திங்கள், நவம்பர் 21, 2011

சிதம்பரமும் அவரது மகனும் ஜமீன்தார் நினைப்பில் இருக்கிறார்கள் - சுதர்சன நாச்சியப்பன்

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைக் கலைத்துவிட்டு, ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரஸுக்குத் தாவிய​போது அவருக்காக சிவகங்கை நாடாளு​ மன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் சுதர்சன நாச்சியப்பன். அவர்தான் திடீரென இப்போது சிதம்பரத்திற்கு எதிராக சீறுகிறார்.

''திடீரென சிதம்பரத்துக்கு எதிராக ஏன் இந்த ஆவேசம்?''

''2004-ம் ஆண்டு நான் தொகுதியை விட்டுச் சென்றபோது காங்கிரஸ் கட்சி 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிற மாதிரி தொகுதியை வைச்சிருந்தேன். இப்போது இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் நிலை. கடந்த ஏழு வருஷத்தில் சிதம்பரம் செய்த சாதனை இது மட்டும்தான். உள்துறை அமைச்சரின் தொகுதியில் ஒரு நகராட்சி சேர்மனுக்குக்கூட ஆளை நிறுத்த முடியாத அளவுக்கு, காங்கிரஸை முடமாக்கிப் போட்டிருக்காங்க. ஜெயிக்கக்கூடிய ஆட்க ளுக்கும் 'கை’ சின்னம் கொடுக்காததால், அவர்கள் எல்லாம் சுயேச்சையாக நின்று ஜெயித்திருக்கிறார்கள். சிதம்பரத்தின் சொந்த ஊரிலேயே காங்கிரஸுக்கு நான்காவது இடம். இதுதான் இந்த மாவட்டத்தில் அப்பா வும் மகனும் கட்சி வளர்த்த லட்சணம். இனியும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், அது கட்சிக்கும் தலைமைக்கும் செய்த துரோகம் ஆகிவிடும் இங்கே காங்கிரஸ் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்திருக்கு. அந்த நல்ல காரியத்தைச் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட அன்னை சோனியாவிடம் வாய்ப்புக் கேட் பேன். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி; அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டேன்.''

''அடிக்கடி தொகுதிக்கு சிதம்பரம் வந்து போகிறார்​தானே?''

''நிதித் துறை, உள்துறைன்னு இரண்டு முக்கியமான பொறுப்புகளைச் சிதம்பரத் துக்குக் கொடுத்தோம். ஆனால், என்னு டைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார். இந்தத் தொகுதி வளர்ச்சியில் அவர் அக்கறை காட் டவே இல்லை. எனது காலத்தில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். அந்தச் சாலையை மேற்கொண்டு விரிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியையும் சிதம்பரம் எடுக்கவில்லை. இதேபோல் தொண்டி - மதுரைச் சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு டி.ஆர்.பாலு மூலம் முயற்சி எடுத்தேன். அதற்கான கோப்பில் நிதி அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், அதற்கு மறுத்தார். அதனால், திட்டக் குழுத் துணைத் தலைவரும் டி.ஆர்.பாலுவும் மட்டுமே கையெழுத்துப் போட்டு அந்தத் திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார்கள். திருச்சி - மானாமதுரை பிராட்கேஜ் பாதையை நான் கொண்டுவந்தேன். அதில் இயக்கப்பட்ட ரயில்களைக்கூட சிதம்பரத்தால் முழுமையாக இயக்கவைக்க முடியவில்லை. தனக்கு இணக்கமான தி.மு.க. ஆட்சி இருந்தபோதே சாதிக்காதவரா, விரோதியாக நினைக்கும் ஜெயலலிதா ஆட்சி யில் சாதிக்கப்போகிறார்?''

''தொகுதி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதால் சிதம்பரத்திற்கு என்ன லாபம்?''

''சிவகங்கையை சிங்கப் பூராக்கும் எனது கனவுத் திட்டத்துக்கு உறுதுணையா இருப்பார்னு நினைச்​​சுத்தான் இவருக்கு எனது தொகுதியை விட்டுக் கொடுத்தேன். ஆனால், தொகுதியை வளரவே விடவில்லை. சிதம்பரமும் அவரது மகனும் இன்னமும் ஜமீன்தார் நினைப்பிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் தொகுதியை காபி எஸ்டேட் மாதிரியும் மக்களை ஓட்டுப் போடும் ஏ.டி.எம். மெஷின் மாதிரியும் பார்க்கிறார்கள். இனி அவர்களின் ராஜ்யம் இங்கே எடுபடாது.''

''காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்களும் முயற்சி செய்தீர்கள். அதற்கு சிதம்பரம் ஏதாவது தடங்கல் ஏற்படுத்தி, அந்த ஆதங்கத்தில் இப்படி அவருக்கு எதிராக சீறுகிறீர்களா?''

''இவங்க போடுற முட்டுக்கட்டை எல்லாம் நாம பார்க்காததா? நான் மூன்று முறை காங்கிரஸ் தலைவராக வர இருந்தபோதும் முட்டுக்கட்டை போட்டவர் சிதம்பரம்தான். எனக்கு மத்திய அமைச்​சராகும் வாய்ப்பு வந்தபோதும் தட்டிவிட்டார். இரண்டாவது முறையாக நான் ராஜ்ய சபாவுக்குப் போய்விடக் கூடாது என்பதிலும் முனைப்போடு இருந்தார். ஆனால், எனக்குத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இந்த முடிவுக்கு வரவில்லை. தலைவராக வந்திருந்தாலும் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். ஒருவேளை, தலைவராக வராவிட்டால் நமக்குப் போட்டியாக வர மாட்டான் என சிதம்பரம் நினைத்திருக்கலாம். அவரது நினைப்பு பொய்யாகப் போகிறது''

''பிரதமர் வேட்பாளர் என்கிற அளவுக்குப் பேசப்படும் சிதம்பரத்தை எதிர்த்து உங்களால் சாதித்துவிட முடியுமா?''

''முதலில் உள்துறை அமைச்சர் பதவியை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும்; அப்புறம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம். அவர் பதவியில் நீடிப்பதே சுப்ரீம் கோர்ட் கையில்தான் இருக்கு. எப்படி இருந்தாலும் இனி சிதம்பரத்திற்கு சிவகங்கையில் வேலை இல்லை. அவரும் அவரது பையனும் வெளிநாட்டில் இருக்கும் தொழில் முதலீடுகளைக் கவனிக்கப் போகட்டும். காங்கிரஸ் கட்சியையும் தொண்டனையும் நாங்க பத்திரமாப் பாத்துக்குவோம்'' - புழுக்கத்தை எல்லாம் பொலபொலவென கொட்டித் தீர்த்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டார் நாச்சியப்பன்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

நன்றி: ஜூனியர் விகடன், 23 நவம்பர் 2011

புதன், நவம்பர் 09, 2011

அப்துல் கலாமின் அட்டகாசங்கள் - அ. மார்க்ஸ்

அப்துல் கலாம் அவர்கள் இரண்டு நாட்களாகத் தமிழ்நாட்டில் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக இங்கே வந்து அணு உலை ஆதரவுப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டுள்ளார். கலாமுக்கு மக்கள் மத்தியில் ஒரு மரியாதையும் அங்கீகாரமும் இருக்கிறது. அவரது புத்தகங்கள் இங்கே ஏராளமாக விற்பனையாகின்றன. ஒரு முஸ்லிமாகப் பிறந்திருந்தும், முஸ்லிம் அடையாளம் எதையும் தரித்துக் கொள்ளாததாலும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தோ, அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தோ வாய் திறவாமல் இருப்பதாலும் அவர் ஒருநல்ல முஸ்லிமாகபொதுப் புத்தியில் அடையாளம் காணப்படுகிறார் (முஸ்லிம்னா இப்டி இருக்கணும்பா”). அந்த அளவுக்குத் தனது பிற அடையாளங்களை அமுக்கிக் கொண்டு விஞ்ஞானிஎன்கிற ஒற்றை அடையாளத்தைத் துருத்தி நிறுத்திக்கொண்டவர் அவர். நான் ஒரு முறை அவரை விமர்சித்து ஏதோ எழுதியபோது விஞ்ஞானிஎன அவரை விளித்திருந்தேன். தொலைபேசியில் அழைத்த நண்பர் ராமாநுஜம், “அவரை ஏன் விஞ்ஞானி எனச் சொல்கிறீர்கள். அவரைக் குறிக்க ‘technocrat’ என்பதுதான் சரியான சொல்என்றார்.

ராமாநுஜம் சொன்னது நுற்றுக்கு நூறு சரி. Technocrat என்கிற சொல்லுக்கு ஏ.சி. செட்டியார் அகராதி சொல்லும் பொருள்: தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்”. ஆம், அப்துல் கலாம் போன்றவர்கள் தொழில்நுட்ப அறிஞர்கள் மட்டுமல்ல. ஆட்சிக் கோட்பாட்டாளர்களும்கூட. Bureaucrat என்கிற சொல் எத்தனை வெறுப்புக்குரியதோ அத்தனை வெறுப்புக்குரிய சொல் Technocrat என்பதும். சிவில் அதிகார வர்க்கம்எப்படி அரசதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்து மக்களை அலட்சியப்படுத்தி முடிவுகளைச் செயல்படுத்துகின்றதோ அப்படியே இந்த விஞ்ஞான அதிகாரவர்க்கமும் மக்களை மயிரளவும் மதிப்பதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கலாம். விஞ்ஞானத்தை வழிபடுபவர். விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் ஏழை/பணக்காரன், உயர்ந்தோர்/தாழ்ந்தோர் முதலான எல்லாவிதமான வேறுபாடுகளுக்கும், கருத்தியல்களுக்கும் அப்பாற்பட்டவையாக நம்புபவர். குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களிலிருந்து முற்றாக விஞ்ஞானத்தைப் பிரித்துப் பார்ப்பவர். ஃபுகுஷிமா விபத்திற்குப் பின் தனது நாட்டில் புதிய அணு உலைகளைக் கட்டுவதை நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ள ஜப்பான், அதே நேரத்தில் வியட்நாம் உள்ளிட்ட சிறு நாடுகளுக்கு அணு உலைகளை விற்பதைத் தொடர்வது ஏன் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மனத்தைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதவர். ஜப்பானின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அங்குள்ள மனச்சாட்சி உடைய அறிவுஜீவிகள் எதிர்த்துள்ளனர். டோஷிபா, மிட்சுபிஷி, சுஸுகி என்கிற மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் சென்ற நிதி ஆண்டில் இத்தகைய விற்பனைகளின் மூலம் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதுதான் இந்த இரட்டை நிலைபாட்டிற்குக் காரணம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அரசியலுக்கும், கருத்தியலுக்கும் அப்பாற்பட்டதெனச் சொல்வது எத்தனை அபத்தம்.

மக்கள் குறுகிய நோக்கத்துடனும், உடனடிப் பலாபலன்களையும் கருதிச் செயல்படக் கூடியவர்கள்; ஆனால் தாங்களோ தொலை நோக்கிலும், ஒட்டு மொத்தமான நாட்டு நலன் என்கிற அடிப்படையிலும் சிந்திப்பவர்கள் என்கிற எண்ணமே அதிகார வர்க்கம் மக்களை அலட்சியம் செய்வதன் அடிப்படை. சில உடனடிப் பயன்களை மக்களிடம் காட்டினால் அவர்கள் மனம் மாறி விடுவார்கள் என்கிற எண்ணத்தில்தான் கலாம் இன்று கூடங்குளத்து மக்கள் முன் 200 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களை அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றில் பலவும் எல்லா கிராம மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய நலத் திட்டங்கள்தான். கூடங்குள மக்களுக்கு மட்டும் இந்தத் திட்டங்கள் என்பதன் பொருளென்ன? அவர்களின் சம்மதம் கோரிக் கொடுக்கப்படும் லஞ்சமா? இல்லை, பின்னால் வரப்போகிற ஆபத்திற்காக முன்கூட்டியே வழங்கப்படும் இழப்பீடா?

