திங்கள், அக்டோபர் 06, 2008

அத்வானி-மோடி-கலாம்... வலதுசாரி அரசியலின் மூன்று முகங்கள்

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.

ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

பா.ஜ.கவின் சூலாயுதத்தின் மையத்தில் இருப்பது அத்வானியின் புதிதாக மேக்கப் போட்டு தயார் செய்யப்பட்ட சாத்வீகமான முகம். இன்னொரு வாஜ்பாயியாக தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை மக்களும் நம்ப வேண்டும் என்பதற்காக தசாவதாரம் கமல் போல என்னவோ செய்து, கமலைப் போலவே மண்ணைக் கவ்வி வருகிறார் அவர்.

தன்னை வாஜ்பாயியாக பாவிக்கும் போது அத்வானியாக இருக்க இன்னொருவர் வேண்டுமே! அதனால் தன்னையே மிஞ்சிய தனது இந்துத்துவ வாரிசான நரேந்திர மோடியை கலவர பேக்டரியின் சி.இ.ஓவாக நியமித்திருக்கிறார். சூலாயுதத்தின் இரண்டு முகங்கள் தயார்; மூன்றாவது? அதற்கான சரியான முகத்தை தேடி வந்தவர்களுக்கு இதோ இருக்கிறேன் என்று தனது பயங்கரவாத எதிர்ப்பு கருத்தை தெரிவித்தார் அப்துல் கலாம்.

இன்று இந்தியா சந்திக்கும் முக்கியமான பிரச்சனை பயங்கரவாதம் என்று கூறியிருக்கிறார் கலாம். இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் கரிசனம் எடுத்துக்கொள்ளும் கலாம் இந்தியா நியாயமாக சந்திக்கும் பிரச்சனையைப் பற்றி பேசினால் என்ன தவறு என்று கேட்காதீர்கள். என்ன சொல்கிறீர்கள் என்பதைவிட என்ன சூழலில் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். கொஞ்ச நாளாகவே பயங்கரவாதம்தான் முக்கிய பிரச்னை என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக பொது மக்களை திரட்டவும் முயன்று வருகிறது. அதை இந்தத் தேர்தலில் தனது வெற்றிக்கான துருப்புச் சீட்டாகவும் கருதுகிறது. இந்தச் சூழலில் கலாம் இவ்வாறு சொன்னது நிச்சயம் பா.ஜ.கவுக்கு சாதகமான, காங்கிரசுக்கு எதிரான விஷயம். இந்த அறிவிப்பு வந்த சில தினங்களிலேயே கலாமுக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அதை ஊடகங்களிடம் வெளியிடுகிறார் அத்வானி. "பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்த நீங்கள்தான் சரியான நபர். கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒன்று சேருங்கள்." எங்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்யுங்கள் என்றே அத்வானி நேரடியாக கேட்டிருக்கலாம். இந்தக் கடிதத்தின் அர்த்தம் அதுதான்.

பயங்கரவாத எதிர்ப்பை தாங்கள் பேசுவதைவிட ஒரு முஸ்லிமான, அரைவேக்காட்டு அறிவையும் மதிப்பீடுகளையும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் செல்லப் பிள்ளையான அப்துல் கலாம் பேசுவது மிகவும் பொருத்தமானது என்பது அவர்களின் கணக்கு.

ஆனால் அத்வானி கேட்பதை செய்யுமளவுக்கு கலாம் அப்பாவியல்ல. தனது இஸ்ரோ நாட்களிலேயே திறமைவாய்ந்த ' நடைமுறைவாதி' என்றுதான் கலாம் விவரிக்கப்பட்டிருக்கிறார். அதனால் பா.ஜ.க ஜெயிக்கும் முன்பே தனது அரசியல் சார்பற்ற பிம்பத்தை அவர் சிதைத்துக்கொள்ள மாட்டார்.

"பயங்கரவாதம்தான் முக்கியமான பிரச்சனை என்று சொல்லி நான்தான் பந்தை உங்களுக்காக செட் செய்து கொடுத்துவிட்டேனே!" என்று அவர் சொல்லக்கூடும். ஒரு வேளை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த உதவிக்காக கலாமுக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு தரக்கூட பா.ஜ.க முன்வரலாம். தங்களது இன அழித்தொழிப்பு அரசியலை மறைக்கும் முகமூடிக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அது போன்ற பேரம் முன்வைக்கப்பட்டால் கலாம் அதை மறுத்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதி என பல பொறுப்புக்கள் அவருக்கு பா.ஜ.க மூலம்தான் கிடைத்தன. சமீபத்தில் அமெரிக்க அணு சக்தி பேரத்தை கலாம் ஆதரித்ததுகூட காங்கிரஸ் சார்பு விஷயம் என்று கருத முடியாது. அணு ஒப்பந்தத்தை தொடங்கி வைத்ததே பா.ஜ.கதானே.

பெரிய அணு குண்டு முதலிய எல்லாமே வலது அரசியலின் பகுதி என்பதால் கலாம் அணு பேரத்தை ஆதரித்ததும் பா.ஜ.கவின் அணு சக்தி எதிர்ப்பு பாசாங்கு ஒதுக்கி வைக்கப்பட்டது. கலாம் அதை ஆதரித்த பிறகு கூடிய பா.ஜ.க கூட்டத்தில் அணு பேரத்தை நாம் எதிர்க்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் பாதி பேர் கூறியது, அவர்களது நீண்ட கால திட்டத்தில் கலாமுக்கு முக்கிய இடம் ஒதுக்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


கலாம் போன்றவர்களை முன்னிறுத்திவிட்டு, பா.ஜ.கவினர் திரைமறைவில் நடத்த நினைக்கும் இந்துத்துவ வேட்டைகளை ஏற்கனவே குஜராத்தில் தொடங்கி வைத்துவிட்டார் மோடி. குஜராத் இன அழித்தொழிப்புக்கு சாக்கு போக்காக பயன்படுத்தப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பற்றி எரிந்த விவகாரம் குறித்த நானாவதி கமிஷனனின் அறிக்கையை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் மோடி.

சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிந்ததற்கு திட்டமிட்ட சதிதான் காரணம் என்று சொல்கிறது அந்தக் கமிஷனின் அறிக்கை. பக்கத்தில் இருந்து பார்த்தது போல யார் ரயிலின் பெட்டிகளுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ கொளுத்தினார்கள் என்றெல்லாம் முஸ்லிம்கள் சிலரின் பெயர்களை பட்டியலிடுகிறது அந்தக் கமிஷன். இன அழித்தொழிப்பை நிகழ்த்திய அதே இந்துத்துவ அரசு நியமித்த கமிஷன்தான் இது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மத்திய அரசு நியமித்த யு.சி.பானர்ஜி கமிஷன் அறிக்கையோ அது வெறும் விபத்து என்கிறது. இரண்டு கமிஷன்கள் இரண்டு மாறுபட்ட அறிக்கைகளை கொடுத்திருப்பது நமது கமிஷன்கள் எந்த அழகில் இருக்கின்றன என்று காட்டுகிறது. எனினும் இந்த சமயத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்வது பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலின் தந்திரத்தைக் காட்டுகிறது.

2,000 பேரை கொன்று குவித்த தங்களது செயலை 49 பேர் இறந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பற்றி எரிந்த விவகாரத்தை வைத்து நியாயப்படுத்துகிறது. இந்துத்துவ வாக்கு வங்கியைச் சேர்ந்த மதில் மேல் பூனைகளை மீண்டும் மதவாதம் நோக்கி இழுக்கும் முயற்சி என்றும் இதைப் பார்க்கலாம்.

பா.ஜ.கவின் தேர்தல் சூலாயுதம் இதோ பட்டை தீட்டப்பட்டு தயாராகிவிட்டது. மோடியின் இந்துத்துவ சாதனைகள் அளவிட முடியாதவை. மோடி முன்னிறுத்தப்படுவதால் இந்தியாவையே குஜராத் ஆக்கிவிடலாம் என்று பா.ஜ.கவின் இந்துத்துவ அடிப்படைவாதிகள் பாபர் மசூதி இடிப்புக் காலகட்டம் போல கடும் உற்சாகத்துடன் களமிறங்குகிறார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பை வெற்றிகரமாக கலாமுடன் தொடர்புபடுத்திவிட்டதால் காங்கிரஸ் ஏற்கனவே நடுக்கத்தில் இருக்கிறது. இனி நடுத்தர வர்க்க வாக்கு வங்கியை வளைத்துவிடலாம் என பா.ஜ.க உற்சாகமாக இருக்கிறது. இந்த வாஜ்பாயியின் முகமூடிதான் அத்வானிக்கு சரியாகப் பொருந்தவில்லை. எப்படிப் பொருத்திப் பார்த்தாலும் முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் மதவாத விகாரம் தெரிந்துவிடுகிறது. ரொம்பவும் மிதமாகிவிட்டீர்கள் என்று பா.ஜ.கவினரும் இதெல்லாம் மிதவாதமே அல்ல என்று பொது மக்களும் கருதுவது அத்வானியை மிகவும் குழம்பச் செய்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் கொடுத்த மூக்கறுப்பு போல இந்த விஷயத்திலும் அத்வானி தனது பேவரைட் ஜோதிடர்களை அணுகக்கூடும். ஆனால் ஜோதிடர்களுக்கு பிம்பங்களை உடைக்கத்தான் தெரியும்; பிம்பங்களை கட்டமைக்கத் தெரியாது. பாவம் அத்வானி.


-மாயா


நன்றி: உயிர்மை.காம்

3 கருத்துகள்:

Robin சொன்னது…

//ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.//- சரியான கணிப்பு.

superlinks சொன்னது…

hai,
visit my blog.

Dr.Rudhran சொன்னது…

kalam was the ideal candidate for hindu fanatics who wanted to project a pseudo-secular face which is the only reason why he became the president..now with his popular image, he will naturally be wooed by the same gang...just let us wait and watch the politics of opportunists

கருத்துரையிடுக