வியாழன், பிப்ரவரி 12, 2009

ஒரே குரலில் 'இந்து' - கலைஞர் கருணாநிதி - வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசின் ராணுவப் படுகொலையை வெளிப்படையாக ஆதரித்து இலங்கை அரசின் இரண்டாவது தூதரகமாக செயல்பட்டு வரும் 'இந்து' நாளேடு அண்மையில் தி.மு.க. செயற்குழு மேற்கொண்ட முடிவுகளை மனம் குளிர பாராட்டி வரவேற்று தலையங்கம் தீட்டியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும் இந்தப் பிரச்சினையில் மிகவும் உள்ளத்தைத் தொடக்கூடிய அரசியல் மேன்மை மிக்க செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக 'இந்து'வின் தலையங்கம் கூறுகிறது (பிப்.4). சிறிலங்காவில் நடக்கும் சம்பவங் களை எதிர்கொள்வதில் மிகவும் நிதானத்தோடு அளந்து செயல்படுவதோடு தனது மேதைமையான முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தத் தலையங்கம் கூறுகிறது...
"Between them, the Dravida Munnetra Kazhagam government in Tamil Nadu and the United Progressive alliance at the Centre have shown impressive political statesmanship and footwork in responding to the challenge of digesting and responding soberty to what is happening in Sri Lanka."

மேலும் அத்தலையங்கத்தில், "தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோருகின்றன; விரல்விட்டு எண்ணக்கூடிய குழுக்கள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றன; தமிழகத்தின் கொந்தளிப்பான இச்சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தனது கவலை தமிழ் மக்களைப் பற்றித் தானேயொழிய விடுதலைப் புலிகளைப் பற்றியல்ல என்று திட்ட வட்டமாக சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப் படுத்திவிட்டார். அதுமட்டுமல்ல; கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் நடத்தி வரும் சகோதர யுத்தத்தையும், முரட்டுத்தனமான கொள்கைகளையும் மிகவும் துல்லியமாக விமர்சித்துள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய மூன்று அரசியல் தீர்மானங்கள் இலங்கை இனப்பிரச்சினையில் இதுவரைத் தமிழகம் முன் வைத்த கோரிக்கைகளிலிருந்து மாறுபட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களாகும். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. வின் எதிர்பார்ப்பையும் முன் வைக்கும் பிரச்சாரத்தையும், தி.மு.க. செயற்குழு தெளிவாக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. விடுதலைப் புலிகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அப்பாவி தமிழ் மக்களின் பாதுகாப்பும் நலன்களும் பாதுகாக்கப்பட்டு, சுமூகமான நிலை திரும்ப வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் கூறுகிறது. வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து, சுயாட்சி வழங்கும் வகையிலான அரசியல் தீர்வை (ஒன்றுபட்ட இலங்கைக்குள்) இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அத் தீர்மானம் கூறுவதோடு, இந்த இலக்கை அடைவதற்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதில் தமிழ்நாடு அரசினை பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய அம்சம் வேகம் பெற்று வரும் ஒரு பிரச்சினையில் - மத்திய அரசோடு தன்னையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்துக்கான தீர்வை முன் வைத்துள்ளதுதான்!

(A commendable feature of the Tamil Nadu Government's response is the forward looking way in which it has teamed up with the Central government in responding to a fast-developing situation.)

பிரணாப் முகர்ஜியின் அறிவார்ந்த நடுநிலையான அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அவர் கொழும்பு சென்று, ராஜபக்சேயை சந்தித்து, இந்தப் பிரச்சினையை சாதுர்யத்தோடு கையாண்டதே இதற்கு காரணம். இதன் காரணமாகத்தான் மாநில அரசும், மத்திய அரசும் தங்களை ஓரணியாக்கிக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி உணர வைத்து, எதிர்கால அமைதித் தீர்வை நோக்கி மத்திய மாநில ஆட்சிகளை திரும்பச் செய்துள்ளது - என்று 'சிறிலங்கா ரத்னா' விருதைப் பெற்ற 'இந்து' ராம் தனது ஏட்டின் தலையங்கத்தில் பாராட்டு மழையில் தி.மு.க.வை மூழ்க செய்து விட்டார்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதே 'இந்து'வின் மய்யமான கருத்து. பார்ப்பன 'இந்து' ஏட்டிடமிருந்து கிடைத்துள்ள இந்த சான்று ஒன்று மட்டுமே தி.மு.க. மேற்கொண்ட துரோகத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமான தாகும்.

'இந்து' ஏடு போற்றிப் பாராட்டும் ஒரு தீர்வு திட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'இந்து' ஏடு எதை ஆதரிக்கிறதோ, அதை எதிர்த்து எழுதினாலே போதும் என்று பெரியார், தாம் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது தனக்கு ஆலோசனை கூறியதாக கி.வீரமணி அடிக்கடி கூறுவார். இப்போது 'இந்து' ஏடு பார்ப்பன வெறியோடு முன் வைக்கும் கருத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு 'கலைஞரின் தூதுவராக' வீரமணி களமிறங்கியிருப்பதை தமிழின உணர்வாளர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தும் பிரச்சாரத்தில் தன்னை யும் இணைத்துக் கொண்டு தீவிரப் பிரச்சார பீரங்கியாக மாறி நிற்கும் கி.வீரமணி, கடந்த காலங்களில் எத்தகைய கருத்துகளை முன் வைத்தார்? துரோக காங்கிரசாரிடம் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டு சேரக் கூடாது என்று கூறி, திராவிட கட்சிகள் ஓரணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று 'திராவிட பார்முலாவை' அன்று முன் வைத்த கி.வீரமணி, இப்போது காங்கிரசின் பச்சை துரோகத்துக்கு நடை பாவாடை விரிக்கும் தி.மு.க. வோடு கைகோர்த்துக் கொண்டு காங்கிரசாரோடு ஒரே மேடையை பகிர்ந்து கொண்டு பேசி வருவதற்குப் பெயர் என்ன? தமிழர்களுக்கு எதிராக காங்கிரசின் பச்சை துரோகத்தை எதிர்த்து, தமிழகமே கொந்தளிக்கும் சூழ்நிலையில் கி.வீரமணி யின் காங்கிரசு எதிர்ப்பு முழக்கம் எங்கே போனது? ஏன் வாயடைத்துப் போனது? இதோ, உதாரணத் துக்கு ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்:

"திராவிட இயக்கங்களான அரசியல் கட்சி களுக்கு நமது கனிவான வேண்டுகோள் என்ன வென்றால், மீண்டும் காங்கிரசுடன் சேருவது பற்றி சிந்திப்பதை ஒரு புறத்தில் தள்ளி வைத்து, நாடாளு மன்றத்திற்கான 40 இடங்களுக்கும் (புதுவை உட்பட) நீங்கள் ஒரு தொகுதி உடன்பாட்டிற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? திராவிட பார்மூலா என்று நாம் முன்பு வற்புறுத்தியதையே மீண்டும் நினைவூட்டு கிறோம்; இதை அசை போட்டுச் சிந்தியுங்கள். அதற்கான வாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட் டுள்ளோம். இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது.

ஒத்த கருத்துள்ளவர்கள் ஏன் ஓரணிக்கு வரக்கூடாது?

மொழி (இந்தி)ப் பிரச்சினை, மாநில சுயாட்சி, திராவிடப் பண்பாட்டினை காத்தல், காவிரிப் பிரச்சினை, ஈழத் தமிழர் இனப் படுகொலை தடுப்புப் பிரச்சினை இவைகளில் உங்களால் ஒத்தக் கருத்து கொள்ள முடிகிறது; அகில இந்திய கட்சிகளால் அப்படி அதனை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அத்தகையவர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களோடு தொகுதி உடன்பாடு காண முயலும்போது, 25 ஆண்டுகள் நேற்று வரை ஒரே அணியில் இருந்து கோபதாபங்கள் காரணமாகப் பிரிந்த நீங்கள், மிகப் பெரும் பகையாளர்கள் போல் எவ்வளவு காலத்திற்குக் கட்சி நடத்தப் போகிறீர்கள்? ('விடுதலை' 10.3.96)
- என்று அன்று கி.வீரமணி எழுதினார். காங்கிரசை தனிமைப்படுத்த அன்று குரல் கொடுத்தவர். இன்று தமிழகத்தின் உணர்வாக அந்தக் கருத்து உருவாகும் போது தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரசுடன் கை குலுக்குவது, தமிழினத் துரோகம் அல்லவா?

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரி என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதி செயற்குழுவில் பேசியிருக்கிறார். இதைக் கண்டிக்காத வீரமணி, தி.மு.க. அமைத்துள்ள குழுவிலும், இடம் பெற் றுள்ளார். அப்படியானால், பிரபாகரன் சர்வாதிகாரி என்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்தை கி.வீரமணி ஆதரிக்கிறாரா? இல்லை என்றால், அதை இதுவரை மறுத்து எழுதாதது ஏன்? தி.மு.க.வின் துரோகப் பாதை தான் தி.க.வின் பாதையா?

1991 இல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியாவில் அய்க்கிய முன்னணி ஆட்சி நீட்டித்தது. அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியே நடந்தது. அப்போது இதே கி.வீரமணி என்ன எழுதினார்? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்கக் கூடாது என்று எழுதினார்.

"ஏனைய போராளிக் குழுக்களில் பலவும் தாராளமாக தமிழ்நாட்டில், இந்தியாவில் நடமாட உரிமைகள் அளித்து விட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினை மட்டும் தடை செய்வது ஏன்?"
- என்று கேட்ட வீரமணி, அப்போது தமிழகத்தில் இருந்த கலைஞர் கருணாநிதி அரசும் இதற்கு உடன்பட்டு பழியை சுமக்கக்கூடாது என்று எழுதினார்.

"மத்திய அரசு - அய்க்கிய முன்னணி அரசு முந்தைய அதிகார வர்க்கம் விரித்த வலையில் வீழ்ந்து, அவகீர்த்தியைத் தேடிக் கொள்வதும் தமிழக தி.மு.க ஆட்சி - கலைஞர் அரசு இதில் பழியைச் சுமப்பதும் தேவையற்ற ஒன்று என்பது நமது உறுதியான கருத்து. ('விடுதலை' 15.6.96)

1996 இல் வெளியிடப்பட்ட உறுதியான கருத்து. இப்போது தி.மு.க. தலைமை விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இழிவுபடுத்திப் பேசும்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டது?

மத்திய அரசின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டதாக 'இந்து' பார்ப்பன ஏடு கலைஞர் கருணாநிதியை பாராட்டி மகிழ்கிறது.

'இந்து' பார்ப்பன ஏட்டின் கருத்துகளை எதிர்ப்பதே பெரியார் கற்றுத் தந்த அணுகுமுறை என்று கூறி வந்த கி.வீரமணி, இப்போது 'இந்து'வின் பாராட்டைப் பெறும் கலைஞர் கருணாநிதியோடு கரம்பிடிக்க நின்று கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகத்தில் இன்னும் மிச்சம் மீதியுள்ள உணர்வுள்ள இளைஞர்களைக் கேட்கிறோம்,

கி. வீரமணியின் இந்த துரோகத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? காங்கிரஸ் கட்சித் தொண்டன்கூட இன துரோகத்தை எதிர்த்து, அக்கட்சியைக் கண்டித்து, தீக்குளிக்கும் போது பெரியார் தொண்டர்களே இந்த துரோகத்தைத் தட்டிக் கேட்காமல் வாய் மூடி நிற்கப் போகிறீர்களா? அல்லது 'உலகத்தின் ஒரே தமிழர் தலைவர் எங்கள் தலைவர்' என்று மீண்டும் பஜனைப் பாடல்களைப் பாடப் போகிறீர்களா?

நன்றி: பெரியார் முழக்கம்

திங்கள், பிப்ரவரி 09, 2009

பிரபாகரனை வஞ்சகமாகக் கொலை செய்ய இராசீவ்காந்தி ஆணையிட்டார் !

1987 செப்டெம்பரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஓர் இந்தியத் தூதுக்குழுவுக்கும் இடையே பலாலியில் அரசியல் உரையாடல் நடைபெற்றது. கண்ணுக்கெட்டும் தொலைவில் அமைதித் தீர்வு வந்துவிட்டாற் போல் தெரிந்தது. இடைக்கால நிர்வாக மன்றம் (சபை) அமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்க வேண்டியிருந்தது. பலாலியில் எனது இராணுவத் தலைமையகத்தில் இந்தியத் தூதர் ஜெ.என். தீட்சித்தின் தலைமையில் நடைபெறவிருந்த சந்திப்புக்கு 1987 செப்டெம்பர் 16-17 என நாள் குறிக்கப்பட்டது.

1987 செப்டெம்பர் 14/15 இரவில் தீட்சித் என்னைத் தொலை பேசியில் அழைத்து, "பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு வரும்போது அவரைத் தளைப்படுத்துங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார். பிறகு உங்களை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு நான் அனைத்துப் படைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் திபிந்தர் சிங்கை அழைத்துப் பேசினேன். "ங்கள் அறம்பிழாப் படையினர் ஆதலால் வெள்ளைக் கொடியுடன் பேச்சு நடத்த வருகிறவர்களைச் சுட மாட்டோம்" என்று தீட்சித்துக்குச் சொல்லிவிடும்படி திபிந்தர் சிங் எனக்குக் கட்டளையிட்டார்.

பிறகு நான் கொழும்பிலிருந்த தீட்சித்தை அழைத்து, இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன். "உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன்" என்றும் அழுத்திச் சொன்னேன். (இந்திய இலங்கை) உடன்பாட்டின் செயலாக்கத்தில் எழுந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்திய அமைதிக் காட்டிய படைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துள்ளது என்று சுட்டிக் காட்டினேன். தீட்சித் சொன்ன பதில் இதுதான்:"அவர் (இராசீவ் காந்தி) எனக்கு இந்தக் கட்டளைகளைத் தந்துள்ளார். இராணுவம் இதிலிருந்து கழன்றுகொள்ளுமானால், இந்திய அமைதிக் காப்புப் படையின் கட்டளைத் தளபதி ஆகிய நீங்களே பொறுப்பாவீர்கள்''

மறுநாள் காலை அப்போது இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் பி.சி. ஜோஷி என்னை அழைத்து, தீட்சித்தின் கட்டளை தொடர்பான என் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி எரிச்சலுற்றார். உடனே அவர் பலாலியில் இருந்த என்னிடம் பேசும்படி அனைத்துப் படைத் தளபதிக்குச் சொல்லி விட்டார். விடுதலைப் புலித் தலைவர்களைச் சந்திப்பதற்காக என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார்.

1987 செப்டெம்பர் 16இல் நடக்கவிருந்த கூட்டத்தில் பிரபாகரன் கலந்து கொள்வதையும் அனைத்துப் படைத் தளபதியே உறுதிசெய்ய வேண்டும் என்றார். பிரபாகரன் பலாலி வந்து சேர்ந்தவுடன் தீட்சித்துக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார். தகவல் கிடைத்தவுடன் தீட்சித் கொழும்பிலிருந்து உரிய நேரத்தில் புறப்பட்டு வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அனைத்துப் படைத் தளபதியும் நானும் யாழ்ப்பாணத்துக்கு உலங்கூர்தியில் (ஹெலிகாப்டர்) பறந்து சென்று பிரபாகரனைச் சந்தித்தோம். பேச்சுவார்த்தைக்காக அவரையும் அழைத்துக்கொண்டு பலாலி திரும்பினோம். கொழும் பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் கொடுத்து தீட்சித் திட்டப்படி பகல் 11 மணிக்கு பலாலி வரச் செய்தோம். நான் அவரை வரவேற்று, லெப்டினண்ட் ஜெனரல் திபிந்தர் சிங்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவையும் சந்திப்பதற்காக அதிகாரிகள் உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன்.

பேச்சு வார்த்தை நடந்து மிகவும் வெற்றி கரமாக முடிந்தது. எங்களில் பெரும்பாலார் இந்திய அமைதிப் படை 1987 திசம்பருக்குள் இலங்கையை விட்டு வெளியேறி விடும் என்ற முடிவுக்கு வந்தோம். முடிவில் முட்டுக்கட்டை நீங்கி விட்டது, அமைதி நெருங்கி வந்து விட்டது என்றே கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் நினைத்தோம். பகலுணவுக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினர் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வதை நான் உறுதி செய்தேன். அவர்கள் தங்கள் ஊழியர்களின் வழிக்காவலுடன் சாலை வழியாகப் பயணம் செய்வதையே விரும்பினார்கள்.

