இந்தச் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளும் தங்களது ஆண்டு வருமானம் மற்றும் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தலைமைத் தகவல் ஆணையரிடம் மனுச் செய்திருக்கிறார். அந்த மனு நிலுவையில் இருக்கிறது.
கடந்த காலங்களிலேயே இந்த விவகாரம் குறித்து நிறைய விவாதிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் அனைவரும் தங்களது வருமானம் மற்றும் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என 1997-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வர்மா வயுறுத்தினர்.
ஓராண்டில் புதிதாக வாங்கப்பட்ட சொத்துகள், பணப் பரிமாற்றங்கள் குறித்து அந்த ஆண்டு முடிவில் நீதிபதிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரினர்.
சில காலத்துக்கு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் அவரது யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது என்ன நிலை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தற்போதைய தலைமை நீதிபதியின் கருத்து, வர்மாவின் கருத்துக்கு நேரெதிரானது. நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை தாங்களாகவே முன்வந்து வெளியிடுகிறார்களா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படிகூட அவர்களிடம் கணக்குக் கேட்க முடியாது என்கிறார் அவர்.
நீதித்துறை என்பது அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானது என்பதால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு கட்டுப்பட்டதல்ல என்பது அவரது வாதம்.
அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானவர்கள் என்பதால், நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டியதில்லையா? என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
இந்த விஷயத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் பொருள் பொதிந்த கருத்தை முன்வைக்கிறார்.
நீதிபதிகள் அனைவருமே பொதுமக்களின் ஊழியர்கள் என்பதால், அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானவர்கள் என்ற காரணத்தைக் கூறித் தப்பிக்க முடியாது என்கிறார் அவர்.
ஒரு சாதாரணக் குடிமகன்கூட தங்களது பண வரவு செலவு, சொத்து மதிப்பு ஆகியவற்றை வருமான வரி செலுத்தும்போது அரசிடம் பகிரங்கப்படுத்த வேண்டியிருக்கிறது.
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்கிறார்கள். அவ்வப்போது அவை ஆய்வு செய்யப்பட்டு, முறைகேடு தெரிந்தால் சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. அப்படி இருக்கும்போது நீதிபதிகளுக்கு மட்டும் சொத்துக் கணக்கைக் காட்டுவதிருந்து ஏன் விலக்கு அளிக்க வேண்டும்?
அரசு ஊழியர்களைவிட எல்லா நிலைகளிலும் நீதிபதிகளுக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, சொத்துக் கணக்கை அவர்கள் வெளியிடுவதுதானே நியாயம்?
எந்த வகையிலும், தகவல் உரிமைச் சட்டத்தின்படி, தனி நபர் யாரும் தனது சொத்துக் கணக்கை வெளியிட முடியாது என்று கூறிவிட முடியாது. நாட்டு நலன் தொடர்பான விஷயங்களில் மட்டுமே விதிவிலக்கு.
சட்டமியற்றும் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவையே நாட்டைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்களாகும். இதில் முதலிரண்டு துறைகளும் நாட்டு மக்களின் ஆய்வுக்கு உட்பட்டே செயல்படுகின்றன.
நிர்வாகத்துறையில் ஊழல் மலிந்திருக்கிறது என்பது வெளிப்படை.
அரசியல்வாதிகளைக் கொண்ட சட்டமியற்றும் துறையும் இதற்குச் சற்றும் சளைத்ததல்ல. மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் 'மதிப்பே' இதற்குச் சாட்சி. ஆனலும் இந்த இரண்டு துறைகளும் பகிரங்க விமர்சனங்களுக்கு உள்ளாவதுடன் அவ்வப்போது மக்களின் கவனத்துக்கு வருகின்றன.
தேர்தல் போட்டியிடுவோர் அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும் எனச் சட்டமிருக்கிறது. அதன்படி, தவறான கணக்கைக் காட்டியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். அதனால் அரசியல்வாதிகள் தங்களது சொத்துக் கணக்கை காட்டியே தீரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
நீதித்துறையின் கீழ்நிலைகளில் நேர்மைக்குறைவு இருக்கிறது என்பது பொதுவான சந்தேகம். ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யார் பேசுவது? நீதித்துறையே முன்வந்து இந்த விஷயத்தைப் பரிசீலித்தால் மட்டுமே இதைச் சரிசெய்ய முடியும்.
சட்டமியற்றும் துறையிலும், நிர்வாகத் துறையிலும் அவ்வப்போது சீர்திருத்தங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இன்னும் நிறைய சீர்திருத்தங்கள் தேவை என்றாலும்கூட, ஏற்கெனவே நிறைய குறைபாடுகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனல், நாடு விடுதலையடைந்தது முதல் இன்றுவரை பெரிய அளவில் சீர்திருத்தங்களைச் சந்திக்காமல் இருப்பது நீதித்துறை மட்டுமே.
நீதித்துறை முழுமையடைந்துவிட்டது; அதில் சீர்திருத்தங்கள் செய்யத் தேவையில்லை என அறிவிலிகள்தான் வாதிடுவார்கள். 10 கோடிக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்ட சுமார் 3 கோடி வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் நீதிமன்றத்தை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.
வட இந்திய கிராமப் பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் குடும்பங்களுமே நிலம் தொடர்பான தகராறுகளுக்காக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வருமானத்தின் பெரும்பகுதி வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற அலுவலர்களுக்குமே போய்ச் சேருகிறது.
இந்தியாவில் ஒரு கிரிமினல் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்றால், அந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது.
சிவில் வழக்குகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. மத்தியஸ்தரை நியமிப்பது, தீர்ப்பாயங்களுக்கு வழக்குகளை அனுப்புவது போன்றவற்றின் மூலம் வழக்குகளை வேகமாக முடிக்கும் நடைமுறை பல்வேறு நாடுகளில் இருக்கிறது.
ஆனால், வழக்கு விசாரணையைத் தாமதம் செய்வதற்காகத்தான் இவையெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் முயற்சிகூட இன்னும் முழுமை பெறவில்லை.
வழக்குகள் முடிந்துவிடக் கூடாது என்பதிலேயே வழக்கறிஞர்களும் சில நீதித்துறை அலுவலர்களும் குறியாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு.
இந்தச் சூழல் நீதித்துறையின் நேர்மை குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை கொண்டுவரும் எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் எந்த மரியாதையும் இல்லை. நிர்வாகத் துறையில் நேர்மையான, திறமையான பல அதிகாரிகள் இருந்தாலும் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள்' என்பதே அவர்களைப் பற்றிய மக்களின் கருத்து.
இந்த நிலையிலும், நீதித்துறைக்கு இன்னும் மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டியது நீதித்துறை தலைமையின் பொறுப்பு. அதற்கு உடனடி சீர்திருத்தம் அவசியம். தங்களைப் பற்றி பகிரங்கப்படுத்துவதற்கு நீதித்துறை பயப்படக்கூடாது.
நவீன தொழில்நுட்ப யுகத்தில், நீதித்துறை திரைமறைவில் செயல்பட்டுக் கொண்டிருக்க முடியாது. வெளிப்படுத்துவதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சொல்லப்போனால், இந்த ஒளிந்து கொள்ளும் பண்புகூட சீர்திருத்தப்பட வேண்டியதுதான்.
-டி .எஸ்.ஆர். சுப்பிரமணியன்
(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)
நன்றி: தினமணி, 29-07-08