வெள்ளி, ஆகஸ்ட் 15, 2008

வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவன்தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா!

ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா?

இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

இது அபிநவ் பிந்த்ரா என்ற தனியொரு பணக்கார இளைஞனின் வெற்றி. ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை.

துப்பாக்கி சுடுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு. அபிநவ் பயன்படுத்தும் துப்பாக்கியின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய்கள். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மிக நவீனமான துப்பாக்கிகளுடன் அபிநவ் பயிற்சி செய்வதற்காக சொந்தத்தில் வைத்திருக்கும் பயிற்சிக்கூடம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. அபிநவ்வின் அப்பா முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கென்றே உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலை நடத்துகிறார். `அபிநவ் இன்' என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஓட்டலை டேராடூனில் கட்டி வருகிறார். அதை மகனுக்கு ஒலிம்பிக் சாதனைக்கான பரிசாக தரப் போகிறார்.

அரசு அளித்த பயிற்சியாளரும் பயிற்சியும் சுமார் என்று ஒதுக்கிவிட்டு தன் சொந்த செலவில் பயிற்சியெடுத்துக் கொண்டவர் அபிநவ். எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ?

இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது? துப்பாக்கி சுடுவது முதலில் ஒரு விளையாட்டா என்பதே யோசிக்கப்பட வேண்டும்.

அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை. பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..
.................
காங்கிரசுடன் தி.மு.க உறவு நீடித்தால் நாங்கள் தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று தமிழகத்தில் இடதுசாரிகள் அறிவித்திருக்கிறார்களே?

தவறான அறிவிப்பு. காங்கிரசுடன் தி.மு.க உறவை முறித்துவிட்டால் மட்டும் ஆதரிப்பார்களா? மாநிலங்களவையில் கனிமொழியின் முதல் பேச்சே ஒப்பந்தத்தை ஓஹோ என்று ஆதரித்துப் பேசியதுதானே? அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டியதை எதிர்த்து ஆதரவைத் திரும்பப் பெற்ற இடதுசாரிகள், அந்த ஒப்பந்தத்தையும் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ விடாமல் காப்பாற்றிய கட்சிகளில் தி.மு.க.வும் ஒன்றல்லவா? எனவே அணு ஒப்பந்தத்தை ஆதரித்த, காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்த எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் சேரமாட்டோம் என்று அறிவிப்பதுதான் நேர்மை.

அதன்படி, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் இடதுசாரிகள் சேரமுடியாது.

பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்தவர்கள் அல்ல. தாங்கள் ஆட்சிக்கு வந்து அதை நிறைவேற்றவேண்டுமென்று விரும்புகிறவர்கள். எனவே அவர்களுடன் சேரக் கூடாது.

முதல்முறையாக இடதுசாரிகள் தமிழகமெங்கும் 40 எம்.பி தொகுதிகளிலும் 234 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, நிஜமான மூன்றாவது அணியாகத் தங்களை அடுத்த 20 வருடங்களில் வளர்த்துக் கொள்ளவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்காக முழுமூச்சாகப் போராடவும் நல்ல வாய்ப்பு இப்போதுதான் வந்திருக்கிறது. நிச்சயம் இதை அவர்கள் தவற....விடுவார்கள்!
............................
மதவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வராமல் தடுக்க, மறுபடியும் பாபர் மசூதி இடிப்பு ஏற்படாமல் தடுக்க, தொடர்ந்து தங்கள் அணியில் இருக்கும்படி கம்யூனிஸ்ட்டுகளை கலைஞர் வேண்டிக் கொண்டிருக்கிறாரே?

மதவாத எதிர்ப்பு பற்றிப் பேசும் அருகதையற்றவர் கலைஞர் கருணாநிதி. பாபர் மசூதியை அத்வானி தலைமையில் ஒரு மத வெறிக் கூட்டம் போய் இடித்த சம்பவம் நடந்த பிறகுதான், பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டு வைத்துக் கொண்டது. குஜராத்தில் மோடி அரசின் ஆதரவுடன் நடந்த முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் பற்றி மழுப்பலாகக் கருத்து தெரிவித்தவர் கருணாநிதி.

கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களான வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும் அரசின் கிராமப் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களாகத் தொடர்ந்து நியமித்து வருவதும் கருணாநிதிதான். அதே ஆர்.பி.வி.எஸ்.மணியன் அண்மையில் குடந்தை ராமர் கோயிலில் `ஆன்மிக' சொற்பொழிவில், தசரதனைப் போல வயதானதும் ஓய்வெடுக்காமல் இருக்கும் அரசியல்வாதி என்று மறைமுகமாக கலைஞரைத் தாக்கிப் பேசினாலும், சுரணையில்லாமல் இருப்பவர் கருணாநிதி.

நான் சொன்னால் ஒரு லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், `என் மனசாட்சியே ஞாநிதான்' என்று அறிவித்துவிடக் கூடியவர் அவர். மதவாத எதிர்ப்புப் பேச்சுகள், பகுத்தறிவுப்பேச்சுகள், `கடவுளை நான் ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நான் இருக்கிறேனா என்பதே முக்கியம்` என்பது போன்ற வழவழா பக்திப் பேச்சுகள், எல்லாமே அவருடைய சுயநல அரசியலின் முகமூடிகள்.
...................................
டி.எம்.எஸ்.சுக்கு நடத்திய பாராட்டு விழா பாராட்டுக்குரியதுதானே?

டி.எம்.எஸ்.சுக்கு எங்கே பாராட்டு விழா நடந்தது? கருணாநிதியின் மகன் அழகிரியின் வலிமையைக் காட்டுவதற்காகவும், மதுரையில் கணிசமாக இருக்கும் டி.எம்.எஸ் பிறந்த ஜாதியினரின் ஓட்டுகளை அழகிரிக்கு சார்பாக இழுக்கவும் நடத்தப்பட்ட விழாதானே அது. தி.மு.க.வினரால் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் போராளி லீலாவதியும் டி.எம்.எஸ். ஜாதியில் பிறந்தவர்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு நிகரான கோஷ்டித் தகராறுகள் நிறைந்த கட்சி இன்று தி.மு.கழகம்தான். ஒரே வித்தியாசம் தி.மு.கவின் எல்லா கோஷ்டிகளும் ஒரே குடும்பத்துக்குள்ளேயே இருக்கின்றன. அந்த வாய்ப்பைக் கூட அவர்கள் கட்சியில் மற்றவர்களுக்குத் தருவதில்லை.

குடும்பத்துக்குள் இருக்கும் கோஷ்டிகள் எல்லாவற்றையும் சமாதானப்படுத்துவதுதான் கலைஞர் கருணாநிதியின் ஹோம் ஒர்க்காக இருக்கிறது. ஸ்டாலினுக்காக ஒரு இளைஞர் மாநாடு; கனிமொழிக்காக ஒரு மகளிர் மாநாடு நடத்தினால், அழகிரிக்காக ஒன்றை ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதிலே அழகிரி தன் மகள் கயல்விழியை முன்னிறுத்தினால், அடுத்து குடும்பத்தில் வெடிக்கக்கூடிய கோபங்களைச் சமாளிக்க, நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கனிமொழி மகன் ஆதித்தன் தலைமையில் குழந்தைகள் மாநாடு நடத்தினாலும் வியப்படைய வேண்டாம்.

`நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்' என்று வாடிக்கையாகப் பேசுவது போல `நானும் இன்னும் ஒரு குழந்தைதான்' என்று இலக்கிய நயத்துடன் ஒரு சொற்பொழிவையும் எதிர்பார்க்கலாம்.

டி.எம்.எஸ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சிவாஜி கணேசன் போன்ற திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜய்காந்த் என்று எல்லா கட்சித்தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி அவர்களைப் பாராட்டினால் மட்டுமே அது சரியான பாராட்டு.

-ஞாநி
நன்றி: குமுதம், 20-08-08

9 கருத்துகள்:

Athisha சொன்னது…

இந்தியாவின் விளையாட்டு கட்டமைப்பை கேள்விகுறியாக்குகிறது அபினவ் பிந்த்ராவின் வெற்றி

அருமையாக கூறினீர்கள்

ரவி சொன்னது…

டிப்பரண்ட் ஆங்கிள் !!! குட் !!

SurveySan சொன்னது…

////அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை/////

அவரு பணக்காரர், சுய முயற்சியில் தங்கம் வென்றவர் என்றாலும், இந்தியா பெருமை கொள்வதில் ஒரு தவறும் இல்லை.

இதெல்லாம் சாத்தியம் என்று காட்டினால்தான், ஊர்பெருசுகளின், கவனம் இந்தப் பக்கம் திரும்பி, எதையாச்சும் செய்ய முற்படுவார்கள்.

வேலைக்காரி தலையில் வைத்த பாட்டிலை சுட்டு ப்ராக்டிஸ் பண்ணார் என்பதெல்லாம் கேவலமான திசை திருப்பல்.

யாரையும் வளரவும் விடமாட்டோம், வளர்ந்தவரை அங்கீகரிக்கவும் மாட்டோம். என்ன கொடுமைங்க இது?

தங்கம் வென்ற அவர் ஒரு நிஜ ஹீரோ!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஆனந்த விகடனில் தங்க மகன் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் முதல் பத்தியே வேலைக்கார பெண்ணின் தலையில் பாட்டிலை வைத்து சுடப் பழகிய சிறுவன் என்றுதான் ஆரம்பித்திருந்தது. கடுமையான கோபம் வந்தது எனக்கு. இப்படிப்பட்ட ஒருவரையா தங்க மகன் என்று கொண்டாடுகின்றோம்? அவன் திறமையை சோதிக்க ஒரு வேலைக்கார பெண்தான் கிடைத்தாளா? மட்டமான சிந்தனை இது.

பெயரில்லா சொன்னது…

This is how it starts.

//உதறலுடன் நிற்கிறாள் வேலைக்காரப் பெண். அவளின் தலையில் நிற்கிறது ஒரு காலி பாட்டில். பத்து மீட்டர் தூரத்தில் நின்றபடி அப்பாவின் துப்பாக்கியைவைத்து பாட்டிலைக் குறிவைத்துச் சுடுகிறான் அந்தச் சிறுவன். ஜிலீரெனச் சிதறித் தெறிக்கிறது பாட்டில். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள், அந்தச் சிறுவனைத் திட்டித் தீர்க்கிறார்கள். //

Read it completely, chinna paiyan senja thappai periyavanga kandichu irukanga. chumma kutharkama ezhudhanumnae ezhudha koodathu.

கிரி சொன்னது…

//இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது?//

ஏங்க! நம்ம நாட்டுக்கு ஒருத்தர் தங்கம் பெற்று தந்து இருக்கிறார் இது பெருமை இல்லையா!

//பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..//

கிராமத்து நபர்கள் செய்தால் தான் சாதனையா! என்னங்க இது.

இவர்கள் கூறியபடி கிராமத்து நபர்கள் பெற்றால் பெருமை தான்...அதற்காக அபினவ் போன்றவர்கள் பெற்றால் பெருமை இல்லை என்று ஆகி விடுமா.

எது செய்தாலும் குற்றம் கண்டு பிடித்தால் எந்த ஒரு சாதனையும் செய்ய முடியாது.

அவர் சிறு வயதில் செய்ததை எல்லாம் ஒரு பெரிய தவறாக கருதி பூதகண்ணாடி வைத்து பார்த்து, இவர் வெற்றியை குறை கூறினால் அதை என்ன வென்று சொல்வது.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நாளைக்கு அப்புறம்... இன்னைக்குதான் கிரி சிக்ஸர் அடிச்சி இருக்கார்...

நல்லதந்தி சொன்னது…

//ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா?

இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

இது அபிநவ் பிந்த்ரா என்ற தனியொரு பணக்கார இளைஞனின் வெற்றி. ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை.

துப்பாக்கி சுடுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு. அபிநவ் பயன்படுத்தும் துப்பாக்கியின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய்கள். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மிக நவீனமான துப்பாக்கிகளுடன் அபிநவ் பயிற்சி செய்வதற்காக சொந்தத்தில் வைத்திருக்கும் பயிற்சிக்கூடம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. அபிநவ்வின் அப்பா முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கென்றே உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலை நடத்துகிறார். `அபிநவ் இன்' என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஓட்டலை டேராடூனில் கட்டி வருகிறார். அதை மகனுக்கு ஒலிம்பிக் சாதனைக்கான பரிசாக தரப் போகிறார்.

அரசு அளித்த பயிற்சியாளரும் பயிற்சியும் சுமார் என்று ஒதுக்கிவிட்டு தன் சொந்த செலவில் பயிற்சியெடுத்துக் கொண்டவர் அபிநவ். எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ?

இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது? துப்பாக்கி சுடுவது முதலில் ஒரு விளையாட்டா என்பதே யோசிக்கப்பட வேண்டும்.

அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை. பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..//

ஞானியின் அறிவை நினைத்து அப்படியே பிரமிப்பாக இருந்தது. இந்த நட்டு கழண்ட லூசெல்லாம் ஒரு எழுத்தாளன்.அதைப் பிரசுரிக்க ஒரு பத்திரிக்கை. என்ன கொடுமை சாமி!.
பின்னாடி நின்ன உதைக்கிது.முன்னாடி நின்னா கையில இருக்கிற பேப்பரை (போஸ்டரை)க்கடிக்குது. அது என்ன?

பெயரில்லா சொன்னது…

//என்ன கொடுமை சாமி!.
பின்னாடி நின்ன உதைக்கிது.முன்னாடி நின்னா கையில இருக்கிற பேப்பரை (போஸ்டரை)க்கடிக்குது. அது என்ன?
//

ஞானம் பெற்ற கய்தே!

கருத்துரையிடுக