வியாழன், செப்டம்பர் 11, 2008

கலைஞருக்கும், பழ. நெடுமாறனுக்கும் அப்படி என்னத்தான் விவகாரம்..? (அ) தசரதன் முடியும்... தவுசண்ட் வாலா வெடியும்!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஆளு சரியில்லேன்னு புதுவை முதல்வர் ரங்கசாமியை மாத்தின மாதிரி நம்ப சித்தனையும் பதவி நீக்கம் செய்தாதான் சரி வரும். ஆளு அலப்பறை டீமை கூட்டாம அடிக்கடி எஸ்கேப் ஆகிடறாரு..." -என்று தண்டோரா போடாத குறையாக எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம்! கடுப்பாகிப் போன சித்தன், கோட்டையில் உள்ள சர்ச் மரத்தடியில் அலப்பறை கூட்டத்தை கூட்டினார்.

முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்ட சித்தன் "நாட்டு நலன் வேண்டி கொஞ்ச நாள் மௌன விரதம் இருந்தேன். அம்புட்டுதான். அதுக்கு போய் ஆளமாத்துன்னு கோஷம் வைக்கலாமா? சரி சரி... நாட்டுல என்ன விசேஷம். என்ன நடந்துகிட்டு இருக்கு...?" என்றார் ஆர்வமாக.

ஆங்... காஷ்மீர் அமர்நாத் கலவரம் இன்னும் ஓயலே... கூடவே, பாகிஸ்தான் தீவிரவாதிங்க வேற உள்ளே நுழைஞ்சு அழிச்சாட்டியம் பண்றானுங்க. ஒரிசாவுல மதக்கலவரம். நிறைய பேரு கொல்லப்பட்டிருக்காங்க. கலவர பயத்துல ஊர் மக்கள் கூட்டம் கூட்டமா இடத்தை காலி பண்றாங்க. பீகார்ல ஒரே மழை வெள்ளம். லட்சக்கணக்கான மக்கள் ஊரை காலி செய்துக்கிட்டு வாராங்க... இது போதுமா? இன்னும் வேணுமா...? என்று நக்கலடித்தான் சுவருமுட்டி!

நீ போதை பார்ட்டி, ரொம்பத்தான் கலாய்க்கிற. உன்னை டாக்டர். ராமதாஸ்கிட்டத்தான் கொண்டு போய் விடணும். அப்பதான் அடங்குவே... என்ற சித்தன், கலைஞருக்கும், பழ. நெடுமாறனுக்கும் அப்படி என்னத்தான் விவகாரம்..? ஒரேடியா முட்டிக்குறாங்களே..." என்றார்.

அது பெரிய கதைப்பா. முன்னாடி இலங்கை தமிழர்களுக்கு மருந்து, மாத்திரை கூட இல்லியேன்று நெடுமாறன் கவலைப்பட்டாரு. ஆளுங்களை பிடிச்சு, நிதி திரட்டி அதை ஏற்பாடு செய்துட்டாரு. ஆனா அனுப்ப முடியல. சென்ட்ரல் கவர்மெண்ட் அனுமதி கிடைக்கலே... தமிழினத்துக்கு தலைவர்னு சொல்ற கலைஞர் சென்ட்ரல் கவர்மெண்ட்டுகிட்ட பிடிவாதமா சொல்லணும். ஆனா, அவரும் அப்படி ஏற்பாடு செய்யல. பதவி சுகத்துக்காக சென்ட்ரலை மிரட்டுகிற கலைஞர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் மிரட்டக்கூடாதுங்கிறது பழ. நெடுமாறன் வாதம்.

அந்த கடுப்புல ஒரே ஒரு தலை முடி நரைச்சவுடனேயே, தசரதன், மூத்தமகன் ராமனுக்கு முடிசூட்டி அவரை மன்னராக்கிட முடிவு செய்தார். ஆனா தள்ளாத வயதிலேயும், கலைஞர் பதவியிலேயே குந்திகிட்டு இருக்காரே ஏன்...? என்று குடைஞ்செடுத்துட்டாரு.

அதுல டென்ஷனான கலைஞர், "நீ காமராஜரோட முதுகுல குத்திவிட்டு கவுத்தே. அண்ணாவை கூட இருந்தே காலை வாரிவிட்டே. புலிகள் பேரை சொல்லி பணம் பார்த்து தமிழின துரோகியானே. உன் கதை இவ்வளவு இருக்கும் போது நீ, தசரதனின் நரைத்த மயிர் கதைய எடுத்துகிட்டு வந்திட்டியா"ன்னு தாக்கிப்புட்டாரு தாக்கி.

பதிலுக்கு கோபமான பழ. நெடுமாறன், "நாகர்கோவில் தொகுதி தேர்தல்ல காமராஜருக்கு எதிரான வேலை பார்த்து துரோகம் செய்தது நீங்க. நாவலர் நெடுஞ்செழியனுக்கு கிடைக்க வேண்டிய பதவிய, அவரை கவுத்துட்டு பறிச்சு அண்ணாவுக்கே துரோகம் செய்தது நீங்கன்னு வரிசையா பட்டியல் போட்டு கடைசி காலத்துலயாவது உண்மைய பேசிட்டு போங்க, பொய்யா பேசாதீங்க"ன்னு அறிக்கை வுட்டாரு.

அடடே இம்புட்டு விஷயம் வெளியே வருதேன்னு ஊர் முழுக்கவும் இதான் இப்ப பேச்சா இருக்கு என்றார்.

குறுக்கிட்ட சுவருமுட்டி "போயா ங்கொய்யால... என்ன சமாச்சாரம்னு கேட்டா கதை சொல்றியா நீ.? ஏம்பா, இலங்கை தமிழருக்கு மருந்து கொண்டுகிட்டு போகணும்னு நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்தப்போ, கலைஞருக்கு அது தர்ம சங்கடமா போச்சு. உண்ணாவிரதத்தை கைவிடச் சொன்னாரு. நெடுமாறன் ஒத்துக்கிடல. உடனே டாக்டர் ராமதாஸை அனுப்பி சமாதானம் பேச வச்சாரு. இது விஷயமா கலைஞர்கிட்ட நேர்ல பேசலாம். அதுக்கு அவரும் சம்மதிச்சிருக்காருன்னு டாக்டர் சொன்னதால விரதம் முடிவுக்கு வந்துடுச்சு.

ஆனா, சொன்னபடி பழ. நெடுமாறனை கலைஞர் சந்திக்கலை. நாளு வாரமாகி, வாரம் மாதமான பிறகும் கலைஞர் அப்பாயின்மெண்ட் கிடைக்குல. ஒரு சமயத்துல திருமாவளவனும் கலைஞரை சந்திச்சப்ப சந்திப்பு பற்றி பேசியிருக்காரு. அவரும் நேரம் ஒதுக்கினாரு. அப்போது பழ. நெடுமாறன் போகலையாம்.

சொன்ன வாக்குறுதிய காப்பாத்த முடியல. மாசக் கணக்குல இழுத்தடிச்சுட்டு, இப்போ வரச் சொன்னா எப்பிடி..? வாங்கி வச்ச மருந்து மாத்திரை எல்லாம் வீணா போயிடுச்சேன்னு இவர் கோபம். இந்த பின்னணிதான் தசரதனின் நரைத்த முடி கதை தெரியுமா..." என்று போட்டு உடைத்தார் சுவருமுட்டி.

"சரிப்பா, இப்ப இன்னொரு மேட்டரு தெரிஞ்சுக்கணும்... ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி நளினி விடுதலைக்கு எதிரா கலைஞர் அரசு மனுத்தாக்கல் பண்ணுச்சே..." -அன்வர் பாய்.

ஆமாம்பா... உலகத் தமிழருங்க எல்லாமும் இந்த விஷயத்ததான் கவனிக்குறாங்க. நளினி பதினேழு வருஷமா ஜெயில்ல இருக்காங்க. ஏன் அவங்களை விடுதலை பண்ணக் கூடாதுங்கிறதுதான் கேள்வி.

அந்த அடிப்படையிலதான் நளினி விடுதலை பண்ணுங்கன்னு கேட்குறாங்க... ஆனா, கோர்ட்டுக்கு பதில் சொன்ன கலைஞர் அரசு அப்படி விடுதலை செய்ய முடியாது. இலங்கையில இப்ப போர் நடக்குது. அவரை விடுதலை செய்தா திரும்பவும் போராளிகளுக்கு ஆதரவா வேலை செய்ய மாட்டாங்கன்னு என்ன உத்ரவாதம்.

காந்திய கொன்ன கோட்ஸேவுக்கும், இப்படித்தான் விடுதலை கேட்டாங்க. ஆனா ஒப்புக்கிடலை. அது மாதிரிதான் நளினிக்கும் பொருந்தும்னு கட் அண்ட் ரைட்டா சொல்லியிருக்கு. இது தமிழர் நலன் விரும்பிங்க மத்தியில பெரிய சர்ச்சையா கிளம்பியிருக்கு. தமிழர்களின் விஷயத்தில் பெரிய வரலாற்று தப்பையே கலைஞர் செய்துட்டாருன்னு புலம்புறாங்க... என்றார்.

முந்திரிக் கொட்டை மாதிரி எப்போதும் முந்திக்கொள்ளும் சுவருமுட்டி சுந்தரம். ஐயோ... ஐயோ... இப்படி மேலோட்டமா பேசினா எப்பிடி? அண்டர்கிரவுண்ட் மேட்டரை பேசுங்கப்பா...." என்று சிரித்தவர்...
இந்த நளினி விடுதலை விஷயத்துல கலைஞர் ஆதரவா இருக்குற சுப. வீரபாண்டியன், திருமாவளவன் மாதிரி ஆட்கள் என்னா சொல்லப் போறாங்கங்கிறதுதான் மேட்டரே...

இவிங்க வெளிப்படையா கலைஞர் பக்கம் நிக்குறவங்க. அதே நேரத்துல அங்க தமிழீழம் விஷயத்திலும் ரெண்டு மடங்கு பிடிவாதமா இருக்கிறவங்க... கலைஞர் அரசு இப்போ இப்படி பதில் சொன்னது, அவங்களுக்கு பெரிய்ய... தர்ம சங்கடமா போயிடுச்சு. இன்னேரம் வேற ஆளுங்க முதல்வர் பதவியில இருந்திருந்தா ஒரு ஆட்டம் காட்டி களம் இறங்கியிருபாங்க.... இப்போ என்னா பண்றதுன்னு விழிக்குறாங்க.

இந்த விஷயத்துல டாக்டர். ராமதாஸ், வைகோ, பழ. நெடுமாறன் எல்லாம் பார்த்தீங்களா அவர் தமிழ் இனத்துக்கு செய்ற வேலைய. ஆனா, நான்தான் தமிழின தலைவருன்னு சொல்வாரு தமிழீழ மக்களுக்கு வலுவா எதையும் செய்ய மாட்டாரு. மத்தவங்களையும் செய்ய விடமாட்டாரு. எப்பவும் இப்படித்தான்.... அப்பிடின்னு சவுண்ட் விட ஆரம்பிச்சுட்டாங்க. இதுல அடுத்த கட்ட அரசியல் என்னாங்கிறது இனிமேதான் தெரியும்... என உரித்துக் காட்டினார்.

"சரிப்பா. மதுரையில என்னா சவுண்ட் கேட்குது. நிலவரம் இன்னும் கலவரமாகத்தான் இருக்கா? சென்னை வரைக்கும் வந்து குரல் கொடுக்கிறாங்களே... முதல்வர் காதுக்கு எட்டாதா?"
எட்டினாலும் என்ன பண்ணுவாரு. கேபிள் டி.வி. யுத்தம் இன்னும் வேகமா நடக்குது.

அழகிரி தரப்பு சன் டி.வி. கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டி அவிங்க பக்கம் சேர சொல்றாங்கன்னு புகார். மதுரை போலீஸ்கிட்டயிருந்து நடவடிக்கை இல்லே. அதனால சென்னைக்கே வந்து மீடியாவை சந்திச்சிருக்காங்க. இது பற்றி நம்ப ஆளுங்ககிட்ட விசாரிச்சேன். சகோதரர்கள் பக்கம் இப்போ வாய்ப்பு கூடிகிட்டு வருதாம். அத வச்சு மதுரைக்காரர் மேல ஏதாவது பிரச்னை கிளப்பி அவரை உண்டு இல்லேன்னு ஆக்கிடறதுன்னு கங்கனம் கட்டி கிட்டு நிக்குதாம். முடிஞ்சு போன விஷயத்தை திரும்பவும் ஊர் பெருதாக்கி பாக்குதாம் சகோ தரப்பு. கூடவே மீடியா பலம் வேற இருக்கு இல்லே. இப்போ கொஞ்ச நாளா பார்த்தா, அவிங்க மீடியாவுல அரசுக்கு எதிரான களேபர டைட்டில் நியூஸ்தான். குடும்ப சண்டை உச்சத்தை எட்டியிருக்குன்னு பேசிக்குறாங்க... என்றார் கோட்டை கோபாலு.

"ஏன்யா... இது பெரிய இடத்து மேட்டர். ரொம்ப கிளற வேணாம். விளைஞ்சா கடைக்கு வந்துதான் ஆகணும். அப்போ வச்சுக்கிடலாம் கச்சேரிய..." என்ற சித்தன்...

