சனி, மே 21, 2011

உலகமயமாதலுக்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் பினாயக்கின் நிலையை பகிர்பவர்களே!

கார்ப்பரேட்டுகளுக்கு சார்பான உலகமயமாதலுக்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் பினாயக்கின் நிலையை பகிர்பவர்களே.

அனசுயா சென், இவர் பினாயக் சென்னின் தாய். தனது செல்ல மகன் ரானா, பினாயக் சென்னாக வளர்ந்தது குறித்து சந்திரசேகர் பட்டாச்சார்ஜியிடம் பகிர்ந்து கொண்ட நேர்காணலிலிருந்து....

மார்ச 25, 2011 11:33

கார்ப்பரேட்டுகளுக்கு சார்பான உலகமயமாதலுக்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் பினாயக்கின் நிலையை பகிர்பவர்களே.

அனசுயா சென், இவர் பினாயக் சென்னின் தாய். தனது செல்ல மகன் ரானா, பினாயக் சென்னாக வளர்ந்தது குறித்து சந்திரசேகர் பட்டாச்சார்ஜியிடம் பகிர்ந்து கொண்ட நேர்காணலிலிருந்து....


பினாயக் குழந்தையாக எப்படி இருந்தார்?

அவன் மிகவும் சுட்டிப்பையன். பிறந்து 11வது மாதத்தில் வெந்நீரில் கையை விட்டு காயம் ஆகிவிட்டது. நான்கு வயதில் நெருப்பிடப்பட்ட உலர்ந்த இலைக்குவியலில் காலை விட்டுவிட்டான். அப்போது நாங்கள் லக்னோவில் குடியிருந்தோம்.


சகோதர சகோதரிகளுடன் பினாயக்கின் உறவு எவ்வாறு இருந்தது?

குழந்தை பருவத்திலிருந்தே பினாயக் குடும்பத்தினரிடம் அன்பாக இருப்பான். சகோதரர்களிடம் மட்டுமல்ல, வீட்டு பணியாளர்களிடமும் பிரியத்துடன் பழகுவான். ஊட்டிக்கு அருகே உள்ள வெலிங்டனில் அவனது தந்தைக்கு ராணுவ மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு வந்தது. அப்போது ரானாவுக்கு 6 வயது. எங்களது வீட்டு உதவியாளனாக இருந்த ஜானுக்கு தரையில் அமரவைத்து உணவு தருவோம். அப்போது ஒருநாள் ரானா எங்களிடம், ஜானை ஏன் மேஜையில் உட்கார வைக்காமல் தரையில் இருக்க வைக்கிறீர்கள் என்று கேட்டான். எனது பதில் அவனை திருப்திப்படுத்தவில்லை. தன்னுடன் மேஜையில் ஜானை உட்கார வைத்த பின்பே அவன் நிம்மதியானான்.

பினாயக்குக்கு பிடித்த உணவு எது?

மீன் மற்றும் இறைச்சியில் அதிக பற்று உண்டு. பள்ளி நாட்களில் நாங்கள் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோம். அப்போதெல்லாம் அவன் கொஞ்சம் கூடுதலாய் நான் வாங்கிக்கொள்ள அனுமதியுங்கள் என்று சொல்வான். ஒருநாள் அவனது மருத்துவ கூட்டாளிகளுக்காக சமைக்கப்பட்டிருந்த அத்தனை மீனையும் அவனே சாப்பிட்டுவிட்டான். ஆனாலும் சோறும் பருப்புக் குழம்பும்கூட அவனை திருப்திப்படுத்திவிடக்கூடியது. எளிமையான உணவு இருந்தாலும் அதைப்பற்றி புகார் சொல்லமாட்டான். சங்கர் குகா நியோகி நடத்திய ஷர்மிக் மருத்துவமனையில் பருப்பு சாதம் சாப்பிட நன்கு பழகிக்கொண்டான். வெங்காயம், எலுமிச்சை அல்லது பச்சை மிளகாய் துணைக்கு இருந்தால் போதும்.

கிறிஸ்துவ திருச்சபைகளின் தாக்கம் அவருக்கு இருந்ததா?

இருந்திருக்கலாம். வேலூர் சிஎம்சியில் தனது மருத்துவ படிப்பை முடித்த பின்பு வங்கதேசத்தில் உள்ள குல்னா திருச்சபை மருத்துவமனையில் அவன் வேலைபார்த்தான். அப்போது அந்த தாக்கம் அவன்மீது படிந்திருக்கலாம். ஆனால் லண்டனில் உள்ள எம்ஆர்சிபியில் படித்து பட்டம் செல்வதற்கு மறுத்துவிட்டான். அவனது அப்பா அதற்காக செலவு செய்ய தயாராகவே இருந்தார்.

இலினாவை அவர் எங்கே சந்தித்தார்?

இலினாவை அவனுக்கு ஏற்கெனவே தெரியும். எங்களுக்கு தூரத்து உறவும்கூட. இலினா ஜபல்பூரில் குடும்பத்துடன் இருந்தார். நாங்கள் அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகரில் குடியிருந்தோம். அந்த சமயத்தில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தத்தெடுத்து இரண்டு மகள்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வார்தாவில் தனது பணியையும் பார்த்துக்கொண்டு அவள் பினாயக்குக்கு உதவி வருகிறாள். அத்துடன் குழந்தைகளை கவனிப்பதிலும் சளைப்பதில்லை. அவள் துர்க்கையை போன்றவள். 10 கைகள் இருக்கிறது.

இலினாவும் பினாயக்கும் சேர்ந்து செய்யும் பணிகள் எவை?

சத்தீஸ்கரில் அவர்கள் ருபாந்தர் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பாக்ரும் நலா கிராமத்தில் அவர்களுக்கு மருத்துவமனை ஒன்றும் உள்ளது. அத்துடன் ஏழை குழந்தைகளுக்கு முறைசாரா கல்வி, ஆரோக்கிய சேவை, எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரம், பெண்கள் தன்னிறைவு ஆகியவற்றில் பணிசெய்து வருகிறார்கள். ஏழை ஆதிவாசி மற்றும் தலித் குழந்தைகளுக்கு கலாச்சார செயல்பாடுகளை கற்றுக்கொடுத்து திறனுள்ளவர்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் செய்யும் செயல்களை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். வார்தாவி¢ல உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தில் இலினா பேராசிரியையாக பணிபுரிந்தாலும் ருபாந்தரிலும் உற்சாகத்துடன் பணிபுரிகிறார்.

பினாயக் சென் கைதாவார் என்று எப்போது தெரியும்? உங்கள் எதிர்வினை என்ன?

2007 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பினாயக் தன் குடும்பத்தினருடன் என்னை பார்க்க வந்தான். எனது பேத்தி தான் இச்செய்தியை கூறினாள். அப்போது பினாயக்கும் அங்கு நின்றிருந்தான். நான் அவனிடம் ஏன் என்று கத்தினேன். ஏழைகளுக்கு சேவை செய்ததற்காக இந்த அரசியல் பழிவாங்கலை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தவறு எதுவும் என் பக்கம் இல்லை என்று கூறினான். சட்டீஸ்கர் திரும்பும்போது முன்ஜாமின் பெறமுயன்றான். முதலில் அவன்மீது எந்த வழக்கும் இல்லை என்று போலீஸார் பொய் கூறினார்கள். ஆனால் ராய்பூரிலிருந்து வந்த ஒரு குழு அவனை கைது செய்தது. சல்வார்ஜுடும் படையை எதிர்த்ததினாலேயே அவன் கைது செய்யப்பட்டான் என்று எனக்கு தெரியும்.

மாவோயிஸ்டுகளுக்கு மருத்துவம் பார்த்ததாக பினாயக் மீது புகார் உள்ளதே?

சிறையில் மாவோயிஸ்டுகளுக்கு சிகிச்சை செய்தானா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படி செய்திருந்தால் அது சிறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் எப்படி நடந்திருக்க முடியும்? அப்படியும் செய்திருந்தாலும் அதில் தவறென்ன? அவனது தந்தை ஒரு ராணுவ மருத்துவர். அவர் காயம்பட்ட பாகிஸ்தான் ஜவானுக்குக்கூட மருத்துவமனைக்கு எடுத்த சென்று சிகிச்சை செய்திருக்கிறார். யாராக இருந்தாலும் நோயாளி ஒருவனுக்கு சிகிச்சை செய்யவேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் எடுத்துக்கொள்ள உறுதிமொழியாகும். பினாயக் அரசால் கைவிடப்பட்ட எத்தனையோ ஏழை கிராமத்தினருக்கு சிகிச்சை செய்திருக்கிறான்.

சத்தீஸ்கரில் தற்போது நிலைமை எப்படி இருக்கிறது?

நரகம்போல சூழ்நிலை நிலவுகிறது. இங்குள்ள பொதுமக்கள் படும் அவதியை ஒருவரால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. பினாயக்கை போன்ற இன்னொரு காந்தியவாதியான இவான்ஷு குமாரின் ஆசிரமத்தையே அரசு அழித்துவிட்டது. ஏழைகளுக்கு சார்பாக நின்று சல்வார்ஜுடும் படையை எதிர்த்ததுதான் அவர் செய்த குற்றம். அவரது ஆசிரமம் அழிக்கப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு அவரை பார்த்தேன். அவர் சிரித்து கொண்டிருந்தார். தைரியமும் அர்ப்பணிப்பும்தான் அவர்களை இந்த உயரத்துக்கு கொண்டுவந்துள்ளது.

சமீபத்திய உயர்நீதிமன்ற உத்தரவு பற்றிய உங்கள் கருத்து என்ன?

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்று எங்களுக்கு நன்கு தெரியும். எனது மருமகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளாள். அங்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பினாயக் வழக்கில் நடந்த நீதி முறைகேட்டை பற்றி மிகப்பெரிய ஆளுமைகளும் நோபல் பரிசு பெற்றவர்களும் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும் கூட தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

நீங்கள் பினாயக்கின் விடுதலையை விரும்புகிறீர்களா?

நான் நிபந்தனையற்ற விடுதலையை விரும்புகிறேன். அத்துடன் காரணமில்லாமல் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அனைவரது விடுதலையையும் நான் கோருகிறோம். நான் பினாயக் சென்னின் தாய்மட்டுமல்ல. நான் மேற்சொன்ன அனைவருக்கும் தாய்தான்.

பினாயக் சென்னை விடுதலை செய்யும் இயக்கம் தற்போது சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எப்படி உணர்கிறீர்கள்?

கடந்த 20 ஆண்டுகளாக கார்ப்பரேட் ஆதரவு உலகமயமாதல் நம்மை பீடித்துள்ளது. அரசுகள் இந்த சூழ்நிலையை விரும்பி உருவாக்குகின்றன. இப்பின்னணியில்தான் பினாயக் போன்றவர்கள் பலியாடுகளாக மாற்றப்படுகின்றனர். நான் பினாயக் எழுதிய தனிப்பட்ட குறிப்பு ஒன்றில், "உனது வேலை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பெரிதாக எனக்கு தெரியாது. ஆனால் உன்முன் பணிந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று எழுதியிருந்தேன். ரானா அதற்கு பதிலாக, அம்மா நான் ஒருபோதும் உன்னைவிட பெரியவன் அல்ல என்று எழுதியிருந்தான்.

நன்றி: சன்டே இந்தியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக