சனி, அக்டோபர் 29, 2011

காங்கிரஸ்காரர்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் பதில் அளிக்கவும்!#தூக்குக் கயிறே என் கதை கேள்! (11)

எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று தவறாக நம்பிக்கொண்டு இருக்கிற... எம்மைப்பற்றிய முடிவிலும் அபிப்ராயத்திலும் சிறு மாறுதல் ஏற்பட்டால்கூட, எமக்கு அதில் நிறைவுதான்.

இதை வாசிக்கும் கணத்தில் மட்டும் என்னை ராஜீவ் காந்திக் கொலையாளி எனப் பார்க்காது, தூக்குக் கயிற்றின் கீழ் நிற்கும் ஒரு துரதிர்ஷ்டக்காரனாக மட்டுமே பாருங்கள். என்றோ ஒரு நாள் உங்களது நெஞ்சத் தராசுகளில் எங்களின் நியாயத் தட்டு ஜெயிக்கும். உங்களது மனச்சாட்சிக் கதவுகள் எங்க ளின் ஒப்பாரிகளால் உடைபடும். அன்று எம்மை நிரபராதிகள் என்று நிச்சயம் நீங்கள் நம்புவீர்கள். இதோ என் கேள்விகள்...

1. 'இனிமேல் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்கு வர மாட்டார்’ என 11.5.91 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் அந்த முடிவை மாற்றி ராஜீவை தமிழ்நாட்டுக்கு கூட்டிவரக் காரணமானவர் யார்? அது ஏன் இன்று வரை மறைக்கப்படுகிறது? ராஜீவ் வந்தபோது வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்கள் யாருமே இப்போது இல்லையா? இல்லை, உண்மையைச் சொல்லும் வல்லமை அவர்களுக்கு இல்லையா?

2. ராஜீவ் தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறார் என்ற முடிவு மிக ரகசியமாகவே இருந்தது. பத்திரிகைகளில் அதுபற்றி அனுமானச் செய்திகூட வெளிவராத நிலையில், சிவராசனுக்கு மட்டும் ராஜீவ் வருகை குறித்து எப்படித் தெரிந்தது? முன்கூட்டியே அதை சிவராசனிடம் சொன்ன காங்கிரஸ் கறுப்பு ஆடு யார்?

3. 21.05.91 அன்று ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியின் பொதுக் கூட்டத்துக்கு போலீஸார் முதலில் அனுமதி அளித்த இடத்தை திடீரென ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஏன் மாற்றினார்கள்? இடத்தை மாற்றச் சொன்னவர்கள் யார்? ராஜீவ் வழக்கைத் துப்புத் துலக்கிய அறிவார்ந்த பெருமக்கள் ஏன் இடமாற்றம் செய்தவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை?

4. ராஜீவ் ஒரு சாதாரணத் தலைவர் இல்லை. அவர் ஒரு கூட்டத்துக்கு வருகிறார் என்றால், அவரை நேரில் யார் யார் பார்க்க முடியும், அவருக்கு மரியாதை செலுத்தும் அனுமதி யாருக்கெல்லாம் உண்டு என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது வழக்கம். ஆனால், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் அத்தகைய முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை? ராஜீவுக்கு மாலை அணிவிப்பவர்களின் பட்டியலை ஏன் முறையாகப் பதிவு செய்யவில்லை?

5. அகில இந்தியத் தலைவருக்கு மாலை அணிவிப்பவர்களை பரிசோதனை செய்வது எப்போதுமே வழக்கம். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் உரிய பரிசோதனை நடத்த ஏன் பெண் போலீ ஸாரையும், மெட்டல் டிடெக்டரையும் ஏற்பாடு செய்யவில்லை? உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

6. ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் அதிகாரியிடம் அவரது கைத்துப்பாக்கி இல்லாமல் இருந்தது எப்படி? கைத்துப்பாக்கியை வைத்துக் குண்டு வெடிப்பை எப்படித் தடுத்திருக்க முடியும் என நீங்கள் கேள்வி எழுப்பலாம்... தணு இடுப்பில் கட்டிய குண்டுடன் வருவது தெரிந்திருந்தால், நிச்சயம் அவரைச் சுட்டாவது வீழ்த்தி இருக்க முடியும். மெய்க்காவலர்களை நம்பித்தானே தலைவர்கள் வெளியில் செல்கிறார்கள். அப்படி இருக்க, கைத்துப்பாக்கி எடுத்து வராமல் அந்த அதிகாரி எப்படி பாதுகாப்புக்கு வந்தார்? கைத்துப்பாக்கி எடுத்து வராதபடி அவரைத் தடுத்தவர்கள் யார்?

7. தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து உண்டு என உளவுத் துறை அறிக்கைகள் முன்னதாகவே அனுப்பப்பட்டு உள்ளன. இருந்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாதது எப்படி? உளவுத் துறை தகவல்களையே உதாசீனப்படுத்திய சக்தி எது?

8. ராஜீவைக் கொலை செய்ய வந்த தணு, லதா பிரியகுமாரின் காரில் வந்து இறங்கியதையும், பின்பு அவருடனும் லதா கண்ணனுடனும் தணு பேசிக்கொண்டு இருந்ததையும் சம்பவ இடத்தில் பார்த்ததாக காங்கிரஸ் பெண்மணி குமுதவல்லி பத்திரிகைகளில் பேட்டி அளித்தார். அதோடு, வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன்களிலும் வாக்குமூலம் அளித்தார். சி.பி.ஐ., எஸ்.ஐ.டி-யினர் அவரைச் சாட்சியாகச் சேர்த்து இருந்தும், நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து விசாரிப்பதை தவிர்த்துவிட்டனர். இந்த விடயங்கள் ஏன் கண்டுகொள்ளப்படவில்லை? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த முக்கிய விடயங்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன?

9. சம்பவ இடத்தில் இறந்த ஹரிபாபு எடுத்த புகைப்படங்களின், இறுதிப் படத்தில் தணு தோளின் முதுகுப் பக்கத்தில் இருந்து யாரோ ஒருவர் கைவைத்து தள்ளிக்கொண்டு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அவர் யார்? தணுவை ராஜீவ் காந்தியின் அருகில் நெருங்கவைத்த அவரைப்பற்றி ஏன் சி.பி.ஐ-யினர் விசாரிக்கவில்லை? விசாரிக்க முடியாத அளவுக்கு அந்த நபரைக் காப்பாற்றியவர்கள் யார்?

10. சம்பவ இடத்தில் ஒரு போலீஸ்காரருக்கு 750 ரூபாய் பணம் கொடுத்துத்தான் ராஜீவ் காந்தி அருகில் போக முடிந்தது என சிவராசன் சொன்னதாக ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தில் சி.பி.ஐ-யினர் எழுதி வைத்துள்ளனர். அந்த போலீஸ்காரர் யார் என்று சி.பி.ஐ. விசாரிக்காதது ஏன்?

11. ராஜீவ் காந்தியைப் பொதுக் கூட்ட இடத்துக்கு அழைத்து வந்த கார், குண்டு வெடித்த மறுகணமே அந்த இடத்தைவிட்டு மறைந்துபோனதே... ராஜீவ் காந்திக்கு என்ன ஆனது என்றுகூடப் பார்க்காமல் அந்த கார் பறந்தது எப்படி? ஒருவேளை காயப்பட்ட நிலையில் ராஜீவ் கிடந்தால், அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுபோக வாகனம் கிடைக்கக் கூடாது என்று விரும்பியவர்கள்தான் அந்த காரை உடனடியாகக் கிளம்பிப் போகவைத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தி மீது பேரன்புகொண்ட காங்கிரஸ் பெரியவர்கள் இதுபற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? ராஜீவ் காந்தி இறந்தாலும் பரவாயில்லை... தான் தப்பித்தால் சரி என எந்த ஓட்டுநராவது நினைப்பார்களா? கார் உடனடியாகக் கிளம்பிப் போனதுபற்றி ஏன் இந்தப் புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கவில்லை?

12. இது மிக முக்கியமான கேள்வி. ஓர் உள்ளூர் தலைவர் பொதுக் கூட்டத்துக்கு வந்தாலே, அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட அந்தத் தலைவரைச் சுற்றி இருப்பார்கள். ஆனால், ராஜீவ் காந்தி என்கிற மாபெரும் தலைவர் அந்தப் பொதுக் கூட்ட இடத்துக்கு வந்து இறங்கி மேடையை நோக்கி நடந்து போனபோதும், குண்டு வெடித்தபோதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட அவருக்கு அருகில் இல்லாமல் போனது எப்படி? மற்றக் கூட்ட இடங்களில் எல்லாம் ராஜீவ் காந்தியைச் சுற்றி முண்டியடிக்கும் உள்ளூர்த் தலைவர்கள் அன்று மட்டும், அங்கு விலகி இருந்ததின் மர்மத்தை ஏன் காங்கிரஸ் அபிமானிகள் உணரவில்லை? இப்போது நான் சொல்வது கற்பனைகூட செய்யக் கூடாதது. ஆனாலும், ராஜீவ் கொலைச் சதியின் பின்னணியை விளக்க எனக்கு வேறு வழி இல்லை.

இன்றைக்குப் பிரசித்தியாக இருக்கும் ஏதாவது ஒரு அரசியல் தலைவரை மனதுக்குள் பாவித்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு கூட்டத்துக்கு வரும்போது குண்டுவைத்துக் கொல்லப்படுகிறார் என்றால், அவரை அடுத்திருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எத்தனை பேர் இறப்பார்கள்? நீங்கள் நினைக்கும் தலைவரோடு இரண்டாம் கட்டத் தலைவர்களையும் மனதுக்குள் நினைத்துப் பாருங்கள். ஆனால், ராஜீவ் என்கிற மாபெரும் தலைவனின் படுகொலை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவர்களையும் இம்மி அளவும் பாதிக்காதது எப்படி? மரணத்தை விடுங்கள்... சம்பவத்தின்போது அங்கே இருந்த காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் சிறு கீறல்கூட ஏற்படாதது எப்படி? சாதாரண மக்களையும் அப்போது ஆச்சரியப்படுத்திய - அதிரவைத்த கேள்வி இது. ஆனால், நாளாக ஆக இந்தக் கேள்வி எல்லோருடைய மனங்களில் இருந்தும் மறைந்துவிட்டது. ராஜீவ் காந்தி இறந்த துக்கம் தாங்காமல் இன்றைக்கும் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்காரர்களின் மனங்களில் மட்டும் இந்தக் கேள்வி ஏன் எழவில்லை?

13. குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயம் அடையாத லலித் சந்திரசேகர் காயம் அடைந்ததாக மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்ட மர்மத்தையும், அவரது சிங்கள நண்பர் சம்பவ இடத்தில் இருந்து மாயமான மர்மத்தையும், அதுபற்றி உண்மைகளைக் கண்டறியாது சி.பி.ஐ. தவிர்த்துக்கொண்ட மர்மத்தையும்பற்றி ஏன் ஒரு காங்கிரஸ்காரர்கூட கேள்வி எழுப்பவில்லை?

14. அந்த பாரதூரமான சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தில் இருந்த ஹரிபாபுவின் கேமராவில் இருந்த புகைப்படச் சுருள் முதன்முதலில் ஒரு பத்திரிகை வசம் போனதும், அதைப் பெறத் தாம் படாதபாடுபட்டதாகவும் இந்த வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி கூறி இருக்கிறார். அப்படி என்றால், அந்தச் சம்பவ இடம் உடனே பாதுகாக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்? இதைவைத்தே உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டதாக ஏன் குற்றம் சொல்ல முடியாது?

15. சம்பவ இடத்தில் ஹரிபாபுவால் எடுக்கப் பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படத்தில் உள்ள தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், அவர் இறந்துகிடக்கும் படத்தில் அவர் நெற்றியில் பொட்டு இருக்கிறது. ஒன்று, புகைப்படத்தில் இருக்கும் பெண்ணும் இறந்த பெண்ணும், வெவ்வேறு பெண்ணாக இருக்க வேண்டும். அல்லது, அந்த சம்பவம் நடந்த பின் இறந்த பெண்ணின் நெற்றில் யாரோ பொட்டு வைத்திருக்க வேண்டும். இந்த உண்மை குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை? ஒரு மிக முக்கியக் கொலை வழக்கில் புகைப்பட ஆதாரங்களைக்கூட புலனாய்வு அதிகாரிகள் பொருட்படுத்தாமல் போனது எப்படி?

16. மேற்படி அதே புகைப்படத்தில் இருக்கும் தணுவின் தோளில் கைப்பை உள்ளது. அது சம்பவ இடத்தில் கைப்பற்றப்படவும் இல்லை; அதுபற்றி விசாரணை செய்யப்படவும் இல்லை. கொலை யாளியின் கைப்பை எவ்வளவு முக்கியமான ஒன்று... அது எப்படி மாயமானது? அந்தக் கைப்பை பற்றிய விசாரணை உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கலாம் என்பது சி.பி.ஐ-யினருக்கு எப்படித் தோன்றாமல்போனது? அந்தக் கைப்பையில் இருந்த ஏதாவது ஒரு பொருளாவது உண்மைக் குற்றவாளிகளை நோக்கி விசாரணை அதிகாரிகளைத் திருப்பி இருக்குமே... அப்படி இருக்க, அந்தக் கைப்பை குறித்த கவலை எவருக்குமே இல்லாது போனது ஏன்?

17. இத்தனை கேள்விகளுக்குப் பிறகும், 'சி.பி.ஐ-யினர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்’ என கறைபடியாத காங்கிரஸ்காரர்கள் நம்பலாம். இதே சி.பி.ஐ. அதிகாரிகள்தான் யார் யாரையோ காப்பாற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மீது பொய் வழக்குப் புனைந்து, பின்பு அம்பலப்பட்டுப்போனார்கள். ஒரு முன்னாள் பிரதமருக்கு எதிராகவே சி.பி.ஐ-யினரால் பொய் வழக்குப் புனைய முடியும் என்றால், கொடூர, காட்டுமிராண்டித்தனமான தடா சட்டத்தின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அப்பாவிகள் எங்களை அதிகாரிகள் ஏன் பலிகடாக்கள் ஆக்கி இருக்க முடியாது? எங்களின் நிலையில் இருந்து ஒரு நிமிடம் யோசித்தாலே, உங்களின் மனோபாவம் மாற வாய்ப்பு இருக்கிறதே... அதை ஏனய்யா செய்ய மறுக்கிறீர்கள்? 21 வருடங்களை இழந்து தவிக்கும் எங்களுக்காகச் சில நிமிடங்களை இழக்கக்கூட உங்களின் இதயம் இடம் கொடுக்கவில்லையா?

காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 02-நவம்பர்-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக