செவ்வாய், மார்ச் 25, 2008

உடலுறுப்பு தானமா? திருட்டா? by செல்வ.புவியரசன்

இன்னொரு பக்கம் இதன் மூலம் பயனடைவதற்காக பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வெற்றி பெற்றதும் மிகுந்த அளவில் தேவைப்படுவதுமான ஒரு மருத்துவ சிகிச்சை முறை சட்டரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுநீரகத் திருட்டில் இந்தியத் திருநாடு முதலிடம் வகிப்பது ஆச்சரியமான _ அதிர்ச்சியான செய்தியல்ல. உலக அளவிலும்கூட அதுவொன்றும் புதுப்பிரச்னையல்ல. விருப்பத்தின் பேரில் தானம் வழங்குவதாக சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு படுஜோராக நடந்துகொண்டிருக்கும் பகல்கொள்ளைதான். அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தியாகசீலர்களில் ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பொதுமக்கள் கவனத்திற்கு ஆளாகிறார்கள். சமீபத்தில் நேபாள நாட்டில் கைதாகி இந்தியாவுக்குத் திரும்பியிருக்கும் அமித்குமார் அதிலொருவர். அவ்வளவுதான்.

கையில் காசிருக்கு, பையில் பணமிருக்கு, கிட்னி மட்டும் மக்கர் செய்கிறது. வருத்தப்படுகிற உற்றார் உறவினர்கள் கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன்வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி இக்கட்டான சூழலில் தத்தளிக்கிற ஒருவருக்கு யார் பெற்ற பிள்ளையோ எங்கிருந்தோ வந்து, தன்னிடம் இருக்கும் இரண்டு கிட்னிகளில் ஒன்றை மலிவுவிலைக்கு தருவதற்குத் தயாராக இருக்கும்போது என்ன முடிவு எடுக்கப்படும் என்பதற்கு மூளையைக் கசக்கி யோசிக்க வேண்டியதில்லை.

இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் நடக்கும் அனைத்துவிதமான உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும், 1994_ம் ஆண்டின் மனித உடலுறுப்பு மாற்றுச் சட்டம் கூறியுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். இச்சட்டத்திற்குப் புறம்பான வகையில் மனித உடலுறுப்புகளை விற்பனை செய்வது குற்றச் செயலாகக் கருதப்படும். இச்சட்டத்தின்படி உடலுறுப்புகளை தானம் அளிப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலும் இருக்கக் கூடாது.

பெற்றோர், குழந்தைகள், சகோதர _ சகோதரிகள், கணவன் அல்லது மனைவி ஆகியோரில் ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு எந்த அனுமதியும் பெறவேண்டியதில்லை. ஆனால், ரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதற்கு பொறுப்புக் குழுவிடமிருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். உடலுறுப்பு தானம் செய்பவர் ரத்த சம்பந்தமுள்ள உறவினராக இல்லாத பட்சத்தில் அன்பின் அடிப்படையில் தானம் செய்ய முன்வந்திருப்பதாக மாஜிஸ்ட்ரேட்டின் முன்பாக அஃபிடவிட் எனப்படும் ஆணையுறுதிப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சையின் போது சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா இல்லையா என்று கண்காணிப்பது பொறுப்புக்குழுவின் (AUTHORISATION COMMITTEE) பணியாகும்.

சட்டம் மீறப்படும்பட்சத்தில் தானம் பெறுபவர், அளிப்பவர் இருவருமே குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.

கிட்னி கொள்ளையன் அமித்குமார்

சிலநாட்களுக்கு முன்பு, நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டிய ஒரு அதி சொகுசு கானகக் குடியிருப்பில் காத்மண்டு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார் அமித்குமார். கைதுசெய்து விசாரித்தபோது நான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை. சிறுநீரகத்தைக் கொடுத்தே ஆகவேண்டு மென்று நான் யாரையும் வற்புறுத்தவே இல்லை. அப்புறம் எப்படி நான் செய்தது குற்றமாக இருக்கமுடியும்? என்று விளக்கம் அளித்திருக்கிறார் இந்த டாக்டர். (இவ ரொன்றும் எம்.பி.பி.எஸ்ஸோ அதற்கு மேலோ படித்த டாக்டர் இல்லை. ஆயுர் வேதத்தில் டிப்ளமோ, அதற்கே இப்படியா?) அன்டர்வேர்ல்டு ஆசாமிகளோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. நான் ஒரு மருத்துவர். நான் செய்தது மக்கள் தொண்டு என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் அமித்குமார் கூறியுள்ள சில தகவல்கள் முக்கியமானவை.

மனித உடலுறுப்புகள் மாற்றுச் சட்டம் இயற்றப்பட்ட அதே 1994_ம் ஆண்டில்தான் தனது தொழிலுக்கே பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் அமித். இதுவரை அவர் நடத்தியிருக்கும் உடலுறுப்பு மாற்றங்கள், அதிகமில்லை. வெறும் மூவாயிரம் மட்டும்தான்(!). அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மருத்துவச் சுற்றுலா வரு பவர்கள்தான் இவரின் வாடிக்கையாளர் கள். மூன்று மருத்துவமனைகள், ஐந்து நீரிழிவு சிகிச்சை மையங்கள், பத்து பரிசோதனைக் கூடங்கள், இட்ட பணியைச் செய்து முடிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும், இவரது ராஜ்ஜியத்தில் அடக்கம்.

சில இந்திய மாநிலங்களில் அதிக கெடுபிடிகள் இருக்கின்றன. ஹரியா னாவில் கொஞ்சம் பரவாயில்லை. அத னால்தான் அங்கு மருத்துவமனை ஆரம் பித்தேன். வறுமையிலும் வேலையில்லாம லும் கஷ்டப்படுவதால் சிறுநீரகத்தை விற்பதற்கு இந்தியாவில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விரிவான தன் னிலை விளக்கம் கொடுத்திருக்கும் அமித், இஷ்டத்திற்கு வசைபாடியிருப்பது இந்தியா வின் ஊடக உலகத்தைத்தான்.

உத்தரப் பிரதேசத்தில் என் மீது ஒரு வழக்கு பதிவு செய்தார்கள். அதிலிருந்து இவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை என்று கமெண்ட் வேறு அடித்திருக்கிறார்.

விலைப்பட்டியல்

இந்தியாவில் சிறுநீரகத்தை விற்பவர்களுக்குக் கிடைக்கும் தொகை _ இருபத்து ஐயாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை. வாங்குபவர்கள் கொடுக்கும் தொகை ஐந்து லட்சம் + அதற்கு மேலும்.

சீனாவில் சிறுநீரகம் வாங்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும். அதுவே அமெரிக்கா என்றால் 30 லட்சம் ...

இந்தியாவின் விலைப்பட்டியல் ஏழைநாடுகள் (?) அனைத்துக்கும் பொருந்தும்.

ஆஸ்திரேலிய நிலவரம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் உடலுறுப்பு தானம் அளிக்க விரும்புவர்கள் உடனடியாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கிறது. காரணம், உடலுறுப்புக்காக காத்திருப்போரின் பட்டியல் நீண்டுகொண்டே இருப்பதுதான். ஏற்கெனவே ஐம்பதாயிரம் ஆஸ்திரேலியர்கள் தானம் அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்து தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ஐந்தில் ஒருநபர், உடலுறுப்பு கிடைக்காமல் மரணமடைய நேர்கிறது.

தென் ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் ஜான் ஹில் வயதானவர்கள் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களின் உறுப்புகளைப் பெறுவதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை என்று வலியுறுத்திப் பேசி வருகிறார். எண்பது வயதைக் கடக்காதவர்கள் அனைவரிடமிருந்தும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானம் பெறலாம். அதுபோல புகை பிடிப்போரின் நுரையீரலைக்கூட பரிசோதித்தபின் பொருத்திக்கொள்ளலாம் என்று ஜான் ஹில் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தும் யாரும் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை.

இப்போது தென் ஆஸ்திரேலியாவில் உடலுறுப்பு தானம் பெறவேண்டிய கடைசித் தருணத்தில் 68 பேர்கள் காத்திருக்கிறார்கள். அதில் 52 பேர்களின் தேவை சிறுநீரகம் மட்டுமே.

இல்லையில்லை... இப்படித்தான்

நம்பிக்கை:1

ஏதோ முக்கியமான வேலையாக வெளியூருக்குக் கிளம்பியவர் எங்கோ அசந்து தூங்கி விட்டார். கண்விழித்துப் பார்த்தால் அடி வயிற்றில் தையல்காயம். அதாவது கிட்னி களவாடப்பட்டுவிட்டது. உண்மை:

உண்மை:

இப்படியெல்லாம் இதுவரையிலும் நடந்ததே இல்லை. இனிமேலும் நடக்காது. உடலுறுப்பு மாற்று சிகிச்சை செய்வது ஏதோ வெட்டி ஒட்டுகிற தையல் வேலையல்ல. பலதடவை படிப்படியாக பலவிதமான பரிசோதனைகளைச் செய்து, பொருத்தப்பட்ட உடலுறுப்பு ஒழுங்காக வேலைசெய்யுமென்று நம்பிக்கை வந்த பிறகு, திறமையான மருத்துவர்கள் அதிநவீன உபகரணங்களை உபயோகப்படுத்திதான் அறுவைசிகிச்சை செய்வார்கள்.

நம்பிக்கை:2

பிரபலமும் பணவசதியும் இருப்பவர்கள் தான் காத்திருப்போர் பட்டியலில் முதன்மை வகிப்பார்கள். சராசரிகள் எப்போதும் கடைசி வரிசையில்தான்.

உண்மை:

காத்திருப்போர் பட்டியல் ஒருவரின் சமூகமதிப்பையோ அவரது பொருளாதார வசதிகளையோ நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது. இரத்தவகை, உடலின் தன்மை, காத்திருக்கும் காலம் ஆகியவை மட்டும்தான் கணக்கில் எடுக்கப்படும். சாதி, மத, இன, பால், வயது பேதமெல்லாம் மனிதருக்கு உண்டு. மருத்துவத்திற்கு இல்லை.

நம்பிக்கை: 3

எந்த மதமும் உடலுறுப்புகளை தானம் செய்வதை அங்கீகரிக்கவில்லை.

உண்மை:

ஒருங்கிணைக்கப்பட்ட மதங்கள் அனைத்துமே உடலுறுப்பு தானத்திற்கு ஆதரவாகவே உள்ளன. எனினும் தானம் செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தையே சார்ந்தது.

நம்பிக்கை : 4

வயதானவர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடியாது.

உண்மை:

பொதுவாக எழுபது வயது வரையில் திசுக்களை தானம் செய்யலாம். குறைந்த பட்ச வயது இல்லவே இல்லை.

என்ன செய்ய வேண்டும்?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உடலுறுப்பு மாற்றுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார். சட்ட நடைமுறைகள் எளிமையாகப் பின்பற்றப்படும் வகையிலும் சட்டத்திற்கு எதிரான உடலுறுப்பு மாற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையிலும் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இன்னொரு பக்கம் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ணீவீவீனீ) நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இருக்கிற சட்டமே போதுமானது. அதிலிருக்கும் விதிகளை முறையாகச் செயல்படுத்தினாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். அதேசமயத்தில் மருத்துவ விஷயங்களில் தமக்கு துறைசார்ந்த அறிவின்மையையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்திய உடலுறுப்பு மாற்றுச் சட்டம் அறமதிப்பீடுகளில் ஆழமாக வேர்கொண் டிருக்கிறது. கொடையாக அல்லாமல் வேறெந்தவகையிலும் அது உடலுறுப்பு மாற்றத்தை அனுமதிக்கவில்லை. எனவே அறம்காக்கும் பொறுப்பிலிருக்கும் நீதியரசர் தன் கருத்தில் உறுதியாக இருப்பதில் வியப் பில்லை. ஆனால் நிலைமை எல்லைமீறி நெடுநாட்கள் ஆகிவிட்டது. இப்போது நம் முன்னால் இருப்பது இரண்டே தீர்வுகள் தான். ஒன்று, மருத்துவ நிபுணர்கள் பரிந் துரைப்பது, மற்றொன்று பாதிக்கப்பட்ட வர்களின் (VICTIMS) அடிவயிற்று கேவல்....

மருத்துவத் தீர்வு

BRAIN DEAD என்று சொல்லப்படுகிற, மூளை முற்றிலுமாக செயலிழந்த மரணநிலையில் இருப்போரிடமிருந்து அவரது குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தோடு உறுப்புகளைப் பெற்று, அதற்காக காத்திருப்பவர்களுக்கு வழங்கிட சட்டம் அனுமதிக்க வேண்டும்.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறையை ஊக்குவிக்கும் விதத் திலேயே சட்டவிதிகள் இயற்றப்பட்டுள் ளன. அதன் விளைவாக அந்த நாடுகளி லெல்லாம் இவ்வகையான உடலுறுப்பு தானங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் 1994_ம் ஆண்டு மனித உடலுறுப்புகள் மாற்றுச் சட்டம் மூளை செயலிழந்து மரணநிலையிலிருக்கும் நபர்களிடமிருந்து சிறுநீரகங்களைப் பெறுவதற்குத் தடைசெய்துவிட்டது. நெருங்கிய உறவினரிடமிருந்து மட்டுமே சிறுநீரகம் தானமாகப் பெறப்பட வேண்டுமென்றும் இல்லாதபட்சத்தில் அது அன்பின் அடிப்படையில் அளிக்கப்பட வேண்டுமென்றும் சட்டம் சொல்கிறது.

உடனடித் தீர்வு

வறுமையிலிருந்து தன் மக்களை மீட்டெடுக்க வக்கற்றுப் போன அரசாங்கத்திற்கு அதைப்பற்றிய கவலையோ, வருத்தமோ எப்போதும் ஏற்படப்போவதில்லை.

சட்டம் போட்டு தடுத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் திட்டம்போட்டு திருடுவதைத் தடுத்து நிறுத்த ஒருபோதும் முடியாது. ஒரே வழி, அதற்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதுதான். இதன் மூலம் தன் உடலுறுப்புகளை மலிவான விலைக்கு விற்பதோடு வெகுவிரைவில் தன் வாழ்நாளையும் முடித்துக்கொள்கிற பாவப்பட்ட பிறவிகளுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தானம் கொடுப்பவரின் அடிப்படைச் செலவுகளையும், வாழ்நாள் முழுவதற்குமான மருத்துவச் செலவுகளையும் தானம் பெறுபவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையாவது உறுதிசெய்யலாம்.

அறம்சார்ந்த மதிப்பீடுகளின்படி உடலுறுப்புகளை வாங்குவதும் விற்பதும் பச்சை அயோக்கியத்தனம். ஆனால் ஒருவன் உடலுறுப்பு கிடைக்காமல் இறப்பதும், மற்றொருவன் உண்ண உணவின்றி இறப்பதும் ஒரே நேரத்தில் நடக்கிறபோது, கண்முன்னால் இருக்கிற தீர்வு இதுதான்.
-செல்வ. புவியரசன்
நன்றி: குமுதம் ஹெல்த்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

HI,
Thanks for this post. It is absolutely essential to create an awareness about organ donation. People should volunteer to donate the organs after their death. I don't know if there is a system in place in India to preserve the organs from dead people.

கருத்துரையிடுக