கூடங்குள அணு உலைகளால் எந்த ஆபத்தும் இல்லை என அடித்துச் சொல்கிறார் கலாம். ஏற்கனவே அணு உலை அதிகார வர்க்கம் சொல்லி வந்ததையே கிளிப் பிள்ளை போலத் திருப்பிச் சொல்லியுள்ளார். எனில் பெல்ஜியம், ஜப்பான் முதலிய நாடுகள் சுமார் 14 அணு உலைகளை மூட முடிவு செய்திருப்பதும், ஸ்விஸ் முதலான நாடுகளும் அப்படியான முடிவுக்கு வந்துள்ளதும் எப்படி? இது குறித்து ஏன் அவரிடம் இத்தனை பெரிய மௌனம்?

கூடங்குளம் அணு உலைகள் 6 ரிக்டர் நிலநடுக்கம் வரை தாங்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றைய நாளிதழ் ஒன்று கேலி செய்திருப்பதைப் போல 7 அல்லது 8 ரிக்டர் நில நடுக்கம் வந்தால் என்னாவது? வராது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? 2004ல் அத்தனை பெரிய சுனாமி எப்படி வந்தது? 25 சத அணுக் கழிவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அவருடைய இந்தக் கணக்கீட்டையே நாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தக் கழிவை என்ன செய்வது? கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் திடீரெனப் பின்வாங்கியது?

பயந்தால் வரலாற்றுச் சதனைகளைப் படைக்க முடியாது என்கிறார் கலாம். நில நடுக்கம் வந்து வீழ்த்தினால் என்ன செய்வது என்று பயந்திருந்தால் ராஜராஜ சோழன் பிருகதீச்வரப் பெருவுடையார் கோவிலைக் கட்டியிருப்பானா எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். கதிரியக்க ஆய்வினூடாக கதிர்வீச்சுக்குப் பலியான மேடம் க்யூரியை நினைவுகூர்ந்து கண்கலங்குகிறார். தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கப் போகிறது எனச் சொல்லிக் கைதட்டிக் குதூகலிக்கிறார். ஆகா ஒரு நாடகமன்றோ நடக்குது.

அப்துல் கலாம் மிகப் பெரியவர். நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். கறை படாத கரங்களுக்குச் சொந்தமானவர். எளிமைக்குப் பெயர் போனவர். அவசரப்பட்டு நான் ஏதும் அவரைப்பற்றிச் சொல்லிவிடக் கூடாது. ஆனால் இதெல்லாம் என்ன ஒப்பீடுகள் சார்? வரலாற்றுச் சாதனைக்காக எத்தனையோ ஆயிரம் பேர்களை நசுக்கிப் பிழிந்த உதிரத்தால் கட்டப்பட்டத்துதான் தஞ்சைப் பெரிய கோவில். அதன் பின்னிருந்த அரசியலை வரலாற்றாசிரியர்கள் இனங்கண்டுள்ளனர். இதையெல்லாம் கூட விட்டுவிடுவோம். அப்படியே ஒரு கலைச் சின்னம் நில நடுக்கத்தால் அழிந்துபடுகிறதென்றே வைத்துக் கொள்வோம். அணு உலை வெடித்துச் சிதறுவதும் வரலாற்றுச் சின்னமொன்று பொடிந்து வீழ்வதும் இரண்டும் ஒன்றுதானா? ஒரு வரலாற்றுச் சின்னம் அழிவது வேதனைகுரிய ஒன்றுதான். ஆனால் அந்த அழிவு வரலாற்றுச் சின்னம் ஒன்றின் அழிவோடு முடிந்து விடுகிறது. மீண்டும் கூட அதை நாம் கட்டிவிடலாம். ்ரீரங்கம் கோவிற் கோபுரம் கட்டப்படவில்லையா? ஆனால் ஒரு அணு உலை அழிந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் அத்தோடு சேர்ந்தழியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதன் பலனை மனிதகுலம் சுமக்க வேண்டியிருக்கும்? ஒரு கலைச் சின்னத்தின் பயன்பாடு அது நிலைத்திருக்கும் வரை தொடரும். ஆனால் உங்கள் அணு உலையின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் அய்யா? அதன் பயன்பாடு ஓய்ந்தபின் இன்னும் எத்தனை ஆண்டுகள் அதன் சுமையை எந்தப் பயன்பாடும் இல்லாமல் நமது சந்ததிகள் சுமக்க வேண்டும் அய்யா?

26 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளும் அணு உலைகளும்என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன (பார்க்க: எனது தேவையா இந்த அணு உலைகள்?’ நூலின் முதல் கட்டுரை [amarx.org]). அதில்,

எகிப்திய பரோவாக்கள் பிரமிடுகளைக் கட்டினார்கள். இராசராச சோழர்கள் பெரிய கோவில்களை எழுப்பினார்கள். பிரமிடுகளும் பெரிய கோவில்களும் பண்டைய கலைஞர்களின் மகத்தான சாதனைகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியாளர்களின் பிரதான வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியை நிலை நிறுத்தும் ஆதார அம்சங்களாகவும் அவையே விளங்கின………இன்றைய இந்திராக்களும் ராஜீவ்களும் பரோவாக்களிலிருந்தும் இராசராசன்களிலிருந்தும் அவ்வளவு வேறுபட்டவர்களல்ல…..ஆனால் கவிஞர் இன்குலாப் சொன்னது போல இடையில் ஆயிரம் ஆண்டுகள் தான் ஓடிவிட்டன. இன்றும் பிரமிடுகளையும் பெரிய கோவில்களையும் கட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனாலென்ன? ஆர்யபட்டா, கலர் டெலிவிஷன், அணு உலைஇவை இல்லையா? வாருங்கள் இவற்றோடு 21ம் நூற்றாண்டுக்குள் ராஜீவைப் பின்தொடர்வோம்

என்று குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய அன்றைய சொற்களுக்கு எத்தனை சரியான நிரூபணமாக அமைந்துள்ளது பார்த்தீர்களா இன்றைய அப்துல் கலாமின் உரை. எகிப்திய பரோவா, இராசராச சோழன், இந்திரா, ராஜீவ், மன்மோகன், இந்த வரிசையை நியாயப்படுத்தும் அப்துல் கலாம்ஆகா, என்ன ஒரு தொடர்ச்சி.

இரு மாதங்களுக்கு முன், ஐ. நா மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்போது விமானத்திலிருந்தவாறே மன்மோகன் அளித்த பேட்டியில் இன்றைய பொருளாதாரச் சிக்கலைப் பற்றிச் சொல்ல வரும்போது, “எல்லாம் உலகமயத்தின் பின் விளைவுகள்என அலுத்துக் கொண்டதைப் படித்திருப்பீர்கள். இந்தியப் பொருளாதாரத்தையும் சந்தையையும் உலகமயத்திற்குத் திறந்து விட்டவரென மார் தட்டிக் கொண்ட மன்மோகன் சிக்கல் வரும்போது எல்லாம் உலகமயத்தின் விளைவு எனச் சொல்லிக் கை கழுவுவதை நாம் கவனிக்க வேண்டும். நாளைக்கு ஏதேனும் ஒரு அணு உலை வெடித்துச் சிதறினால், புவி அதிர்ச்சியும் சுனாமியும் ஒன்றாக வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றோ, அணு உலை என்றால் எப்போதாவது ஒரு முறை இப்படி நடக்கத்தான் செய்யும் என்றோ அப்போதைக்கு ஏதாவது சொல்லி இவர்கள் நழுவத்தான் போகிறார்கள்.

இந்தியாவை வலுவாக்குவது என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ரொம்பவும் புரட்சிகரமான கருத்துக்களை நான் இதில் சேர்க்கவில்லை. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மைய நீரோட்டக் கருத்துக்களிலேயே இரு ஒன்றுக்கொன்று எதிரான நிலைபாடுகள் உள்ளன. அவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக நாம் இங்கே இருவரை அடையாளம் காணலாம்.

ஒருவர் அப்துல் கலாம். இவரைப் பொருத்த மட்டில் இந்தியாவை வலுவாக்குவது என்பது ஏவுகணைகள், துணைக் கோள்கள், அணு குண்டுகள், அணு உலைகள், உயர் தொழில் நுட்பங்கள், நேநோ டெக்னாலஜி, நால் வழிச் சாலைகள் முதலான அகக் கட்டுமானங்கள் ஆகியவற்றை உருவாக்குதல் என்கிற மட்டத்தில் அமைகிறது.

மற்றவர் அமார்த்ய சென். இவரது அணுகல் முறை முற்றிலும் எதிரானது. இது கீழிருந்து வலுப்படுத்தும் அணுகல் முறை. எல்லோருக்கும் சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ நலம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை அளித்து வலுமிக்க குடிமக்களை உருவாக்கி அதன் மூலம் வலுவான நாட்டை உருவாக்குவது என்பது இவரது அணுகல் முறை.

அப்துல் கலாம் கூடங்குளப் பிரச்சினையில் என்ன பேசுவார் என எதிர்பார்த்தோமோ அதைத்தான் அவர் பேசியுள்ளார். இதில் வியப்பேதுமில்லை.

Tail Piece: அப்துல் கலாம் அவர்களை நல்ல முஸ்லிம்என்று சொன்னேன். எந்த அளவிற்கு நல்ல முஸ்லிம் என்றால் குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளராகத் தெர்வு செய்யப்படும் அளவிற்கு நல்ல முஸ்லிம்’. இவருக்கு முன் அந்தப் பதவியில் இருந்த கே. ஆர். நாராயணன் அவர்கள் தான் பதவியில் இருந்த காலம் வரை பா.ஜ.க அரசு முன்மொழிந்ததை ஏற்று பாராளுமன்றத்தில் சாவர்கரின் படத்தைத் திறக்கச் சம்மதிக்கவில்லை. கலாம் அந்தப் பதவியில் அமர்ந்தவுடன் கிஞ்சித்தும் தயக்கமின்றி காந்தி படத்திற்கு எதிரில் சாவர்கரின் படத்தைத் திறந்து வைத்தார். அந்த அளவிற்கு கலாம் ஒருநல்ல முஸ்லிம்’.

நன்றி: அ. மார்க்ஸ்

வெள்ளி, நவம்பர் 04, 2011

கேள்விகள் தொடர்கின்றது #தூக்குக் கயிறே என் கதை கேள்! (11)

ங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது.

கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்​பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். ''மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சி​யங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டப்படி உரிமை உண்டு!'' என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் சிபி.ஐ-யினரின் சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்டும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்ட விதியினை அடிப்படையாகக் கொண்டும்தான் நாங்கள் நிரபராதிகள் என்று வலியுறுத்துகிறோம். எமக்கு இழைக்கப்பட்டு இருக்கிற அநீதிகளையும், சித்ரவதைகளையும் நாங்கள் வெளியே சொல்வதைக்கூட உங்களால் ஏற்க முடியவில்லை. 'தூக்கில் போடு’ எனக் குரல் எழுப்புகிறீர்கள். உங்கள் தலைவி சோனியா காந்தி அவர்களே எங்களை மன்னிக்கச் சொன்ன பிறகும் நீங்கள் உடன்பட மறுக்கின்றீர்களே... அப்படி என்றால், உங்களுக்கு இருக்கும் நாட்டுப் பற்று சோனியா காந்தி அவர்களுக்கு இல்லை என்றுதானே சொல்ல வருகிறீர்கள்? எங்களை மன்னித்து தண்டனையைக் குறைக்கும்படி பரிந்துரை செய்தது சோனியா காந்தியின் தனிப்பட்ட விடயம் என்று மேடைக்கு மேடை பேசுகிறீர்கள். நாட்டு நலனைவிட, சட்டத்தைவிட சோனியா காந்தி அவர்களுக்குத் தனிப்பட்ட உணர்வும், உணர்ச்சியுமே முக்கி​யம் என்று நீங்கள் பிரசாரம் செய்வது உங்களுக்கே தகுமா? ராஜீவ் காந்தியை தணு ஒரு முறைதான் கொலை செய்தார்.

ஆனால், பரபரப்பு அரசியலுக்குத் தேவைப்படும் போதெல்லாம், அந்த உடலை எடுத்துவைத்துஆராய்ச்சி என்கிற பெயரில் நீங்கள் 20 வருடங்களுக்கும் மேலாகக் கொலை செய்கிறீர்களே... இது என்ன நியா​யம்?

19. எமக்கு மரண தண்டனை வழங்​கிய தலைமை நீதிபதி அவர்கள் 2.9.2011 அன்று 'கிsவீணீஸீ கீமீதீ' என்ற இணையதளத்தில் தனது மனசாட்சியை இறக்கிவைத்தார். அதில், நாங்கள் அப்பாவிகளாக, நிரபராதிகளாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு எனச் சொல்லி இருக்கிறார். எமக்​குத் தூக்குத் தண்டனை வழங்கியது தவறு என்​கிறார். எம்மை தூக்கில் போட்டுக் கொன்றால், 2,000 வருடங்களுக்கு முன் நிரபராதியான ஏசுவை சிலு​வையில் அறைந்து கொன்றதுபோன்ற பெரும் தவறினை இப்போது செய்தது போலாகிவிடும் என்று மனசு துடிக்கச் சொல்லி இருக்கிறார். எமக்குத் தீர்ப்பு எழுதிய நீதிபதியின் மனக் குரலைவிட, எங்​கள் தரப்பின் நியாயத்துக்கு வேறென்ன பிடி​மானம் வேண்டும்? சி.பி.ஐ. சொல்வதை நம்பும் நீங்கள் - நீதிமன்றக் கருத்துகளை நம்பும் நீங்கள் - அந்த நீதிபதியின் ஆன்ம அலறலை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? உங்களின் சந்தேகத்துக்கு ஆதாரம்தான் என்ன? 'இலங்கைத் தமிழர்கள் இப்படித்தான் செய்வார்கள்’ என்கிற கருத்தா? இல்லை, 'குற்றவாளிகளாக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட

வெறுப்​பா?’

20. கேரளாவைச் சேர்ந்த மெர்வின் என்ற பெண்ணின் கணவர் பாபு எலியாஸ் அரபு நாட்டில் இருந்தார். அவரை நெல்லையைச் சேர்ந்த இரண்டு பேர் கொலை செய்துவிட்டனர். கொலையாளிகளுக்கு சட்டப்படி மன்னிப்பு வழங்கி இரு உயிர்களையும் காப்பாற்ற மெர்வின், 'கொலைக்குக் கொலைதான் தீர்வா? இரண்டு பேரின் உயிர்களை எடுப்பதால் என் கணவரின் உயிர் திரும்பக் கிடைத்துவிடுமா?’ என அவர் எழுப்பிய மனிதநேயக் குரலே நீதியின் கவனத்தைத் திருப்பி, அந்தக் கொலைகாரர்களைக் காப்பாற்றியது. சோனியா காந்தி அவர்களுக்கு மெர்வின் ஒரு கடிதம் எழுதினார். 'மிகச் சாதாரண பெண்மணியான நானே இரண்டு உயிர்கள் வாழ்வதற்குக் காரணமாக இருக்கிறேன். மிக உயரிய இடத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் கணவரின் கொலை வழக்கில் சிக்கி இருப்பவர்களுக்காக நிச்சயம் மனம் இரங்க முடியும்’ என அதில் கோரிக்கை வைத்திருந்தார். அந்த நிஜத்தைப் படித்த பிறகுதான் சோனியா காந்தி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார். எமக்கான தண்டனையைக் குறைக்கப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்​பட்டது. எமது தண்டனை கடந்த 10 வருட காலமாக அப்படியே இருக்கிறது. எங்களின் தண்டனைக் குறைப்புக்காக சோனியா காந்தி அவர்கள் கடிதம் கொடுத்தபோது அமைதியாக இருந்த நீங்கள், 10 வருடங்கள் கழித்து எம்மைத் தூக்கில் போட்டு சாகடிக்கும்படி உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். காரணம் தேசபக்தி என்கிறீர்கள்... ராஜீவ் காந்தியை மட்டும் அல்லாது சம்பவ இடத்தில் இருந்த 17 பேர்களையும் கொலை செய்தோம் என்கிறீர்கள்... அவர்களின் குடும்பங்களைத் திரட்டிவந்து எமக்கு எதிராகக் கொடி பிடிக்க வைக்கிறீர்கள். எங்களைக் காவு வாங்குவதற்காக இறந்தவர்களின் குடும்பத்தவர்களிடத்தில் பழைய வருத்தங்களைக் கிளறுகிறீர்களே... இதுதான் உங்கள் மனசாட்சியின் மகத்துவமா?

21. உச்ச நீதிமன்றம் முடிவு செய்துவிட்ட ஒரே காரணத்தினாலேயே சட்டக் கயிறு எங்களின் கழுத்தை இறுக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தும் நீங்கள், இரண்டு விடயங்களில் உச்ச நீதிமன்ற முடிவுக்கே எதிராக நிற்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் (TADA Act) வராது என்றும், ராஜீவ் காந்தி கொலை நாட்டுக்கு எதிரான குற்றம் அல்ல என்றும், அது ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என்றும், 21.5.91 அன்று ஸ்ரீபெரும்புதூர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியைத் தவிர மற்ற எந்த நபருடைய இறப்புக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றும் உறுதியான வார்த்தைகளால் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பினை நீங்கள் உணர மறுப்பது ஏன்?

நீதிமன்றத் தீர்ப்புகளில்கூட உங்களுக்குஉகந்தது எது என்பதை மட்டுமே எடுத்துவைத்துப் பேசுகிறீர்களே... இதுதான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நீதிக்குக் கொடுக்கும் மரியாதையா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வார்த்தைகளை மறந்துவிட்டு 17 பேர்களின் குடும்பங்களைத் திரட்டிவந்து போராட்டம் நடத்தும் புண்ணியவான்களே... நீங்கள் செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

கொலைகாரர்களுக்கு ராஜீவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். சம்பவத்தை நிகழ்த்தினால் எத்தனை பேர் சாவார்கள் என்பதை அவர்கள் சட்டை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், ராஜீவ் காந்தியோடு மட்டும் அல்லாது, இன்னும் பலரைச் சாகடிக்கிற சதித் திட்டத்தோடு கொலையாளிகள் வந்ததாக அர்த்தமற்ற அரசியல் கூச்சல் போடுகிறீர்கள். 'உங்கள் குடும்பத்தினரைக் கொன்​றவர்கள் இவர்கள்தான்... அவர்கள் தப்பிக்கலாமா? இறந்த​வர்​களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், கொ​லைகாரர்கள் தூக்கில் போ​டப்பட வேண்டும்?’ என எம்​மைக் கைகாட்டி உணர்ச்​சியைக் கிளப்புகிறீர்கள் உங்களின் அரசியலுக்கு உறவு​களை இழந்தவர்களின் பரித​விப்பை ஊறுகாயாகப் பயன்​படுத்துகிறீர்கள். உங்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... உங்களில் எத்தனை பேர் அந்த 17 பேர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லப் போனீர்கள்? அந்தக் குடும்பங்களின் நல்லது கெட்டதுகளில் நீங்கள் எத்தனை பேர் பங்கெடுத்தீர்கள்? 'எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியைப் பார்க்க வந்ததால்தானே உங்களுக்கு இந்த நிலை. உங்களின் கஷ்டங்களில் இனி நாங்கள் உடன் இருக்கிறோம்?’ என உளமார்ந்த ஆறுதலை உங்களில் எத்தனை பேர் சொன்னீர்கள்? அந்தத் துயர சம்பவத்தில் தன் உறவைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இன்றைக்கு வாழவே வழி இல்லாமல், அனுதினமும் அல்லாடித் தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பெயரை நான் சொல்லப் போவது இல்லை. 17 பேர்களின் குடும்பங்களைத் திரட்டி வந்து தெருவில் நின்றீர்களே... அதேபோல், நான் கோடிட்டுக் காட்டும் அந்தக் குடும்பஸ்தனையும் தேடுங்கள். அப்படி ஒருவர் உங்களின் கண்ணுக்குத் தெரியாவிட்டால், அப்போது கேளுங்கள். காங்கிரஸ் கட்சியின் மிகக் கொடூர அரசியலை அம்பலம் ஆக்கும் விதமாக அந்த கஷ்ட ஜீவனக்காரரை உங்களின் கண் முன்னால் நிறுத்துகிறேன். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை, - அதுவும் காங்கிரஸ் குடும்பத்தை வாழவைக்கத் தெரியாத நீங்கள் எங்களைச் சாகடிப்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து அழைத்து வருகிறீர்களே... இது எவ்வளவு பெரிய மோசமான காரியம்?

22. இத்தனைக் கேள்விகள் உங்களுக்குப் போதும். நான் வரிசைப்பட வைத்திருக்கும் அத்தனைக் கேள்விகளையும் அலசி ஆராய்ந்தவர்களாகச் சொல்லுங்கள். நாங்கள் குற்றவாளிகளா? ராஜீவைக் கொலை செய்யும் சதி உண்மையிலேயே நாங்கள் நிகழ்த்தியதுதானா? விசாரணை அதிகாரிகள் போகிறபோக்கில் எங்கள் வயிற்றில் அடித்த நிகழ்வுதானே இது. எங்களைத் தூக்கில் போடு​வதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மரணப் போர்வை போர்த்தியபடிதானே இத்தனை நாட்களும் நாங்கள் வாடிக்கிடக்கிறோம். 21 வருடங்களாக அடைபட்டுக் கிடக்கும் எங்களின் நியாயம் நிச்சயம் உங்களின் நெஞ்சத்து நீதிபதியை கருணைகொள்ள வைத்திருக்கும் என்பது எமது நம்பிக்கை.

இதற்குப் பின்னரும், 'நீங்கள்தான் குற்றவாளிகள். உங்களைத் தூக்கில் போடுவதுதான் ஒரே தீர்வு!’ என நீங்கள் உறுதியாக நின்றால், அதை தைரியத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயார். அதற்கு முன் உங்களிடத்தில் ஒரு கோரிக்கை... மன்னிக்கிற மனோபாவத்துக்கும், உயரிய எண்ணங்களுக்கும் நீங்கள் வளராவிட்டாலும், விஞ்ஞானம் இன்றைக்கு பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. துல்லியமாக உண்மைகளைக் கண்டறியும் விஞ்ஞானப் பரிசோதனைகள் வந்துவிட்டன. ஒருவனை அந்த விசாரணைக்கு உட்படுத்தினால், பால்ய கால நினைவுகளைக்கூட அவனது மூளைச் சேமிப்பில் இருந்து எடுக்க முடியும் என்கிறார்கள். அத்தகைய சோதனைக்கு நீங்கள் என்னை உட்படுத்த வேண்டும். என்னைக் காப்பாற்றக் கோரி உங்களிடம் கதறினால்தானே தவறு. கடைசியாக என்னை ஒரு முறை விசாரிக்கச் சொல்கிறேன். என் மனக் கிடக்கையில் சொல்ல முடியாமல் கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்களை அந்த விசாரணை முடிவில் அறிந்துகொள்ளுங்கள். மனிதர்களின் விசாரணையில் எமக்கு சம்மதம் இல்லை. விஞ்ஞானமும் எங்களின் ரணமான மனதோடு சில மணி நேரங்கள் விளையாடிப் பார்க்கட்டும். மரணத்துக்கு முந்தைய ஒப்புதல் வாக்குமூலமாக அதுவே மாறட்டும். அதைக் கேட்கிற உளத் துணிச்சலும் உண்மையைத் தாங்கிக்கொள்ளும் பக்குவமும் உங்களுக்கு இருந்தால், அந்த இறுதி வார்த்தைகளைக் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னைத் தூக்கில் போட்டுக் கொன்றாலும் சரி... வெட்டி வைத்துத் தின்றாலும் சரி!

காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 06-11-11

புதன், நவம்பர் 02, 2011

மூவருக்கு தூக்கு! ஒரு நாடகம்... இரு நடிகர்கள்!

