சனி, ஆகஸ்ட் 30, 2008

பெரியார் திடலில் இரண்டு கல்லறைகள் உள்ளன. ஒன்று பெரியாரின் உடலுக்கு; இன்னொன்று பெரியாரின் கொள்கைக்கு.

கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தஞ்சையில் பெரியாரின் போர்ப்படைத் தளபதி அய்யா ஆசிட் தியாகராஜன் அவர்களைச் சந்தித்த போது அவரது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமான ஒரு நிகழ்வு.
.
ஆரம்பக் காலங்களில் பொதுக்கூட்டங்களில் பெரியாருக்கு சிறப்பு செய்வதற்காக தோழர்கள் ரோஜா மலர்களாலான மாலையை அணிவிப்பார்களாம், அதைக் கவனமாக பெரியார் எடுத்து வந்துவிடுவாராம். இருப்பிடத்திற்கு வந்தபின் நடந்த கூட்டத்தைப் பற்றி தோழர்களிடம் உரையாடிக்கொண்டிருப்பாராம். அந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது பெரியார் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலையில் இருக்கும் ஜரிகை நூலை மட்டும் அறுத்து நூல்கண்டு போல சுற்றிக்கொண்டிருப்பாராம். சுற்றி முடித்து அந்த நூல்கண்டை மறுபடியும் மாலைக்கடைக்காரரிடம் விற்று காசாக்கி விடுவாராம்.
.
அதுபோல பொதுக்கூட்டங்களில் தோழர்கள் புகைப்படங்களை கண்ணாடி ஃப்ரேம் போட்டு அன்பளிப்பாக அளிப்பார்களாம். அதையும் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு, கண்ணாடியையும், ஃப்ரேமையும் திருச்சியின் முன்னாள் மாவட்டத்தலைவர் வீரப்பா அவர்களிடம் விற்று காசாக்கி விடுவாராம்.
.
ஒரு மாபெரும் தலைவன், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்ட சரித்திர நாயகன், தனது ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல், தன்னிடம் குப்பையாக குவிந்த ரோஜா மாலையில் இருந்துகூட தானே நூலைப் பிரித்து விற்பனை செய்து வருவாய் பெற்று அதை, அவரது உழைப்பின் பயனை இந்த நாட்டு மக்களின் அறியாமை இருளகற்ற, அதற்கான பிரச்சாரத்தைச் செய்ய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான தனது சொத்துக்களையும், தனக்கு மக்கள் வாரி வழங்கிய நன்கொடைகளையும் அந்த நிறுவனத்திற்கென கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். மணியம்மையார் காலத்தில் "நண்டைச்சுட்டு நரியைக் காவல் வைத்த" கதையாக நீங்கள் அதற்கு ஆயுள்கால செயலாளராகி விட்டீர்கள். தெருத்தெருவாக துண்டேந்தி, பிச்சையெடுத்து சேமித்த தொகையெல்லாம் இன்று குத்தாட்டம் போடும் இரகஸியாவிற்கும், ஜோதிர்மயிக்கும் கணக்கு செட்டில் பண்ணப் பயன்படுவதைப் பார்க்கும்போது ப்ளட் ப்ரஷர் என்றால் எப்படியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
.
பெரியார் தந்த புத்தி போதும் என நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். எங்கள் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை. பெரியாரின் அறிவை - புத்தியை இப்படி அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்து காலங்காலத்துக்கும் தனது மகன், பேரன், கொள்ளுப்பேரன் என வரிசையாக அறிவுசார் சொத்துக்கு வாரிசாக்கி தனது தலைமுறைகளை நிம்மதியாக வாழ வைக்கும் தந்திர வார்த்தைகள் தான் " பெரியார் தந்த புத்தி போதும்" என்பவை என இந்த அடிமட்டத் தொண்டனுக்கு தெரியாமல் போயிற்று.
.
எனக்குத் தெரிந்து, நானறிந்தவரை உலக அரசியலில் பொதுவாழ்க்கையில் தன்னையும், தனது குடும்பத்தினரையும், குடும்ப வாரிசுகளையும் நிம்மதியாக வாழவைக்க தன்னை ஆளாக்கிய ஒரு மாபெரும் தலைவனின் கருத்துக்களையே பகிரங்கமாக, வெளிப்படையாக மூலதனமாக்கிய முதல் அரசியல்வாதி நீங்கள்தான். பெரியாரின் கருத்துக்களை அறிவுசார் சொத்துரிமை கொண்டவன் நான்தான் என தமிழர் தலைவர் அறிவித்தது அனைவருக்கும் தெரியும். அந்த உரிமைக்கு வாரிசாக அவரது குடும்பத்தினர்தான் வரப்போகிறார்கள் என்பது குறித்த செய்திகள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் வெகுவிரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.
.
தமிழக அரசியலில் சுப்பிரமணியசாமி வேலை பார்த்து, டெல்லியில் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தில் பல்லைக்கெஞ்சி, ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கி, புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுத்து, ஒவ்வொரு டேபிளுக்கும் கப்பம் கட்டி, யார் யார் கை கால்களிலோ விழுந்து ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினீர்கள். பெரியாரியலைப் பரப்பவா? இல்லையில்லை. தங்கள் மகனை சொத்துக்கு வாரிசாக்க! மறுக்க முடியுமா? பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 15 பேர் கொண்ட நிர்வாகக்குழுவில் , Nominee of Funding Agency யாக நியமிக்கப்பட்டிருப்பவர் யார்? அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்க அந்தச் செம்புழுதி சுழன்றடி்க்கும் செங்காட்டிலே படுத்துக்கிடந்து கட்டிடங்களை உருவாக்கிய க.மா.குப்புசாமியின் வாரிசுகளா? இராசகிரி தங்கராசு அவர்களின் வாரிசுகளா? அந்தக் கல்லூரிக்கு அருகில் நிலம் தொடர்பாக சிக்கல் கொடுத்துக்கொண்டி ருந்த தி.மு.க தொண்டரை அடித்து விரட்ட லாரி லாரியாக ஆட்களையும், தோழர்களையும் குவித்த ஒரத்தநாடு குணசேகரனா? கண்ணந்தங்குடி செயக்குமாரா? இல்லையே. தங்கள் மகன் வீ.அன்புராஜ்! மிக வினயமாக உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார். அறக்கட்டளைப் பதவியில் மட்டுமல்ல. இயக்க நடவடிக்கைகளிலும் கூட .அன்புராஜ் அவர்கள் தான் முன்னிறுத்தப்படுகிறார்.
.
போஸ்டர் ஒட்ட, கொடி கட்ட, தமிழனின் பண்பாட்டு அடையாளச் சின்னங்களான பேருந்துநிலைய மூத்திரச்சுவர்களில் நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு மூச்சை இறுக்கிக்கொண்டு சுவரெழுத்து எழுத, போராட்டம் நடத்த, கிராமம் கிராமமாகக் கிராமப் பிரச்சாரம் செய்யச் சென்று செருப்பிலும், வெளக்கமாற்றிலும் அடி பெத்து ஓடிவர, கமுதியில் மாணவ பிரச்சாரம் செய்யச் சென்று கொலைவெறிக்கும்பலால் விரட்டியடிக்கப் பட்டு உயிர் பிழைத்தால் போதுமென ஓடிவர, தன்னை விமர்சனம் செய்து யாராவது பேசிவிட்டால் அவர்களை அடிக்க, பாப்பாத்தி பின்னால் ஏன் செல்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்ட விடுதலை இராசேந்திரன் அவர்களை திண்டுக்கல்லில் கொலை செய்ய கூலி வாங்காத கூலிப் படையாகச் செல்ல இவற்றுக் கெல்லாம் அப்பாவி கருப்புச் சட்டைத் தொண்டன் வேண்டும்.
.
ஆனால் முதல்வராக யார் இருந்தாலும் அது ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, கருணாநிதியாக இருந்தாலும் சரி அவர்களைச் சந்திக்க, அவர்களை வரவேற்க, பெருந்தலைவர்கள் பங்கேற்கும் மேடையில் அவர்களுக்குச் சமமாக நிறுத்த மட்டும் தனது மகன் அன்புராஜ் தான் வேண்டும். திராவிடர் கழக இணையதளத்தில் இருக்கும் புகைப்பட ஆதாரங்களை வைத்தே சொல்கிறேன். பல ஆண்டுகளாக குடும்பத்தை மறந்து ஓயாத உழைப்பைக் கொடுத்து தமிழகத்தின் அனைத்துக் கூட்டங்களின் மேடையிலும் உங்களின் நிழலாக இருக்கும் செயல்வீரர் ஒரத்தநாடு குணசேகரன் முதலமைச்சர்கள் பங்கேற்கும் மேடைகளில் கவனமாக ஒதுக்கப்படுவது எப்படி?
.
சரி, எக்கேடோ கெட்டுப்போங்கள். பெரியாரின் இயக்கமும், பெரியாரின் சொத்துக்களும் உங்கள் குடும்பச் சொத்தாகி விட்டது. வாழ்த்துகள்! உங்களுக்குப் பல வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. தற்போது கலைஞர் ஆட்சியை அம்மாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும், அடுத்து அம்மா வந்தால் அவரது ஆட்சியைக் கலைஞரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். நீண்ட நாட்களாக திருமாவளவன், இராமதாசு ஆகியோரும் ஆட்சியைப் பிடிப்பேன் என்கிறார்கள். அவர்களது ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். விஜயகாந்த் வேறு பத்து சதம் வரை ஓட்டு வாங்கி வருகிறார். அவரது ஆட்சியையும், சரத்குமாரின் ஆட்சியையும் காக்க வேண்டும். புதிதாக நயன்தாரா புகழ் சிம்புவும் அரசியலுக்கு வரப்போகிறாராம் அவரது ஆட்சியையும் காக்க வேண்டும். இப்படி காலத்துக்கேற்றார் போல காக்கும் கரங்களை உருவாக்க வேண்டும். அதற்காக இப்போது அன்புராஜ், நாளை அவரது வாரிசு. நடக்கட்டும். நடக்கட்டும்.
.
நாங்கள் ஏதோ பொழப்பில்லாமல் வருமானம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் பெரியாரின் எழுத்துக் களை தொகுத்து அடுத்தவேளைக்கஞ்சிகூட பீயள்ளினால்தான் கிடைக்கும் என்ற நிலையிலுள்ள - ஒரு மடக்கு காப்பித்தண்ணியைக்கூட சாதித்திமிர் பிடித்த இரண்டுகால் பிராணிகளின் காலடியில் மானங்கெட்டு உட்கார்ந்து தான் குடிக்க வேண்டும் என்ற இழிவில் உள்ள மக்களிடம் கொண்டு சென்று அவர்கள் மானத்தோடு வாழ வழிசெய்ய இருக்கிறோம். அடக் கொடுமையே! அதிலும் உங்கள் வணிக வேட்டை, வணிக வெறி இடைஞ்சலாக வருகிறதே!
.
எங்களுக்கு வணிக நோக்கமா? விளம்பர நோக்கமா?
.
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக 3 இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்துத்தான் படிக்க முடியும் என்பது தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் செயல்பாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக கள்ளக்குறிச்சி, தருமபுரி பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்த அனைவருக்கும் தெரியும். பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு அரசு கூறும் தொகையான 32,000 மட்டும்தான் வாங்குகிறீர்களா? நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவில் பணம் வாங்காமல் தான் அனுமதிக்கின்றீர்களா? நிரூபிக்க முடியுமா?
.
தஞ்சை கல்லூரி வளாகத்தில் ஒரு குழந்தைகள் பழகுமுகாம் கடந்த 1990 இல் நடைபெற்றது. திராவிடர் கழகத் தோழர்களின் இல்லக் குழந்தைகள் அதில் பங்கேற்றனர். அந்த முகாமில் பங்கேற்ற குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அவர்கள் அனைவரும் அனாதைக் குழந்தைகள் என விளம்பரப் படுத்தி ஒரு வண்ணத் துண்டறிக்கையை ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளிநாடுகளில் கல்லா கட்டியதை மறந்துவிட்டீர்களா? அந்த அனாதைக்குழந்தைகளின் குழு படத்தில் எமது குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளும் இருப்பதையும், அந்த துண்டறிக்கை எங்களிடமே இருக்கிறதென்பதையும் நீங்கள் தெரிந்திருக்க மாட்டீர்கள். யார் யாரைப் பார்த்து வணிக நோக்கம் என்பது?
.
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடவுளர் கதைகள் என்ற நூலை பலவண்ண அட்டையுடன் வெறும் 5 ரூபாய்க்கு அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். அதே நூலை தி.க ஒரு வண்ண அட்டைக்கே 10 ரூபாய்க்கு அச்சிட்டு விற்பனை செய்துள்ளது. இந்து மதப்பண்டிகைகள் என்ற சிறு நூலையும் அதே போல் பெ.தி.க வை விட 5 ரூபாய் அதிகமாய்ப் போட்டு விற்பனை செய்துள்ளீர்கள். இதுவரை பெ.தி.க வெளியிட்ட அனைத்து சிறு பெரு நூல்கள் அனைத்துமே அவற்றின் அடக்க விலைக்கே - தி.க நூல்களைவிடக் குறைவான விலையிலேயே மக்களிடம் விற்பனைக்குச் சென்றுள்ளன. குறுந்தகடுகள் விற்பனையில்கூட தி.க வில் ஒரு குறுந்தகடு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காலத்தில் அதே நேரத்தில் "சங்கராச்சாரி யார் ?" என்ற பெ.தி.க வின் குறுந்தகடுகள் வெறும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. அதன் பிறகு உங்கள் குறுந்தகடுகள் 50 ரூபாய்க்கு விற்பனைக்கு வரத்தொடங்கியபோது, பெ.தி.க சார்பில் "சாய்பாபாவின் உண்மை முகம்", "இடஒதுக்கீடு?" ஆகிய குறுந்தகடுகளை 25 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். நாளைவிடியும் என்ற சிற்றிதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக விரிவான கட்டுரை வெளியானது.