அநேகமாக இந்த நிகழ்ச்சியை வைத்தே, இந்திய அமைதிக் காப்புப் படை செய்ய வேண்டியதைச் செய்வதற்குச் சிறிதும் அணியமாய் இல்லை என்று தீட்சித் இந்திய அரசுக்கு எழுதியதாகத் தகவல். அமைதிப் படைத் தளபதிகள் பிரபாகரனுக்கு அசாதாரண மரியாதை காட்டுகிறார்கள், "அவருக்கு வணக்கம் கூடத் தெரிவிக்கிறார்கள்' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். முடிவில், 54ஆம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியை மாற்றாவிட்டால் பேரழிவுச் சூழல் உருவாகக் கூடும் என்றும் தெரிவித்தார்.

("ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் இலங்கை சென்ற இந்திய அமைதிப் படைத் தளபதிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் அர்கிரத் சிங் எழுதிய "சிறிலங்காவில் தலையீடு' நூல், பக்கம் 57-58)
Maj.Gen.Harhirat Singh (Retd.) Intervention in Sri Lanka - The IPKF Experience Retold, 2007 Manohar Publishers, New Delhi, Price : Rs.545

நன்றி: சமூகநீதி தமிழ்த்தேசம், ஜனவரி-2009

புதன், பிப்ரவரி 04, 2009

'காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக் கூடாது...!'- தமிழருவி மணியன்

'எப்போது இலங்கைக்குப் பயணப்படுவார் பிரணாப் முகர்ஜி?' என்று ஒவ்வொரு கணமும் உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். 'வானத்து தேவன் வந்தான் காண்' என்பது போல் இலங்கையில் இறங்கிய முகர்ஜி, ராஜபக்ஷேவுடன் பேசி ஒருவழியாக ஈழத்தமிழரின் பிரச்னைக்கு உரிய 'தெளிவான' தீர்வைக் கண்டுவிட்டு, இந்தியத் தலைநகருக்குத் திரும்பி விட்டார்!

'விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் எங்களுக்குத் தடையில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் முல்லைத்தீவில் உயிருக்கு அஞ்சி, உணவின்றித் தவிக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்குப் பின் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்' என்று முகமலர்ச்சியுடன் முகர்ஜி முன்மொழிந்திருக்கிறார்.

பேசும் சக்தியற்று ஊமையாகப் பிறந்த குழந்தையின் தேன் மழலையைச் செவிமடுக்க தெய்வத்திடம் வேண்டி நின்றாளாம் தாய். இறைவனின் கருணையால் இதழ் திறந்த குழந்தை, 'அம்மா! அப்பா எப்போது சாவார்? நீ என்று தாலியறுந்து நிற்பாய்?' என்று கேட்டதாம். முகர்ஜிக்கும் அந்த குழந்தைக்கும் அதிகம் வேற்றுமையில்லை.

பிரபாகரன் உட்பட அனைத்து விடுதலைப்புலிகளும் அழியவேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படையானது. புலிகளின் அழிவுக்குப் பின் இந்தியா காண விரும்பும் அரசியல் தீர்வு எந்த வகையில் சாத்தியம் என்பதுதான் கேள்வி. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழரின் உரிமைப் பசிக்கு உணவாகக் கூடுமா? இந்தியாவிலுள்ள ஒரு மாநில அரசு பெற்றிருக்கும் ஜனநாயக உரிமைகளை ஈழமக்களுக்குச் சிங்களப் பேரின வாத அரசு தர விரும்புமா? சிங்களருக்குச் சமமான உரிமைகளையும், வாய்ப்புகளையும் இலங்கை அரசு தந்தாக வேண்டும் என்று இந்திய அரசு அதிகபட்ச அழுத்தத்தை இதய சுத்தியுடன் வெளிப்படுத்துமா? ஏமாளித் தமிழினத்தை ஏமாற்ற அரங்கேற்றப்படும் இந்த அவல நாடகத்தில்தான் எத்தனை நடிகர்கள்!

'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரே இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துதல், இலங்கையின் அரசு அலுவல் மொழியாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்றும் இருத்தல்' என்ற ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் உருப்படியான இரண்டு அம்சங்களும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதா? முகர்ஜிதான் விளக்கவேண்டும். விடுதலைப்புலிகள் தடையாக இருந்ததால் ஒப்பந்தம் செயல்வடிவம் பெறவில்லை என்றால், அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் வாய்ப்புண்டா? தமிழர் வாழும் இரு மாகாணங்களும் இணைக்கப்படும் என்று ராஜீவ் காந்தியை நம்பவைத்தார் ஜெயவர்த்தனே. ஆனால், இலங்கை உச்ச நீதிமன்றம் அந்த இணைப்பை ரத்துச் செய்துவிட்ட நிலையில் ராஜபக்ஷே அரசு இணைப்புக்கு எந்த விதத்தில் வழி காணும்? முகர்ஜி இதற்கு பதிலளிப்பாரா?

கிழக்கு மாகாண முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற பிரபாகரன் கையாண்ட வன்முறையும், கருணா இன்று மேற்கொண்டுள்ள எதிர்நிலையும், முஸ்லிம் தமிழர்களின் இதய ரணமும் வடக்கும் கிழக்கும் இணைந்து ஈழத்தமிழ் நிலம் காண்பதற்கு எதிரான சூழலை உருவாக்கிவிட்ட பின்பு... சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழரை இணைக்கவா முன்வரும்? குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தனித்தனியாக தமிழ்நாடு போன்று ஜனநாயக உரிமைகளுடன் ஆட்சி நடக்கவாவது உத்தரவாதம் உண்டா? மன்மோகன் சிங் அரசு அந்த அளவேனும் ராஜபக்ஷே மீது நிர்ப்பந்தம் செலுத்துமா?

சத்தியமாகச் செலுத்தாது! அதற்கு அரசியல் காரணங்கள் உண்டு.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ் காந்தி வரைந்த கடிதத்தில், 'திரிகோணமலை அல்லது இலங்கையின் மற்ற துறைமுகங் களும் எந்த நாட்டின் ராணுவப் பயன்பாட்டுக்கும் இடம்கொடுக்காத வண்ணம் இருக்க வேண்டும் என இந்தியா விரும்பியது. எனவே, அதைப் பராமரிக்கவும், திரிகோணமலை எண்ணெய் கிடங்குப் பண்ணையை மீட்டு இந்தியா-இலங்கைக்கிடையே கூட்டு முயற்சியில் செயல் படுத்தவும், வெளிநாட்டு ஒலிபரப்பு அமைப்புகளுடன் இலங்கை அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் ஒலிபரப்பு பொதுமக்களுக்கு மட்டும் பயன்படும்படியும், ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ளவும்' என இந்தியாவின் நலன் கருதி வேண்டுகோள் வைத்தார். அதற்குக் கைம்மாறாக 'தீவிரவாத நடவடிக்கைகள், பிரிவினை வாதத்தை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடிய இலங்கைப் பிரஜைகளை நாடு கடத்தவும், இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி வசதிகள் மற்றும் ராணுவ உதவி செய்யவும்' ராஜீவ் உறுதி வழங்கினார். ராஜீவ் காந்தி வகுத்த வழித் தடத்திலிருந்து மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் மாறிப் பயணம் செய்யாது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையின் உறவு எந்த நிலையிலும் பழுதுபடாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று கருதும் மத்திய அரசு, 'இந்தியர்' நலன் காக்க(!) ஈழத்தமிழரை பலியிடுகிறது என்பதுதான் மறுக்கமுடியாத கசப்பான உண்மை. ஒற்றுமைக்கு ஒருபோதும் அர்த்தம் அறியாத தமிழினத்தைப் புறக்கணிப்பதனால், எந்தத் தலைவலியும் தங்களுக்கு வந்துசேராது என்பதை மன்மோகன் சிங்கும், முகர்ஜியும் பூரணமாகப் புரிந்துவைத்துள்ளனர்.

'தமிழ் ஈழம் என்ற நம் குறிக் கோளை அடைய எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடு, எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்க வேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூர்வதோடு, எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டுமானால், ஒரு பலமுள்ள சமுதாயமாக எம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்' என்று 1923-ல் நடந்த 'இலங்கைத் தமிழர் லீக்' கூட்டத்தில் பொன்.அருணாசலம் குறிப்பிட்டார். என்றாவது இலங்கைத் தமிழர் ஒன்றாக நின்றதுண்டா? ஆயுதங்களைக் கையிலெடுத்த ஈழ இளைஞர்களாவது ஒரே பாசறையில் நின்று போர்க்குரல் கொடுத்ததுண்டா?

இலங்கையின் மக்கள்தொகை 1931-ம் ஆண்டின் கணக் கெடுப்பின்படி 64 சதவிகிதம் சிங்களர்; 12 சதவிகிதம் இலங்கைத் தமிழர்; 13 சதவிகிதம் இந்தியத் தமிழர்; 10 சதவிகிதம் முஸ்லிம்கள். கரையோரச் சிங்களரின் ஆதிக்கத்தை முதலில் எதிர்த்த கண்டிச் சிங்களர், தமிழரின் ஆதிக்கத்தைத் தகர்க்க ஒன்று பட்டனர். சிங்களப் பேரினவாதம் அவர்களுடைய வேற்றுமைகளின் வேரறுத்தது. ஆனால், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதியுணர்வில் ஊறித் திளைத்து... ஆற்காடு, சேலம், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லைப் பகுதிகளிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாகப் பிழைக்கச் சென்ற பள்ளர், பறையர், இருளர், குறவர், நாடார், சக்கிலியர் போன்றோரைத் தோட்டக்காரன், கூலி, புதிய தமிழர் என்று பெயர் சூட்டிப் புறக்கணித்தனர். ஒரு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை பறிக்கப்பட்டு, சமூகநீதி மறுக்கப்பட்டபோது மௌனப் பார்வையாளர்களாக யாழ்ப்பாணத் தமிழர் வேடிக்கை பார்த்தனர் என்பதுதான் வேதனைக்குரிய வரலாறு.

ஒரு சிங்கள கிறிஸ்துவன், சிங்கள பௌத்தனாக முடியும். ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட மலையகத் தமிழன் யாழ்ப்பாண உயர்சாதித் தமிழருடன் ஒன்றிணைய முடியவில்லையே!

அன்று ஒன்றுபடாத இலங்கைத் தமிழரின் உரிமை களைக் காக்க... இன்று நம் தமிழினத் தலைவர்களாவது தமிழகத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்களா? எத்தனை மேடைகள், எத்தனை வேடங்கள், எத்தனை கோஷங் கள்! விடுதலைப்புலிகளின் குருதியில் கூந்தல் முடிக்கத் துடிக்கும் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்றபடி 'புரட்சிப் புயல்' வைகோ, பிரபாகரனுக்காக உலகத் தமிழரிடையே உரத்த குரலில் ஈழவிடுதலை கீதம் இசைக்கிறார். அவருக்குக் கலைஞரின் நிழல் மீதும் நீங்காப் பகை. எதிரிக்கு எதிரி நண்பன். அதனால் ஜெயலலிதாவும் வைகோவும் அரசியல் உலகத்தின் அதிசய நண்பர்களாகிவிட்டனர். நம் அரசியல் தலைவர்களுக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர சுயநலம்தான் உண்டு. வைகோவின் வசம் இரண்டு முகமூடிகள் இருக்கின்றன. அரசியல் ஆதாயத்துக்காக உள்ளூர் முகமூடி ஒன்று; ஈழத்தமிழருக்காக உலக முகமூடி மற்றொன்று.

முகமூடிகளை மாற்றி மாற்றி அணிவதில் மருத்துவர் ராமதாஸ§க்கு மாற்று காண்பதரிது. அவர் நலனுக்கு அவசியப்படும்போதெல்லாம் அணி மாறுவார். கலைஞரும், ஜெயலலிதாவும் பகை மறந்து போட்டிபோட்டு அவரை அரவணைக்கும் வரை அவருடைய காட்டில் அடைமழை. எப்போது டாக்டர் எந்த வியூகம் வகுப்பார் என்பது வாக்களித்தே நோயாளிகளாகிவிட்ட அப்பாவித் தமிழர் அறியாத ரகசியம்.

ஈழத்தமிழர் உரிமைக்காக அன்றாடம் குரல் கொடுப்பவர் மருத்துவர் ஒருவர்தான். மன்மோகன் சிங்குக்கு ஒருநாள் கண்டனக் கடிதம் எழுதுவார். சோனியா காந்திக்கு மறுநாள் தன் வருத்தத்தைக் கடிதத்தில் தெரிவிப்பார். கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கலைஞரிடம் முறையிடுவார். மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்துவார். ஆனால், மறந்தும் தன் மகன் அன்புமணியை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவேண்டுமென்று வற்புறுத்தமாட்டார். ஈழத்தமிழர் நலன் காக்க மறந்துவிட்ட காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தேவை என்பார். மத்திய அரசின் ஆயுள் முடிந்ததும், மகனுடைய அமைச்சர் பதவி காலா வதியானதும் ஈழப்பிரச்னையில் காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாகப் பழிதூற்றிவிட்டு 'அன்புச் சகோதரி' ஜெயலலிதா கூட்டணியில் மருத்துவர் ராமதாஸ் சங்கமமானாலும் தமிழர்கள் அந்த ராஜதந்திரத்திலும் மயங்கியே நிற்பார்கள்.

'கேப்டன்' விஜயகாந்த் தன் மகனுக்கே 'பிரபாகரன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தவர். ஈழம் காணும்வரை இனிப்பு உண்ணுவதில்லை என்று சபதமேற்றவர். திருமங்கலத் தீர்ப்பு அவருடைய முதல்வர் கனவை மூளியாக்கிவிட்டது. ஈழம் பற்றி வாய்திறந்தால் காங்கிரஸின் வாசற்கதவு மூடிக்கொள்ளும் என்று தெரிந்து கொண்டவர், கலைஞரை கைவிட்டு... வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணிக் குடும்பம் நடத்த காங்கிரஸ் வருமா என்று வழிமேல் விழிவைத்து நின்று கொண்டிருக்கிறார்.

தனி ஈழம் காண மறைமலை நகரில் உண்ணா நோன்பிருந்த திருமாவளவனுக்கு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்றபோது அவர் பிரபாகரனின் எதிரி என்று தெரியாமல் போய்விட்டது. உள்ளாட்சித் தேர்தலின்போது ஜெயலலிதா நேரில் சந்திக்கவோ, தொலை பேசியில் தொடர்புகொள்ளவோ மறுத்தபோதுதான் திருமாவுக்கு 'அடங்க மறு; அத்து மீறு' என்ற புரட்சிக்குரல் நினைவுக்கு வந்து நீள்துயில் கலைந்தது.

'முதலுக்கே மோசம் வந்த பின்னர் - முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ? - ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக் கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் - கனமான பாறையன்றை அவன் தலையில் உருட்டிவிட எத்தனிக்கும் உலுத்தர்களைக் கண்டால் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் - ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் - ஆனது ஆகட்டுமே - இந்த ஆட்சிதான் போகட்டுமே - மகுடமின்றி வாழ முடியாத மனிதர்களா நாம்? - சிசுவாகப் பிறக்கும்போதே சிம்மாசனத் துடனா பிறந்தோம்? - கொற்றக்குடையா? கொள்கையா? -எது வேண்டும் எனில்... கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பார் என்போம்!'
என்று கவியரங்கத் தலைமையேற்றுக் கவிதை பாடிய கலைஞர், தான் அன்று எழுதிய ஆவேசக் கவிதையை இன்று திரும்பிப் பார்ப்பாரா?

'தமிழினத் தலைவர்' என்று வைர வார்த்தைகளால் வரலாறு பதிவுசெய்ய அவருடைய வாழ்வின் மாலைப் பொழுதில் தக்க தருணம் தயாராகக் காத்திருக்கிறது. தமிழினத்தின் தன்மானம் காக்க முன்வருவாரா முத்தமிழ்க் கலைஞர்?



காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக்கூடாது!

உலகத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் உள்ளூர்த் தமிழர்கள் முதலில் ஒன்றுபடட்டும். தமிழீழம் கேட்கும் வைகோ, மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், ஈழத்தமிழருக்காக உரிமைக்குரல் கொடுக்கும் தா.பாண்டியன், வரதராஜன் ஆகியோர் கலைஞருடன் கைகோத்து நிற்கட்டும். மூன்று முறை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய பின்பும், முதல் மரியாதை தராமல் அவமரியாதை செய்த காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து தி.மு.க. ஆண்மையோடு விலகட்டும். மாநில அரசு கவிழ்ந்தாலும் மான உணர்வு தீயாகத் தலை நிமிரட்டும்!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைக்கட்டும். உலகத் தமிழரின் மானம் காக்க இந்தப் புதிய கூட்டணி உருவாகட்டும். இதைச் செய்யத் தவறினால்... தமிழினம் குறித்தும், ஈழத்தமிழர் குறித்தும் இனி வாய்திறந்து பேசாமல் அவரவர் சுயலாபத்துக்கு அரசியல் நடத்தட்டும். வெறும் வார்த்தைப் பந்தலால் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர நிழல் கிடைத்துவிடாது!




-தமிழருவி மணியன்
நன்றி: ஜூனியர் விகடன்