டந்துவிட்ட காலம், விடுக்கப்பட்ட வார்த் தைகள், தொடுக்கப்பட்ட அம்பு ஆகிய மூன்றும் திரும்பப்பெற முடியாதவை. ஆனால், நம் அரசியல்வாதிகள் வாய்மலர்ந்த வார்த்தைகள் மட்டும் எளிதில் திரும்பப் பெறக் கூடியவை. 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றான் பாரதி. நம் விதியெழுதும் அரசியல் வித்தகர்கள், அன்றாடம் புதிதாய்ப் பிறப்பவர்கள். அதனால்தான், நேற்று சொன்ன வார்த்தையும், செய்த செயலும் அவர் களைக் கட்டுப்படுத்துவதில்லை. அரசியல் அரங்கில் அவர்கள் நடத்தும் நவீன திருவிளையாடல்களைக் காவியமாக்க எந்தக் கவிஞனாலும் இயலாது!

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 20 ஆண்டுகளாக மரணத்தின் நிழலில், இளமை முழுவதையும் இழந்து சிறைக்கம்பிகளுக்குள் சீரழிந்து நிற்கின்றனர். அவர்கள் குற்றமே இழைத்திருந்தாலும்... ஓர் ஆயுள்தண்டனைக் காலத்தை விட அதிகமான நாட்களைக் காராக்கிருகத்தில் கழித்துவிட்டனர். இனியாவது அவர்களை வாழ அனுமதிப்பதுதான் சட்டத்துறைக் கோட்பாட்டுக்கு (Jurisprudence) எல்லா வகையிலும் ஏற்புடையது என்று மனித நேயம் சார்ந்த மக்கள் சிந்தித்ததன் விளைவாக மாநிலம் முழுவதும் மூவரின் மரணதண்டனைக்கு எதிராக உணர்வலைகள் பொங்கிப் புரண்டன.

சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் மகுடம் இழந்தார். ஜெயலலிதா மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தார். தி.மு.கழகம் மரணப் படுக்கையில் கிடத்தப்பட்டது. விழுந்த கலைஞர் எழத் துடித்தார். ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, கழகத்தின் கதை முடிக்க நினைத்தார். இனத்துரோகத்தில் ஈடுபட்டதனால்தான் இழிந்த தோல்வி நேர்ந்துவிட்டது என்று கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி’ இடித்துரைத்தது. மீண்டும் கலைஞர் 'தமிழினத் தலைவர்’ வேடமேற்று நடிக்க விரும்பினார். மூவரின் மரண தண்டனை அவருடைய நவீன நாடகத்துக்கு வசதியான மேடையானது. திரைக்கதை திருத்தி எழுதப்பட்டது. நெஞ்சை உருக்கும் வசனங்கள் கலைஞரின் பேனாவிலிருந்து கசிந்தன. திரைச் சீலை அகன்றது. வசனம் பேச கலைஞர் வாய் திறந்தார்.

'ஐயகோ! மூன்று இளைஞர்கள் மரணத்தின் மடியில் மயங்கிக் கிடப்பதை மனச்சான்று உள்ள தமிழர்கள் இனியும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது முறையோ? ஜெயலலிதா அம்மையார் நினைத்தால் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி ஒரு தீர்மானம் தீட்டி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் போதுமே. அப்படித்தானே நளினியைக் காலனின் பிடியிலிருந்து நான் காப்பாற்றினேன்...’ என்ற கலைஞரின் 'காகிதப்பூ’ வசனம் காதில் விழுந்ததும் உள்ளாட்சித் தேர்தல் ஜெயலலி தாவின் கண்முன்னால் ஊசலாடியது. 'வீதி நாடகம்’ நடத்துவதில் நம் முதல்வருக்கு முன் அனுபவம் அதிகம் என்பதை கலைஞர் மறந்துவிட்டார். போட்டி நாடகம் சட்டப் பேரவையில் அரங்கேற்றப்பட்டது. ஜெயலலிதா பேசிய ஒவ்வொரு வசனமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. கலைஞர் நாடகத்தில் கூட்டம் குறைந்தது.

'கருணாநிதி முதல்வராக இருந்தபோது 20-04-2000 அன்று கூட்டப்பட்ட அமைச்சரவையில் நளினிக்கு மட்டும் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மற்ற மூவருக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன்படியே ஆளுநர் ஆணை பிறப்பித்தார்’ என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா வீசிய வெடிகுண்டு சத்தத்தில் விழித்துக்கொண்ட பூனை, கலைஞர் மறைத்து வைத்திருந்த கோணிப் பையிலிருந்து வெளியே வந்து விழுந்தது. அமைச்சரவையைக் கூட்டி மூவரின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றும் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பும்படி இன்று ஜெயலலிதாவுக்கு இலவச ஆலோசனை வழங்கும் கலைஞர், நேற்று அதைச் செய்யத் தவறியது ஏன்? அவரைச் செய்ய விடா மல் தடுத்த 'கை’ எது? அந்த மனித நேயமற்ற 'கை’யை முற்றாக முறித்து விட்டு விலகும் மனத்துணிவு கலைஞருக்கு உண்டா?

'கனிமொழி ஜாமீனில் வெளியே வரும் வரை சோனியாகாந்தியை நான் சந்திக்கப் போவதில்லை. உடல் நலம் விசாரிக்கச் சென்றாலும் உள்ளர்த்தம் கற்பிக்கப்படும்’ என்று சொன்ன கலைஞர், கனிமொழி திகார் சிறையில் இருக்கும்போதே புதுடெல்லி சென்று சோனியாவையும், பிரதமரை யும் சந்தித்தார். 'கனிமொழியின் ஜாமீன் குறித்து இருவரிடமும் நான் எதையும் பேசவில்லை’ என்று அவர் சொன்னதை நாம் நம்புவோம். எவற்றையெல்லாமோ நம்பி நைந்துவிட்ட நமக்கு, இதை நம்புவதால் புதிதாக இழக்க எதுவும் இல்லை. கலைஞரின் டெல்லிப் பயணத்துக்கும்... சி.பி.ஐ., கனிமொழி ஜாமீன் விவகாரத்தில் அடக்கி வாசிப்பதற்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் நம்புவோம். சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சீஸரின் மனைவி அல்லவா நம் சி.பி.ஐ.!

கலைஞர் எழுதி, இயக்கி, நடிக்கும் 'இனவுணர்வு’ நாடகத்தில் இரண்டாவது காட்சி. 'தூக்குத் தண்டனை பெற்றிருக்கும் மூவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடுவதால், இதுவரை அனுபவித்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களுடைய உயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்தினார் கலைஞர். நிராயுதபாணி யாக நிற்கும்போது நெஞ்சில் கசிந்த கரிசனம், சகல அதிகாரங்களும் கையில் இருந்த போது ஏன் காணாமற் போனது? முதல்வர் என்ற முறையில் பிரதமரிடம் அப்போது வலியுறுத்த ஏன் வாய் வரவில்லை? 'மத்திய அரசு உதவிட வேண்டும்’ என்றாராம். அந்த மத்திய அரசில் இவருடைய கட்சியும்தானே இடம் பெற்றிருக்கிறது? கூட்டணி தர்மப்படி ஆட்சி நடத்தும் 'கலியுக தருமர்’ நம் பிரதமர். கூட்டணி தர்மத்துக்காக அலைக்கற்றை ஊழலை அனுமதித்தவர், மூவரின் மரண தண்டனையை நிறுத்த முடியாதா என்ன? கலைஞரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால்... கழகம் மத்திய அரசிலிருந்து விலகி விடுமா? 'இந்த மேடையில் அந்த நாடகம் இன்னும் எத்தனை நாளம்மா?’ என்ற கண்ணதாசனின் பாடல்தான் கவனத்துக்கு வருகிறது.

கலைஞர் நடத்தும் நவீன நாடகம் பொதுமக்கள் பார்த்துச் சலித்த பழைமையான நாடகம்தான். ஆனால், நம் முதல்வர் நடத்தும் நாடகமோ காட் சிக்குக் காட்சி அதிரடி திருப்பங்கள் நிறைந்தது. 'ஈழத் தமிழர்’ நாடகத்தில் ஜெயலலிதா அரங்கேற்றிய முதல் காட்சியே யாரும் எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது. 'இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் செய்து, நிறைவேற்றிய தீர்மானம் கண்டு உலகத் தமிழர்கள் உவகை அடைந்தனர். முருகன், சாந்தன், பேரறிவாளன், பிரச்னை எழுந்தபோது, 'கருணாநிதி அமைச்சரவை தீர்மானத்தின்படி ஆளுநர் கருணை மனுவை நிராகரித்த பின்பு, என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இந்த அரசுக்கு அதை மாற்றும் அதிகாரமில்லை. வேண்டுமானால், மூவரும் குடியரசுத் தலைவரிடம் மீண்டும் கருணை மனு சமர்ப்பிக்கட்டும்’ என்று முதல்வர் கை கழுவியதும் வீதி நாடகத்துக்கு வேண்டிய விறுவிறுப்பு குறைந்தது. பார்வையாளர் அரங்கில் கூச்சல் எழுந்தது.

உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை நாடகத்தை வெற்றிகரமாக நடத்திப் பார்வையாளர்களைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று உணர்ந்த முதல்வர், அடுத்த நாளே அதிரடி திருப்பத்தை அறிமுகப்படுத்தினார். 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேதகு குடியரசுத் தலைவரைத் தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ என்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர், மக்களின் உணர்வுக்கும், அரசியல் கட்சிகளின் கருத்துக்கும் மதிப்பளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொண்டார். நாடகத்தின் புதிய திருப்பம் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த தமிழர் கூட்டம், 'தாயே! தெய்வமே! தமிழனத்தின் உண்மையான தலைவியே! புரட்சியின் புதிய வடிவமே!’ என்று பாரெங்கும் 'பஜகோவிந்தம்’ பாடத் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அசுர வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. நாடகத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவர் கருணை மனுவுக்கு எதிராக ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த குறிப்புகள்தான் யாருமே கனவிலும் எதிர்பார்த் திராத நாடகத்தின் உணர்ச்சி நிலை வீழ்ச்சி (anti-climax)ஆகும். 'மூவரின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துத் தமிழக அரசு எதுவும் கூற முடியாது’ என்று குறிப்பிட்டதோடு நில்லாமல், 'மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் ஜெயலலிதா அரசு தெளிவாகத் தெரிவித்துவிட்டது. இதன் மூலம் மூவரும் தூக்கில் தொங்குவது தமிழக அரசுக்குச் சம்மதமே என்று மறைமுகமாக உணர்த்திவிட்டார் ஜெயலலிதா. அப்படியானால், 60 நாட்களுக்கு முன்பு சட்டப் பேரவையில் மூவர் உயிர் காக்க ஏன் ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார்? இடையில் நடந்தது என்ன? ஏன் இந்த இரு நிலைப்பாடு? 'அடிமைப் பெண்’ படத்தில் இரு வேடங்களில் அற்புதமாக நடித்ததில் அவருடைய ஆற்றல் வெளிப்பட்டது. ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்பும் இரு வேடங்களில் நடித்தால் அவருடைய சந்தர்ப்பவாதம்தான் சாயம் வெளுக்கும். ஜெயலலிதாவின் கட்சிச் சின்னம் 'இரட்டை இலை’ என்பதற்காக, அவருடைய அரசியல் நடவடிக்கைகளிலும் இரட்டை நிலை இருப்பது அவருக்கு ஒரு போதும் பெருமை சேர்க்காது. மூன்று உயிர்களின் மரண மேடையில் கலைஞர், ஜெயலலிதா என்ற இரண்டு நடிப்புச் சுதேசிகளின் நாடகம் நன்றாகவே நடக்கிறது. பார்வையாளர்களாக நாம் எவ்வளவு நாள் பார்த்து ரசிக்கப் போகிறோம் என்பதுதான் விடைகாண வேண்டிய கேள்வி!

-தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர்விகடன், 06-நவம்பர்-2011