வியாழன், அக்டோபர் 13, 2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! (6) அனுதின அலறல்கள்!

கைது செய்யப்பட்டபோது என் மனைவி நளினி, 50 கிலோ எடை இருந்தார். நான் 60 கிலோ. இரண்டு மாத கர்ப்பிணியாக 'மல்லிகை’யின் குரூர அறைகளுக்குள் அடி எடுத்துவைத்த நளினி, அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஜுடிஷியல் கஸ்டடியில் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது நளினியின் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 35 கிலோ. 15 கிலோ எடையைக் குறைக்கிற அளவுக்கு சித்ரவதைகள் குரூரமாகவும் கொடுமையாகவும் இருந்தன. நான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது, வெறும் 30 கிலோதான் இருந்தேன். பாதியாக என்னைக் கழித்து, வெறி தீர்த்திருந்தார்கள். வெறும் வார்த்தைகளுக்காக இதை நான் சொல்லவில்லை. ராஜீவ் வழக்கில் நாங்கள் வளைக்கப்பட்டபோது எவ்வளவு எடை இருந்தோம், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எந்த அளவுக்கு எடை குறைக்கப்பட்டு இருந்தோம் என்பதற்கு அரசுத் தரப்பு குறிப்புகளே ஆதாரமாக இருக்கின்றன. பிரிசன் அட்மிஷன் ரெஜிஸ்டரில் எங்களின் எடை அளவு குறிக்கப்பட்டு உள்ளது. மல்லிகை விசாரணைகளுக்குப் பிறகு சப்பி எறியப்பட்ட மாங்கொட்டையாகத்தான் நாங்கள் சிறைக்குள் தள்ளப்பட்டோம். கைதுக்கு முன் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும், போலீஸ் காவலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, நாங்கள் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டோம் என்பது புரியும்.

ராஜீவ் கொலை வழக்கில் நான் வளைக்கப்பட்டபோது, வாழைக்குருத்து வயது. கோபம் பொறுக்காத ஆவேசம் பொங்கி எழுகிற வயது. மல்லிகை அலுவலகத்தில் நடந்த கொடூரங்கள் என் வயதுக்குரிய கோபத்தையும் ஆவேசத்தையும் பொசுக்கிப் போட்டது. என்ன செய்தாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய சொரணையற்ற மனப் பக்குவத்தைப் பழகவைத்தது. 'கத்திக் கதறினாலும் யாருக்குமே கேட்காது’ என்கிற கையறு நிலையை என் நாடி நரம்புகள் பழகிக்கொண்டன. மரணத்தைவிடக் கொடூரமானது மரண பயம் என்பதை நினைத்து நினைத்து என் அனுதினங்கள் அலறத் தொடங்கின.

இரவானால், தூக்கம் வராது. அதிகாரிகள் கயிறோடு துரத்துவதைப்போல் இருக்கும். எங்கேயோ தப்பி ஓடுகிற என்னை சுலபமாக அதிகாரிகள் வளைத்து விடுவது போல் கனவு வரும். தூக்குக் கயிற்றின் முன்னால் என்னை நிறுத்தி அதிகாரிகள் கைகொட்டிச் சிரிப்பது கனவாக விரியும். கனவில்கூட துயரத்தின் துரத்தல்களையே அனுப வித்த அபாக்கியவான் நான். என் வடுக்களையும் வருத்தங்களையும் இங்கே இறக்கிவைக்கிற நேரத்தில், சிறு ஆறுதலை என் சிறகுகள் சுமப்பது போன்ற நிம்மதி!

சில தினங்களுக்கு முன் வேலூர் சிறையில் என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். மிக இளம் வயதுக்காரர். ''ஜூ.வி-யில் உங்களைப் பத்திப் படிச்சேண்ணா... தாங்க முடியலை. இப்படி எல்லாம் குரூரமா அதி காரிகள் செயல்பட்டதை நம்பவே முடியலை. இவ்வளவு சித்ரவதைகள் கடந்து நீங்க நிக்கிறதைப் பார்க்கிறப்ப, ஏதோ மறுஜென்மம் மாதிரி இருக்கு!'' என்றார் கலங்கிய கண்களோடு. நான் இறக்கிவைப்பது வெளியே சொல்லக்கூடிய துயரங்களை மட்டுமே. சொல்ல முடியாததை, எழுத்தில் வார்த்தால் இன்றைக்கும் ஈரக்குலையைத் துடிக்கவைக்கும் கோரங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத் தாலே, என்னுடைய சிறு நிம்மதியும் சிதைந்துபோகும். ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வின்போது மொத்தமாக 35 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரிகளின் சித்ரவதைகளுக்கு ஆளா வதைக் காட்டிலும் இறப்பதே மேல் என எண்ணியதால்தானே இத்தனை தற்கொலைகள்?

ஒவ்வொரு நாள் உறக்கத்திலும் எம்மை வருத்துகின்ற கேள்வி ஒன்று உண்டு. குற்றச் சதிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது எங்களை விசாரித்த அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் எங்களைச் சிக்கவைக்க அவர்கள் இவ்வளவு வெறித்தனம் காட்டியது ஏன்? எங்களைப் பலிகடாவாக்க அவர்கள் இந்த அளவுக்குப் போராடியது ஏன்? ராஜீவ் என்கிற மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் பிடிக்க இயலாமல் போனது அவர்களுக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது. அவர்களின் தேடுதலுக்கு நாங்கள் தீனியாகிப்போனோம். அவர்களுடைய வெறித்தனமான விளையாட்டுக்கு எங்களின் முதுகுகள் தோதான களமாகிவிட்டன.

இந்த விவகாரத்தில் தடா வழக்கின் கீழ் போலீஸ் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் இல்லை என்றால், யாரையும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டித்திருக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டப் பின்னணியை அறிந்தவர்களாகச் சொல்லுங்கள்... இந்த விவகாரத்தில் நாங்கள் பலிகடாவாக்கப்பட்டதை உங்களால் உணர முடிகிறதா? சித்ரவதைகளும் குரூரங்களும்தான் எங்களைக் குற்றவாளிகளாக நிற்கவைத்ததே தவிர, உண்மைகள் இல்லை. சாட்சி, ஆதாரம் என எங்களுக்கு எதிராக எதையுமே சமர்ப்பிக்க முடியாதவர்கள், எங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்தே மரண நிழலில் எங்களை நிறுத்தினார்கள். அது எங்களின் ஒப்புதல் வாக்குமூலம் அல்ல... ஒப்புக்காக வாங்கப்பட்ட வாக்குமூலம். அதிகாரிகளின் அளவற்ற கற்பனைக் கதைகளுக்கு எங்களின் உயிர் விற்பனைப் பொருளானது.

சாட்சியங்கள், சான்றுகள், ஆவணங்கள் ஆகியவை இந்த வழக்குக்காகவே பொய்யாக உருவாக்கப்பட்டன. உதாரணமாக, இரண்டு சான்றுக் குறிப்புகளைச் சுட்டிக் காட்டுகிறேன்...

கிளாட் பெர்னாண்டஸ் என்பவர் ஒரு மருத்துவர். இவர் என்னை ஒரு போதும் பார்த்தது கிடையாது. ஆனால், எனக்கு ஒரு செயற்கைப் பல்லைக் கட்டியதாக அவர் சாட்சியத்தில் சொல்லி இருந்தார். எனக்கு அனைத்துப் பற்களுமே நல்ல நிலையில் இருக்கின்றன. இதுவரை நான் செயற்கைப் பல் கட்டிக் கொண்டது கிடையாது. இது பற்றி மேற்படி சாட்சியிடம் எனது இயற்கைப் பல்லைக் காட்டி விவரமாகக் குறுக்கு விசாரணை செய்துள்ளேன். எம்மிடம் நீதிபதி கேள்வி கேட்டபோதும் எனக்கு அந்த மருத்துவர், பிடுங்கியதாகச் சொல்லும் இடத்தில் எனது இயற்கைப் பல் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். இன்றைக்கு வேண்டுமானாலும் அதிகாரி கள் என் பல்லைப் பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

திருநாவுக்கரசு என்பவர் கர்நாடகத் தடயவியல் (மருத்துவப் பிரிவில்) கல்லூரியின் பேராசிரியர். இவரும் ஒரு முன்னாள் மருத்துவ இயக்குநர்தான். இவர் தனது சாட்சியத்தில் பக்கம் 41-ல் (தானாக முன்வந்து) என் மனைவி நளினியை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்ததாகவும், அங்கு இறந்து கிடந்த சிவராசன், சுபா ஆகியோரை நளினி அடை யாளம் காட்டினார் எனவும் சாட்சியம் சொல்லி இருந்தார். பின்பு அரசுத் தரப்பு வழக்கறிஞரின் மறுவிசாரணையில் 'இந்தப் பெண்ணைத்தான் எஸ்.ஐ.டி-யினர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வந்து அடையாளம் காட்டவைத்தனர்’ என என் மனைவி நளினியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்.

ஆனால், 9.8.91-ல் இருந்து 1992 இறுதி வரை நானும் என் மனைவியும் செங்கல்பட்டு சிறையில் இருந்தோம். என் மனைவியைக் குறிப்பிட்ட காலத்தில் மேற்படி மருத்துவமனைக்கு யாரும் அழைத்துப் போகவும் இல்லை; யாரையும் அடையாளம் காட்டவும் இல்லை. இதனை இந்த வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியே குறுக்கு விசாரணையில் ஏற்றுக்கொண்டு உள்ளார். சிறையைவிட்டே வெளியே வராத நளினி, சிவராசன், சுபாவை அடையாளம் காட்டினார் என்றால், அதிகாரிகளின் ஜோடிப்புக்கு ஓர் அளவு இல்லையா?

மேஜர் சபர்வால் என்ற இந்திய ராணுவ அதிகாரி சொன்ன ஜோக் என்ன தெரியுமா?

- காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 16-10-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக