ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

''ராஜீவ் கொலை வழக்கில், பிணத்துக்கு பொட்டு வைத்ததுதான் புலனாய்வா?''

''ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி தொடங்கி, பல பெருந்தலைகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், விசாரணை அதிகாரிகள் அந்தப் பெருந்தலைகளைத் தப்ப வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்!'' - காங்கிரஸ் பிரமுகரான திருச்சி வேலுசாமியின் தொடர் முழக்கம் இது. ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைத்ததற்கு முக்கியக் காரணமே வேலுசாமியின் அஃபிடவிட்தான். ஏழு தடவை அதில் விசாரிக்கப்பட்டவர் இவர். பேரறி வாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் எந்த நேரத்திலும் தூக்கு என்கிற நிலையில் நாம் வேலுசாமியை சந்தித்தோம்.

''ராஜீவ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரிகளின் குளறுபடிகளாக நீங்கள் எவற்றைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்?''

''குறிப்பிட்டுச் சொல்வது என்ன... விசாரணை அதிகாரிகள் செய்த அனைத்துமே திட்டமிட்ட குளறுபடிகள்தான். மகாத்மா காந்தியின் கொலை வழக்குடன் ராஜீவ் கொலை வழக்கை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அதிகாரிகளின் குளறு படிகள் அப்பட்டமாகப் புரியும். மகாத்மா சுடப் பட்ட உடனேயே கோட்சேவை போலீஸ் வளைத்தது. கோட்சே கையில், 'இஸ்மாயில்’ எனப் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதனால், 'மகாத்மாவைக் கொன்றது ஒரு முஸ்லிம்தான்!’ என அதிகாரிகள் அவசரப்பட்டு அறிவிக்கவில்லை. அதிகாரிகளின் நுணுக்கமான புலனாய்வால், அந்த ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன? மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, 'ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என அறிவித்தார், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் சிவராசன், தணு, கோகிலவாணியின் முகங்களை அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் தணுவின் நெற்றியில் பொட்டு இல்லை. ஆனால், இறந்துகிடந்த தணுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி? 'ராஜீவைக் கொலை செய்தவர் இந்து தமிழ்ப் பெண்’ எனக் காட்ட நடந்த சதிதான் அது. பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்ததுதான் புலனாய்வா... அவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜீவ் கொலை விவகாரத்தில் துளியும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா?''

''பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்த வர். கொலை நடந்து 20 நாட்கள் கழித்து ஜோலார் பேட்டைக்குப் போய் பேரறிவாளன் எங்கே என விசாரிக்கிறது போலீஸ். பேரறிவாளனின் தாய், 'அவனை நானே உங்களிடத்தில் அழைத்து வருகிறேன்’ எனச் சொன்னார். அதன்படியே, அடுத்த நாள் சென்னைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தார். அப்போது அவர்களை வளைத்த போலீஸ், 'சாதாரண விசாரணை’ எனச் சொல்லி பேரறிவாளனை அழைத்துச் சென்றது. உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்பட்டு இருந்தால், வலிய வந்து போலீஸ் விசாரணையை எதிர்கொண்டு இருப்பாரா? பெற்ற தாயே அவரை போலீஸிடம் நிறுத்தி இருப்பாரா?

பேரறிவாளன் ஈழத்துக்குப் போய் பிரபா கரனை சந்தித்ததாகவும், 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தைத் தயாரித்ததாகவும் கற்பனைகளைப் பரப்பியே அவரைத் தூக்கு வரை நிறுத்திவிட்டார்கள்.

சாந்தன் விஷயத்தில் அவருடைய பெயரே அவருக்கு எதிரியாகிவிட்டது. திருச்சி சாந்தன் என்கிற குண்டு சாந்தன் இறந்துவிட்டார். பெயர்க் குழப்பத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் ம.தி.சாந்தன் மீது திணித்து, அவரையும் கயிறுக்கு முன்னால் நிறுத்திவிட்டார்கள். நளினியின் கணவர் என்பதாலேயே முருகனை வளைத்தார்கள். ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதால், நளினியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஒரு தாய்க்குக் காட்டும் கருணையை தந்தைக்குக் காட்டாத விந்தையை எங்கே போய்ச் சொல்வது?''

''ராஜீவ் கொலையில் சந்திராசாமிக்கு தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறீர்களே... எதைவைத்து?''

''பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர், 'பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திராசாமி ஆசீர்வதித்தார். சம்பவத்தை முடித்துவிட்டு வரும் சிவராசனை பெங்களூர் வழியாக நேபாளம் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி இருக்கிறார்’ என தடா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். உடனே ரெங்கநாத்தை விசாரிக்கச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. அப்போதைய விசாரணை அதிகாரி டேபிள் வெயிட்டால் ரெங்கநாத்தை அடித்து, 'உண்மையைச் சொல்லாதே’ என மிரட்டி இருக்கிறார். பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைக்கச் சொன்ன ஜெயின் கமிஷன், அதில் முதல் ஆளாக விசாரிக்கச் சொன்னதே சந்திராசாமியைத்தான். 'இவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக இருக்கின்றன’ என ஜெயின் கமிஷன் பட்டவர்த்தனமாகச் சொன்ன பிறகும், அவரிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை. என்னிடம்கூட ஏழு முறை விசாரணை நடத்தினார்கள். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், அப்பாவி கள் தண்டிக்கப்படக் கூடாது’ என்பதுதான் நீதியின் நியதி. ஆனால், சந்தேகத் திமிங்கிலங்கள் வெளியே உலவ, அப்பாவிகள் தூக்கு மேடை முன் நிற்கிறார் கள்!''

''தூக்குத் தண்டனையை அரசு சீக்கிரமே நிறை வேற்ற முயல்வதாகச் சொல்லப்படுகிறதே?''

''ராஜீவ் கொலை யானபோது எடுக் கப்பட்ட வீடியோ பதிவு எம்.கே.நாராயணனிடம் கொடுக்கப்பட்டது. இன்று வரை மக்களின் பார்வைக்கு அந்த விவரங்கள் தெரிய வில்லை. கொலை நிகழ்ந்தபோது சந்திரா சாமி எங்கே இருந்தார் என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகளை வளைக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்று வரை விசாரணை நடத்தி வருகிறது. நாளைக்கே ஒரு நபரை அந்தக் குழு குற்றவாளியாக நிறுத்தினால், அதற்கு சாட்சியாக இந்த மூவரில் ஒருவர் தேவைப்படலாம். இப்போது தூக்கில் போட்டு விட்டால், முக்கியக் குற்றவாளியை நிறுத்தும் போது செத்தவர்களை உயிரோடு கொண்டு வருவார்களா?''

- இரா.சரவணன்

படம்: என்.விவேக்

நன்றி: ஜூனியர்விகடன் 31 ஆகஸ்ட் 2011

நன்றி:

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

indhiyavil pirandhdhu thamizhargalin kutrama

கருத்துரையிடுக