.
மிக மிகக் குறைவான விலையில் நூல்களை அச்சிடும் வெளியீட்டகங்கள் வரிசையில் பெ.தி.க நூல்களும் வந்துள்ளது. விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கணினி அச்சுக்கோர்ப்பு, நூல் கட்டுமானம், ஒளிப்பதிவு, எடிட்டிங் உட்பட பல பணிகளை சாதாரண இயக்கத் தோழர்களே இலவசமாக செய்து மலிவு விலையில் மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர். திராவிடர் கழகத்திற்கு கிடைக்கும் சலுகை விலையிலான தாள், சொந்த அச்சகம் போன்றவை கிடைத்தால் திராவிடர் கழக வெளியீடுகளுக்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட பாதி விலையில் மக்களுக்கு வழங்குவோம். இதைச் சவாலாகவே அறிவிக்கிறோம். சந்திக்கத் தயாரா?
.
மலிவு விலையில் விற்பனை செய்வது மட்டுமின்றி, திராவிடர் இணையதளத்தில் அனைத்து நூல்களையும் பதிவேற்றி உலகெங்கும் யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் வசதிசெய்துகொடுத்துள்ளோம். நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு பகிரங்க மடல் எழுதினேன். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாளில். அதில் தி.க நூல்களை உங்கள் இணையதளத்தில் ஏன் இன்னும் பதிவேற்றவில்லை? மக்களுக்கு நூல்கள் இலவசமாகச் செல்லவேண்டும். அனுமதி கொடுங்கள் நாங்கள் இலவசமாகப் பதிவேற்றித் தருகிறோம் என வேண்டுகோள் விடுத்து மடல் எழுதினேன்.
.
உடனே விடுதலையில் கட்டம் கட்டி ஒரு செய்தி வந்தது. தி.க இணையதளத்தில் யூனிகோட் முறையில் பெரியார் கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுக்கொண்டுள்ளன. இப்போது 300 பக்கங்கள் உள்ளன. விரைவில் அனைத்துக் கருத்துக்களும் யூனிகோட் முறையில் இணைய தளத்தில் வெளியிடப்படும். அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வந்தது. அதற்கென தனியாக www.periyar.org.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது என்றெல்லாம் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன் தற்போதய நிலை என்ன? ஏற்கனவே இருந்த 60 கட்டுரைகளும் இப்போது இல்லை. இலவசமாக இணையத்தில் ஏற்றிவிட்டால் நூல் விற்பனை பாதிக்கும் என்ற அச்சத்தில் இன்றுவரை அப்பணியை நீங்கள் செய்யவில்லை. யாருக்கு வணிக நோக்கம்?
.
எனக்கு இந்த இடத்தில் இன்னுமொரு கேள்வி. இணையத்தில் இலவசமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் யூனிகோட் முறையில் சில கட்டுரைகளைப் பதிவேற்றினீர்கள். தொடர்ந்து பணி நடப்பதாக அறிவித்தீர்கள்.அது 2008 ஜனவரி மாதத்தில். ஆனால் இப்போது அறிவுசார் சொத்து யாரும் பயன்படுத்தக்கூடாது என்கிறீர்கள். இது 2008 ஆகஸ்ட் மாதம். நாங்கள் குடி அரசு வெளியிடப்போகிறோம் என வெளிப்படையாக அறிவிப்பு கொடுத்தது ஜுன்முதல் வாரம் 2008 இல். இரண்டு மாதம் கழித்து திடீரென இப்போது தடை அறிவிப்பு வந்துள்ளது. நியாயமாக நீங்கள் ஜுன் மாதமே தடை அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கவில்லை. ஆக மிக அண்மையில் யாரோ, அல்லது ஏதோ உங்கள் மனதை மாற்றியிருக் கின்றனர். மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?
.
எமது தலைவருக்கும், தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் சொந்தமாக வருமானத்திற்கென முறையான தொழில்கள் உள்ளன. இப்போதும் கூட தனது நிலத்தில் உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்தான் எமது தலைவர். அதில் போதுமான வருமானமும் வருகிறது. தனது வருவாய்க்கென எந்த உழைப்பையும் கொடுக்காத - ஒரு மாபெரும் தலைவன் கொடுத்துச் சென்ற சொத்து நிழலில் இளைப்பாறிக்கொண்டு - அதற்குத் தனது குடும்பத்தினரையே வாரிசுகளாக்க அயராது உழைத்து வரும் தாங்கள் எம்மைப் பார்த்து வணிக நோக்கமென்றால் நடுநிலையாளர்கள் உங்களைப்பார்த்து எப்படிச் சிரிப்பார்கள்?
.
அடுத்து விளம்பர நோக்கம் என்று கூறியுள்ளீர்கள். உங்களுக்குத் தெரியாதா கொளத்தூர் மணி எப்படிப்பட்டவர் என்பது? அவர் தி.க வில் இருந்தபோது ஈழத்திற்குச் சென்ற வந்த நேரத்தில் அவரது விளம்பரம் விரும்பாத் தன்மையைப் பாராட்டி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளீர்கள். அந்த ஒலிநாடாவை இன்னும் வைத்துள்ளோம். வீரப்பன் பிரச்சனையிலும் நீங்கள் ஜெயலலிதா அவர்களுக்குப் பயந்து உளறாமல் இருந்திருந்திருந்தால் கொளத்தூர் மணி காட்டுக்குச் சென்றதே வெளியில் வந்திருக்காது.
.
பெ.தி.க வின் கூட்டத் துண்டறிக்கைகளில் கூட தோழர் என்ற சொல்தான் பயன்படுத்தப்பட வேண்டும். கலந்துரையாடல் கூட்டங்களில் பேசும்போது கூட மாவீரன், சிறைக்கஞ்சா சிங்கம், தனித்தமிழ் நாட்டின் போர்க்கள நாயகன் போன்ற எந்த ஜால்ராச் சொற்களும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக துண்டறிக்கைகளில் பெரியார் படத்தைத் தவிர வேறு எந்த வாழும் தலைவரின் படத்தையும் அச்சிடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதித்து அதைக் கடைபிடிப்பது பெ.தி.க. இதை மீறி துண்டறிக்கையில் கொளத்தூர் மணி அவர்களின் படத்தை அச்சிட்ட ஒரு மாவட்டப் பொறுப்பாளர் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் கொளத்தூர் மணி அவர்களும் இணைந்து நிற்கும் படத்தை விற்பனை செய்த ஒரு தோழர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விற்பனையை நிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் மூலையில் எங்கோ ஒரு கிராமத்தில் கொளத்தூர் மணியின் புகழ்பாடும் பாடல் பாடிய குற்றத்திற்காக தலைமைச் செயற்குழுவிலேயே தோழர்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டு அந்தப் புகழ்பரப்பும் பாடல் நிறுத்தப்பட்டது.
.
ஆனால் உங்கள் தி.க வில்......
.
துண்டறிக்கைகளில் கூட நீங்கள் சிரித்துக்கொண்டே வாக்கிங் போகும் நேரத்தில் எடுத்த புகைப்படங்கள் அச்சிடப்படுகின்றன. பெரியார் படம் ஸ்டாம்ப் சைசிலும், உங்கள் படம் ஆளுயர படமாகவும் பலவண்ண டிஜிட்டல் பதாகைகளில் இடம்பெறுகின்றனவே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கட் அவுட் கலாச்சாரத் திலும் மூழ்கிக்கிடந்தீர்கள். பல பொதுக்கூட்டங்களில்கூட உங்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்டது. தமிழர் தலைவர் என்ற அடைமொழி இல்லாமல் நீங்களே அறிமுகப்படுத்திய மானமிகு தோழர் என்ற அடைமொழியை பயன்படுத்திய குற்றத்திற்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 2000 மாவது ஆண்டில் ஜாதி ஒழிப்பு மாநாட்டுத் துண்டறிக்கையே தூக்கி எறியப்பட்டு புதிதாக அச்சிடப்பட்டதை நாங்கள் மறக்கவில்லை.
.
உங்கள் படம் அச்சிடப்படாமல் இன்று யாராவது ஒரு தோழர் துண்டறிக்கை அடித்து கூட்டம் நடத்த முடியுமா? டிஜிட்டல் பேனர்களிலும், சுவரொட்டிகளிலும் உங்கள் படத்தை அச்சிடக்கூடாது. பெரியார் படத்தை மட்டுமே அச்சிட வேண்டும் என்று விடுதலையில் அறிவிக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத்தலைவர் வீரமணி அவர்களே! என்று மட்டும்தான் விளித்துப் பேச வேண்டும். வேறு எந்த புகழ் மாலைகளும், ஜால்ராத் தோரணங்களும் கட்டக்கூடாது என அறிவிக்கும் தெம்பு , திராணி, பெரியார்நெறி உங்களுக்கு உண்டா?
.
பெரியார் கொள்கை பரப்பும் பாடல்கள் ஒலிநாடா தேவையென்றால் உங்கள் புகழ்பாடும் ஜால்ராச் சத்தம்தான் கேட்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதனால் உங்கள் முகமூடி கிழிகிறது என்பது உங்களுக்கும் தெரியும் தானே? இந்த யோக்கியதையில் எங்களுக்கு விளம்பர நோக்கம் என்ற குற்றச்சாட்டு நியாயமா?சரி நீங்கள் சொல்வது போல குடி அரசு வெளியிடுவதால் வருமானமும், விளம்பரமும் கிடைக்கும் என்றால் நீங்கள் அதைச் செய்யாமல் இருப்பதேன்? இந்த இரண்டுமே உங்களைக் கவர்ந்த விஷயங்கள் தானே? ஏன் செய்யவில்லை?
.
1983 ஆம் ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் புலவர் இமயவரம்பன் அவர்களது பெரும் முயற்சியால் திருச்சியில் பல பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் 60 பேர் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களில் பெரியார் எழுதியவற்றைத் தொகுத்து கையால் எழுதி, சரிபார்த்து அச்சுக்குத் தயார் செய்தனர். சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதுவரை எந்த பெரியார் இயக்கமும், எந்தப் பெரியார் தொண்டனும் செய்யாத பணியைப் பெரியார் திராவிடர் கழகம் செய்தது. குடி அரசு 1925 வெளியானது. அது வரை குடி அரசை வெளியிடாத நீங்கள் அதன் பிறகாவது பெரியாரியலின் தேவையைப் புரிந்து அச்சுப் பணியைத் தொடங்கியிருக் கலாம். அதன் பிறகு 5 ஆண்டுகள் ஓடிவிட்டன.
.
மொத்தம் 25 ஆண்டுகள் உருண்டோடிய பின் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள் திருச்சி பெரியார் மய்யத் தோழர்கள் மூலம் முழுமையாக எமக்குக் கிடைத்தது. நீங்கள் செய்யத் தவறிய பணியைத்தான் நாங்கள் செய்கிறோம். சப்தமில்லாமல் மனதிற்குள்ளேயே பாராட்டிவிட்டுச் சென்றிருந்தால் வரலாறு உங்களை மன்னித்திருக்கும். எங்கள் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். "வைக்கப் போரை ( வைக்கோல் ) நாய் காத்தது" போல என்று. (வைக்கோலை நாயால் உண்ணவும் முடியாது. உண்ணமுடியாத அந்த நாலுகால் பிராணி, மாடுகள் வைக்கோலைத் தின்ன வந்தாலும் குலைத்து விரட்டி விடுமாம்) அது தான் நினைவுக்கு வருகிறது.
.
உங்களது அடுத்த குற்றச்சாட்டு கொள்கையைத் திரித்து வெளியிட்டு விடுவார்கள் என்பது. இதுதான் உச்சக்கட்ட காமெடி! கொள்கையைப் பற்றியெல்லாம் தி.க வின் தலைவர் பேசக்கூடாது என்பது தமிழ்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும், எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகும்.
.
இதுவரை பெ.தி.க வெளியிட்ட மூன்று குடி அரசு தொகுப்புகளையும் படித்திருப்பீர்கள். அவற்றில் எதாவது ஒரு திரிபுவாதத்தைக் காட்டுங்கள். அல்லது நாங்கள் வெளியிட்ட சிறு நூல்கள் ஏதாவது ஒன்றில் ஏதாவது ஒரு கருத்துமாறுபாட்டைக் காட்டுங்கள். அப்படியே இருந்தாலும் அதைச் சரிசெய்து வெளியிடுங்கள் என அறிவுறுத்தினால் அதுதான் உங்கள் தகுதிக்கு பொருத்தமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, "பெரியார் நூலை அச்சிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என எச்சரித்துள்ளீர்கள்! உங்கள் சட்டப் பூச்சாண்டி யெல்லாம் எங்கள் கெண்டைக்கால் மசுருக்குச் சமானம்.
.
பெரியார் கருத்துக்களைத் திரித்து அவரைக் கொச்சைப்படுத்துவது நீங்கள் தான். உங்களிடமிருந்து பெரியார் கருத்துக்களைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு பெரியாரைச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இப்பணியைத் தொடங்கியுள்ளோம்.
.
அண்மையில் நீங்கள் தமிழர் தலைவர் என்ற நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டீர்கள். அதில் எவ்வளவு கருத்துப் பிழைகள், திரிபு வாதங்கள், தவறான செய்திகள் இருக்கின்றதென்பதை தோழர் புதியவன் திராவிடர் இணையதளத்தில் எழுதி அது பெரியார் முழக்கத்திலும் விரிவாக வந்துள்ளது. இதுவரை நீங்கள் அதற்கு பதில் சொல்லவில்லை.
.
அதற்கு முன்பு 2000 த்தில் விடுதலையில் ஒரு அறிக்கை வெளியிட்டீர்கள். பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கையை அவர் வாழ்ந்த காலத்திலேயே கைவிட்டுவிட்டார் என்ற பித்தலாட்டமான கருத்துத் திரிபை வெளியிட்டீர்கள். அதை மறுத்து அறிஞர் எஸ்.வி.ஆர் அவர்கள் ஒரு தனி நூலே எழுதி வெளியிட்டார். அதற்கும் இன்று வரை பதில் இல்லை.
.
பெரியார் வாழ்ந்த காலம்வரை பெரியார் இயக்கம் என்றாலே அது ஜாதி ஒழிப்பு இயக்கம், பள்ளன், பறையன் கட்சி என்று அழைக்கப்பட்டது. உணர்ந்துகொள்ளப்பட்டது. சேரிகளில் திராவிடர்கழகக் கொடிதான் பறந்தது. ஆனால் உங்கள் காலத்தில்? தி.க என்றால் வெறும் நாத்திக இயக்கம் மட்டுமே என்ற குற்றச்சாட்டுக்கு அல்லவா இலக்காகி இருக்கிறது.
.
மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் வெளிப்படையாகவே இந்தக் குற்றச் சாட்டை வைத்துள்ளார். பல்வேறு தலித் இயக்கங்களும் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இதுதானே நீங்கள் கொள்கையை வளர்த்தெடுத்த இலட்சணம். பெ.தி.க தொடங்கிய காலம் முதல் இன்று வரை எல்லா ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இன்று அனைத்து தலித் இயக்கங்களாலும் தமது சகோதர அமைப்பாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உங்கள் காலத்தில் முறையாகக் கொள்கையைச் சொல்லி யிருந்தால் தமிழ்நாட்டில் இத்தனைத் தலித் அமைப்புகள் உருவாகியிருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை.
.
நாங்கள் குடி அரசு தொகுப்பை அதாவது 1925 லிருந்து 1938 வரை பெரியார் பேசியவற்றை உள்ளதை உள்ளபடி அச்சிட்டு வெளியிட உள்ளதற்கு இவ்வளவு எதிர்ப்பைக் கொடுக்கிறீர்கள். ஆனால் பெரியார் கருத்தை ஆளாளுக்கு கண்டபடி விமர்சனம் செய்து பெரியாரைக் கொச்சைப் படுத்திய போது அறிவுசார் சொத்துரிமை வைத்துள்ள நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
.
சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்கள் பெரியார், தலித்துகளுக்கு விரோதி என எழுதியபோது நீங்கள் செய்த எதிர்வினை என்ன? அவரையெல்லாம் பெரிய மனிதர் ஆக்கக்கூடாது என சாக்கு போக்கு சொல்லிக் கொண்டுதானே இருந்தீர்கள்?
.
சேலம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு மலர் ஒன்றில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் கட்டுரை எழுதிப் பதிவு செய்தானே? எதிர்த்து என்ன செய்தீர்கள்?
.
குஷ்பு அவர்களின் இண்டியா டுடே பேட்டி விவகாரத்தில் பெண்ணியம் குறித்த பெரியாரின் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானபோது தங்களது எதிர்வினை என்ன?
.
மொழி, பண்பாடுகள் தொடர்பான பெரியாரின் கொள்கைகள் குறித்து தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் மணியரசன் அவர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்த போது தங்களது எதிர்வினை என்ன?
.
பெரியாரின் உயிர் மூச்சான திராவிடர் என்ற கருத்தியல் திடீர் தமிழ்தேசிய அமைப்புகளால், புதுப்புது தமிழ்தேசிய தலைவர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட போதெல்லாம் நீங்கள் செய்த எதிர்வினை என்ன?
.
காதலர் தினம் குறித்து பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சியும், தமிழ்ஓசை நாளேடும் நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்த போது பா.ம.க வை எதிர்த்து தாங்கள் செய்த காரியம் என்ன?
.
கலைஞர் அவர்களை இராமதாசு அவர்கள் விமர்சனம் செய்த போது ஓடோடிச் சென்று பதில் கொடுத்தீர்களே, அதே இராமதாசு அவர்கள் காதலர் தினம் குறித்து எதிர்நிலை எடுத்த போது அறிவுசார் சொத்துரிமை வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள்?
.
பாரதீய பார்வட் பிளாக் என்ற அமைப்பின் சார்பில் வெங்கடேசன் என்பவர் ஈ.வெ.இராமசாமியின் மறுபக்கம் என்ற நூல் மூலம் மிகக் கேவலமாக பெரியாரை விமர்சித்த போது தங்களது எதிர்வினை என்ன?
.
எழுத்தாளர் அசோகமித்திரன் தொடங்கி ஜெயமோகன் வரை பெரியாரை விமர்சித்த போது தங்களின் எதிர்வினை என்ன?
.
இவை அனைத்தும் நடந்த போது இப்படியெல்லாம் விமர்சித்தவர்கள் பலர் எமக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதும் அவர்களின் நட்பைத் தூக்கி எறிந்து பெரியாரியல் அடிப்படையில் கடுமையான பதிலடிகளைக் கொடுத்தது பெரியார் திராவிடர் கழகமும், அதன் தோழர்களும் தான்.
.
இப்படிக் கருத்தியல் தளத்திலும் உங்களிடம் பெரும் கோளாறுகள். சரி நடைமுறையிலாவது ஏதாவது கொள்கை கோட்பாடுகளைப் பார்க்க முடிகிறதா என்றால் அதிலும் முட்டைதான்.
.
இப்போது கருவறையில் தமிழனை நுழைய வைத்த தமிழக அரசைப் பாராட்டி வாழ்ந்துகொண்டிருக் கிறீர்கள். அதற்காகப் போராடியது யார்? பெரியார் அறிவித்த கடைசி போராட்டத்தை நடத்தியது யார்? நீங்களா? இல்லையே. மாறாக சுமார் ஆயிரம் தோழர்களுடன் கருவறை நுழைவுப்போராட்டத்தை நடத்தி கைதானது பெ.தி. க. தானே? நீங்கள் நடத்தியது எல்லாம் வேண்டுகோள் அறப்போராட்டங்கள் தானே?
.
கண்டதேவி தேரோட்டத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத ஜாதித்திமிரை எதிர்த்து தி.க கண்ட களங்கள் என்ன?
.
மேலவளவு படுகொலையில் ஆதிக்க சாதிகளை எதிர்த்து தங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
.
திண்ணியத்தில், திண்டுக்கல் காந்திகிராமத்தில், சின்னாளப்பட்டியில், நிலக்கோட்டை பள்ளபட்டியில் தீண்டாமைக் கொடுமைகள் நடந்தபோது தி.க வின் எதிர்வினைகள் என்ன?
.
கோவை காளப்பட்டியில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரும் ஒன்று கூடி தலித்துகளைத் தாக்கிய போது உங்களது எதிர் நடவடிக்கை என்ன?
.
மேற்கு மாவட்டங்களில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை கொடுமைகளுக்கு எதிராக பெ.தி.க களத்தில் நேரடி ஆய்வு , நேரடியாக இரட்டைக்குவளைகளை உடைத்தல் என களமிறங்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் ஐ.ஜி பிரதீப் திலிப் அவர்கள் தமிழகத்தில் எங்கும் இரட்டைக் குவளைகள் கிடையாது. விளம்பரம் தேடும் அமைப்புகள் சில இந்தப் பிரச்சனையைக் கிளப்புகின்றன என அறிக்கை விட்டார். அந்த அறிக்கையை அப்படியே விடுதலையில் வெளியிட்டு மகிழ்ந்தீர்கள். இரட்டைக்குவளை ஒழிப்புக்காக பெ.தி.க போராடிக்கொண்டிருந்த ஒட்டன்சத்திரம் பண்டுகிராமப் பகுதியிலேயே அதே கால கட்டத்தில் கலைஞர் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களையல்லவா நீங்கள் நடத்தினீர்கள்!
.
கோபி பகுதியில் தாழ்த்தப்பட்டோருக்கு திருமண மண்டபங்களில் அனுமதி மறுக்கப்படும் வன் கொடுமைகள் நடந்த போது தி.க வின் எதிர் நடவடிக்கை என்ன?
.
உடுமலை சாளரப்பட்டியில் தேநீர்க்கடைகளில் இருந்த இரட்டைக் குவளை முறையை ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் எதிர்த்ததால் தொடர்ந்து நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்காக தி.க நடத்திய ஆதரவு நடவடிக்கைகள் என்ன?
.
இப்படி கருத்தியலிலும் கோளாறு, எழுத்திலும் எட்டிலும் கோளாறு, நடவடிக்கையிலும் கோளாறுகளைக் கொண்ட நீங்கள் எங்களைப் பார்த்து கொள்கைகளை திரித்துவிடுவார்கள் எனச் சொல்லியது தான் இந்த ஆண்டின் மாபெரும் நகைச்சுவை.
.
நாங்கள் அடித்தட்டு மக்களிடம் பெரியார் கருத்துக்களைக் கொண்டு செல்லப்போகிறோம் என்றவுடன் துடிதுடித்து அறிக்கை விடுகிறீர்கள். ஆனால் அமெரிக்காவிலுள்ள ஃபோர்டு ஃபவுண்டேசனும், யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோவும் குடி அரசு ஏடுகளை மைக்ரோஃபிலிம் முறையில் பாதுகாத்து காப்பிரைட் செய்துள்ளோம் என விளம்பரமும் தந்துள்ளனரே அந்த நிறுவனங்கள் மீதும் வழக்குப் போடுவீர்களா?
.
இது இன்று நேற்று நடக்கவில்லை. 2006 ஆம் ஆண்டே பணிகள் முடிந்து அறிக்கைகள் வந்துவிட்டன.
.
நாங்கள் சின்னாளப் பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்குப் போவதுபோல சென்னைக்கும் சிகாகோவுக்கும் பறந்துகொண்டிருக்கும் உங்களுக்கு - பெரியார் பன்னாட்டமைப்பு நடத்தும் உங்களுக்கு - சோம.இளங்கோவன் அவர்களை வைத்திருக்கும் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ஏன் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
.
கடந்த 2003 ஆம் ஆண்டில் நாங்கள் குடி அரசு 1925 நூலை வெளியிட்ட போது எங்கே தி.க. வினர் தப்பித்தவறி குடி அரசை வாங்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தி.க சார்பில் உலகத்தில் எவனுமே சொல்லாத தத்துவங்கள் அடங்கிய "வாழ்வியல் சிந்தனைகள்" நூலை வெளியிட்டு தோழர்களை விற்பனை செய்யச் செய்தீர்கள். இப்போதும் அதே போல குடி அரசு முழு தொகுப்பும் வெளிவர உள்ள இந்தக் கால கட்டத்தில் "வீரமணி ஒரு வீர விதை" என்ற, உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் புத்தகத்திற்கு விளம்பரம் விடுதலையிலேயே வருகிறது. செப்டம்பரில் நீங்களே வெளியிட உள்ளீர்கள். தப்பித்தவறி தி.க விலுள்ள மிச்சமீதி கொள்கைக் காரர்கள் யாரும் குடி அரசு தொகுப்பை வாங்கிவிடக்கூாதல்லவா? நல்ல அரசியல்! "வீரமணி ஒரு வீரவிதை" நல்ல பெயர்தான். ஒரு திருத்தம். அது உலகமயமாக்கலில் கரைந்து போன - மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டுவிதை. அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை, தன்னை மாற்றியதுமல்லாமல் பெரியாரின் மரபையும் மாற்றத் துணிந்துள்ளது.
.
அறிவு என்பது ஒரு கூட்டத்திற்கே சொந்தம் என்பது ஆரியம், அதை மறுத்து அனைவருக்கும் அறிவைப் பொதுவாக்கச் செய்வதுதான் பெரியாரியம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே, சூத்திரன் வேதத்தைப் படித்தால் அவனது நாக்கை அறுக்கவேண்டும். சூத்திரன் வேதத்தை மனப்பாடம் செய்தால் வாயில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற கட்டுக்களை விதித்தது மனுதர்மம். அதன் மறு உருவாக நகலாகத் தான் இப்போது நீங்கள் எச்சரித்துள்ளீர்கள்.
.
இன்று பெரியாரின் எழுத்துக்களை அச்சிடுவது மட்டும் தான் குற்றம்; நாளை பெரியாரின் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதும்கூட குற்றமாக அறிவிக்கப்படும் நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் பெரியார் திடலில் அனுமதி கேட்டுத்தான் செய்ய வேண்டும்.
.
நான் நாத்திகனாக வாழவேண்டுமென்றால் தளபதி அன்புராஜ் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் நாத்திகனாக வாழமுடியும். சாதி மற்றும் மதச் சடங்குகளை சொந்த வாழ்க்கையில் மறுக்கவேண்டுமென்றால், எதிர்த்து வாழ வேண்டுமென்றால் தளபதி அன்புராஜ் அவர்களின் வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கத்தான் எதிர்க்க வேண்டும் என்ற காலக்கொடுமையெல்லாம் நடந்தே தீரும்.
.
உலகமயமாக்கமும், பார்ப்பன - பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கான சட்டங்களும், உங்கள் குடும்பப் பாசமும் இப்படியெல்லாம் உங்களைப் பேசவைக்கத்தான் போகின்றன.
.
உண்மைப் பெரியார் தொண்டர்கள் இந்த அறிவுசார் சொத்துரிமைக் கூட்டத்தை உடனடியாக கடுமையாக எதிர்த்துப் போராடி இச்சிக்கலுக்கு இப்போதே முடிவு காணாவிட்டால் எமது தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியவை உண்மையாகிவிடும்.
.
அவர் சொன்னதாவது:-
.
பெரியார் திடலில் இரண்டு கல்லறைகள் உள்ளன. ஒன்று பெரியாரின் உடலுக்கு; இன்னொன்று பெரியாரின் கொள்கைக்கு.


- அதி அசுரன்
(atthamarai@gmail.com)
நன்றி: கீற்று இணையதளம்

சனி, ஆகஸ்ட் 16, 2008

காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து !

அசாத்தியமானதைச் செய்ய முனையும் இந்த கொள்கை (வெளியுறவுக் கொள்கை) மிகவும் ஆபத்தானது. இதனால் ராணுவத்துக்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் விபரீத விளைவு என்ன? பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை; நமது நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நாம் பெறும் 350 கோடி ரூபாய் வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 180 கோடி ரூபாயை ராணுவத்திற்காகச் செலவழிக்கிறோம். இது மிகப் பெரிய செலவாகும். இந்த அபரிமிதமான செலவீனம், நமது வெளியுறவுத் துறைக் கொள்கையின் நேரடி விளைவாகும். அவசரத் தேவையின் போது நம் உதவிக்காக நாம் நம்பியிருக்கக்கூடிய நண்பர்கள் எவரும் நமக்கு இல்லை என்பதால், நமது பாதுகாப்புக்கான செலவு முழுவதையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய வெளியுறவுக் கொள்கை சரியானதுதானா என நான் வியப்படைகிறேன்.

பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன: ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை. கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண்விரயம் செய்து வருகிறோம்.

ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு - லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும். எனது பதவி விலகலுடன் பெரிதும் தொடர்புடைய நான்காவது விஷயத்துக்கு இப்போது வருகிறேன். அமைச்சரவை என்பது ஏற்கனவே பல்வேறு குழுக்களால் எட்டப்பட்ட முடிவுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவு அலுவலகமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் சொல்லியது போல, அமைச்சரவை இப்போது குழுக்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறை தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்களையும் அக்குழுவே கையாண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புக் குழுவினரால் சரி செய்யப்படுகின்றன.

அமைச்சரவையின் உறுப்பினர்கள் இக்குழுக்களால்தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் எந்தக் குழுவிலும் நான் இல்லை. இரும்புத் திரைக்குப்பின்னால் அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு முக்கிய உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் கொள்கையை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் எந்த வாய்ப்புமின்றி, கூட்டுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஓர் முரண்பாடான நிலையாகும்.

பதவி விலக வேண்டும் என்ற முடிவுக்கு நான் வர என்னை இறுதியாக இட்டுச்சென்ற ஒரு விஷயம் குறித்து இப்போது கூறுகிறேன். இந்து சட்டத் தொகுப்பிற்கு நேர்ந்த கதிதான் அது. 1947 ஏப்ரல் 11 அன்றுதான் இந்த சட்டத்தொகுப்பு வரைவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நான்காண்டு காலம் உயிரோடிருந்தது. அதன் நான்கு சட்டக் கூறுகள் ஏற்கப்பட்ட பின்னர் அது கேட்பாரின்றி செத்து மடிந்தது.

-பி. ஆர். அம்பேத்கர்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 14(2), பக்கம் : 1322)

நன்றி: தலித்முரசு, ஜூன்-2008 & www.keetru.com

பெரியாரை பெரியார் திடலில் கைது செய்கிறாரா கி.வீரமணி?

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935-ல் உருவாக்கப்பட்டு, 1952-ல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவற்றை அச்சில் வெளியிட்டு விளம்பரமும் வருவாயும் தேடத் தனிப்பட்ட சிலரும் சில இயக்கங்களும் பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரியவருகிறது! அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.' - ஒரு முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகச் செயலர் கி. வீரமணி பெயரில் விடுதலை ஏட்டில் வெளிவந்துள்ள இந்த விளம்பரம் தமிழகத்தில் பெரியார் பற்றாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


பெரியார் சொற்களிலேயே கூற முயன்றால், இப்படியொரு பூனை என்றாவது குதித்தோடி வெளியே வரும் என்பதால்தான் பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்றொரு கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் தலைவர்கள், எழுத்தாளர்கள் என எத்தனையோ பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி மக்களுக்குப் பொதுவாக்கிப் பெருமைப்படும் தமிழக அரசு, பெரியார் விஷயத்தில் மட்டும் கண்டும் காணாமலேயே நடந்துகொண்டு வருகிறது. இத்தனைக்கும் பெரியாரின் பெயரைச் சொல்லித்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் தமிழகத்தை ஆண்டுவருகின்றன.

பெரியாரை முழுவதுமாகவும் முறையாகவும் பயிலக் கூடியதாகத் தற்போது நல்ல நூல்கள் எதுவும் இல்லை. 1970களின் தொடக்கத்தில் 2200_க்கும் அதிகமான பக்கங்களில் மூன்று தொகுதிகளாகச் சிந்தனையாளர் கழகத்தால் வெளியிடப்பட்ட `பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்' என்ற நூல் மட்டுமே குறிப்பிடத்தக்கது. தற்போது மிக அபூர்வமாகச் சிலரிடமே இருக்கும் இந்த நூலும் பார்க்கக் கிடைத்தாலே பெரிய விஷயம்.

1924 தொடக்கம் பெரியாரின் பேச்சும் எழுத்தும் அச்சில் வரத் தொடங்கியுள்ளன. நவசக்தி, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, குடி அரசு, விடுதலை, திராவிடன், ஜஸ்டிஸ், உண்மை, மாடர்ன் ரேஷனிஸ்ட், சண்டமாருதம், புதுவை முரசு, நகரதூதன், திராவிட நாடு, தனி அரசு, பொன்னி உள்பட பல இதழ்களில் அவருடைய எழுத்துகள் வெளிவந்திருக்கின்றன. ஏராளமான சிறுநூல்கள், சுமார் 80 ஆண்டுகளாக, அவர் இருந்தபோதும் இறந்தபிறகும் வந்திருக்கின்றன. ஆனால், இவற்றில் மிகக் குறைந்த அளவே பிறகு சிறந்த நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.பெரியாருடைய கருத்துநிலைகளேகூட காலந்தோறும் புதுப்புது மாற்றம் கண்டுவந்திருக்கின்றன. ஆண்டு வரிசைப்படி இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, வாசிக்கக் கிடைத்தால் அவரை அனைவரும் செம்மையாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.

மகாத்மா காந்தியின் பேச்சுகளும் எழுத்துகளும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை நூறு தொகுதிகளாகக் குறைந்த விலையில் ஆங்கிலத்தில் மத்திய அரசின் வெளியீட்டுத் துறை வெளியிட்டிருக்கிறது. மராட்டிய அரசின் முயற்சியில் அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் விவாதங்களும் ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் பிற மொழிகளிலும் பெயர்த்து வெளியிடப்படுகின்றன. இதன் 38 தொகுதிகள் தமிழிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவற்றைப் படித்தால், மகாத்மாவையும் அம்பேத்கரையும் படிக்க வேறெதையும் தேட வேண்டியதில்லை.

பெரியாருடைய பேச்சும் எழுத்தும் மட்டும் சுமார் எழுபத்தைந்தாயிரம் பக்கங்கள் இருக்கும். இவை ஏறத்தாழ நாற்பது இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் இவையெல்லாம், பெரியார் திடல் உள்பட எங்கெங்கோ விரவிக் கிடக்கின்றன என்று பகுத்தறிவாளர்கள் குறிப்பிடுகின்றனர். எழுநூற்றைம்பது பக்கங்கள் வீதம் நூறு தொகுதிகளில் முழுத் தொகுப்பையும் கொண்டுவருவதென பெரியார் மறைவுக்குப் பின், 1976_ல் தஞ்சையில் நடந்த பெரியார் சுயமரியாதை இயக்கப் பொன்விழாவின்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

1983-ல் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டது மட்டுமே பதினைந்தாயிரத்து எண்ணூறு பக்கங்கள். தொகுத்து 25 ஆண்டுகளாக `ஊறவைக்கப்பட்டிருக்கும்' இவற்றைத்தான் தற்போது முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் வெளிக்கொணரப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்துதான் திராவிடர் கழகத்தின் `விடுதலை' நாளிதழில் முதல் பாராவிலுள்ள அறிவிப்பு.

இரு ஆண்டுகளுக்கு முன், பெரியார் பேச்சையும் எழுத்தையும் நாட்டுடைமையாக்குவதுடன் கால வரிசைப்படித் தொகுத்துப் பதிப்பிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, `அப்படியென்றால் பெரியார், யார் உடைமை?' இன்னமுமா, நாட்டுடைமையாக்கப்படவில்லை?' என்ற வியப்பே பலரிடமும் மேலோங்கியது. தொடர்ந்து, பல்வேறு இதழ்களிலும் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அரசோ கடைசி வரையிலும் எதுவும் தெரியாதது போலவே மௌனம் காத்தது.

பெரியாரின் பேச்சையும் எழுத்தையும் நாட்டுடைமையாக்க தமிழக அரசு முன்வருமேயானால், பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் நிச்சயம் அதற்குத் தடையாக இருக்காது; கைமாறாகப் பெரும் பணத்தைக்கூட எதிர்பார்க்காது. சென்னையில் வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் பகுத்தறிவாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதத்தில் முதல்வர் கலைஞர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள் பெரியார் பற்றாளர்கள். (பெரியார் எழுத்துகளை அரசுப் பயன்பாட்டிலும் கல்விக்கூடங்களிலும் கொண்டுவந்தது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். என்பது இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கது.)

பெரியாரின் சொத்துகளுக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். அவருடைய கருத்துகளுக்குமா?
....................
`விடுதலை' ஏட்டில் வெளியான அறிவிப்பு குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகத் தலைவர்):
``வீரமணியின் இந்த அறிவிப்புக்குக் காரணம். வரும் செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் குடி அரசு இதழைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கிவிட்டோம். இதனால் எதிர்காலத்தில் தனக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்று அஞ்சித்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டவர் பெரியார். ஆனால், அவரைப் பற்றிச் சொல்லக்கூடிய மிகப் பெரிய புத்தகங்கள் இல்லை. எனவேதான், 1925-ம் ஆண்டில் இருந்து 49-ம் ஆண்டு வரை வெளிவந்த குடி அரசு இதழில், 38-ம் ஆண்டு வரையிலான இதழ்களைத் தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்நிலையில், வீரமணியின் அறிவிப்பு வினோதமாக உள்ளது. வழி வழியாக வந்த தனது சொத்துக்களை மக்களுக்காகக் கொடுத்தவர் பெரியார்.

73-ம் ஆண்டு பெரியார் இறக்கும் தறுவாயில் அவரிடம், `உங்களின் அடுத்த வாரிசு யார்?' என்று கேட்டதற்கு, `எனது கொள்கையும், கருத்தும்தான் வாரிசு' என்றார். குடி அரசு இதழில் வெளியான கருத்துக்களுக்கு `நாங்கள்தான் வாரிசு' என்று உரிமை கொண்டாடுவது எப்படிச் சரியாகும்? அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் பெரியாரின் கருத்துக்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது லாப வெறி நோக்கத்தைத்தான் காட்டுகிறது. பெரியார் ஒருபோதும் தன்னுடைய கருத்துக்களுக்கு காப்புரிமை வைத்தது கிடையாது.'''

கு.ராமகிருட்டிணன்(பெரியார் தி.க பொதுச் செயலாளர்) :

"குடி அரசு இதழைத் தொகுத்து வெளியிட கடந்த 26 வருடங்களாக வீரமணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்த தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து ஒரு பிரதியைப் பெற்று நாங்கள் வெளியிடுகிறோம். வே.ஆனைமுத்து தொகுத்ததைத் தவிர, இதுவரை பெரியாரைப் பற்றி வெளிவந்தது எல்லாமே ஐந்து ரூபாய், பத்து ரூபாய் புத்தகங்கள்தான். பெரியார் தன்னுடைய கருத்தை எப்பொழுதுமே பெட்டிக்குள் வைத்துப் பூட்டியது இல்லை. பெரியாரின் கருத்துக்கள் மக்களிடம் பரவலாகப் போய்விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் வீரமணி. எல்லாத் தலைவர்களின் நூல்களும் அரசுடைமையாக்கப்படும்போது, பெரியாரின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுவதைத் தடுத்தவர்தான் வீரமணி. தற்போது இவர் கொடுத்த அறிவிப்பால், நாளை பெரியாரின் சிறு புகைப்படத்தைக் கூட யாரும் வெளியிட முடியாத சூழல்தான் நிலவும். இவர் நீதிமன்றத்தில் தொடுக்கப் போகும் வழக்குக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.''

வழக்கறிஞர் குமாரதேவன்(பெரியார் தி.க ஆட்சிமன்ற உறுப்பினர்):

``25-ம் ஆண்டு குடி அரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகளுக்கு இவர்கள் காப்புரிமை எதையும் வாங்கவில்லை. 52_ம் ஆண்டு அறக்கட்டளையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில், 2001-ம் ஆண்டு சட்டப்படியாக வந்த அறிவுசார் சொத்துடைமைக்குள் இவை அடங்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? பெரியாரின் கொள்கையைப் பரப்ப இவருக்கு மட்டும் லைசென்ஸ் கொடுத்தது யார்? இவர்தான் ஒரே வரிசா? நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை.'''

பேராசிரியர் நெடுஞ்செழியன் (குடி அரசு இதழைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர்):

``தஞ்சை தோழர் ரத்தினகிரி தலைமையில் நாற்பது பேர் 1982-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் திருச்சி காஜாமலை பெரியார் மணியம்மை பள்ளி வளாகத்தில் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம் உழைத்து அவற்றைப் பிரதியெடுத்தோம். எழுதியவர்களுக்கான உணவுச் செலவை அந்தக் கல்வி வளாகத்தின் செயலாளரான புலவர் இமயவரம்பன் ஏற்றுக் கொண்டார். எழுதுபொருள், மை, கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாள் ஆகியவற்றுக்கான செலவை ரத்தினகிரி ஏற்றுக் கொண்டார். இதற்காகத் தனது பொதுவைப்பு நிதியில் இருந்து அவர் செலவு செய்தார். ஏறத்தாழ 15,835 பக்கங்கள் அப்படி எழுதப் பெற்றன. நண்பர் ரத்தினகிரியும், தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் என்ன நோக்கத்திற்காக இவ்வளவு பெரிய இழப்புகளை ஏற்றுக் கொண்டார்களோ, என்னைப் போன்றவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பாடுபட்டோமோ அந்த நோக்கங்கள் தடைபட்டுப் போய்விடக் கூடாது.''

தஞ்சை ரத்தினகிரி (குடி அரசைத் தொகுத்தவர்களில் ஒருவர்):

``பெரியாரின் கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்த நூற்றாண்டுக்கு, உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான கருத்து. இன்றைக்கு நிலவும் அமைதியற்ற சூழலில் இந்தக் கருத்துக்கள் தேவை. சுதந்திரம் என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் அச்சத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும். அந்த அச்சத்தை நீக்கிய வாழ்வு என்பதுதான் பெரியாரியல். அதைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பதால்தான் எழுதினோம். அதற்கு வாய்ப்பு அமையவில்லை. இப்போது (கொளத்தூர்) மணி அதைச் செய்கிறார். அதற்குத்தான் வீரமணி அப்படிச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும், மணி அதைக் கொண்டு வந்துவிடுவார் என்று நினைக்கிறேன், விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன். இது ஓர் அறிவுசார் இயக்கம். அறிவுசார் இயக்கத்தில் அறிவுக்குத் தடை இருக்கக்கூடாது. ஆனால், என்ன செய்வது? அந்த மாதிரி ஆகிவிட்டது. பெரியார் இயக்கத்திலேயே எத்தனை விதமான பிளவுகள்? உலக மனித சமூகம் ஒருமைப்பட வேண்டும் என நினைத்தவர் பெரியார். அதனால் அந்தப் பிளவுகள் நீங்கி, பெரியார் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.''

விடுதலையில் வெளியான அறிவிப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விடை தேடி பெரியார் திடலுக்குச் சென்றோம். நாம் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை நேரடியாகச் சந்தித்தோம். நமது கேள்விகளை முன் வைப்பதற்குள்ளாகவே, "பத்திரிகையில் கொடுத்த அறிவிப்பிலேயே எல்லாம் இருக்கிறது. நான் யாரையுமே அப்பாயின்மெண்ட் கொடுத்துவிட்டுத்தான் சந்திப்பது வழக்கம். இந்த அறிவிப்பைப் பொறுத்தவரையில் நான் எதையும் சொல்ல முடியாது. சட்டப்படியாகவே எல்லாம் நடக்கும். நீங்கள் கிளம்பலாம். வேறு எதுவும் பேச முடியாது'' என்றதோடு வழியனுப்பி வைத்தார்.

அங்கிருந்து கிளம்ப எத்தனிக்கையில் நமக்குத் தோன்றியது பெரியாரின் வாசகம் ஒன்று. `இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ? இந்தப் பணியை யாரும் செய்ய முன்வராததால், நான் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்'.

இதை பெரியார் தொண்டர்களும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

-பாண்டியராஜன்
நன்றி: குமுதம் ரிப்போர்டர், 21-08-08

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2008

வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவன்தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா!

ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா?

இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

இது அபிநவ் பிந்த்ரா என்ற தனியொரு பணக்கார இளைஞனின் வெற்றி. ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை.

துப்பாக்கி சுடுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு. அபிநவ் பயன்படுத்தும் துப்பாக்கியின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய்கள். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மிக நவீனமான துப்பாக்கிகளுடன் அபிநவ் பயிற்சி செய்வதற்காக சொந்தத்தில் வைத்திருக்கும் பயிற்சிக்கூடம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. அபிநவ்வின் அப்பா முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கென்றே உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலை நடத்துகிறார். `அபிநவ் இன்' என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஓட்டலை டேராடூனில் கட்டி வருகிறார். அதை மகனுக்கு ஒலிம்பிக் சாதனைக்கான பரிசாக தரப் போகிறார்.

அரசு அளித்த பயிற்சியாளரும் பயிற்சியும் சுமார் என்று ஒதுக்கிவிட்டு தன் சொந்த செலவில் பயிற்சியெடுத்துக் கொண்டவர் அபிநவ். எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ?

இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது? துப்பாக்கி சுடுவது முதலில் ஒரு விளையாட்டா என்பதே யோசிக்கப்பட வேண்டும்.

அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை. பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..
.................
காங்கிரசுடன் தி.மு.க உறவு நீடித்தால் நாங்கள் தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று தமிழகத்தில் இடதுசாரிகள் அறிவித்திருக்கிறார்களே?

தவறான அறிவிப்பு. காங்கிரசுடன் தி.மு.க உறவை முறித்துவிட்டால் மட்டும் ஆதரிப்பார்களா? மாநிலங்களவையில் கனிமொழியின் முதல் பேச்சே ஒப்பந்தத்தை ஓஹோ என்று ஆதரித்துப் பேசியதுதானே? அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டியதை எதிர்த்து ஆதரவைத் திரும்பப் பெற்ற இடதுசாரிகள், அந்த ஒப்பந்தத்தையும் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ விடாமல் காப்பாற்றிய கட்சிகளில் தி.மு.க.வும் ஒன்றல்லவா? எனவே அணு ஒப்பந்தத்தை ஆதரித்த, காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்த எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் சேரமாட்டோம் என்று அறிவிப்பதுதான் நேர்மை.

அதன்படி, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் இடதுசாரிகள் சேரமுடியாது.

பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்தவர்கள் அல்ல. தாங்கள் ஆட்சிக்கு வந்து அதை நிறைவேற்றவேண்டுமென்று விரும்புகிறவர்கள். எனவே அவர்களுடன் சேரக் கூடாது.

முதல்முறையாக இடதுசாரிகள் தமிழகமெங்கும் 40 எம்.பி தொகுதிகளிலும் 234 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, நிஜமான மூன்றாவது அணியாகத் தங்களை அடுத்த 20 வருடங்களில் வளர்த்துக் கொள்ளவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்காக முழுமூச்சாகப் போராடவும் நல்ல வாய்ப்பு இப்போதுதான் வந்திருக்கிறது. நிச்சயம் இதை அவர்கள் தவற....விடுவார்கள்!
............................
மதவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வராமல் தடுக்க, மறுபடியும் பாபர் மசூதி இடிப்பு ஏற்படாமல் தடுக்க, தொடர்ந்து தங்கள் அணியில் இருக்கும்படி கம்யூனிஸ்ட்டுகளை கலைஞர் வேண்டிக் கொண்டிருக்கிறாரே?

மதவாத எதிர்ப்பு பற்றிப் பேசும் அருகதையற்றவர் கலைஞர் கருணாநிதி. பாபர் மசூதியை அத்வானி தலைமையில் ஒரு மத வெறிக் கூட்டம் போய் இடித்த சம்பவம் நடந்த பிறகுதான், பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டு வைத்துக் கொண்டது. குஜராத்தில் மோடி அரசின் ஆதரவுடன் நடந்த முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் பற்றி மழுப்பலாகக் கருத்து தெரிவித்தவர் கருணாநிதி.

கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களான வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும் அரசின் கிராமப் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களாகத் தொடர்ந்து நியமித்து வருவதும் கருணாநிதிதான். அதே ஆர்.பி.வி.எஸ்.மணியன் அண்மையில் குடந்தை ராமர் கோயிலில் `ஆன்மிக' சொற்பொழிவில், தசரதனைப் போல வயதானதும் ஓய்வெடுக்காமல் இருக்கும் அரசியல்வாதி என்று மறைமுகமாக கலைஞரைத் தாக்கிப் பேசினாலும், சுரணையில்லாமல் இருப்பவர் கருணாநிதி.

நான் சொன்னால் ஒரு லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், `என் மனசாட்சியே ஞாநிதான்' என்று அறிவித்துவிடக் கூடியவர் அவர். மதவாத எதிர்ப்புப் பேச்சுகள், பகுத்தறிவுப்பேச்சுகள், `கடவுளை நான் ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நான் இருக்கிறேனா என்பதே முக்கியம்` என்பது போன்ற வழவழா பக்திப் பேச்சுகள், எல்லாமே அவருடைய சுயநல அரசியலின் முகமூடிகள்.
...................................
டி.எம்.எஸ்.சுக்கு நடத்திய பாராட்டு விழா பாராட்டுக்குரியதுதானே?

டி.எம்.எஸ்.சுக்கு எங்கே பாராட்டு விழா நடந்தது? கருணாநிதியின் மகன் அழகிரியின் வலிமையைக் காட்டுவதற்காகவும், மதுரையில் கணிசமாக இருக்கும் டி.எம்.எஸ் பிறந்த ஜாதியினரின் ஓட்டுகளை அழகிரிக்கு சார்பாக இழுக்கவும் நடத்தப்பட்ட விழாதானே அது. தி.மு.க.வினரால் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் போராளி லீலாவதியும் டி.எம்.எஸ். ஜாதியில் பிறந்தவர்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு நிகரான கோஷ்டித் தகராறுகள் நிறைந்த கட்சி இன்று தி.மு.கழகம்தான். ஒரே வித்தியாசம் தி.மு.கவின் எல்லா கோஷ்டிகளும் ஒரே குடும்பத்துக்குள்ளேயே இருக்கின்றன. அந்த வாய்ப்பைக் கூட அவர்கள் கட்சியில் மற்றவர்களுக்குத் தருவதில்லை.

குடும்பத்துக்குள் இருக்கும் கோஷ்டிகள் எல்லாவற்றையும் சமாதானப்படுத்துவதுதான் கலைஞர் கருணாநிதியின் ஹோம் ஒர்க்காக இருக்கிறது. ஸ்டாலினுக்காக ஒரு இளைஞர் மாநாடு; கனிமொழிக்காக ஒரு மகளிர் மாநாடு நடத்தினால், அழகிரிக்காக ஒன்றை ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதிலே அழகிரி தன் மகள் கயல்விழியை முன்னிறுத்தினால், அடுத்து குடும்பத்தில் வெடிக்கக்கூடிய கோபங்களைச் சமாளிக்க, நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கனிமொழி மகன் ஆதித்தன் தலைமையில் குழந்தைகள் மாநாடு நடத்தினாலும் வியப்படைய வேண்டாம்.

`நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்' என்று வாடிக்கையாகப் பேசுவது போல `நானும் இன்னும் ஒரு குழந்தைதான்' என்று இலக்கிய நயத்துடன் ஒரு சொற்பொழிவையும் எதிர்பார்க்கலாம்.

டி.எம்.எஸ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சிவாஜி கணேசன் போன்ற திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜய்காந்த் என்று எல்லா கட்சித்தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி அவர்களைப் பாராட்டினால் மட்டுமே அது சரியான பாராட்டு.

-ஞாநி
நன்றி: குமுதம், 20-08-08

இந்திய சுதந்திரத்தின் குறிக்கோள்!

ஆயிரம் ஆண்டுகளாக தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத நாடு, 1947 ஆகஸ்டு 15இல் சுதந்திர நாடாக வெளிப்பட்டது. ஆண்டுதோறும் அந்த நன்னாளை இந்திய வரலாற்றின் பொன்னாளாகக் கொண்டாடுகிறோம்.

விடுதலை விழாவை நாம் கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களை, நாடு ஒளிபெற இருண்ட வெஞ்சிறைகளில் வீழ்ந்து கிடந்த மேலோர்களை, உருண்டு வரும் செக்கடிகளில் சுருண்டு மடிந்த நல்லோர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு தாய்நாடு திரும்பாமல், விடுதலை பெறும் நன்னாளைக் காண முடியாமலே அங்கேயே புதைகுழிகளில் அடங்கிவிட்ட தியாக சீலர்களை நாம் நினைவு கூர வேண்டும். வாழ்த்தி வணங்க வேண்டும்.

குதூகலத்துடன் கோலாகலமாக விடுதலை நாளைக் கொண்டாடும்பொழுது தியாகத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், எத்தகைய குறிக்கோள்களுக்காக சுதந்திரத்தைப் பெற தியாகிகள் பாடுபட்டார்களோ அந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும் தற்பொழுது நமக்கு இருக்கிறது.

அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறுவது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினம் விடுதலை பெற்ற நாடு மீண்டும் அடிமைப்படாது இருக்க பாடுபடுவதாகும்.

1947 ஆகஸ்டு 15ஆம் நாளன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மக்களுக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்:

""எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் எங்கு போகிறோம்; எப்படிப்பட்ட செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பவை குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் பெற்ற சுதந்திரத்தை சுதந்திரம் தரும் வாய்ப்புகளை, பஞ்சத்திலும், அறியாமையிலும், நோய்நொடிகளிலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்குப் பயன்படுமாறு நாம் செயல்பட வேண்டும். வளமான, முற்போக்கான, ஜனநாயக முறையை அவர்களுக்கு நாம் தர வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவருக்கும் சமுதாய, பொருளாதார நீதிகள் முறையாகக் கிடைக்க நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.''

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த மாமனிதர் மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, 1948 ஜனவரி கடைசிவாரத்தில் பின்வருமாறு எழுதினார்:

""இந்தியாவின் அரசியல் விடுதலையைக் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மேற்கொண்டு பொருளாதார, சமுதாய நேர்மை உணர்வு ஆகியவற்றில் இந்திய மக்களுக்குத் தேவையான விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. அரசியல் விடுதலையைவிட மேற்குறிப்பிட்டவைகளுக்காக நாம் நடத்த வேண்டிய போராட்டம் கடுமையானதாக இருக்கும். காங்கிரஸ் கட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் வீணான போராட்டங்களில் ஈடுபட்டால், திடீரென ஒரு நாள் அக்கட்சி ஒன்றுமே இல்லாமல் போய்விடும். எனக்கு போதிய நேரமும், உடல்நலமும் இருந்தால் இது குறித்து தேசத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நான் கலந்தாலோசிக்கப் போகிறேன்''.

அவர் எழுதிய இந்தக் குறிப்பு 1948 பிப்ரவரி 1 "ஹரிஜன்' இதழில் வெளிவந்தது. ஆனால் அதற்குள் காந்தியடிகள் மறைந்துவிட்டார்.

காந்தியார் மறைந்துவிட்ட பிறகு, அவர் சொல்லிய அறிவுரைகளும் மறைந்துவிட்டன. அதற்குப் பின் வந்த காங்கிரஸ் கட்சியினரும் அவற்றை மறந்துவிட்டனர்.

தற்பொழுது எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் முக்கிய காரணம் மகாத்மா அச்சப்பட்டபடி அதிகாரங்களைக் கைப்பற்றும் போராட்டம்தான் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. காந்தியார் வகுத்த அரசியல், தியாகத்தின் இருப்பிடமாக இருந்தது. நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்தது. தற்பொழுது அரசியல் என்றாலே சாதாரண மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

உலக அரங்கில் மற்ற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்குவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் முனைந்து திட்டமிடுகிறார்கள். ஆனால், இந்திய மக்களுக்கு ஒரு நல்லரசைத் தர கடந்த அறுபத்தோரு ஆண்டுகளில் தவறிவிட்டனர்.

சுதந்திர இந்தியாவில் போடப்பட்ட பல்வேறு சட்டங்கள், திட்டங்கள், தீர்மானங்கள் எல்லாம் வெறும் ஏட்டளவில் நின்றனவே தவிர, நாட்டு மக்களுக்கு நிலையான வளர்ச்சியைத் தரவில்லை. நாட்டின் வருமானமாகப் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பட்டியல்கள் தரப்படுகின்றன. அத்தகைய வளர்ச்சி லட்சாதிபதிகளை கோடிசுவரர்களாக, கோடிசுவரர்களை உலகக் கணிப்பில் பில்லியனர்களாக ஆக்கவே பயன்பட்டது. ஆனால் ஏழைகள் பரம ஏழைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். கிடைத்த வளர்ச்சி சரியான முறையில், நீதியான வகையில் பங்கிடப்படவில்லை.

இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக கிராம சுதந்திரம் இருக்க வேண்டும் என்று காந்தியார் வலியுறுத்தினார். கிராமப்புறத்தின் அடிப்படையாக இருப்பது விவசாயம். கடந்த 61 ஆண்டு இந்திய வளர்ச்சியைப் பார்த்தால் பயிர்த்தொழில் தான் மிகவும் பரிதாபகரமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைந்தபொழுது விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 70 சதவிகிதமாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத் துறைக்கான பங்கு 60 சதவிகிதமாகவும் இருந்தன. மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள 2007 08ஆம் ஆண்டு பொருளாதாரக் கணிப்பின்படி தற்பொழுது 52 சதவிகிதம் உள்ள விவசாய உழைப்பாளிகளுக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் 18.5 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இந்த நிலைமையில் கடன்படாமல், தூக்குக்கயிற்றைத் தேடாமல் விவசாயி எப்படி இருப்பான்? கடன்படாத நிலைமைக்கு விவசாயத்தை வளர்த்துவிட, அரசாங்கம் கடந்த அறுபது ஆண்டுகளில் தவறிவிட்டது.

சுதந்திர இந்தியாவின் அடிப்படைச் சட்டத்தில் பத்து ஆண்டு காலத்திற்குள் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு முழுமையான கட்டாய இலவசக் கல்வி தருவதாகக் கூறப்பட்டது. 61 ஆண்டுகள் கழித்தும் இன்றளவில்கூட அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் பற்று வரவுக் கணக்கு நன்றாக இல்லை. நாட்டின் வரவுக்கணக்கு ஆண்டுதோறும் அதிகமானால்கூட, எழுதிவைத்த "பத்து ஆண்டு'க் கணக்கை ஆளவந்தவர்கள் மறந்துவிட்டனர். கிராமப்புற மக்களைப் பற்றி பற்றற்ற கணக்குத்தான் இப்பொழுது இருக்கிறது.

2004இல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 6 சதவிகிதமும், சுகாதாரத் துறைக்கு 2 3 சதவிகிதமும் தரப்படும் என்று வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் கடந்த நான்காண்டு காலத்தில், மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுத் திட்டங்களை மொத்தமாகப் பார்த்தால், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 2.88 சதவிகிதத்துக்கு மேற்பட்டு எந்த ஆண்டிலும் செலவிடப்படவில்லை.

அதேபோல், சுகாதாரத் துறைக்கு 1.39 சதவிகிதத்துக்கு உட்பட்டுத்தான் செலவு விகிதம் வந்திருக்கிறது.

கல்வி அறிவு தரப்படாமல், உடல் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல், உழுபவனுக்கு உண்ண உணவில்லாமல், உழைப்பவனுக்கு வாழ்வு இல்லாமல், உலகில் பலவகைகளில் வளம் மிக்க நாடான இந்தியாவில் வறுமை மிக்க மக்கள் பெரும்பாலாக இருப்பதுதான் இன்றைய நிலைமை.

ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் சமுதாய நீதியையும் காப்பாற்ற, அதிகாரம் மிக்க நிர்வாகம் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கிய அரசியல் அமைப்பு மட்டும் போதாது. மக்களின் தொடர்ந்த கண்காணிப்புதான் நாட்டில் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நிலைபெறச் செய்யும். தனிப்பட்டு ஒவ்வொரு குடிமகனையும் வளர்த்திடப் போடப்படும் மனிதவள முதலீடுதான் நாட்டின் மிக முக்கிய முதலீடாக இருக்க வேண்டும்.

நாட்டின் மண் வளத்தை மக்களின் வாழ்க்கை வளமாக மாற்றிட ஏற்றப்பட்ட சுதந்திர தீபம் என்றும் அணையாது ஒளிவிட, சுதந்திர நன்னாளில் மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் குரலுக்கு நாடாளும் மகேசர்கள் அடிபணியும் காலம் பிறக்கும்!

-இரா. செழியன்
நன்றி: தினமணி, 14-08-08

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

கடவுளால் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!

எலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.

மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு புகையால் க்ளோபல் வார்மிங் என்று பூமியே அநியாயத்துக்குச் சூடாகிக் கொண்டிருக்கிறது. வட துருவத்தின் மூவாயிரம் வருடம் பழைமையான ஐஸ் மலையெல்லாம் இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் மெல்ல "க்ராக்" விட ஆரம்பித்து எட்டே வருடத்தில் துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது. எங்கோ இமய மலைக்கு வடக்கே நடப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாள் கடல் உள்ளே புகுந்து மயிலாப்பூர் போய்விடும். மாலத்தீவு முழுகிவிடும். மழை பொய்க்கும். பயிர் அழியும். இன்னும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் அத்தனை உற்பாதங்களும் நேரும். இந்த அழிவிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டே வழிதான் இருக்கிறது.

1. சைக்கிளில் போகலாம்.
2. மரம் வளர்க்கலாம்.

மரங்கள் ஏராளமான கார்பனை உறிஞ்சிக் கொண்டு காற்றைச் சுத்தப்படுத்த வல்லவை.

இதற்காக பெங்களூருவில் பத்து லட்சம் விதைப் பந்துகள்' (www.millionseedballs.org) என்று ஓர் இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பானிய இயற்கை விவசாய குருவான ஃபுகுவோகா கண்டுபிடித்த ஐடியா இது. சின்னக் களிமண் உருண்டைகளுக்குள் ஒரு மரத்தின் விதை, கொஞ்சம் இயற்கை உரம் இவற்றை வைத்து மூடி எங்காவது திறந்த வெளியில் கொண்டு போய் இறைத்து விடுவார்கள்.

மழைக்காலம் வரும்வரை குருவி, எறும்பு முதயவற்றிடமிருந்து தப்பி மண் உருண்டைக்குள் பாதுகாப்பாக உறங்கும் விதை, மழையில் களிமண் கரைந்ததும் இயற்கையாக முளைக்க ஆரம்பிக்கும். இறைத்தவற்றில் முக்கால்வாசி வீணாகிவிட்டால் கூட பூமிக்கு இரண்டரை லட்சம் புதிய மரங்கள் கிடைக்குமே. செலவே இல்லாத சுலப முறை. கர்நாடகத்தின் என்ன என்னவோ ஹள்ளிகளில் எல்லாம் ஆயிரக் கணக்கில் இவர்கள் இட்ட வேம்பும் வாகையும் நெல்லும் பூவரசும் அடுத்த மழைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன.

ஆனல் இதில் முக்கியமான பிரச்னை, பத்து லட்சம் உருண்டைகள் பிடிக்கப் பல ஆயிரம் கைகள் தேவைப்படும். இதற்காக பள்ளிப் பிள்ளைகள், போலீஸ்காரர்கள், சாப்ட்வேர் இளைஞர்கள் என்று பல தரப்பினரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஷாமியானா போட்டு கல்யாணப் பந்தி மாதிரி கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மண் லட்டு செய்கிறார்கள். ஒரே அரட்டை, பாட்டு, கும்மாளம்! ஐம்பது நூறு பேரைக் கூட்டி வைத்து மண் உருண்டை பிசைவதை ஒரு தமாஷான பொழுது போக்காக மாற்றிய மார்க்கெட்டிங் மூளைக்கு சலாம் போட வேண்டும். சின்ன வயசிலேயே எல்லோருக்கும் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆசை இருந்தாலும் நம் தாய்மார்கள் குறுக்கிட்டு முதுகில் இரண்டு சாத்து சாத்தி இழுத்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டார்கள். அன்றைய ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இந்த இயக்கம்.

சாமானிய மனிதர்கள் ஒன்று கூடி முனைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாடு நல்ல உதாரணம். நாட்டில் பாதி சஹாரா பாலைவனம். தொண்ணூறு லட்சம் சதுர கிலோ மீட்டர் ராட்சசன். அக்கம்பக்கத்து விளை நிலங்களையெல்லாம் விழுங்கி கான்சர் மாதிரி வளர்ந்து கொண்டிருந்த பாலை வனம். தங்கள் கண் முன்னே வயல்களெல்லாம் மணல் குன்றுகளாக மாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஏழை விவசாயிகள் மனம் உடைந்தார்கள். ஒரு தலை முறையே தங்கள் கிராமங்களைக் காலி செய்துகொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் கடைசி முயற்சியாக அவர்கள் ஒன்று கூடிப் பேசினர்கள். டெலிபோன், இண்டர்நெட் எதுவுமில்லாத அந்த எளிய மக்கள், வாய்மொழியாகவே தங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

"உங்கள் வயல்களில் தற்செயலாக முளைத்திருக்கும் மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிய வேண்டாம். வளர விடுங்கள்'' என்பதுதான் அவர்கள் பறிமாறிக் கொண்ட செய்தி. காலம் காலமாக நடவு சீசனுக்கு முன்பு களை என்று பிடுங்கிப் போட்டு வந்த செடிகளையெல்லாம் பாத்தி கட்டிப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள். ஜாக்கிரதையாக அவற்றைச் சுற்றி உழவு செய்து கடலையும் சோளமும் பயிரிட்டார்கள். காலப் போக்கில் மரங்கள் கம்பீரமாக வளர்ந்தன. சஹாராவின் சுடு மணல் காற்றை சுவர் மாதிரி நின்று தடுத்தன. அவற்றின் வேர்கள் மண்ணின் வளத்தைத் திருடு போகாமல் பாதுகாத்தன. காற்றின் வெக்கை தணிந்து, மழைப் பொழிவு அதிகரித்தது. இருபதே வருடத்தில் அங்கே புரட்சிகரமான மாறுதல்! திரும்பின பக்கமெல்லாம் பச்சை, பசுமை. இன்றைக்கு நைஜர் நாட்டின் தெற்குப் பகுதிகளை சாட்டிலைட் படத்தில் பார்த்தாலே குளுகுளுவென்று இருக்கிறது.

1980 வாக்கில் இந்தியாவிலும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் என்றால் வறட்சிக்கு மறு பெயர். இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவினர் இந்தத் தரிசு நிலத்தில் லட்சக் கணக்கில் மரங்களை நட்டு அழகான காடு ஒன்றை உருவாக்கினர்கள். இதற்கு மழை நீர் சேமிப்பு உத்திகள் அத்தனையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. செயற்கை ஏரிகள் உருவாக்கிக் கால்வாய் இழுத்தார்கள். முதல் வறட்சியைத் தாங்கும் மர வகைகளில் ஆரம்பித்தார்கள். பிறகு பழ மரங்களை நட்டபோது பறவைகள் வந்தன.

மரங்கள் சற்று அடர்த்தி அதிகரித்தவுடன் பூச்சிகள், அவற்றைத் தின்னும் சிறு பிராணிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. சீக்கிரமே நரிகள், முயல்கள் என்று சேர்ந்து போய், உயிரோட்டமுள்ள காடு கிளி கொஞ்ச ஆரம்பித்தது! அங்கே கொண்டு விடப்பட்ட மான்கள் அமைதியான சூழ் நிலையில் வேகமாகப் பெருகின. சுற்றுப்பட்ட எத்தனையோ கிராமத்து மக்களுக்கு வாழ்வளிக்க அங்கே வன தேவதை வந்து வசிக்க ஆரம்பித்தாள்.

தலைக்கு மேல் ஆபத்து காத்திருந்தாலும் நம்மால் இதைச் சமாளித்து விடமுடியும் என்று நம்பிக்கையூட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்: விழுப்புரத்தில் பஸ் டிரைவர் கருணாநிதி, பேருந்து செல்லும் சாலை ஓரமெல்லாம் அசோக மன்னர் மாதிரி மரம் நடுகிறார். சைக்கிளில் இரண்டு குடத்தைக் கட்டிக் கொண்டு போய் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு வார்க்கும் தலைமலை, மற்றும் பசுமை நாகராஜன், மரம் தங்கசாமி போன்ற எவ்வளவோ நல்லிதயங்கள் அங்கங்கே தங்களது சின்ன உலகத்தைப் பச்சையாக்கி ஆரவாரமில்லாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் சீடர்கள் ஒரே நாளில் எட்டரை லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தார்கள். கீன்யா நாட்டின் நோபல் பரிசுப் பெண்மணி வங்காரி மாதாய், படிக்காத பட்டிக்காட்டுப் பெண்களைத் திரட்டியே நாலு கோடி மரங்களை நட்டிருக்கிறார்.

மரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் எல்லோராலும் சிறு சிறு வழிகளில் உதவ முடியும். உதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பழைய பேப்பர் குப்பையில் போடும் முன், அதன் இரண்டு பக்கமும் எழுதியாகிவிட்டதா என்று பார்க்கலாம். இதனால் உலகத்தில் எங்கோ ஒரு மூங்கில் மரத்தின் வாழ்நாள் சில நிமிடங்கள் அதிகரிக்கும். சி.து.பெ வெள்ளம்!

"எதையும் வேஸ்ட் பண்ணாதே, திரும்ப உபயோகி; உடைந்தவைகளை ரிப்பேர் செய்; மழை நீரை சேமி...'' என்பது போன்ற பல கட்டளைகளை ஒரே சொல்ல் உள்ளடக்கிய அருமையான ஜப்பானிய வார்த்தை ஒன்று இருக்கிறது: மோடாய்னை (mottainai). குழந்தைகள் சாப்பாட்டை வீணடிக்கும்போது கண்டிப்பதற்குப் பெற்றோர்கள் உபயோகித்து வந்த இந்தச் சொல்லைப் புதுப்பித்து அகலப்படுத்தி ஒரு மந்திர உச்சாடனமாகவே ஆக்கியவர் வங்காரி மாதாய்.

மற்றொருபுறம், இரண்டு கண்ணும் குருடான அரசாங்க அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் சேர்ந்து இதை விட வேகமாக பூமியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னால் சென்னையிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் மிகப் பழைய மரங்கள் இருந்தன. பெயிண்ட் அடித்து தாசில்தார் நம்பர் போட்ட மரங்கள். எத்தனையோ மன்னர்களுக்கும் யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும் மெளன சாட்சியாய் நின்ற மரங்கள். இப்போது நம் டீசல் புகை வாகனங்களுக்கு வழி விடுவதற்காக எல்லாவற்றையும் வெட்டித் தள்ளிவிட்டார்கள்.

சியாரா க்ளப் சுற்றுச் சூழல் இயக்கத்தை ஆரம்பித்த ஜான் மியூர் ஒருமுறை சொன்னர்: "கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!''

-ராமன் ராஜா
நன்றி தினமணி கதிர், 27-07-08