நான் அவாள் -சவால் மேட்டருக்கு வர்றேன். அதான்பா கலைஞர் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜனை மனசுல வச்சு நன்றி கெட்டவர்கள் நிலை கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யான்னு கவிதை எழுதினாரே அது பற்றி..."
குறுக்கிட்ட அன்வர்பாய் யோவ் அதுதான் முடிஞ்சுபோன விஷயமாச்சே. ஏற்கனவே பேசி முடிச்சுட்டமே. இன்னும் என்னா...? என்றார்.

நீ ஆட்டோ மீட்டர் மாதிரி எரியாதப்பா. பொறுமையா கேளு. இப்போ சொல்லப் போறதுதான் மேட்டரு. அதாவது நாடாளுமன்ற நியமன எம்.பி. தேர்தல் அப்போ, அ.தி.மு.க. தனக்கு கூடுதலா இருக்குற எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்களை மனசுல வச்சு, கூடுதலா ஒரு எம்.பி.ய நியமிக்கறதா இருந்துச்சு. அதுக்கு ரெண்டு எம்.எல்.ஏ. ஓட்டு வேணும். சீறிப்பாயும் கட்சியில சலசலப்பை கொடுத்துக்கிட்டு இருக்கும் அந்த வசதியான எம்.எல்.ஏ.வையும், தி,மு.க.வுலேயே அதிருப்தியா இருக்குற இன்னொருத்தரையும் சாதகமா பேசி முடிச்சுட்டு அந்த ஒரு எம்.பி. சீட்டை வைகோவுக்குன்னு சொன்னாங்க. ஆனா அவரு, யாராவது ஒருத்தர் காலை வாரி விட்டாலும் கவுந்துடுவோம். குறிப்பா நான் எம்.பி. ஆகறது கலைஞருக்குப் பிடிக்காது. எப்படியாவது உள்ளடி வேலை பார்த்து கவுத்துடுவாருன்னு அந்த சீட் வேண்டாம்னாரு.

அப்போதான் இப்போ கரண்ட விஷயத்துல தலை உருள்ற ஒளி மயமான அந்த அமைச்சர், அ.தி.மு.க.வுல தோழிகிட்ட பேசியிருக்காரு. எங்க கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதை ஒதுக்குறோம். கண்டுக்காம இருக்கச் சொல்லிடுங்க அப்படின்னாராம். அங்கு மீடியேட்டரா இருந்தவரு, அமைச்சர் உறவினரான பாலு பிரமுகர்தானாம். அதாவது கம்யூனிஸ்ட்டுக்கு அதுவும் டி.கே. ரங்கராஜனுக்கு சீட்ன்னு ஏற்பாடு பண்ணியது அந்த ஒளி மந்திரிதானாம்.


தன் ஏற்பாட்டுல நிக்குற வேட்பாளர் தோற்றுவிடக் கூடாதேன்னு அம்மா தரப்புக்கிட்டே பேசினதும் அவருதான்...ஆக, கம்யூனிஸ்ட்களுக்கு வாய்ப்பு கொடுத்தது அம்மா தானே ஒழிய அய்யா இல்லே... அப்படின்னு அந்த மந்திரிகிட்டயே இருக்குற ஆளு உண்மைய போட்டு உடைக்குது. சரி நான் வேற விஷயத்துக்கு வாரன். கலைஞரோட இளைய மகன் மு.க.தமிழரசு மகளுக்கு கல்யாண ஏற்பாடு. கோவையிலதான் மாப்பிள்ளை. அது விஷயமா பேசிட்டு வர ஸ்டாலின், தயாளு அம்மாள், சகோதரர்களின் சித்தியாக இருக்கும் செல்வி எல்லாம் போயிருக்காங்க. அப்போ, கவிதாயினி கனிமொழியும் போய் சேர்ந்திருக்காங்க.... ஆக, இந்த நல்ல விஷயத்துக்கு மதுரைக்காரர் குடும்பத்திலிருந்து ஒருத்தர் கூட வந்து சேர்ல. அவர் மட்டும் அப்படியே நிக்குறாரு. புரியுதா? என்ன நடக்கிறதுன்னு தெரியுமா?...?" என்று சூசகமாக சிரித்தபடியே எழுந்தார் சித்தன்.

ஒட்டுக்கேட்டவர்: பா. ஏகலைவன்
நன்றி: குமுதம் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக