புதன், ஆகஸ்ட் 17, 2011

விரித்த வலையில் விழுந்த வேடர்கள்: மாறன் சகோதரர்களின் பொற்காலத்தின் முடிவு

சுதந்திர இந்தியா தனது வரலாற்றில் ஏராளமான கார்ப்பரேட் மோதல்களைக் கண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற முகமூடியுடன் நடக்கும் கார்ப்பரேட்-அரசியல் மோதலுக்கு அவை எதுவுமே நிகரல்ல. சுமார் 20 ஆண்டு காலம் நுஸ்லி வாடியாவுக்கும் தீருபாய் அம்பானிக்கும் நிகழ்ந்த யுத்தம்கூட 2ஜி அலைவரிசை ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சிறியதாகத் தெரிகிறது. இரண்டு நபர்களிடையிலான பிசினஸ் மோதலாகத் தொடங்கி, ராஜீவ் காந்தி - வி.பி.சிங் இடையிலான மோதலாக, அரசியலுக்குள்ளும் அம்பானி - வாடியா மோதல் நுழைந்தது. ரத்தன் டாடா, அனில் அம்பானி, பார்தி மிட்டல், ஷாகித் பல்வா முதலிய கார்ப்பரேட்களில் தொடங்கி, கருணாநிதி குடும்பத்தினர், ஆ.இராசா, ஷரத்பவார் முதலிய அரசியல்வாதிகள் என 2ஜி ஊழல் போரில் ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் முக்கிய பாத் திரமேற்றிருந்தார்கள். தயாநிதிமாறன், கலாநிதி மாறன், ஸ்டெர்லிங் சிவசங்கரன், ஏர்செல் அனந்தகிருஷ்ணன் போன்ற கார்ப்பரேட்களும் அரசியல்வாதிகளும் புதிதாக இணைந்திருப்பது மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குருட்சேத்திரம் உக்கிரமான நிலையை எட்டியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதன் அம்பலமும் அது தொடர்பான விசாரணையும் ஒரு சாதாரண ஊழல் விவகாரம் சார்ந்தது அல்ல என்ற எளிய உண்மையை விளக்கிப் புரிய வைக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான முரண்நகைதான். கிளப்பிவிட்ட சூத்ரதாரிகளான மாறன் சகோதரர்களுக்கு எதிராகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரும்பும் சமயம் இது. பாட்டிலில் அடைக்க முடியாத ஒரு பூதத்தை திறந்துவிட்டிருக்கிறோம் என்று 'கேடி பிரதர்ஸ்' என செல்லமாக அறியப்படும் கார்ப்பரேட் - அரசியல் அதிபர்கள் காலம் கெட்ட பிறகு வருந்தக்கூடும். பிசினஸ் போட்டியில் தொடங்கி, அரசியல் அரங்கிற்கு மாறிய இது வரையிலான கார்ப்பரேட் மோதல்களுக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 21ஆம் நூற்றாண்டிற்கே உரிய வகையில் ஒவ்வொரு அங்கத்திலும் அரசியலும் கார்ப்பரேட் மோதலும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறது. தங்களின் குடும்பத் தொழில் செழிக்க உதவிய தொலைதொடர்புத் துறை தங்கள் பிடியிலிருந்து பறி போனதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் மாறன்கள் இந்த ஊழலை அம்பலமாக்கினார்களா? டாடாவின் டி.டி.ஹெச். நிறுவனத்தில் பங்குகள் கேட்டு மாறன்கள் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஒதுக்கீட்டின் முறைகேடுகள் குறித்த சமீபத்திய அம்பலங்களின் பின்னணியில் டாடாக்கள் இருக் கிறார்களா?

ராசாவின் தலையை வாங்க அனைவரும் துடித்துக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் 2001 முதல் நிகழ்ந்த அத்தனை அலைவரிசை ஒதுக்கீடுகளையும் ஆய்வு செய்யும்படி புதிய தொலை தொடர்பு அமைச்சர் கபில்சிபல் உத்தரவிட்டபோதே மாறன்களும் குற்ற வளையத்தில் வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் சன் டி.வி. நெட்வொர்க்கின் பின்னணியில் மிகப் பெரிய பிசினஸ் சாம் ராஜ்யத்தையும் தந்தை முரசொலி மாறன் காலத்திலிருந்தே அரசியல் ஆதரவையும் சேகரித்து வைத்திருந்த ஒரு குடும்பத்தை, தி.மு.க.வைத் தனது அரணாகப் பயன்படுத்திய மாறன் சகோதரர்களை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாதே! அதனால், கபில்சிபல் நியமித்த நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிஷன் தயாநிதி மாறனின் தவறுகளை அக்குவேறாக அம்பலப்படுத்தியும் சுமார் இரண்டு ஆண்டுகளாக சி.பி.ஐ. அந்தக் கோப்புகளின் மீது தூங்கிக்கொண்டிருந்தது. சட்டம் தனது கடமையைச் செய்ய, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மாறன் குடும்பத்தை தி.மு.க. கைகழுவ நினைத்த ஒரு அரசியல் திருப்புமுனை கால கட்டத்தில்தான் நீதியும் நியாயமும் கண்விழித்துக்கொள்ளும் சௌகரியத்தைப் பெறுகின்றன. மாறன் குடும்பத்தினர் தன்னை எவ்வாறு ஏர்செல்லை விற்கும்படி நிர்பந்தித்தனர் என்பதை சி.பி.ஐ.யிடம் சாட்சியமாகக் கொடுக்க திடீரென ஸ்டெர்லிங் சிவசங்கரனுக்குத் தைரியம் வந்தது. ஏர்செல்லை வாங்கிய அனந்தகிருஷ்ணன் கலைஞர் டி.வி.யைப் போலவே புத்தம் புதிதாகத் தொடங்கப்பட்ட சன் டி.டி.ஹெச். நிறுவனத்திற்கு அதன் பிரதிபலனாகத்தான் 800 கோடி ரூபாய் முதலீடு தந்தார் என்றவாதம் முன்வைக்கப்பட்டது. ஏர் செல் தனது கட்டுப்பாட்டில் இருந்தபோதே வழங்கப்பட்டிருக்க வேண்டிய 14 அலைவரிசை உரிமங்களை, அது கைமாறிய பிறகு வழங்கியதற்கான லஞ்சம்தான் இது என்பது சிவசங்கரனின் வாதம். நீதிபதி ஷிவ் ராஜ் பாட்டீல் கமிட்டி அறிக்கையும் இத்தகைய ஒரு பார்வையை முன்வைத்திருப்பதால், தயாநிதிமாறனை விசாரிக்க பிரதமர் மன் மோகன் சிங் அனுமதி கொடுத்திருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியமளிக்கவில்லை. தயாநிதி மாறன் பதவி விலக நேரும், அவர் மட்டுமின்றி அவரின் சகோதரரும் கார்ப்பரேட் அதிபருமான கலாநிதியும் கம்பி எண்ண வேண்டியிருக்கலாம் என்ற பேச்சுக்களும் ஒரு நாள் உண்மையாகலாம்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை எதுவரை பாயும், எது வரை பாயாது என்பது முற்றிலும் சட்டத்திற்குட்பட்டது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆ.ராசாவின் 2ஜி அலைவரிசை ஊழலில் நேரடி தொடர்பு இருந்தாலும் ரத்தன் டாடாவும் அனில் அம்பானியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் கடுமை காட்டி வரும் நீதித்துறை ரத்தன் டாடாவையும் அனில் அம்பானியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர்கள் அளவுக்குப் பெரிய தொழிலதிபர் அல்லாத ஷாகித் பல்வா மட்டும் கம்பிகளின் பின்னால் ஜாமீன் இல்லாமல் தொடர்கிறார். அதனால் கலா நிதி மாறனின் உயரம் விசாரணைக்கு உட்படுத்தும் அளவில் இருக்குமா, இல்லையா என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் தங்களின் அகந்தையாலும் அடாவடித்தனங்களினாலும் மாறன் குடும்பத்தினர் சம்பாதித்திருக்கும் எதிரிகளின் எண்ணிக்கை தராசை அவர்களுக்கு எதிராகத் திருப்பக்கூடும்.

நுஸ்லி வாடியாவுக்கும் திருபாய் அம்பானிக்கும் இடையிலான மோதலை, பாரம்பரிய பணக்காரருக்கும் புதுப் பணக்காரருக்கும் இடையிலான மோதலாகப் பார்ப்ப துண்டு. நேர்மையான வழிகளில் பிசினஸ் செய்யும் வாடியாவின் வழிமுறைக்கும் அத்தனை தில்லு முல்லுகள் மூலம் பிசினஸ் சாம் ராஜ்யத்தை விரிவாக்கும் அம்பானியின் வழிமுறைக்குமான மோதலாகவும் பார்க்கப்படுவதுண்டு. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் பின்னணியில் நிகழும் கார்ப்பரேட்-அரசியல் மோதல் அவ்வளவு தெளிவான வரையறைகள் கொண்டது அல்ல. அரசையும் சட்டத்தையும் தனக்கு சாதகமாக வளைத்து, அத்தனை துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு பிசினஸ் செய்ய வேண்டிய யுகம் அம்பானியின் வரவுடன் தொடங்கிவிட்டதை உணர்ந்த நுஸ்லி வாடியாவின் தந்தை தனது அத்தனை சொத்துக்களையும் விற்றுவிட்டு ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகிவிடத் துடித்தார். அதை ஏற்க மறுத்து, தந்தையுடன் மோதி தனது சொத்துரிமையைப் பெற்று, அம்பானியின் சாம தான பேததண்ட சாம்ராஜ்யத்திற்கு எதிராக நீண்ட தர்ம யுத்தத்தை நடத்தினார் வாடியா. 21 ஆம் நூற்றாண்டில் கிளம்பியிருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் துரோகமும் வஞ்சமும் நிறைந்த மகாபாரத யுத்தம் போல நிகழ்கிறது. ஆனால் இந்த நவீன மகாபாரத குருட்சேத்திரத்தில் இரு புறமும் கௌரவர்களே நிற்கிறார்கள்.

அம்பானிகளைப் போல சாமதான பேத தண்டங்களைப் புரியும் மாறன் குடும்பத்தினரின் முன்பு ரத்தன் டாடாவும் தனது மதிப்பீடுகளை இழந்து நிற்கிறார். நேர்மையான, பொறுப்பான பிசினஸ் வழி முறைகளின் முன்னுதாரணமாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியான டாடா குழுமம், மாறன்களைத் தோற்கடிப்பதற்காக ஆ.ராசாவின் ஊழல் கூட்டாளியாகத் தன்னை மாற்றிக்கொண்டது. டாடா-ராசா கூட்டணியை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கேற்ற மாறன் குடும்பத்தினர் இப்போது பதிலடியை எதிர்கொள்கிறார்கள். கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற பழ மொழியின் வாழும் உதாரணமாக அவர்கள் மாறுகிறார்கள்.

ஆ. ராசாவும் கனிமொழியும் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஊழல் செய்வார்கள் என்ற ஆச்சரியத்திற்கு நடுவில், மாறன் சகோதரர்கள் இவ்வளவு ஆணவத்துடனா ஊழல் செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சரானவுடன் சென்னையிலுள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு கொடுக்கப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் அவரது அண்ணன் கலாநிதிக்குச் சொந்தமான சன் டி.வி.யின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் அதிகார பூர்வ பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டிய இந்த இணைப்புகள், சன் டி.வி..யின் ஒளி பரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு 440 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில வருடங்கள் முன்பு கிளம்பி பிசுபிசுத்த இந்தக் குற்றச் சாட்டுகள் இன்று மீண்டும் கிளம்பி மாறன்களின் கழுத்தை இறுக்குகிறது.

கனிமொழி சிறை சென்ற பிறகே மாறன்கள் வலையில் சிக்குகிறார்கள் என்பதால் இதில் சி.ஐ.டி. காலனி சக்திகளின் பங்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. சிவசங்கரன் சி.ஐ.டி. காலனிக்கு நெருக்க மானவராகவே அறியப்படுகிறார். ஒரு காலத்தில் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த அவரையே மாறனின் புதல் வர்கள் பதம் பார்த்தார்கள். சிவசங்கரனை ஒரு வழக்கில் சிக்க வைத்து, சிறையில் தள்ள 'கேடி பிரதர்ஸ்' முயன்றதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் நாட்டை விட்டு ஓடி தப்பித்த நிலையில், அவரின் வயதான பெற்றோரைக் கம்பிக்குப் பின்னால் நிறுத்தி பிளாக்மெயில் செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தால் உந்தித் தள்ளப்படும் சிவசங்கரன் மட்டுமே மாறன் சகோதரர்களை சிறையில் தள்ளப் போதுமானது அல்ல. நுஸ்லி வாடியா தனது தந்தையுடனான சண்டையில் வெற்றி பெற ஜே.ஆர்.டி. டாடாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். அதே போல மாறன் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட ரத்தன் டாடா, ஸீ டி.வி. குழுமத்தின் சதீஸ் சந்திரா முதலிய சக்திகள் தங்களின் செல்வாக்கையெல்லாம் சி.ஐ.டி. காலனியின் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒன்று திரட்டினால்தான் ஜெகஜ்ஜால கில்லாடிகளான கேடி சகோதரர்கள் வசமாக சிக்குவார்கள். தி.மு.க.வும் அதன் தொண்டர்களும்கூட மாறன்களுக்கு எதிராகத் திரும்புவதால் சிவசங்கரனைத் தங்களின் பிரம்மாஸ்திரமாக சி.ஐ.டி. காலனி பயன்படுத்துகிறது. தங்களின் சிறைவாசத்திற்கு முழு காரணம் என சி.ஐ.டி. காலனி நம்பும் மாறன்களையும் தங்கள் வரிசையில் திகாரில் அடைக்கும்வரை அவர்கள் ஓயப் போவதில்லை. எனினும் எஸ் டெல் என்ற நிறுவனம் மூலம் மறைமுகமாக 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சிவ சங்கரனுக்கு எதிராகவும் ஸ்பெக்ட் ரம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரின் வாக்குமூலம் மட்டுமே மாறன்களை வீழ்த்தப் போவதில்லை. மாறாக, மாறன்களுக்கு எதிரான சாட்சியங்களாக ராசா ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைதொடர்பு அதி காரிகள்தான் கேடி பிரதர்ஸின் கதையை முடிக்கும் கடைசி ஆணி களாக இருக்கப் போகிறார்கள்.

இந்தப் பூனைக்கு மணி கட்டப்போவது யார் என்ற தலைப்பில் தெஹல்கா வெளியிட்ட கட்டுரை வரை தனக்கு எதிரான அத்தனை செய்திகளுக்கும் வக்கீல் நோட்டீல் அனுப்பி மிரட்ட முயன்ற மாறன்கள் இப்போது அந்தப் பழக்கத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். விவகாரம் தலைக்கு மேல் போய்விட்டது என்பதால் தேங்காய் மூடி வக்கீல்களை விட்டுவிட்டு நிஜமான அதிகார மையங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மாறன்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ளே போகிறார்களோ இல்லையோ, அவர்களின் கேபிள் தொழில் ஏகாதிபத்யம் ஒழிக்கப்பட வேண்டும். அது ஒரு பெரிய சமூக சேவை. ஏனெனில் கேபிள் தொழில் வெறுமனே அவர்களின் பிசினஸ் வெற்றிக்கு மட்டுமே உதவவில்லை. மக்களுக்குச் சென்று சேர வேண்டிய உண்மையான செய்திகளை முடக்கும் மோசமான தணிக்கையாகவும் அது திகழ்கிறது. இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த தேசத்தில் டி.டி.ஹெச்.சைவிட என்றென்றைக்கும் கேபிள் தொழில்தான் அதிக லாபகரமாகவும் அதிக வீச்சு கொண்டதாகவும் இருக்கப்போகிறது. இதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டு தனது எதிரி சேனல்கள் எதுவும் தமிழகத்தில் காலூன்ற விடாமல் மாறன்கள் தடுத்தி நிறுத்தி வருகிறார்கள். மாறன்களின் கேபிள் ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு, சூழ்ச்சித் திறனைக் கண்டு தேசிய, சர்வதேச அளவிலான ஊடக நிறுவனங்கள் அஞ்சுவதால் தமிழ்ச் சந்தையில் களமிறங்குவதற்குத் தயங்குகிறார்கள். தமிழ் டி.வி. ஊடகச் சூழல் ஜனநாயகமற்றதாகத் திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் ஒட்டுமொத்த கேபிள் தொழிலையும் அரசுடமையாக்குவது அதற்குத் தீர்வல்ல. ஏனெனில் ஒரு தனியார் நிறுவனத்தின் தணிக்கையைவிட ஒரு அரசு அமைப்பின் தணிக்கை மோசமானது. அரசு கேபிள் கார்ப்ப ரேஷன் மூலம் சன் குழுமத்தின் கேபிள் நிறுவன ஏகாதிபத்யம் உடைக்கப்பட்டாலே ஊடகச் சூழலில் ஜனநாயகம் தழைக்கத் துவங்கும்.

மோசடிகளின் மீது கட்டமைக்கப்படும் அம்பானிகளின் சாம்ராஜ்ஜியம் ஒரு நாள் ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கப் போகிறது என்ற நுஸ்லி வாடியாவின் எச்சரிக்கையை 1980களில் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. டாடா, பிர்லாவைப்போல அம்பானிகள் வளர்வார்கள் என அன்றைய தலைமுறை கார்ப்பரேட்கள் நம்பாததால் வாடியா உளறுகிறார் என நினைத்தார்கள். இன்று அதே வர்ணனை மாறன்களுக்குப் பொருந்தும். தங்கள் பிசினஸ் வெற்றிக்காக அத்தனை வஞ்சகங்களிலும் ஈடுபடக்கூடிய 21ஆம் நூற்றாண்டின் அம்பானிகளாகத் திகழும் மாறன்கள் தென்னிந்திய டி.வி. சந்தையை ஏற்கனவே தங்கள் மூர்க்கமான பிடியில் வைத்திருக்கிறார்கள். மலிவு விலை விமான சேவைத் தொழிலைக் கைப் பற்றும் அவர்களின் முயற்சிக்கு தற்காலிக தடை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. 1980களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜவுளித் தொழிலை வியாபித்தபோது, பிற்பாடு பல்வேறு துறைகளையும் அவர்கள் வளைத்துப் போடுவார்கள் என யாரும் கற்பனை செய்யவில்லை.

தனக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தன்னைவிட அம்பானிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அதன் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா ஆத்திரத்துடன் கூறியதுண்டு (ரிலையன்ஸுக்கு எதிராக வாடியாவுடன் கைகோர்க்கவும் அது ஒரு காரணமாக இருந்தது). அந்த அளவுக்கு ரிலையன்ஸின் செல்வாக்கு பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால் மாறன்களுக்கு இன்று நண்பர்களைவிட எதிரிகளே அதிகம். ரிலையன்ஸ் காசு கொடுத்து வாங்கியது போன்ற அரசியல் செல்வாக்கை, தி.மு.க.வின் பின்னணி மூலம் மாறன்கள் அனுபவித்தார்கள். தி.மு.க.வின் பின்னணி இல்லாத காலகட்டத்தில் மாறன்களின் எதிரிகள் ஒன்று சேர்வது அவர்களின் சாம்ராஜ்யத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நுஸ்லி வாடியாவும் தீருபாய் அம்பானியும் ஒரு கட்டத்தில் சமரசமாகச் சென்றது போன்ற வரலாறு திரும்புமா? மாறன் சகோதரர்களில் ஒருவராவது சிறை செல்லாமல், துரோகமும் வஞ்சமும் நிறைந்த ஸ்பெக்ட்ரம் மகாபாரதப் போரில் சமரசம் துவங்காது என்பது உறுதி.

-மாயா

நன்றி: உயிர்மை, ஜூலை 2011

1 கருத்து:

Saravanaa சொன்னது…

Arasiyalla idhellam sadharanamappa.....

கருத்துரையிடுக