சனி, செப்டம்பர் 27, 2008

நார்க்கோ சோதனையும்... ஆய்வுக்கூட எலிகளும்...!

உலக நாடுகளில் உண்மை, மனிதநேய, அறம், மற்றும் உடல்நல அடிப்படைகளில் நிராகரிக்கப்பட்டுவிட்ட நார்க்கோ சோதனை எனப்படும் போதைமருந்து விசாரணை முறை இந்தியாவில் நீதிமன்ற அனுமதியுடன் காட்சி ஊடகங்கள் அதைப் பற்றி திகில் திரைபடங்களுக்கு நிகராக பரபரப்பு செய்திகளை உடனடியாக வெளியிட, இதுவரை 700 பேர்கள் மீது நடத்தப்பட்டு விட்டது.

இச்சோதனையை அமெரிக்காவில் விசாரணைகளின் போது இப்போது பயன்படுத்துவதில்லை. இது உண்மையைச் சொல்லாத குற்றவாளியின் பிடிவாதத்தைத் தளர்த்தப் பயன்படலாம் எனச் சொல்லும் சி.ஐ.ஏ., குற்றவாளி வாக்குமூலங்கள் பெரும்பாலும் சித்தபிரமை பிதற்றல்கள் அல்லது கற்பனைத் தோற்றங்கள் என்கிறது. மேலும் இதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர் தரும் விலையோ பெரிது: சுழல் மன அழுத்தம், சுவாச அழுத்தம், நினைவிழப்பு இப்படிப் பல. மருந்து அளவு பிசகினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் கோமா நிலைக்குத் தள்ளப்படுவார். இத்தனை யோசிக்கும் சி.ஐ.ஏ. 11/9 விசாரணைக் கைதிகள் மேல் நார்க்கோ சோதனை செய்தது இது ஒரு விசாரணை முறை அல்ல சித்திரவதை என்பதை உறுதிப்படுத்துகிறது.

காவல் புலனாய்வு சக்திகள் அடக்குமுறை மற்றும் சித்திரவதைக்குப் பெரும்பாலும் பயன்படுப்படும் நம் இந்தியாவில் (தமிழகத்து போலீஸ் சித்திரவதை முகாம்களை சமீபத்தில் பட்டியலிட்டுள்ளது ஹிந்து நாளிதழ்; வாக்குமூலம் பெற இது போன்ற பங்களாக்கள் மற்றும் விடுதிகளில் வைத்து கைதிகள் வதைக்கப்படுவர்), பல்வேறு வழக்குகளில் வழக்கு விசாரணையை விரைவில் கொண்டு வருவதற்கு எனும் பாவனையில் இந்தக் கொடுமை மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது.

ஆருஷி தல்வார் கொலைவழக்கு விசாரணை எனும் பெயரில் ராஜேஷ் தல்வார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மீது நார்க்கோ சோதனைக்குப் பின்னும் சாட்சியமோ தடயங்களோ மாட்டவில்லை என்று கைவிரித்துள்ளது சி.பி.ஐ.

நித்தாலி வழக்கிலோ வீட்டுரிமையாளருக்குத் தெரியாமல் வேலையாள் குழந்தைகளை கசாப்பு செய்ததாய் நார்க்கோ சோதனையின் போது விபரீத வாக்குமூலம் தந்துள்ளான்.

தபால்தலை பத்திர ஊழல் தெல்கி, வீரப்பன் கூட்டாளிகள், கோத்ரா ரயில் எரிப்பு, மும்பை ரயில் வெடிகுண்டு, நித்தாலி கொலைகள், அபூ சலேம் என்று வரிசையாய் இந்தப் பிரபல வழக்குகள் ஒன்றை உறுதி செய்கின்றன.

இது போன்ற வழக்குகளை ஊதிப் பெருக்கும் ஊடகங்கள், தினசரி அதிரடி திருப்பங்களுக்காய் மாநில புலனாய்வுத் துறை அல்லது சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளைத் தீவிர அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. நம் ஊடகங்களுக்கு திகில் படங்களுக்கு இணையாக உடனடி முடிவுகள் தேவைப்படுகின்றன.

மனவியலாளர் டாக்டர். அனுருத்தின் கருத்துப்படி உண்மையை வெளியிடும் வாய்ப்புள்ள குற்றவாளிகளிடத்து மட்டுமே நார்க்கோ சோதனை பயன்படும். பொய் சொல்லும் நெஞ்சுரம் கொண்டோர் அரை உறக்க நிலையிலும் பொய் விளம்பும் வாய்ப்பு நிறைய உள்ளது.

நாக்பூர் சிறையில் உள்ள நக்சலைட்டு அருண் பெரேரா நார்க்கோ சோதனையின்போது, சிவசேனா தலைவர் பால் தாக்ரேவும் பி.ஜெ.பி.யின் மாணவர் அணியான அகில பாரதி வித்தியார்த்தி பரிஷத்தும் மும்பையில் மாவோயிச நடவடிக்கைகளுக்குப் பொருளாதரவு தருவதாய்க் கூறினார். இது பொய்யாகவோ, மயக்க மருந்தின் போதனையில் அருணின் மனம் புனைந்த பிரமையாகவோ இருக்கலாம். வலதுசாரிக் கட்சி ஒன்று இடதுசாரித் தீவிரவாதிகளை ஆதரிப்பதாய்ச் சொல்வதை வேறெப்படி விளக்க.

தமிழ் நாடு வழக்காய்வு அறிவியல் துறையில் முன்னாள் இயக்குனரான டாக்டர் சந்திரசேகரன் இந்தச் சோதனையின் வேறு சில விபரீத வாக்குமூலங்களைக் கூறுகிறார்: "ஒரு சோதனைக்குட்படுத்தப் பட்டவர் தனக்கில்லாத குழந்தையை உள்ளதாய்ச் சொன்னார், மற்றொருவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தன் இரண்டாவது தந்தையைக் கொல்லப்போவதாய்ச் சூளுரைத்தார், திருடப்பட்ட பொருளை வாங்கிய இன்னொருவர் தானே திருட்டுக் குழுவில் இருந்ததாய்க் கூறினார்".

இப்படிச் சொல்லப்போவது பொய்யாகவோ, விபரீதக்கற்பனையாகவோ இருக்கும்போது பிரபல வழக்குகளில் நம் புலன்விசாரணை நிறுவனங்கள் நார்க்கோ விசாரணைக்காய்ப் பாய்வது ஏன்?

ஆருஷி தல்வார் வழக்கில் நார்க்கோ விசாரணையில் கிருஷ்ணா குற்றம் ஒப்புகொண்டதாய் அவசரமாய் அறிவித்து, பிறகு நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப் போதியம் சாட்சியம் இல்லையென சி.பி.ஐ அபத்த நாடகமாடி தங்களைக் கோமாளிகளாய்க் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

ஊடகங்களின் பரபரப்புக்கு ஈடு கொடுத்து தங்கள் பிம்பத்தைப் பாதுகாக்கும் அழுத்தமா? அரசியல் தலையீடா?

தேவஸ்தாலி கொலை வழக்கில் காவல்துறை குற்றவாளியின் நார்க்கோ சோதனை அறிக்கையை மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கத் தயங்குகிறது. குற்றவாளிக்கு சாதமாய் இது அமையும் எனக் காவல் துறை அஞ்சுவதே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஆக இதுபோன்ற அறிவியல் விசாரணைகளில்கூட புலன்விசாரணைத் துறைக்கு வசதியான உணமைகளில்தான் ஈடுபாடு. முழுமையான உண்மையில் அல்ல.

நார்க்கோ சோதனையின் போதான குற்றவாளியின் வாக்குமூலம் சுயவிருப்பமானது என சென்னை உச்ச நீதிமன்றம் 2006-இல் அளித்த தீர்ப்பும், இதை ஒட்டிய கேரள, மும்பை மற்றும் குஜராத் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் காவல், விசாரணை அராஜக நிறுவனங்களின் ஆதரவுக் கரமாக நீதிமன்றங்கள் பல நேரங்களில் செயல்படுவதைக் காட்டுகிறது.

இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளி சட்டரீதியாய்த் தன்னைப் பாதுகாக்கும் அடிப்படைக் குடியுரிமையை இழக்கிறான். தனக்கெதிராய் தானே சாட்சி சொல்லும் சட்ட அபத்தத்தை நிகழ்த்துகிறான்.

நீதிமன்றங்கள் தனிமனித அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, அறம் பற்றி யோசித்து இப்போதெல்லாம் மண்டை காய்வதில்லை. பொதுமக்கள் கவனம் குவியும் உணர்வுபூர்வமான வழக்குகளில் அரைகுறை சாட்சியம் (ராஜீவ் காந்தி கொலை வழக்கு) போதும், புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆதரவாய் அல்லது மக்களின் உணர்வுகளுக்கு சாதகமாய்த் தீர்ப்பளித்து தேசபலி கொடுப்பதில் நீதிமன்றங்கள் சளைக்காமல் செயல்படுகின்றன.

நார்க்கோ சோதனைக்கான நீதிமன்ற ஒப்புதலுக்கு குற்றவாளி நேரடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காவல் துறை நீதிமன்றத்திடம் சொன்னால் போதும். அனுமதி தயார். சித்திரவதை முகாமுக்கான நுழைவு வாயில் மட்டுமே நம் நீதிமன்றங்கள்.

அரசியல் தலைவர்கள் மத்தியில்கூட இது ரொம்ப பிரபலம். பா.ஜ.க. தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமர்சிங்கை பாராளுமன்ற ஊழல் தொடர்பாக இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சிறு கற்பனை: தமிழகத்தில் ஒருவேளை அடுத்த ஆட்சியின் போது சில எதிர்க்கட்சித் தலைவர்கள் நள்ளிரவில் அரைத்தூக்கத்தில் மயக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதுக்கப்பட்ட பொது வினியோக அரிசி மூட்டைகள் அல்லது நொறுங்கி விழக் காத்திருக்கும் மேம்பாலங்கள் பற்றிய உண்மைகளை ஒப்புக்கொள்ளச் செய்யப்படலாம். அப்போது பெண்டதோள் சோடியம் அதிகப்படியாய் வேலை செய்தால், நம் அரசியல் தலைவர்கள் விசாரணையின் போது கற்பனைவளம் தூண்டப்பட்டு தாம் அண்ணா, காமராஜ், எம்.ஜி.ஆரின் மறுபிறப்பென்றோ, நேரடி ஆசீர்வாதம் பெற்ற வழித்தோன்றல் என்றோ அறிக்கை விட்டு, பற்பல எதிர்கால நார்க்கோ அரசியல் பேட்டிகளுக்கு, அதன் மூலம் தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பர வருவாய் பெருக்கத்துக்கு வழிகாணலாம். .

துணையாதாரம்: ரேப் ஆப் தெ மைண்டு, என். பானு தேஜ், தெ வீக்,
செப்டம்பர் 21, 2008

-ஆர்.அபிலாஷ்
நன்றி: உயிர்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக