உள்ள அரசியல் குறித்த விவாதங்கள் எழுப்பப்படுவதில்லை. அதற்கு மாறாக சில ஊடகங்கள் அந்த விலையேற்றத்தை நியாயப்படுத்தவும் முனைகின்றன.

பெருவாரியான மக்களின் அன்றாட வாழ்க்கைத்தேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாகி வருவது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அம்மக்களின் சிந்தனையை தங்கம் நோக்கிய கனவுகளாக திசைதிருப்பும் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன.

தொலைக்காட்சி ஊடகங்களின் இந்த அறமற்ற போக்கிற்கு அச்சு ஊடகங்கள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. அவையும் அவற்றின் வாய்ப்புக்கேற்ற வகையில் பலவித தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.

குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களையும், பல்வகை அநீதிகளில் பாதிக்கப்படும் குழந்தைகளையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் வகையில் அவர்களின் புகைப்படங்களையும் பிரசுரிக்கக் கூடாது என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தினாலும் இந்த பத்திரிகைகள் அவற்றை கண்டுகொள்வதில்லை. இது போல அச்சு ஊடகங்கள் ஈடுபடும் மேற்கொள்ளும் நெறிமுறை மீறல்களை பட்டியலிட்டால் இந்த இதழ் நிறைந்து விடும் அபாயம் உள்ளது.

தொலைக்காட்சி ஊடகம், அச்சு ஊடகம் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா எனப்படும் நவீன இணையதள ஊடகங்கள் ஆகிய அனைத்துமே கூட்டாக சில தவறான கண்ணோட்டங்களையும், கருத்துகளையும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.

இவை குறிப்பாக சமூகம் சார்ந்த செய்திகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அரசியல்வாதிகள் ஈடுபடும் பெரும் ஊழல்களை அடக்கியே வாசிக்கும் இந்த ஊடகங்கள், பிரேமானந்தா (பெண்களை ஏமாற்றுதல்), டாக்டர் பிரகாஷ் (ஆபாசப்பட வழக்கு), சிவகாசி ஜெயலட்சுமி (மோசடி வழக்கு), செரீனா (கஞ்சா வழக்கு), நடிகை பத்மா (ஆபாசப்படம் எடுத்து மிரட்டுதல்) முதலியவர்கள் தொடர்புடைய செய்திகளில் தங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்துக்கொண்டு செய்தி வெளியிடுகின்றன.

காவல்துறையினரும் செய்தியாளர்களின் இந்தக் கற்பனைத்திறனுக்குத் தேவையான மூலக்கருவை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம் பொதுமக்களிடம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கோபத்தை ஏற்படுத்த முடியும். பெருவாரியான மக்களின் கருத்திற்கு ஏற்ப நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிவிடுகின்றன. இதன்மூலம் காவல்துறையினருக்கு மக்களிடம் நல்லெண்ணம் ஏற்படுத்தும் முயற்சியாக இத்தகையப் போக்கு கையாளப்படுகிறது.

ஆனால் இந்த “மீடியா டிரையல்” எனப்படும் பத்திரிகைகளின் மோசடியில் சிக்கிய அப்பாவிகளுக்கு நிவாரணம் வழங்க எந்த ஏற்பாடும் இல்லை. இதன் கோரமான உதாரணமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கை கூறலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை குறிப்பிடலாம். பொதுமக்களின் கருத்தில் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றமும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பதாலேயே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருககும் மிக அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டின்போது, மிக நீண்ட போராட்டங்களின் பயனாக, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 19 பேர் விடுவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இதுபோன்ற போக்கே காவல்துறையினர் மற்றும் ராணுவத்துறையினர் கையாளும் மோதல் கொலைகளிலும் கையாளப்படுகிறது. இதுபோன்ற போலி மோதல்களை நியாயப்படுத்தும் நோக்கில் கொல்லப்பட்டவரை தீவிரவாதியாக சித்தரிப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே நிகழ்கிறது. குஜராத் மாநிலத்தில் நடந்த சொராப்தீன் என்கவுண்டர் சம்பவமும் முதலில் இப்படித்தான் செய்தியாக வெளிவந்தது. பின்னர் அவரது குடும்பத்தினரின் பெரும் போராட்டத்திற்கு பின்னரே என்கவுன்டரில் கொல்லப்பட்ட சொராப்தீன் தீவிரவாதி அல்ல என்ற “உண்மையான உண்மை”யை ஊடகங்கள் வெளிப்படுத்தின.

அரசுத்தரப்பு செய்திகளையும், அரசியல் தலைவர்களின் செய்திகளையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் இந்த ஊடகங்கள் அரசின் கொள்கையையோ, அரசியல் தலைவர்களின் கொள்கைகளையோ விமர்சனம் செய்பவர்களின் வாதங்களை எந்த அளவுக்கு வெளியிடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

ஊடகங்களின் இந்தப்போக்கினால்தான் உலகமய பொருளாதாரம், அணுசக்தி, மரபணுமாற்ற வேளாண்மை, கட்டற்ற நகரமயம் போன்ற சமூகத் தீங்குகளை மக்கள் எந்தவிதமான விமர்சனமும் இன்றி ஏற்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.

***************

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மத்தியில் செய்தி ஊடகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தமிழ் (மட்டும்) அறிந்தவர்கள் “தினத்தந்தி” உள்ளிட்ட செய்தித்தாள்களில் வந்த அனைத்து செய்திகளையும், அதன் பார்வைகளையும் எந்தக் கேள்வியுமின்றி நம்பியது வரலாறு. அதேபோல் ஆங்கிலம் அறிந்தவர்களும் “ஹிந்து”-லயே போட்டிருக்கான் என்று பேசியதும் உண்டு. ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு அரசியலை வரித்துக் கொண்டு அதன் சார்பிலேயே இயங்கி வந்தாலும் ‘நடுநிலைமை’ என்ற முகமூடி அணிந்தே பல ஊடகங்கள் இயங்கின. அரசியல் கட்சியின் பிரசார சாதனங்களாக இருந்த சில ஊடகங்கள் மட்டுமே வெளிப்படையாக அரசியல் பேசின.

ஊடகங்கள் நடுநிலை வகிப்பதாக மக்கள் கொண்டிருந்த குருட்டுத்தனமான - தவறான நம்பிக்கையைத் தகர்த்து, மக்களின் இந்த பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் அதிகரிக்கச் செய்ததில் “சன் டிவி”யும், “ஜெயா டிவி”யும் முக்கிய இடம் வகித்தன. ஒரே செய்தியை இரு டிவி சேனல்களும் எதிரும்புதிருமான கோணத்தில் வெளியிட மக்கள் முதலில் திகைப்படைந்தனர். பிறகு மீடியாக்களின் அரசியலை புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்த போக்கு தற்போது நன்கு வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிட்ட செய்தியை எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் எவ்வாறு செய்தியாக வெளியிடும் என்று சாதாரண வாசகனும் யூகிக்கும் அளவுக்கு வாசகனின் அறிவு விசாலமடைந்துள்ளது. சமூகப் பிரசினைகளின்போது இந்த தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கும் படிப்பறிவற்ற சாமானிய மக்கள்கூட பேட்டி எடுக்கும் தொலைக்காட்சியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப பேட்டி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் மீடியா விமர்சகர்கள் அனைவரும் நன்றி கூற வேண்டும்.

ஊடகங்களின் பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள் இந்த அளவுக்கு விழி்ப்புணர்வு அடைந்துள்ள நிலையிலும், ஊடகங்களின் பொறுப்பற்றப்போக்கு தனிநபர்களுக்கு மட்டுமே எதிராக இருக்கும்வரை யாருடைய கவனத்தையும் அவ்வளவாக கவருவதில்லை. ஆனால் அது ஒரு சமூகத்திற்கே எதிராக மாறும்போதும் மக்களின் எதிர்விளைவு சாதாரணமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது; அவ்வாறு எதிர்பார்க்கவும் கூடாது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளவர்களும் சமூகவிழிப்புணர்வு அடைந்து வரும் இன்றைய நிலையிலும் ஊடகங்கள் இன்றைய மோசமான போக்கினை தொடர்ந்தால் பெரும் விபரீதங்களை சந்திக்க நேரிடலாம். எனவே ஊடகத்துறையினர் இதனை புரிந்து கொள்வதற்கும், தங்களைத் தாங்களே சுயவிமரிசனம் செய்து கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகவே LTTE IN THE EYES OF TAMIL NADU என்ற புத்தகத்தை பார்க்க வேண்டும்.


-சுந்தரராஜன்



நன்றி:
மே-2008


74, 4வது தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி: 94434 23638
http://www.vizhippunarvu.com/